top of page

En Manathai Aala Vaa-11

Updated: Oct 7, 2022

மித்ர-விகா-11

அலுவலகத்திற்குக் கூடப் போகப் பிடிக்காமல், அந்த நட்சத்திர விடுதியிலிருந்து நேராக நகரின் முக்கியப்பகுதியில் அமைந்திருக்கும் அவனுடைய சொகுசு அபார்ட்மென்டுக்கு வந்தவன் அங்கிருந்தே அவனது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான்.


வேறு எந்த நினைவுகளுக்கும் ஆட்படக்கூடாது என்கிற பிடிவாதத்தால் முன் இரவு வரை அதில் மூழ்கியிருந்தவனை, "உங்களுக்குப் பிடிச்ச சாபுதானா கிச்சடியும் ஆனியன் சட்னியும் செஞ்சிருக்கேன், சாப்பிட வாங்க தம்பி" என அங்கே சமையல் வேலை செய்யும் சண்முகத்தின் குரல் கலைத்தது.


என்ன வேண்டும் எனக் கேட்டுச் செய்யலாம் என்றால் பெரும்பாலும் அவனிடம் பதிலிருக்காது. 'இதெல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க சண்முகம். எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியும்ல' என்றுதான் சொல்லுவான்.


அவனுடைய உணவு பழக்கவழக்கங்கள் அவருக்கு அத்துப்படி என்பதால் அவன் அங்கே இருக்கும்பட்சத்தில் அவரே செய்துவிடுவார். "இங்கேயே எடுத்துட்டு வந்துடுங்க சண்முகம். வேலையிருக்கு" அவன் சொல்லவும் அவர் உணவை அங்கயே கொண்டு வந்து பரிமாறச் சாப்பிட்டுக்கொண்டே வேலைகளைச் செய்தான் மித்ரன்.


பின் அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு, "தம்பி நான் முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பறேன்" என அவனிடம் தகவல் சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.


ஒரு கட்டத்தில் சலித்துப்போய் மடிக்கணினிக்கு ஓய்வு கொடுத்தவன், உறங்க முற்பட, மூடிய இமைகளுக்குள்ளே மாளவிகாவின் முகம் வந்து அவனை உறங்கவிடாமல் இம்சை செய்யவே இரவு முழுவதும் ஒரு நொடி கூட கண் மூடவில்லை அக்னிமித்ரன்.


உறங்கினால்தான் கனவு வரும். அவனுக்கோ அவன் உறங்க முற்பட்டாலே கனவு வருகிறது. அதிகாலை வரை அந்தத் துன்பத்தைப் பொறுத்தவன், விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் அவனுடைய அன்னையை அழைத்தான்.


"மாம் எங்க இருக்கீங்க? எனக்கு உங்கள உடனே பார்க்கணும்"


அவன் சொல்லவும், "ஏன் மித்து... உடம்பு ஏதாவது சரியில்லையா?" எனக் கரிசனத்துடன் ஒலித்தது அவனுடைய அம்மா தீபலக்ஷ்மியின் குரல்.


"நத்திங் மாம். ஜஸ்ட் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணிச்சு, அதான்" என்றவன் சென்னைலதான இருக்கீங்க?" என்று கேட்டான்.


"ம்... நம்ம வீட்டுலதான் இருக்கேன். இப்பவே கிளம்பி வா. எல்லாரோடவும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்"


அன்னை சொல்லவும், 'மாம் அங்க இருந்தா டேட்டும் அங்கதான் இருக்காங்கன்னு அர்த்தம். ம்...' என்ற எண்ணத்தில் ஒரு பெருமூச்சு எழக் குளியலறை நோக்கிப் போனான்.


***


காலை எட்டு மணி...


கிழக்கு கடற்கரைச் சாலையில் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்ட மாளிகை பரபரப்பாகக் காட்சி அளித்தது. அதன் மிகப்பெரிய இரும்பு கேட்டை ஒட்டி அமைந்திருந்த 'செக்யூரிட்டி பூத்' உள்ளே இருந்த இரண்டு காவலாளிகளில் தொடங்கித் தோட்டக்காரர்கள், அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார்களைத் துடைத்து அவற்றைத் தயார் செய்துகொண்டிருந்த வாகன ஓட்டிகள், வீட்டிற்குள்ளே வேலை செய்யும் சீருடையை அணிந்த 'ஹவுஸ் கீப்பிங்' பணியாளர்கள் என அனைவரும் பரபரப்பாக அவரவர் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.


அந்த மாளிகையில் அமைந்திருக்கும் உணவு கூடத்தில் போடப்பட்டிருந்த மிகப் பெரிய உணவு மேசையின் அருகில் நடு நாயகமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் பரமேஸ்வரன்.


அவரது பக்கவாட்டில் அமைந்த இருக்கையில் அமர்ந்திருந்த தீபலக்ஷ்மியின் பார்வை ஆவலுடன் அந்தக் கூடத்தின் நுழைவாயிலிலேயே இருக்க, மனைவியைக் கேள்வியாய் பார்த்த பரமேஸ்வரன், "என்ன தீபா! யாரையோ எதிர்பார்த்துக் காத்துட்டு இருக்கிற மாதிரி தெரியுது? உன்னோட சின்ன பிள்ளை வரேன்னு சொல்லி இருக்கானா?" விடையை அறிந்துகொண்டே கேள்வியைக் கேட்டார் அவர்.


மூத்த மகன், மருமகள், பதின்ம வயதிலிருக்கும் அவர்களுடைய இரு பிள்ளைகள் என அனைவரின் முன்னிலையிலும் அதுவும் அவருடைய நாத்தனாரை வைத்துக்கொண்டே கணவரது அந்தக் குத்தலான கேள்வியில் கோபமும் இயலாமையுமாக தீபாவின் கண்கள் கலங்கியது.


"ஆமாம்... அவன் இங்க வரேன்னு ஃபோன் பண்ணான். அவனுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். என்ன இப்ப?" என்ற தீபா, "அவன் இந்த வீட்டுப் பிள்ளை. ஆனா ஒரு கெஸ்ட் மாதிரி எப்பவாவது இங்க வந்துட்டுப் போறான். அதுவும் நான் இங்க இருந்தா மட்டும். அவனை இந்த நிலைமையில வெச்சிருக்கறதுக்கு நாமதான் வெட்கப்படணும்” எனச் சீற்றமாகச் சொல்லி முடித்தார்.


"என்ன தீபா? இப்படி புருஷனை எடுத்தெறிஞ்சி பேசிட்டு இருக்க. வர வர உனக்கு கொஞ்சம் கூட நிதானம் இல்லாம போயிட்டு இருக்கு" கண்டனமாக இடை புகுந்தார் பரமேஸ்வரனின் தமக்கை வாசுகி.


"இதோ பாருங்க அண்ணி, புருஷன் பொண்டாட்டி பேச்சுக்குள்ள நீங்க வரது கொஞ்சம் கூட சரி இல்ல. எங்கப் பிள்ளையைப் பத்தி நாங்க என்னவோ பேசிட்டு இருக்கோம்னு விடுங்க"


கத்தரிப்பதுபோல் தீபா சொல்லச் வாசுகியின் முகம் கருத்துப் போனது.


'உனக்கு இது தேவையா?' என்கிற ரீதியில் அவரை ஒரு பார்வை பார்த்தாள் அவரது மகளும் பரமேஸ்வரன் தீபாவின் மூத்த மகன் விக்ரமின் மனைவியுமான தர்ஷினி.


அம்மா கொடுத்த பதிலடியை உள்ளுக்குள்ளேயே மெச்சியவண்ணம் பரிமாறப்பட்டிருந்த தோசையில் மும்முரமாக இருந்தான் விக்ரம். பரமேஸ்வரன் கோபமாக மனைவியிடம் ஏதோ சொல்லவர கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் மித்ரன். அவனைப் பார்த்ததும், அதுவரை பெரியவர்களுடைய வாக்குவாதங்களைக் கவனிக்காதது போல் உட்கார்ந்திருந்த விக்ரமின் மகனும் மகளும், "ஐ... சித்து" என்றவாறு ஓடிவந்து அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டார்கள்.


"ஹை புஜ்ஜீஸ், எப்படி இருக்கீங்க?" என்றவாறு அவர்களிடம், மிகப்பெரிய சாக்லேட் பார்களை ஆளுக்கு ஒன்றாக அவன் நீட்ட, "வாவ். சித்து. தேங்க் யூ. நாங்க சூப்பரா இருக்கோம்" என்றார்கள் இருவரும் ஒரே குரலில்.


அவனைப் பார்த்ததும் தீபாவின் முகம் பிரகாசமாக ஒளிர, "என்ன மித்து இது. டயட் அது இதுன்னு பட்டினி கிடக்கறியா. இப்படி இளைச்சுப்போயிருக்கியே" எனக் குறைபட்டுக்கொண்டார்.


வெகு தீவிரமாக, "ஜீ.மா... சித்து ஜிம் ஒர்க் அவுட் பண்ணி செம்ம ஃபிட்டா இருகாங்க. இளைச்செல்லாம் போகல. அப்படித்தான சித்து?" என்றான் அக்ஷய், விக்ரமின் மகன்.


"அப்படி சொல்லுடா என் செல்லக் குட்டி" என அக்னிமித்ரன் பெருமிதத்துடன் அண்ணன் மகனை அணைத்துக்கொள்ள, "டேய்... நீ வேற அவனை ஏத்தி விடாதடா. அப்பறம் உங்க அம்மா சொல்றமாதிரி கீட்டோ டயட்... பேலியோ டயட், அந்த டயட் இந்த டயட்னு எதையாவது ஆரம்பிப்பான். அப்பறம் அவன் திங்கற புல்லு பூண்டு எல்லாத்தையும் ஃபோட்டோ எடுத்து நம்ம வாட்ஸ்அப் க்ரூப்ல போட்டு அவளை ப்ரொவோக் பண்ணுவான். அதையெல்லாம் பார்த்துட்டு அவ என்னைப் போட்டு தாக்குவா" என அங்கலாய்த்தான் விக்ரம்.


"அத்த பாவம் நம்ம மித்துவாவது நல்லபடியா இருந்துட்டு போகட்டும் விடுங்க. இதோ உங்க மூத்தப் பிள்ளையை பாருங்க. இப்பவே பிள்ளையார் மாதிரி தொப்பையை வெச்சுட்டு இருக்காரு. கார்ப் ரிச் ஃபுட்ஸா இப்படியே போட்டுத் தாக்கிட்டு இருந்தார்னு வைங்க, சுத்தம்" எனச் சந்தடி சாக்கில் கணவனைப் போட்டுத் தாக்கிவிட்டு மைத்துனனுக்குப் பரிந்து வந்தாள் தர்ஷினி.


அதற்குள் காலியாக இருந்த ஒரு இருக்கையில் அவன் போய் அமர, அவனுக்கு அருகில் வந்து உட்கார்ந்துகொண்ட அக்ஷயின் தங்கை சாம்பவி, "சித்து... இது என்னனு சொல்லு" என்றவாறு அவனுடைய வாயில் எதையோ திணிக்க, "வாவ் டாலி... ட்ரை குலாப்ஜாமூன்" என்றான.


"எப்படி இருக்கு சித்து?" எனக் கேட்டாள் அவள். "செம்மையா இருக்குடா” என்றவன், "இதுல என்ன ஸ்பெஷல்?" என்று நீட்டி முழக்கிக் கேட்க, "நீ வரேன்னு தீபா ஜி.மா சொன்னாங்களா. அதனால நம்ம செஃப் கூட சேர்ந்து நான்தான் பண்ணேன் சித்து, உனக்காக" என்றாள் குதூகலமாக.


"சூப்பர்டா சின்ன குட்டி" என அவன் சொல்ல, "உனக்குப் பிடிக்குமேன்னு ஜவ்வரிசி கிச்சடி பண்ணச் சொன்னேன் மித்து" என்றாள் தர்ஷினி. அவளைப் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தவன், "நேத்து நைட் சண்முகமும் இதைத்தான் செஞ்சிருந்தார் தர்ஷ்" என்றான் பாவமாக.


"சரி... என்ன வேணும்னு சொல்லு, உடனே செய்ய சொல்றேன்" என தீபா சொல்ல, "இட்ஸ் ஓகே மாம். இங்கதான் இவ்வளவு ஐட்டம்ஸ் இருக்கே எல்லாத்துலயும் கொஞ்சம் எடுத்துக்கறேன்" என அவன் சொல்ல, அங்கிருந்த பூரியைக் குருமாவில் தோய்த்து மகனுக்கு ஒரு வாய் ஊட்டினார் தீபா.


அதன் பின் சாம்பவி அவள் பங்குக்கு அவளுக்குப் பிடித்த ‘சாக்ஷுகா’வை அவனுக்கு ஒரு விள்ளல் ஊட்ட, அதன் பின் அக்ஷய் தர்ஷினி என அவனைச் சூழ்ந்து கொண்டு 'இதை சாப்பிடு செம்ம டேஸ்ட்டா இருக்கு' 'இதை ட்ரை பண்ணி பாரு உனக்குப் பிடிக்கும்' என அன்பைப் பொழிய, "என்னை மட்டும் அதை சாப்பிடாத இதை சாப்பிடத்ன்னு ரெஸ்ட்ரிக்ட் பண்ணு. டயட்... எனக்கு வேணாம்னு ஓடறவன விழுந்து விழுந்து கவனி" என அலுத்துக்கொண்டான் விக்ரம்.


மித்ரனைக் கண்ட உற்சாகத்தில் எல்லோரும் குதூகலித்திருக்க, கவனிப்பாரின்றி உட்கார்ந்திருந்தார் பரமேஸ்வரன். அதை எல்லாம் பார்த்துவிட்டு தம்பியின் காதில் கிசுகிசுப்பாக, "பாரு பரமு... உனக்கு எதிரா அவனை நல்லா கொம்பு சீவி விட்டுட்டு, எல்லாரும் கும்பல் கூடி கும்மி அடிக்கறாங்க. நம்ம குடும்ப மானத்தை கப்பல் ஏத்தற மாதிரி பொறுக்கித்தனமா தினம் ஒருத்தி கூட சுத்திட்டு இருக்கான். அவனை ஒரு கேள்வி கேட்க உன் வைஃப்க்கு துப்பில்லை" என ஆத்திரத்தில் உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டிருக்க, வார்த்தையில் நெருப்பை உமிழ்ந்தார் வாசுகி.


மித்ரனின் சிறு சிறு திமிர் பிடித்த செயல்களால் எரிச்சல் மூண்டாலும், வெளி பார்வைக்கு வீம்பாகச் சுற்றினாலும் கூட சின்ன மகனை மிகவும் பிடிக்கும் பரமேஸ்வரனுக்கு. ஏற்கனவே அவர்கள் கொண்டாட்டத்தில் தன்னால் கலக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருக்க, தமக்கை கொஞ்சம் வரம்பு மீறி இப்படிப் பேசவும், "அக்கா... என்னைக்கோ ஒருநாள் இங்க வாரான். அவனை எதுவும் சொல்லாத" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.


அவர் தம்பியை ஒரு புரியாத பார்வை பார்த்து வைக்க, அதை உணராதவராக, மகனிடம் ஒரு வார்த்தை கூட கணவர் பேசவில்லையே என வேதனையாக இருந்தது தீபலக்ஷ்மிக்கு.


தந்தையின் அலட்சியம் கொஞ்சம் அதிகமாகவே மனதைச் சுட்டாலும் மற்ற அனைவரும் பொழிந்த அன்பு மழை அவனது வெம்மையைச் சற்றுத் தணிக்கவே செய்தது. வயிற்றுடன் சேர்ந்து மனமும் நிறைந்திருக்க அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து கிளம்பி வெளியில் வந்தான் மித்ரன்.


அவனைப் பின்தொடர்ந்து வந்த விக்ரம், "மித்து... நம்ம போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்க்குள்ள ஒரு சின்ன பிரச்சனை. உன்னோட அட்வைஸ் கொஞ்சம் வேணும். அதோட உன்னைப் பார்த்தாலே அவனுங்க கொஞ்சம் அடங்கிடுவானுங்க. ஈவினிங் நம்ம மெயின் ஆஃபிஸ்க்கு வரமுடியுமா?" என்று கேட்க,


"ஏன் அண்ணா உனக்கு இந்தக் கொலை வெறி. நான் அங்க வந்தேன்னு உன் மாமியாருக்குத் தெரிஞ்சா பேய் ஆட மாட்டாங்களா?" எனக் கேட்டான் மித்ரன் நக்கலாக.


"அவங்களுக்கு என்ன தெரியும் மித்து. ஆடினா ஆடிட்டுப் போறாங்க. நமக்கு இது என்ன புதுசா?" என விக்ரம் சலிப்புடன் சொல்லவும்,


"சரி... வரேன்" என முடித்துக்கொண்டான் மித்ரன்.


அவனது வாகனம் 'தீபலக்ஷ்மி டவர்'ரை நோக்கி விரைந்தது.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page