Anbenum Idhazhgal Malarattume! 9*
அணிமா 9
தாய் மாமனாகப்போகும் செய்தி அறிந்து மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தான் ஈஸ்வர்.
பழங்கள் இனிப்புகள் என்று அள்ளிக்கொண்டு அம்மா மற்றும் பாட்டியுடன் அடுத்த நாள் காலையே தங்கையின் வீட்டிற்கு அவளை நேரில் காணவென வந்திருந்தான் அவன்.
வழக்கம் போல மலரின் தாத்தா பாட்டி அங்கே இருக்க அவளது அச்சுதன் மாமாவும் மாமியும் கூட வந்திருந்தனர் பிரபாவையும் ஜீவிதாவையும் வாழ்த்த.
சூடாமணி குதூகலத்துடன் அனைவரையும் உபசரித்துக்கொண்டிருந்தார்.
"ஏய் சரோஜா நாம ரெண்டு பேரும் கொள்ளு பாட்டி ஆகப்போறோமாடி?' என்ற செங்கமலம் பாட்டியின் குரலில் உற்சாகம் துள்ளிக் குதித்தது.
"ஆமாக்கா ஆமாம்!" என்ற சரோஜா பாட்டியும் அதே நிலையில் தான் இருந்தார்.
தங்கை மற்றும் மருமகன் இருவருடமும் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு வெங்கடேசனுடன் பேசிக்கொண்டிருந்தான் ஈஸ்வர்.
ஆனால் அவனது கண்களோ சுற்றிச் சுற்றி அங்கே மலரைத்தான் தேடிக்கொண்டிருந்தது.
அவளைப் பற்றி அங்கே எப்படி விசாரிப்பது என்று அவன் யோசித்துக்கொண்டு இருக்கும் பொழுதே அதற்கு அவசியமே இல்லாத வகையில், "என்ன சூடாம்மா மலரை இங்கே காணும்?" என்று ஈஸ்வரின் பாட்டி கேள்வி எழுப்ப,
ஒரு நொடி சூடாமணியின் உற்சாக முகம் மாறிப்போனது. உடனே தன்னை சமாளித்துக்கொண்டு, "இல்ல பெரியம்மா மலர் வேலையிலிருந்து சீக்கிரம் ரிலீவ் ஆகப்போறால்ல; அதான் ராப்பகலா வேலை செஞ்சிட்டு இருக்கா; இப்ப வர நேரம்தான்" என்றார் அவர்.
அடுத்த நாளே படப்பிடிப்பிற்காக அவன் வெளி நாடு செல்ல இருந்ததால் அவசரமாக முடிக்க வேண்டிய வேலைக் காரணமாகத்தான் ஒரு முறை தங்கையை நேரில் பார்த்துவிட்டு போகவேண்டும் எனக் காலை சீக்கிரமாகவே கிளம்பி அங்கே வந்திருந்தான் ஈஸ்வர்.
அம்மா மற்றும் பாட்டி இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு அனைவரிடமும் விடைபெற்று அவன் கிளம்பும் நேரம் சரியாக கை நிறைய பரிசுப்பொருட்களுடன் அங்கே வந்தாள் மலர்.
அனைவரிடமும் நலம் விசாரித்தவள் "வாழ்த்துக்கள் அண்ணி கங்கிராட்ஸ்ணா!" என்றுவிட்டு அந்தப் பரிசுகளை ஜீவிதாவிடம் கொடுக்க பதிலுக்கு ஒரு புன்னகை கூட இன்றி ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக்கொண்டாள் ஜீவிதா.
அதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான் ஈஸ்வர்.
பிரபா எதையும் கண்டுகொள்ளாமல் அவள் கொடுத்த பரிசுகளைப் பிரிக்க, ஒரு பெட்டி நிறைய விதவிதமாக சாக்கலெட்கள் இருக்க அத்துடன் மகளிருக்கான பிரசவகால ஆலோசனைகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு போன்ற சில புத்தகங்களும் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய புடவை ஒன்றும் இருந்து.
"பார்றா! இங்க அண்ணனுக்கு ஒண்ணுமே இல்ல எல்லாத்தையும் அண்ணிக்கு மட்டும் வாங்கிட்டு வந்திருக்கா" என்று பிரபா குறைப்பட,
"அண்ணா! நீ இப்படியேதான் இருப்ப; மசக்கை அது இதுன்னு அண்ணிதான் கஷ்ட படுவா; அதனாலதான் அவளுக்கு எல்லாம் வாங்கிட்டு வந்தேன்; ஓகே வா?" என்று மலர் பதில் கொடுக்க,
"ஓக்கே ஆபீசர்! ஆனா சாக்லெட்ல எனக்கும் ஒரு ஷேர் உண்டு" என்று அவள் சொன்னதை ஏற்றுக்கொண்டான் பிரபா.
சாக்கலெட்கள் எல்லாமே ஜீவிதாவிற்கு மிகவும் பிடித்தமானதாக பார்த்து வாங்கி வந்திருந்தாள் மலர். புடவையின் நிறமும் அவளுக்கு விருப்பமானதே.
தங்கை இங்கே வாழ வந்த சில நாட்களிலேயே அவளது விருப்பங்களைப் புரிந்து வைத்திருக்கிறாள் மலர் என்பதை உணர்ந்த ஈஸ்வரின் பார்வையில் ஒரு மெச்சுதல் வந்திருந்தது.
ஆனால் அதை அவள் யார் மூலம் அறிந்திருப்பாள் என அவனுக்குத் தெரிந்தால் இப்பணி உணருவானோ ஈஸ்வர்?
அவன் மனதில் நினைத்ததை ஈஸ்வரின் அம்மா சாருமதி வாய் விட்டே சொல்ல சூடாமணி மகளைப் பெருமையுடன் பார்த்துவைத்தார்.
ஜீவிதாவுமே வியந்துதான் போனாள்.
ஈஸ்வர் வீட்டை விட்டு வெளியில் வரவும் அவனைப் பின்தொடர்ந்து வந்த மலர் "முதல் முதலா தாய் மாமாவாக ஆகப்போற செய்தி உங்களுக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு இல்ல" என்று புன்னகை முகமாய் கேட்கவும்,
"இருக்காதா பின்ன உனக்கு மட்டும் அத்தையா ஆகப்போறதுல சந்தோசம்தானே. நீ ஜீவிக்கு வாங்கி வந்திருக்கும் கிஃ