En Manathai Aala Vaa 21
Updated: Oct 17, 2022
மித்ர-விகா-21
மாளவிகா பிறந்து சில மாதங்களே ஆகியிருந்த சமயத்தில்தான் அவர்கள் வீட்டிலிருந்து தள்ளி இரண்டாவது வீட்டில் மூன்று மாத குழந்தையான அன்புக்கரசியுடன் குடி வந்தனர் அவளுடைய பெற்றோர்.
அவளுடைய அப்பா மெப்ஸில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியிலிருந்தார். அம்மா வீட்டிலிருந்து குடும்பத்தைக் கவனிக்கும் குடும்பத்தலைவி.
இரு குடும்பங்களுக்குள்ளும் இயல்பான அறிமுகத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிய நட்பாக மலர்ந்தது. வேறுபாடு பார்க்காமல் மதுவுடனும் மாளவிகாவுடனும் அன்புவையும் இணைத்துக் கொண்டார் துளசி.
ஒத்த வயதில் இருக்கவும் ஒன்றாக ஒரே பள்ளியில் மாளவிகா அன்பு இருவரையும் சேர்க்க, அவர்கள் நட்பு இன்னும் ஆழமாக மாறிப்போனது.படிப்பு, விளையாட்டு, உணவு உறக்கம் என எல்லா நேரமும் இருவரும் ஒன்றாவே களித்தனர்.
அதுவும் அவர்களுக்கு ஐந்து வயதாகும்போது சாத்விகா பிறக்க, மாளவிகாவை அன்புவின் அம்மா தன்னுடனேயே வைத்துப் பார்த்துக்கொள்ளவும் அவர்களுடைய பிணைப்பு ஒருவர் இல்லாமல் மற்றவரால் ஒரு நாள் கூட இருக்க இயலாது என்கிற அளவுக்கு இன்னும் இறுகிப்போனது.
விடுமுறை சமயங்களில் அன்புவை அழைத்துக்கொண்டு அவளுடைய அம்மா அவரது பிறந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களிலெல்லாம் இரண்டுபேரும் அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள்.
அவள் சென்றதும் மாளவிகா இயல்பு நிலைக்குத் திரும்ப சில தினங்கள் பிடிக்கும். அவளைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் துளசிக்கு.
***
சில வருடங்களாகதான் அந்த பகுதி வளர்ச்சி அடைந்துகொண்டிருந்தது. அவர்கள் வீடு இருக்கும் தெருவில் எல்லாமே தனித்தனி வீடுகளாக மொத்தமே பதினைந்து வீடுகள்தான் இருந்தன. அதிக கட்டடங்கள் இல்லாமல் புதர் மண்டிய காலி மனைகளும் ஆங்காங்கே இருக்க, புதிதாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான கட்டுமான வேலைகளும் அங்கே நடந்துகொண்டிருந்தது.
மாளவிகாவுடன் சேர்ந்து அவளுடைய வயதை ஒத்த ஏழெட்டு பிள்ளைகள் அந்த தெருவில் இருந்தனர். ஆண் பெண் பாகுபாடில்லாமல் மாலையானால் எல்லோரும் ஒன்றாக வீதியில் விளையாடுவது வழக்கம்.
அங்கே எல்லோருமே ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்களாக இருந்ததால், பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிள்ளைகளின் பாதுகாப்பைப் பற்றி யாரும் அதிகம் கவனம் எடுப்பதில்லை. அதுவே, ஒரு நாள் ஆபத்தாகிப் போனது.
***
நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, மாளவிகா மற்றும் அன்புவின் நான்காம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை தொடங்கியிருந்தது. விடுமுறை களிப்பில் பிள்ளைகள் எல்லோரும் அந்தத் தெருவையே அதகளம் செய்துகொண்டிருந்தனர்.
காலை, மதியம், மாலை என நேரம் காலம் இல்லாமல், வெயில்,வியர்வை, கொசுக்கடி என எதையும் பொருட்படுத்தாமல், பிள்ளைகள் எல்லோரும் ஒன்று கூடி விளையாடிக் களிக்க, அவர்கள் வால்தனத்தினால் பெரியவர்களை மிரண்டுபோக வைத்தனர்.
நன்றாக இருட்டத் தொடங்கிய பின்னர்தான் வீட்டுக்குள்ளேயே செல்வார்கள் அனைவரும்.
சாத்விகா மிகவும் சிறியவளாக இருக்க அவளை தன் கைக்குள்ளேயே வைத்திருப்பார் துளசி. இயல்பாகவே மதுவுக்கு விளையாட்டில் அதிக நாட்டம் இல்லை. எனவே தொலைக்காட்சியை விட்டு நகராமல் வீட்டிற்குள்ளேயே இருந்து விடுவாள்.
ஆனால் மாளவிகா அப்படி இல்லை. ஒருநொடியேனும் ஓய்ந்திருக்க விரும்பாமல் ஓடி விளையாடித் தீர்ப்பவள். அன்புவும் அதே ரகம். அன்புவுடன் சேர்ந்து கொண்டு, சாப்பிடக்கூட வராமல் நாள் முழுவதும் வீதியிலேயே விளையாடிக் கொண்டிருப்பாள்.
மாளவிகாவையும் அன்புவையும் கண்டித்து ஓய்ந்தே போவார்கள் அன்னையர் இருவரும். உருட்டி மிரட்டி ஒருவாறாக அவர்களை அடக்கி வைத்தால் கூட சில நிமிடங்கள் வரைக்கும்தான் அது தாக்குபிடிக்கும். பெரியவர்கள் சற்று கண் அயரும் நேரம் பார்த்து சிட்டாகப் பறந்து விடுவார்கள் சிறுமிகள். அடுத்த நிமிடம் அருகே இருக்கும் ஒரு காலி மைதானத்தில் மொத்த வானரங்களுடன் சேர்ந்து கும்மாளம் அடித்துக்கொண்டிருப்பார்கள் இருவரும்.
அன்று, மொத்த பிள்ளைகளும் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல ஒளிவதற்காக, அந்த தெருவின் ஒரு வீட்டின் மொட்டை மாடியை தேர்ந்தெடுத்து அதை நோக்கி ஓடினாள் மாளவிகா.
அப்பொழுது அந்த வீட்டிலிருந்து வெளியில் வந்தான் அவன் - சந்தர். மேல் நடுத்தட்டுப் பெற்றோர்களின் ஒரே மகன் என்ற செல்லத்தால் இருபது வயதுக்குள்ளேயே கெட்டுச் சீரழிந்து போனவன்.
அவளைப் பார்த்ததும், "ஹேய் மாலு. எதுக்கு மேல போற" என அவன் தடுக்க, "ஐ ஸ்பை விளையாடிட்டு இருக்கோம் சந்தர் அண்ணா. மேல போய் ஒளிஞ்சிக்கறேன். அந்த பம்ப்கின் பிரசாந்த் வந்து கேட்டா தெரியாதுன்னு சொல்லிடுங்க ப்ளீஸ்" என்று சொல்லிக்கொண்டே படிகளில் தாவினாள். சீக்கிரமாகப் போய் ஒளிந்துகொள்ளும் அவசரம் மட்டுமே மேலோங்கியிருந்தது அவளிடம்.
அந்த நொடிப்பொழுதுக்குள், மான் குட்டியாய் துள்ளும் அந்தச் சின்னஞ்சிறு குருத்தைப் பார்த்து அப்படி ஒரு குரூர எண்ணம் உதித்திருக்க வேண்டாம் அந்த சந்தருக்கு.
எதிர்பாரா விதமாக, அப்பொழுது அவன் இருந்த மனநிலைக்குத் தகுந்தாற்போன்று அந்த மான் குட்டி தானாக அவனைத் தேடி வரவும், அவனுடைய அம்மா அப்பா வேறு ஊரில் இல்லாமல் போனது வேறு அவனுக்குச் சாதகமாகிப்போக, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளத் துணிந்தான்.
அவனுக்குள்ளே சென்றிருந்த ஏதோ ஒரு போதைப் பொருள் அவனை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மிருகமாகவே? இல்லை அந்த உவமை முற்றிலும் தவறு, மிருகங்கள் முழு வளர்ச்சி அடையாத அதன் எதிர் பாலினத்துடன் இயற்கைக்குப் புறம்பாக இணைச் சேராது. எனவே எந்த ஒரு ஜீவராசியுடனும் ஒப்பிட இயலாத அளவுக்கு இழிவான ஒரு மனிதப்பிறவியாகத் திரிந்து போயிருந்தவன், "மாலு, ஒரு நிமிஷம் நில்லு" என மறுபடியும் அவளைத் தடுத்தான்.
லேசாக இருள் பரவத்தொடங்கியிருந்தும், இளம் கன்று பயமறியாது என்பது போல், பெண்களுக்கே உரித்தான ஆழ்மன எச்சரிக்கையை உணரத்தெரியாத அந்தச் சிறுமியானவள், 'ஐயோ, அந்த குண்டன் வந்தான்னா நாம அவுட் ஆகிடுவோமே' என்று மட்டுமே எண்ணிக்கொண்டு, அவளது வயதிற்கே உண்டான பதட்டத்துடன் திருதிருவென விழிக்கவும், அவனது புத்திப் பேதலித்துப்போனது.
அவனுடைய கண்களுக்கு அவள் ஒரு குழந்தையாகவே தெரியவில்லை. தன் பாலியல் தேவையைப் பூர்த்திசெய்யக்கூடிய ஒரு எதிர் பாலினமாக மட்டுமே அவளைப் பார்த்தான்.
கணக்கு கேட்காமல் பெற்றோரால் அவனுக்குக் கொடுக்கப்படும் பணம், அதனால் வந்து ஒட்டிக்கொண்ட கூடா நட்புகள், அவர்கள் மூலம் சுலபமாக வாங்க முடிந்த போதைப்பொருள், சிரமமே இல்லாமல் கைக்குக் கிடைக்கும் ஆபாசப் படங்கள், நாள் முழுவதும் கூட இடையூறில்லாமல் அதைப் பார்த்துத் தொலைக்க ஏதுவாக வாய்க்கும் தனிமை எல்லாம் சேர்ந்து அப்படி ஒரு நாசத்துக்கு வழி வகுத்தது.
"அண்ணா, அவன் வந்துடுவான்...ண்ணா. நான் போய் ஒளிஞ்சிக்கறேன்” என அவள் படபடக்க, "அதெல்லாம் வர மாட்டான். ஒரு செகண்ட் இரு" என அவளை மேற்கொண்டு பேசவிடாமல் வீட்டிற்குள் சென்றவன், உடனே திரும்ப வந்தான்.
தன் கையில் வைத்திருந்த ஒரு சாக்லெட்டை அவளிடம் கொடுத்தவன், "இது உனக்கு" என ஒரு வஞ்சக சிரிப்பு சிரிக்க, அவன் சிரிப்புடன் கலந்திருந்த குரூரத்தையோ, அவன் கண்களில் ஏறியிருந்த போதையையோ அறிந்துகொள்ளத் தெரியாமல், "தேங்க்ஸ்" என்று அவசரமாக அதை அவன் கைகளிலிருந்து பறித்துக்கொண்டு மேலே ஓடினாள் அந்தப் பேதை.
அங்கே இருந்த தண்ணீர் தொட்டிக்குப் பின்னால், அவர்கள் வழக்கமாக ஒளிந்துகொள்ளும் சிறு மறைவிடத்தை நோக்கி அவள் போக அவளுக்கு முன்பே அங்கே வந்து உட்கார்ந்திருந்தாள் அன்புக்கரசி.
அவளைப் பார்த்ததும் முகமெல்லாம் மலர, "ஹேய்... நீ எப்ப இங்க வந்த?" என மாளவிகா வியக்க, “ஷ்... ஷ்... மெதுவா பேசு" என அவளை எச்சரித்தவள், "நீ அந்த சந்தர் அண்ணா கிட்ட மாட்டிட்டு முழிச்ச இல்ல, ஜஸ்ட் அதுக்கு முன்னாலதான்" என்றாள் அன்பு அதே சிரிப்புடன்... கிசுகிசுப்பாக.
அதற்குள் அவளுடைய கையில் வைத்திருக்கும் சாக்லேட் நினைவுக்கு வர, அவர்கள் வழக்கப்படி, அதன் உரையுடன் அதை அப்படியே கடித்தவள், “சந்தர் அண்ணா கொடுத்தாங்க" என்றவாறு அதன் பாதியை அன்புவிடம் கொடுத்தாள் மாளவிகா.
அதை இருவரும் சுவைக்க, "மாலு... இந்த சாக்லேட் ஏண்டி இப்படி இருக்கு? ஏதோ ஒரு ஸ்மெல் வரல?" என அன்பு கேட்க, "இது பாரின் சாக்லேட்..டீ. சந்தர் அண்ணாவோட அப்பா துபாய்ல இருந்து வந்தப்ப வாங்கிட்டு வந்ததா இருக்கும். பிரிட்ஜ்ல வெச்சிருந்ததால இப்படி ஸ்மெல் வருதுன்னு நினைக்கிறேன்" என்றாள் மாளவிகா, அது போதை கலந்த சாக்லேட் என்பதை அறியாமலேயே.
சிறுமிகள் இருவரும் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டிருக்க, "அண்ணா... அந்த கோழி முட்ட கண்ணி மாலு இங்க வந்தாளா?" என்ற அவர்களுடைய விளையாட்டு தோழன் பிரசாந்தின் குரல் கேட்க, "இல்லயே... இங்க யாரும் வரல" என்ற சந்தரின் பதிலும் அவர்களுடைய செவிகளில் விழுந்தது.
"அண்ணா ரொம்ப நல்லவங்க இல்ல. நம்மள காட்டிக்கொடுக்கல" என அவனுக்கு நற்சான்றிதழ் வழங்கிய அன்பு, பிரசாந்த் எனும் அந்தச் சிறுவனின் காலடி ஓசைத் தேய்ந்து மறைந்ததை உணர்ந்து, "அவன் போயிட்டான், வா... நாம கீழ போகலாம்" என்று நா குழற சொல்லிக்கொண்டே அந்த மறைவிடத்திலிருந்து வெளியில் வர, சில எட்டுக்கள் கூட எடுத்து வைக்க இயலாமல் அவளுடைய கால்கள் பின்னிக்கொண்டன. உடனே கண்கள் இருட்டிக்கொண்டு வர அப்படியே சரிந்தாள் அன்பு. மாளவிகாவோ போதைத் தலைக்கு ஏறி அப்படியே உட்கார்ந்தது உட்கார்த்தபடியே செயலற்றுப் போயிருந்தாள்.
சுற்றி நடப்பதை உணரக்கூடிய அளவுக்கு அவளுக்கு சுயநினைவு இருந்தாலும், பேசவோ அங்கிருந்து எழுந்து செல்லவோ இயலாத அளவுக்கு அவளது உடல் தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தது.
அருகில் சென்று பார்த்தால்தான் அங்கே இருப்பதே தெரியும் என்ற நிலையில் மாளவிகா இருக்க, அவளால் அன்புவை அங்கிருந்து நன்றாகப் பார்க்க முடிந்தது.
அதுவே அவளது வாழ்நாள் முழுமைக்கும் குற்ற உணர்ச்சியில் அவள் சிக்கித் தவிக்கக் காரணமாக ஆகிப்போனது. அங்கிருந்து நகரக்கூட இயலாத நிலையில் அன்பு இருக்க, சில நிமிடங்களில் அங்கே வந்தான் சந்தர்.
அவனுக்கு இருந்த போதையிலும் அவசரத்திலும் பயத்துடனான குற்ற உணர்ச்சியிலும், இருவரின் உருவமும் உடையும் ஒன்றுபோலவே இருக்கவும், மாளவிகாவுக்கும் அன்புவுக்கும் எந்த வித்தியாசமும் அவனுக்குத் தெரியவில்லை என்றே சொல்லலாம்.
அதன் பின் அங்கே மாளவிகா பார்த்த எதுவும், இரும்பில் இதயம் இருப்பவர்கள் கூட காணச் சகிக்காத, மெல்லிய இதயம் படைத்த குழந்தைகள் யாரும் பார்க்கவே கூடாத, வக்கிரம் நிறைந்த மனச் சிதைவு அடைந்த சைக்கோக்களால் மட்டுமே பார்க்கவோ, ரசிக்கவோ, ஈடுபடவோ முடிந்த அவலங்கள்தாம்.
'அன்பு... அன்பு... அவனைத் தள்ளி விட்டுட்டு ஓடிடுடீ. தப்பிச்சு ஓடி போடீ' என அவளது மனம் அரற்றினாலும், அவளால் கத்த முடியவில்லை. அதைத் தடுக்க முடியவில்லை. உயிர் தோழியைக் காப்பாற்ற இயலவில்லை.
எல்லாவற்றிக்கும் மேல், ‘அவளுக்கு நடந்துகொண்டிருக்கும் கொடுமைகள் தனக்கு நடந்திருக்க வேண்டிவை. தான் தப்பித்து அவளைச் சிக்க வைத்து விட்டோம். தான் கொடுத்த அந்த சாக்லெட்டால்தான் அவளுக்கு இந்த நிலை’ என்ற எண்ணங்களே அவளை உயிருடன் கொன்றது.
அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் மட்டும் வழிந்துகொண்டே இருந்தது.
அவனுடைய அரக்கத்தனத்தைத் தாக்குப்பிடிக்க இயலாமல் அன்புவின் மூச்சு நின்றுவிட, அப்பொழுதுதான் தான் செய்துகொண்டிருப்பதையே உணர்ந்தான் அந்தப் பாவி.
அதற்குள் காலம் கடந்து போயிருக்க, அந்தப் பழியிலிருந்து தான் தப்பிப்பது மட்டுமே அவனுக்கு முக்கியமாகிப்போக, வேறெதைப் பற்றியும் துளியும் யோசிக்காமல் அந்தத் தளிரை அப்படியே மாடியிலிருந்து, புதர் மண்டியிருந்த பக்கத்து மனையில் தூக்கி வீசினான்.
அதைப் பார்த்துக்கொண்டிருந்தவளுக்கோ அதிர்ச்சி... அதிர்ச்சி... அதிர்ச்சி மட்டுமே.
ஒரு வேளை அவன் தன்னைப் பார்த்துவிட்டால் தனக்கும் இதே நிலைதானோ என்ற எண்ணம் தோன்ற, பயத்தில் மூச்சடைத்து மொத்தமாக மயக்கத்திற்குப் போனாள் மாளவிகா.
ஆனால் குற்றம் புரிந்தவனோ, தன்னை சமாளித்துக்கொண்டு எதுவும் நடக்காததுபோல நிதானமாக தன் வீட்டிற்குள் போய் கதவைத் தாளிட்டுக்கொண்டான்.
[சமுதாய மாற்றத்திற்கு ஏற்றாற்போல் செய்வதாக நினைத்துக்கொண்டு, வெளிப்படையாகப் பெண் குழந்தைகளுக்கு 'குட் டச் - பேட் டச்' எல்லாம் சொல்லிக்கொடுக்கும் அளவுக்குதான் நாம் மேம்பட்டிருக்கிறோம்.
இதுதான் நம் சமூகத்தின் சாபக்கேடு.
இங்கே எல்லா அறிவுரைகளும் பெண்களுக்கு மட்டும்தான்.
‘நீதான் பூமி! நீதான் நதி! நீதான் கடவுள்!’ என்று வசனங்கள் பேசி போற்றும் பெண்களைதான், அதலபாதாளத்தில் தள்ளி ஒரு போகப்பொருளாகவே இயன்றளவுக்கும் தாழ்த்தி வைத்திருப்பது நம் சமுதாயத்தின் முரண்பட்ட உண்மை.
தாயாக, மகளாக, சகோதரியாக, மனைவியாக என்னவாக இருந்தாலும் அவளை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே வைத்திருக்கும் குடும்ப அமைப்பு ஒருபுறமென்றால், பாதுகாப்பே இல்லாத சமுதாயம் மற்றொருபுறம்.
ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
தொலைக்காட்சித் தொடர்களாகட்டும் ரியாலிட்டி ஷோக்களாகட்டும் நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பரங்களாகட்டும், சமூக வலைத்தளங்களில் வரும் காணொளிகளாகட்டும் குழந்தை- குமாரி-கிழவி என்ற பேதங்களின்றி ஒரு பெண்ணின் உடல் அமைப்பையும், அவளது வளைவு நெளிவுகளையும் நன்றாக வெளிச்சம்போட்டுக் காண்பித்து அவளை ஆண்களின் பாலியல் தேவையைப் பூர்த்திச் செய்பவளாக மட்டுமே சித்தரிப்பது அவலம் என்றால், 'அதுதான் உண்மை' என்று பெண்களே நம்பிக்கொண்டு, தங்களை தாங்களே காட்சிப்பொருளாக்கிக் கொள்வது அந்த அவலத்தின் உச்சக்கட்டம்.
'டிக் டாக்… ஷார்ட் வீடியோஸ்... ரீல்ஸ்' என சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருக்கும், விரும்பியோ விரும்பாமலே நாம் பார்க்க நேரிடும் காணொளிகள் இந்த உச்சக்கட்ட அவலத்துக்கு சிறு உதாரணம்.
பெண்களின் சவுந்தர்ய லாவண்யங்களை அக்குவேறு ஆணிவேறாக வர்ணித்து அவளைப் போகப்பொருளாக ஆண்களின் மனதில் பதிய வைக்கும் விஷயத்தில் கதைகள், கவிதைகள், காப்பியங்கள் இலக்கியங்கள் என எதுவும் சளைத்ததில்லை. கூடவே சுலபமாக கைக்குள் வரும் ஆபாசப் படங்கள் வேறு.
இதையெல்லாம் பார்த்தபின்னும் ஒருவன் புத்தனாக வாழ்வானா அல்லது பித்தனாகப் பிறழ்வானா?
அதுவும் தன்னம்பிக்கைக் குன்றி பல்வேறு காரணங்களால் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியின் பிடியிலிருக்கும் ஒருவன் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்பொழுது மனப்பிறழ்ச்சிக்கு ஆளாகிறான்.
கூடவே மதுவும் போதைப்பொருட்களும் சேர்ந்துகொண்டால்?
தன்னை எதிர்த்துப் போராட இயலாத இடத்திலிருக்கும் குழந்தையோ கிழவியோ அல்லது அவனது பலத்தை யாரிடம் காண்பிக்க முடியுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்து தன் வெறியைத் தீர்த்துக்கொண்டு, சட்டத்திற்கும் தண்டனைக்கும் பயந்து சுலபமாகக் கொலை செய்துவிட்டுப் போய்விடுகிறான்.
இதைத் தனியாகச் செய்யும் துணிவில்லாதவன் அவனைப் போன்றே இருக்கும் சிலரைத் துணையாகச் சேர்த்துக்கொண்டு இதைச் செய்கிறான்.
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தைத் தொட்டிருக்கும் இன்றைய நவீன யுகத்திலும் கூட இத்தகைய காரணங்களால்தான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகளும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன.
இது போன்ற பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி ஒரு பக்கம் தங்கள் உயிரையே பறிகொடுப்பதும் மறுபக்கம் பள்ளியில், பணியிடங்களில் அக்கம்பக்கத்தில் என ஆண்கள் கொடுக்கும் பாலியல் தொல்லைகளால் உடலளவிலும் மனதளவிலும் பாதிப்புக்கு உள்ளாகி வாழ்நாள் முழுவதும் நரகத்தை அனுபவித்துக்கொண்டு வாழ்வதும் என பெண் இனமே அழிவுப்பாதையில் பயணிக்க ஆண் பிள்ளைகள் சரியாக வழிநடத்தப்படாததே காரணம்.
ஒரு ஆண் மகனுக்கு அவனுடைய பாலியல் தேவைகளை எப்படிக் கையாளுவது என்கிற வழிகாட்டுதல் நம் சமுதாயத்தில் எங்காவது இருக்கிறதா?
ஒரு பெண் பூப்படையும்பொழுது அவளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் எதுவும் பருவம் எய்தும் ஆண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படுகிறதா?
புவி வெப்பமயமாதலில் தொடங்கி பல்வேறு காரணங்களால், பெண்குழந்தைகள் சீக்கிரமே பூப்படைவதுபோல ஆண் பிள்ளைகளுக்கும் பன்னிரண்டு பதிமூன்று வயதிலேயே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகிவிடுகின்றது.
அப்பொழுதிலிருந்தே அவர்களுக்கு பாலியல் உந்துதல்கள் ஏற்படத் தொடங்குகின்றன.
இதையெல்லாம் உணர்ந்து - கடந்து சரியான மனப்பக்குவத்திற்கு அவர்கள் வரும் வரை ஆண் பிள்ளைகளைச் சரியானபடி வழிநடத்தும் கடமை பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் இருக்கிறது.
ஒருவன் துணிந்து பாலியல் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சரியான சட்டங்களை இயற்றி இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கும் கடமை அரசாங்கத்திற்கு இருக்கிறது.
பெண் இனத்தை அழிவிலிருந்து பாதுகாப்பது என்பது ஆண்களுடைய தார்மிக கடமை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
ஆண் பிள்ளைகள் சரியானபடி வழிநடத்தப்படவில்லை என்றால் அடுத்த தலைமுறைகளை உருவாக்கும் பொறுப்பிலுள்ள பெண்ணினம் வலுவிழந்து தோற்றுப்போய், எதிர்காலத்தில் வீரியமான சந்ததிகள் உருவாகாமல் இந்த சமுதாயம் அழிந்துபோகும்.]