top of page

En Manathai Aala Vaa! 10

Updated: Oct 6, 2022

மித்ர-விகா 10


மற்ற இருவரையும் கண்டும் காணதது போல் அக்னிமித்ரனும் மோனாவும் அங்கே இருந்த உணவகத்தை நோக்கிச் செல்ல, அருவருப்பு, பயம் என அவளுடைய மனதில் தோன்றிய உணர்வுகளை முகத்தில் காண்பிக்காமல் இருக்கப் பாடுபட்டு அதில் வெற்றியும் கண்டவள், கிட்டத்தட்ட அவளுடைய அதே மனநிலையிலிருந்த கவியுடன் பெயருக்கு ஏதோ பேசிக்கொண்டே அவர்களைப் பின் தொடர்ந்து சென்றாள் மாளவிகா.


அவர்கள் உள்ளே நுழையவும், பணிவுடன் அவர்களை வரவேற்ற அந்த விடுதியின் பணியாளர் அங்கே அவர்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த, நான்கு பேர் அமர்ந்து உணவு உண்ணும்படியாக அமைந்திருந்த உணவு மேசையை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றார்.


நான்கு பேரும் உட்காரவும், "உங்களுக்கு கவியைத் தெரியும் இல்ல" என்றவன், "இவங்க மிஸ் மாளவிகா. என்னோட நியூ செக்ரெட்டரி" என மித்ரன் அவளை மோனாவுக்கு அறிமுகப்படுத்த, "ஹாய்" என்றவாறு மாளவிகா தன் கையை நீட்டவும், அவளுடன் கைக் குலுக்கிய மோனாவின் கண்களில் கேலியா அல்லது இகழ்ச்சியா என வரையறுக்க முடியாத ஒரு பாவம் ஒரு நொடி நேரத்துக்குள் தோன்றி மறைந்தது. அவளுடைய எண்ணப்போக்கு என்னவாக இருக்கும் என்பது புரியவும், உடல் முழுவதும் தகித்தது மாளவிகாவுக்கு.


அவனிடம் நீட்டப்பட்ட 'மெனு கார்ட்'டை பிரித்துப் பார்த்துக்கொண்டே, "என்ன சாப்படறீங்க மோனா?" எனப் பிரத்தியேகமாக அவளை உபசரிக்க, 'ஃபர்ஸ்ட் ஐ லைக் டு ஹேவ் சம் காக்டைல் டு செலெப்ரெட் திஸ் ஹாப்பி மொமென்ட்" என்று அவள் வெகு சகஜமாகச் சொல்ல, அனிச்சையாய் அவன் பார்வை மாளவிகாவிடம் சென்றது.


அவள், 'இதெல்லாம் இங்க சாதாரணமப்பா' என்கிற மனநிலையில் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் உட்கார்ந்திருக்க, "மாள்வி... உனக்கும் காக்டைலே சொல்லட்டுமா" என வெகு இயல்பாகக் கேட்டு அவளை லேசாக கலவரப்படுத்திவிட்டு, சட்டென கவியிடம் திரும்பி, "கவி வாட் அபவ்ட் யூ” என்றான் சகஜ பாவத்தில்.


அவன் வேண்டுமென்றே தன்னைச் சீண்டுகிறான் என்பது நன்றாகவே புரிய, 'இப்படி ஓவர் சீன் போடறதுக்குத்தான் இந்த டீ.டீ நம்மள கூப்பிட்டிருக்குமோ? உடம்பு முழுக்க திமிரு' என அவனை மனதிற்குள்ளேயே வறுத்தெடுத்த மாளவிகா அதை வெளிக்காண்பிக்காமல்,


"நான் எங்க குலதெய்வம் கருப்பண்ண சாமிக்கு ஒரு மண்டல விரதம் இருக்கேன். அவருக்குப் படைச்ச சாராயத்தை, ஐ மீன் லிக்கரை மட்டும்தான் குடிக்க அலவ்ட். அதனால ஏதாவது மாக்டைல் இருந்தா சொல்லிடுங்க" என அவள் முகத்தைத் தீவிரமாக வைத்துக்கொண்டு சொல்ல, "ஓஹ் மை காட். இப்படியெல்லாம் கூட இருக்கா என்ன?" என அதிசயித்தாள் மோனா.


"ஆமாம்... எங்க கருப்பண்ணசாமிக்கு சுருட்டு, அப்பறம் சாராயம் எல்லாம் படையல் போடுவோம்" அவள் தீவிரமாகச் சொன்னாலும் அதில் இழையோடிய கிண்டல் மித்ரனுக்குப் புரியவே செய்தது. கவி வேறு மிக முயன்று சிரிப்பை அடக்குவது புரிய,


"கவி... உனக்கு என்ன? நீ ஏதாவது சாமிக்கு விரதம் இருக்கியா?" என அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் அக்னிமித்ரன்.


"இல்ல பாஸ்” என்றவாறு தன் கைக் கட்டைப் பார்த்தவன், "மெடிசின்ஸ் எடுத்துட்டு இருக்கேன்ல. அதனால வேண்டாம்" நாசூக்காக அவனும் மறுத்துவிட, அவரவர் தேவைக்கு ஏற்ப கவியே ஆர்டர் செய்துவிட, பின் சில பொதுவான பேச்சுகளுடன் அவர்களுடைய விருந்து தொடங்கியது.


அதற்குள் மாளவிகாவுக்கும் கவிக்கும் வழக்கமாக 'வெல்கம் ட்ரிங்க்' என்ற பெயரில் அங்கே கொடுக்கப்படும் பழச்சாறு பரிமாறப்பட, மித்ரனுக்கும் மோனாவுக்கும் பிரத்தியேக மதுபானம் கொண்டுவரப்பட்டது.


கவி பழரசம் அடங்கிய குவளையைக் கையில் எடுத்துக்கொண்டு, "பாஸ். பஃபேல என்ன ஐட்டம்ஸ்லாம் இருக்குன்னு ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட, மதுவை எடுத்து ஒரு மிடறு பருகிய மோனா ஏதோ பேச எண்ணி மாளவிகாவைப் பார்த்துத் தயங்க, "அஸ் பிருந்தா... அஸ் மாளவிகா... நீங்க பேசலாம்”


அவள் தயக்கம் புரிந்து அப்படிச் சொன்னான் மித்ரன். அவள் மாளவிகாவைத் துச்சமாகப் பார்த்து வைத்த அந்தப் பார்வையும் ஒரு காரணம். ஏனோ அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை அக்னிமித்ரனால். தகுந்த நேரம் பார்த்து அவளது முக்கியத்துவம் என்ன என்பதைச் சொல்லிவிட்டான். பிருந்தா யார் என்பதை நன்றாகவே அறிவாள் மோனா. மாளவிகாவை அவளுக்கு நிகராக ஒப்பிடவும் ஆச்சரியத்தில் விழி விரித்தாள் அவள்.


தன் கைப்பேசிக்குள் புகுந்து, அவளது கல்லூரி தோழர்கள் இணைந்திருக்கும் வாட்ஸ்ஆப் க்ரூபில் மூழ்கி அவள் முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்குள் சென்றிருக்க அவை எதையும் கவனிக்கவில்லை மாளவிகா. அதைக் கவனித்துத்தான் மித்ரன் அப்படி பேசியதே.


பின், "லயன்னஸ்... நீயும் போய் என்னென்ன ஐட்டம் இருக்குன்னு பார்க்கறதுதானே” இயல்பாகத்தான் சொன்னான், ஆனால் அவர்கள் ஏதோ தனியாகப் பேச விரும்புவதாக எண்ணிக்கொண்டு, அங்கிருந்தால் அது இங்கிதமாக இருக்காது என்ற எண்ணத்தில் கவியுடன் போய் இணைந்துகொண்டாள் அவள்.


"தேங்க்ஸ் அமித்! ரொம்ப நாளா உள்ள இருந்து என்னை ஸ்ட்ரெஸ் பண்ணிட்டு இருந்த விஷயத்தை இப்படிப் போட்டு உடைக்க ஒரு சான்ஸ் ஏற்படுத்திக் கொடுத்ததுக்கு" என்றவள், "உங்க சப்போர்ட் மட்டும் இல்லன்னா என்னால இதையெல்லாம் வெளிய சொல்லி இருக்கவே முடியாது" மோனாவின் குரல் தழுதழுத்தது.


"லீவ் இட் மோனா. இதைச் சொல்லத்தான் என்ன நேர்ல பார்க்கணும்னு சொன்னீங்களா?" என அவன் கேட்கவும், "எஸ் அஃப் கோர்ஸ்”. நான் லாஸ்ட் டைம் உங்களை மீட் பண்ணப்ப, உள்ள போன லிக்கர்தான் என்னைப் பேச வெச்சுது. ஆனா நான் அன்னைக்கு எல்லாத்தையும் உங்ககிட்ட கொட்டித் தீர்க்கலன்னா எனக்கு இருக்கற ஸ்ட்ரெஸ்க்கும் ஃபைனான்சியல் ப்ராப்ளம்ஸ்க்கும் நான் சூசைட் பண்ணிட்டு இருப்பேன்" அவள் மனதிலிருந்து சொல்ல,


"லீவ் இட் மோனா. உங்களுக்கு நல்லது செய்யணும்னு நான் இதை செய்யல. என் வேல முடியணும். ஒருத்தன் என் காலை மிதிச்சா அவன் தலையை மிதிக்கணும்னு நினைக்கற ஆளு நான். அதனால செஞ்சேன். எதிரிக்கு எதிரி நண்பன் கான்சப்ட்னு வேணா எடுத்துக்கலாம். நத்திங் பட் எ பிசினஸ் டீல்" அவன் வெளிப்படையாகச் சொல்ல, அவனது கரத்தைப் பிடித்து அவன் விரல்களில் இதழ் பதித்தவள், "நீங்க எந்த நோக்கத்துல செஞ்சிருந்தாலும் என்னைப் பொறுத்த வரைக்கும் இது பெரிய விஷயம்தான் அமித்"


அவள் பேசிக்கொண்டிருப்பதைத் தாண்டி அவன் கவனம் மொத்தமும் மாளவிகாவிடம் இருக்க, அவளும் இவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பது புரிந்தது அவனுக்கு.


ஒரு புன்னகை அவன் இதழ்களில் வந்து ஒட்டிக்கொள்ள, வேண்டுமென்றே அவள் கைகளைப் பற்றிக்கொண்டவன், "பட் எந்த ஒரு காரணத்துக்காகவும் நீங்க இதுல இருந்து பின்வாங்க கூடாது மோனா! அப்பறம் நீங்க என்னோட வேற ஒரு முகத்தைப் பார்க்க வேண்டியிருக்கும். அந்த கௌதம் அளவுக்கெல்லாம் நான் நல்லவன் இல்ல" அவன் முகத்தில் வழிந்த புன்னகைக்கும் குரலில் தெறித்த கடுமைக்கும் சம்பத்தில்லாமல் இருக்கக் குழப்பத்துடன் அவனது பார்வையைத் தொடர்ந்தவள், அது மாளவிகாவிடம் முடியவும், அவன் அவளை லயன்னஸ் என அழைத்தது வேறு நினைவுக்கு வர, பெரிதாகப் புன்னகைத்து, "ஷ்யூர் மிஸ்டர் அக்னிமித்ரன். பட் நீங்க அவ்வளவு கெட்டவரா இருக்க முடியாதுன்னு தோணுது" என்றாள் அவன் எச்சரிக்கையை உணர்ந்து.


பின்பு கவியும் மாளவிகாவும் அங்கே வந்து உட்காரவும், அவர்களை நெருங்கி வந்த பேரர், "சார் பஃபே... ஆர் வில் யு கோ பார் அல்லாகாட்?" எனக் கேட்டார் பவ்வியமாக.


"வாட் யூ சஜஸ்ட் கவி” என அவன் கவியின் ஆலோசனையைக் கேட்க, "ஐ திங்க் பஃபே இஸ் குட்" என அவனுக்குத் தோன்றியதை கவி சொல்லவும், "தென் ஓகே" என்றவன், அதை அந்த பேரரிடம் தெரிவிக்க, அவர்களுக்கான சூப் கொண்டுவரப்பட, அதுவரை அவன் பார்வை மாளவிகாவிடமே நிலைத்திருந்தது.


அவள் பின் புறமாகத் திரும்பி மறுபடி மறுபடி எதையோ பார்த்துக் கொண்டிருக்க, அவள் எதை அப்படிப் பார்க்கிறாள் என்ற ஆவலில் அவளை ஆராய்ந்த மித்ரனுக்குச் சிரிப்பு பீரிட்டுக் கிளம்ப, மிகவும் முயன்று அதை அடக்கினான்.


அதற்குள் அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த கவியிடம், "கவிண்ணா. அந்த சாக்லேட் பௌண்டைன் இருக்கே. அது கிட்ஸ்க்கு மட்டும்தானா? நாமெல்லாம் எடுக்கக் கூடாதா?" என அவள் ஏக்கத்துடன் ரகசியமாகக் கேட்க, "அங்க கிட்ஸ் ஜோன்னுதான போட்டிருக்கு. அப்படினா அதுதான அர்த்தம்" என அவளைக் கிண்டலடித்தான் அவன்.


அவர்கள் பேச்சு சரியாகப் புரியாமல் போனாலும், அவர்களுடைய சகஜ நிலை அவன் வயிற்றில் அமிலத்தைக் கரைக்க, மித்ரனின் கண்கள் இடுங்கியது.


அதற்குள் அடுத்த உணவு வகைகளை எடுக்கக் கவி போகவும், அவனைத் தொடர்ந்து போன மாளவிகா, "என்ன வேணும் சொல்லுங்கண்ணா. நான் ஹெல்ப் பண்றேன்" என்று சொல்லிவிட்டு அவனுக்காகத் தட்டை எடுத்து வர, உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போனான் கவி. அவனுடன் சேர்ந்து அவன் சொன்னவற்றை எடுத்து வந்து மேசையில் வைத்தாள் மாளவிகா.


மோனாவும் போய் தனக்கு தேவையானவற்றை எடுத்து வர, மாளவிகா தனக்காக எடுக்கச் செல்லவும், அவளைத் தொடர்ந்து வந்த அக்னிமித்ரன், "எனக்கெல்லாம் ஹெல்ப் பண்ண மாட்டீங்களா மேடம்" எனக் கிண்டலாகக் கேட்க, "பண்ணுவேனே. ஆனா அதுக்கு நீங்க கவி மாதிரி கையை உடைச்சுக்கணும். ஓகேவா?" அவள் தீவிரமாகச் சொல்ல,


"அடிப்பாவி நீ என் கையை உடைச்சாலும் உடைச்சிடுவ தாயே. ஆளை விடு. நான் சொன்னா உடனே செய்ய நூறு பேர் இருக்கான்" என அவன் சொல்லிக்கொண்டிருக்க, அந்த 'சாக்லேட் ஃபௌண்டைன்' அருகில் வந்தவள் அதை ஏக்கத்துடன் பார்க்க,


" என்ன” எனப் புருவத்தை உயர்த்தினான் அவன்.


"ஒண்ணுமில்ல... சாக்லேட்க்கு ஒரு ஃபௌண்டைன் செஞ்சு வெச்சிருக்காங்க இல்ல... அழகா இருக்கு. அதைத்தான் பார்த்தேன்” என்று அசடுவழியச் சொல்லிவிட்டு அவள் சென்றுவிட, அந்த நொடி அவள் முகத்தில் தெரிந்த குழந்தை தனத்தை ரசித்தவனுக்கு 'இவளா அன்னைக்கு பத்ரகாளி மாதிரி நின்னா?' என்ற கேள்விதான் எழுந்தது.


பின்பு அங்கே இருந்த பணியாளரை அழைத்தவன், "அவருக்கு என்ன வேணுமோ டேபிள்லயே சர்வ் பண்ணிடுங்க” என்று கவியைக் காண்பித்துச் சொல்லிவிட்டு, அந்த 'சாக்லேட் ஃபௌண்டைன்' அருகில் சென்றவன், அருகே வைக்கப்பட்டிருந்த, நீண்ட குச்சியில் கோக்கப்பட்ட குக்கீஸை எடுத்து அந்த ஃபௌண்டைனில் பொழிந்துகொண்டிருந்த சாக்லேட் மழையில் நனைத்து, அதைக் கொண்டு வந்து மாளவிகாவிடம் நீட்ட, 'இவனா இப்படி செய்தது' என மூச்சடைத்துப் போனது கவிக்கு.


அவன் மிரண்டு போய் மித்ரனைப் பார்க்க, "வாவ் இத நீங்களா எடுத்துட்டு வந்தீங்க? தேங்க்யூ!" என்றவாறே அதை ரசனையுடன் வாங்கிகொண்டாள் மாளவிகா.


அதற்குள் உணவை எடுக்கப் போயிருந்த மோனா அங்கே வரவும், அவனுடைய இடத்தில் தன் உணவுடன் போய் உட்கார்ந்தவன், "கவி. நம்ம வீனஸ் தமிழ்ல... ‘ஆடி வா தமிழா’ ப்ரோக்ராம் அடுத்த சீசன் ஆரமிக்க போறோம் இல்ல? அதுல இவங்களையும் ஒரு ஜட்ஜா சேர்த்துட சொல்லு. பேமென்ட் டெர்ம்ஸ் எல்லாம் கதிரைக் கூட வெச்சுட்டுப் பேசி முடிவு பண்ணிக்கோங்க. அஸாப்" என்றான் மித்ரன்.


அதில் மோனாவின் முகம் ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்தைக் கொடுக்க, "தேங்க்ஸ் அ லாட் அமித்" என்றாள் அவள் அதீத உற்சாகத்துடன்.


"ஓஹ்... இந்த டீலிங்ல தான் இந்த அம்மணி அப்படி ஒரு பழியைத் தூக்கி அந்த கௌதம் மேல போட்டிருக்கா' என்று எண்ணியவளுக்கு ஏனோ அந்தச் சூழ்நிலையே பிடிக்காமல் போனது. அவன் கொடுத்த சாக்லெட்டால் தித்தித்திருந்த அவளது மனம் ஒரு சில நிமிடங்களிலேயே கசந்துபோனது.


'எப்படா மூணு மாசம் முடியும். எப்படா இவன் முகத்துலயே விழிக்காம இருக்கப் போறோம்' என்றிருந்தது அவளுக்கு. அதன் பின் அவர்கள் பேச்சு அவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்து முற்றிலும் தொழில் நிமித்தமாக மாறிப்போக, சாப்பிட்டு முடித்து அங்கிருந்து கிளம்பினார்கள். வெளியில் வந்ததும் மறுபடி ஒரு சம்பிரதாய அணைப்புடன் மோனா விடைபெற, போதும் என்று இருந்தது மாளவிகாவுக்கு.


அப்பொழுது அவளது கைப்பேசி ஒலிக்க அந்த அழைப்பை ஏற்று, "அப்படியா. எங்கடா இருக்க?" என்று வியப்புடன் கேட்டவளின் பார்வை அங்கும் இங்கும் சுழல, அங்கே ஓரமாக அவனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதில் சாய்ந்து நின்றிருந்தான் அன்பு.


அவனைக் கண்டுகொண்டவள், தன் கையை அசைத்து அவனை அழைக்க, அவர்களை நோக்கி வந்தான் அவன். "அன்பு! நான் இன்ட்ரொட்யூஸ் பண்ணித்தான் இவரை உனக்குத் தெரியணும்னு இல்ல" என அக்னிமித்ரனைக் குறிப்பிட்டவள், "இவங்கதான் கவிண்ணா” எனக் கவியை அவனுக்கு அறிமுகம் செய்தாள்.


"ஹை" என்றவாறு கவி கையை அசைக்க, "ஹை...ணா" என்றவன், "ப்ரௌட் டு மீட் யு சார்” என்றான் மித்ரனிடம்.


மித்ரன் அவனைப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க, "மாலு. உன்னால இப்ப என் கூட வர முடியுமா?" என்று கேட்டான்.


"ஹேய்... இப்பவா? ஏதாவது முக்கியமான வேலையா?" என அவள் கேட்க, “நீ தான மெட்ராஸ் யூனிவர்சிட்டி போகணும்னு சொல்லிட்டு இருந்த. நான் எதேச்சையா இங்க வந்தேன். நீ இங்க இருக்கேன்னு சொல்லவும்... உனக்கு பெர்மிஷன் போட்டுட்டு வர முடிஞ்சா போயிட்டு வரலாம்னு" என அவன் விளக்கம் கொடுக்க, அவள் மித்ரனின் முகத்தைப் பார்க்கவும், " இப்ப என்ன யூனிவர்சிட்டி" எனக் கேட்டான் அவன்.


"இல்ல கரஸ்ல பீ.ஜி பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு அப்ளை பண்ணலாம்னு" என அவள் பதில் சொல்ல, “அதை ஆன்லைன்லயே பண்ணலாம் இல்ல" கொஞ்சம் கடுப்புடன் அவன் கேட்கவும், "நேர்ல போனா ஸ்டடி மெடீரியல்ஸ் எல்லாத்தையும் கையோட வாங்கிட்டு வந்துடலாம்” என்றாள்.


யூனிவர்சிட்டியை ஒருமுறை நேரில் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று அவளுக்கு ஒரு சின்ன ஆசை, கூடவே மெரினாவையும். அதைச் சொல்ல அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்கவே அவனிடம் இப்படிச் சொல்லி வைத்தாள்.


மறுக்க இயலாமல், "ஓகே... நாளைக்கு டைம்க்கு வந்துடு. முக்கியமா ஒரு மெயில் அனுப்பனும்" என்ற நிபந்தனையுடன் அவள் செல்ல அனுமதித்தான் மித்ரன்.


"தேங்க் யு சார்" என்ற அன்பு, "அதான் ஓகே சொல்லிட்டார் இல்ல வா" என்றவாறு அவளது கையை உரிமையுடன் பற்றி அவளை இழுத்துக்கொண்டு செல்ல, "பை அமித். பை கவிண்ணா" என்றவாறு அவனது இழுப்புக்குச் சென்றாள் அவள்.


தொடர்ந்து அவனது இருசக்கர வாகனத்தில் அவனுக்குப் பின்னால் அவள் உட்கார்ந்து செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த அக்னிமித்ரனின் கண்களில் அனல் தெறித்தது.


தன்னுடைய பார்வை கூட ஒரு எல்லைக்கு மேல் அவள் மீது விழ அனுமதிக்காதவளை இவ்வளவு உரிமையுடன் ஒருவன் அணுகுவது, அதையும் தாண்டி அவள் அவனுடைய இழுப்புக்குச் செல்வது அவனது வன்மத்தை வளர்க்க, அவளுடைய வாழ்க்கையிலிருந்து இந்த அன்புவை எப்படி விலக்குவது என விபரீதமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான் அக்னிமித்ரன்.


மாளவிகாவுக்கும் அன்புவுக்கும் இடையில் உள்ள நட்பின் ஆழத்தையும் அவள் அவனிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் அறியாமல் அவன் இப்படி அனர்த்தமாக யோசிக்க, இவனால் அப்படி ஒரு நிலை வந்தால் அதைத் தாங்குவாளா மாளவிகா? அல்லது அன்புவை அவள் வாழ்க்கையிலிருந்து நீக்கத்தான் முடியுமா அக்னிமித்ரனால்?


விடை காலத்தின் கைகளில்.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page