top of page

Anbenum Idhazhgal Malarattume 35 & 36

Updated: Apr 13, 2023

அணிமா-35


ஒரு வருடத்திற்கு முன்...


மல்லிகார்ஜூன் மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம் அவனைக் கைப்பேசியில் அழைத்த சோமய்யா டிப்பு காணாமற்போன செய்தியைப் பதட்டத்துடன் அவனிடம் தெரிவித்தான்.


பதறிய மல்லிக் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்குமாறு சோமய்யாவிடம் சொல்லவும் அவன் அதற்கு பயந்து தயங்க அவனை மிகவும் வற்புறுத்தி புகார் அளிக்க வைத்தான்.


அதன் பின் பணத்தைத் தேற்றி, வண்டி அவன் அங்கிருந்து ஸ்ரீபுரம் வந்து சேரவே இரண்டு தினங்கள் பிடித்தது மல்லிக்கிற்கு.


காவல்துறை விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதில் சற்று எரிச்சலுற்றவன் ஊர்க்காரர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு சுற்றிலும் உள்ள சிறிய டவுன்கள் மற்றும் கிராமங்களில் தானே டிப்புவைத் தேடி அலைந்தான்.


ஆனால் எங்கேயும் அவன் கிடைக்காமல் போகவே விரக்தியுடன் வீட்டில் வந்து உட்கார்ந்தான் மல்லிக்.


ஏதோ ஒரு போட்டிக்காகச் சுற்றி உள்ள கிராமங்களில் புகைப்படம் எடுக்கவென சந்தோஷ் என்பவன் அந்த ஊரில் சில நாட்களாகத் தங்கி இருந்ததும் டிப்பு அவனுடன் நெருங்கிப் பழகியதும் பிறகுதான் சக்ரேஸ்வரி மூலமாக அவனுக்குத் தெரியவந்தது.


அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த சந்தோஷ் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் சென்று மல்லிக் விசாரிக்கவும் ஒருவர் வைத்திருந்த கைப்பேசியில் அவனுடைய முகம் தெளிவாகப் பதிவாகி இருந்தது.


அந்தக் கைப்பேசியுடன் காவல் நிலையம் சென்று அந்தத் தகவலைத் தெரியப் படுத்தினான் மல்லிக். ஆனால் அங்கே அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்றான்.


ஒரே மகனைப் பிரிந்த ஏக்கம், பெற்றோர் இருவரையும் தாக்கப் பித்துப் பிடித்த நிலையிலிருந்தனர் இருவரும்.


நாள் முழுதும் காவல் நிலையத்தின் வாயிலிலேயே பழியாய் கிடந்த சக்ரேஸ்வரி ஒரு நிலையில் துயர் தாங்காமல் உடலில் தீ வைத்துக்கொள்ள உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.


அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே வெளி உலகம் அறியாது அதிகார பலத்தினால் சுலபமாக மூடி மறைக்கப்பட்டது அங்கே.


இடது புறமாகக் கழுத்து, தோள், வயிறு என இடை வரை படர்ந்து ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது சக்ரேஸ்வரிக்கு. அவளுக்கு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.


செய்வதறியாமல், மகன் மனைவி இருவரைப் பற்றிய கவலையில் உழன்றவாறே சோமய்யா மருத்துவமனையில் அவளுடன் இருக்க, அன்னையைப் போன்று தன்னிடம் கரிசனம் காண்பிக்கும் அண்ணி மனதாலும் உடலாலும் அனுபவிக்கும் வேதனையை நேரில் பார்க்கவும் அது கொடுத்த வலியில் அனைத்திற்கும் காரணமானவன் கையில் கிடைத்தால் அவனைக் கொன்று புதைக்கும் கோபத்திலிருந்தான் மல்லிக்.


ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், அப்படி ஒரு வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது அவனுக்கு. ஆனால் ஒரு வேதனையான சூழ்நிலையில்!


அவனுடைய நண்பன் ஒருவன் இறந்த செய்தி அறிந்து மனம் வருந்தியவனாக அவர்களுடைய ஊருக்கு அருகில் உள்ள நர்சாபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் அந்த நண்பனுடைய குடும்பத்தைச் சந்திக்க அங்கே சென்றான் மல்லிக்.


ஒரு இடத்தில் இல்லாமல் டிப்புவைத் தேடிச் சுற்றிக்கொண்டே இருந்த காரணத்தால் அவன் இறந்து ஒரு மாதம் கழித்தே அந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது.


அங்கே அவனுடைய மனைவி மற்றும் வயதான அவனுடைய பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியவன், அந்த நண்பனின் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவும் புடவை முந்தானையை வாயில் வைத்துப் பொத்தியவாறு அழத்தொடங்கினாள் அவனுடைய மனைவி.


ஏதோ சரியில்லை என்பது புரிய அவன் அவர்களிடம் வற்புறுத்திக் கேட்கவும், தயங்கியவாறே பயங்கரமான ஒரு செய்தியைச் சொன்னார் அந்தப் பெண்மணி.


அவளுடைய கணவர் திடீரென்று விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட மருத்துவமனையிலிருந்து அவனுடைய உடலை வீட்டிற்கு எடுத்துச்செல்லக் கூட கையில் பணமில்லாமல் செய்வதறியாது அவர்கள் திகைத்திருந்த சமயம் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் அவர்களுடைய நிலையை உணர்ந்து பணம் கொடுத்து உதவ முன் வந்தான்.


ஆனால் அதற்காக அவன் முன் வைத்த நிபந்தனைதான் மிகவும் கொடியதாக இருந்தது. இருந்தாலும் அதைச் செய்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை அவர்களுக்கு.


அவருடைய இறுதிச் சடங்குகளைச் செய்ய வேறு பணம் தேவைப்படவும், பத்தாயிரம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு பத்து வயதே ஆன அவர்களுடைய இரண்டாவது மகனை அந்த நபரிடம் விற்றுவிட்டதாகச் சொன்னார் அவர்.


கதி கலங்கித்தான் போனான் மல்லிக்!


மேற்கொண்டு, யாரிடம் அவனை விற்றார்கள் என்ற கேள்வியை அவன் கேட்கவும், லட்சுமணா என்ற அவனது பெயரைத் தவிர அவனைப் பற்றி வேறெந்த தகவலும் தெரியவில்லை அவர்களுக்கு.


பணத்தைக் கொடுத்து பிள்ளையை தன்னுடன் அழைத்துச்சென்ற பிறகு அவனை மற்றொரு முறை பார்க்கக்கூட இல்லை அவர்கள்.


அவர்களை எண்ணிக் கோபப்படுவதா இல்லை இரக்கப்படுவதா என்பது கூட புரியவில்லை மல்லிக்கிற்கு.


நான்கில் ஒன்று போனால் என்ன? அந்த நிலையைக் கடந்து வந்ததே பெரிது! என்ற ரீதியில்தான் அவனுடைய நண்பனின் தந்தை இருந்தார்.


ஆனால் அதுபோன்ற மனநிலையிலெல்லாம் இல்லை அந்தப் பிள்ளையைப் பெற்றவள். எதிர்பாராமல் மரணத்திடம் கணவரைப் பறிகொடுத்த துயரத்தைக் காட்டிலும், தெரிந்தே உயிருடன் மகனைப் பறிகொடுத்த துயரம் மண்டிக் கிடந்தது அந்தப் பெண்மணியிடம்.


சக்ரேஸ்வரியின் நிலையில் அவளைப் பொருத்திப்பார்த்து, மனதிற்குள் மிகவும் வருந்தினான் மல்லிக்.


அந்தக் கணம் மனதில் ஒரு எண்ணம் பொறி தட்டவும் அவன் பிரதி எடுத்து வைத்திருந்த சந்தோஷின் புகைப்படத்தை அவர்களிடம் காண்பிக்கவும் அதைப் பார்த்து அதிர்ந்தவாறு, அவன்தான் அந்த லட்சுமணா என அடித்துக் கூறினார் அவனுடைய நண்பனின் தந்தை.


அவன் இதையே பிழைப்பாய் வைத்துக்கொண்டு அந்தப் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பது புரிந்தது மல்லிக்கிற்கு. அவன் மீதான வன்மமும் கூடிக்கொண்டே போனது.


இந்த நிலையில்தான் ஒரு சமயம், அவர்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சுற்றுலா தலமான மாரேடுமில்லி என்ற சிறிய டவுனில் அந்தப் புகைப்படத்தில் இருப்பவனைப் பார்த்ததாக அவனுடைய நண்பன் ஒருவன் சொல்லவும் ஒரு நாள் முழுதும் அங்கே வலை வீசி அவனைக் கண்டு பிடித்தான் மல்லிக்.


அங்கே இருந்த சிறிய தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருந்தான் சந்தோஷ், லட்சுமணா எனப் பலபெயர்களை தனக்குச் சூட்டிக்கொண்டு பிள்ளைகளைக் கடத்தும் சந்தீப் என்பவன்.


இரவு நேரம் யாரும் அறியாமல், அந்த விடுதிக்குள் நுழைந்த மல்லிக் அவன் தங்கியிருந்த அறையின் கதவைத் தட்டவும் அந்த சந்தீப் தயக்கத்துடன் கதவைத் திறக்க அடுத்த நொடி அவனைத் தள்ளிக்கொண்டு அதிரடியாக அறைக்குள் புகுந்து கதவைத் தாளிட்டான்.


நடப்பதை அவன் உணர்வதற்குள்ளாகவே கையில் வைத்திருந்த துணியால் அவனுடைய வாயைப் பொத்தி சரமாரியாக அவனை வெளுத்து எடுத்தான் மல்லிக்.


ஒருகட்டத்தில் அவன் சோர்ந்துபோய் கீழே விழ அவன் வாயில் அடைத்திருந்த துணியை நீக்கி, "குக்கா! செப்புரா, நீ பேரு ஏமி?" என்று அவன் கேட்க, நடுங்கிய குரலில், "சந்தோஷ்!" என்றான் அவன்.


'உண்மையான பெயரைச் சொல்!' என்பதுபோல் அவனுடைய கைகள் மற்றவனைப் பதம் பார்க்க, "விட்டுரு! விட்டுரு! சொல்லிடறேன்!" என்றவன், "சந்தீப்! அதுதான் என்னோட உண்மையான பேரு!" என்றான்.


"சந்தீப் நா கொடுக்கா, செப்புறா! நா பிட்டா, நா டிப்பு, இப்புடு எக்கட உன்னாடு?" (இப்ப டிப்பு எங்க இருக்கான் சொல்லுடா!) என்று மல்லிக் உறும,


அதில் நிலை குலைந்தவன், "நான் எட்டுப் பேருக்கு வேலை செஞ்சிட்டு இருக்கேன்! நான் பிள்ளைங்கள பிடிச்சி, அந்த ஏஜென்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சிடுவேன். பசங்கள அவங்க எங்க அனுப்புவாங்கன்னு எல்லாம் எனக்குத் தெரியாது! ஆனா இந்த ஸ்டேட்லேயே இருக்கமாட்டாங்க. அதுமட்டும் தெரியும்!


மத்தபடி இந்தியால எங்கேயாவது ஒரு மூலைக்கு கடத்தி இருபாங்க. இல்லனா வேற நாட்டுக்குக்கூட கடத்தியிருப்பாங்க!" எனத் தமிழிலேயே சொல்லிமுடித்தான் அந்த சந்தீப்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாயில் வந்த கெட்ட வார்த்தைகள் அனைத்திலும் அவனைத் திட்டி தீர்த்த மல்லிக், கீழே விழுந்து கிடந்த அவனைக் காலால் உதைத்தவாறே, "டிப்புவோ எந்த ஏஜெண்டுக்கு விக்கறே?" என்று கேட்கவும்,


"அந்த ஏஜென்ட் பேரு, சங்கரைய்யா! அவன் இப்ப எங்க இருக்கான்னு எனக்குத் தெரியாது!" என உயிர் பயம் கண்ணில் தெரிய அவன் சொல்லவும், மேலும் அவனை இரண்டு மிதி மிதித்தவன், தனது நண்பனின் மகனைப் பற்றிக் கேட்க, அவனையும் அந்த சங்கரய்யாவிடம்தான் விற்றதாகச் சொன்னான் அந்த சந்தீப்.


அவனுடைய நவீன இரக கைப்பேசியைப் பறித்து, தனது சட்டைப் பையில் போட்டுக்கொண்டு, பின்பு அவன் குற்றுயிர் ஆகும் வரை அவனை அடித்து நொறுக்கிய மல்லிக், கையோடு எடுத்துவந்திருந்த பெட்ரோலை ஊற்றித் தீயிட்டு அவனைக் கொளுத்திவிட்டு, அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியில் குதித்து அங்கிருந்து தப்பினான்.


தன்னைப் பற்றி பொய்யான தகவல்களைக் கொடுத்து சந்தீப் அந்த விடுதியில் தங்கியிருந்த காரணத்தால், அவன் இறந்த செய்தி அவனுடன் தொழில் ரீதியான இணைப்பிலிருந்த ஒருவருக்கும் தெரியாமலே போனது.


அவனுடைய கைப்பேசியை எடுத்து வந்த மல்லிக், அதை இயக்கும் முறை பிடிபடாமல் மிகவும் தவித்துப் போனான்.


அதனைப் பற்றி வேறு யாரிடமும் கேட்க இயலாத நிலையில் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் முயன்று அவனுடைய பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் பள்ளி இறுதி வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடைய துணையுடன் அதனை இயக்க கற்றுக்கொண்டான் மல்லிக்.


ஓரளவிற்குத் தட்டுத்தடுமாறி ஆங்கிலத்தை எழுத்துக்கூட்டிப் படிக்கத் தெரிந்த காரணத்தால், அதில் அவன் பதிவு செய்து வைத்திருந்த சில ஏஜெண்ட்களின் பெயர்களையும் அவர்களுடைய தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக்கொண்டு அவர்களுடைய புகைப்படங்களைப் பார்த்து அவர்களுடைய அடையாளத்தை மனதில் பதிய வைத்துக்கொண்டு அந்தக் கைப்பேசியை அழித்துவிட்டான்.


அவர்களில் இருவரைத் தவிர மீதம் இருப்பவர்கள் எல்லோருமே சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது மட்டும் அவனுக்குத் தெரியவந்தது.


ஆனால் அதில் சந்தீப் குறிப்பிட்ட அந்த சங்கரய்யா பற்றிய விவரங்கள் மட்டும் இருக்கவில்லை.


முதலில் அதன் காரணம் புரியாமல் போனாலும், அந்தக் கைப்பேசியை இயக்க தெரியாமல் தானே சில தகவல்களை அழித்திருக்கக்கூடும் என்பதைத் தொடர்ந்த நாட்களில் உணர்ந்தான்.


சென்னைக்குச் சென்றால்தான் டிப்புவைக் கண்டுபிடிக்க முடியும் என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாகத் தோன்றவும், இங்கு வந்தவன் அவனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள நிரந்தரமாக ஒரு வேலை தேவை என்ற காரணத்தால் அது வரை எந்த ஒரு சுய லாபத்திற்காகவும் ஈஸ்வரைத் தேடிச்செல்லாதவன் அவனிடம் உதவி கேட்டு வந்தான்.


கொஞ்சமும் யோசிக்காமல், ஈஸ்வர் அவனை வேலையில் சேர்த்துக்கொள்ளவும் அவனிடம் பௌன்சராக வேலை செய்யத் தொடங்கினான் மல்லிக்.


அவனுடன் வேலை செய்பவர்கள் அவனை வடநாட்டைச் சேர்ந்தவன் என்று நினைத்து மல்லிக் என்ற பெயரை மாலிக் என்று அழைக்கத்தொடங்கினர்.


முதலில் அதை மறுத்துப்பேசி மாற்ற முயன்றவன் ஒரு கட்டத்தில் அப்படியே விட்டுவிட்டான். அனைவருமே அவனை மாலிக் என்றே அழைக்கவே ஈஸ்வரும் அப்படியே அழைக்கத் தொடங்கிவிட்டான்.


சில தினங்களில் கிடைத்த இடைவெளியில் ஊருக்குச் சென்று அவனுடைய அண்ணன் மற்றும் அண்ணி இருவரையும் சென்னைக்கே அழைத்து வந்து அவனது நிலைக்குத் தகுந்தாற்போன்று ஒரு வீட்டை எடுத்து அங்கே அவர்களைத் தங்க வைத்தான்.


சக்ரேஸ்வரியின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்த பொழுதிலும், தீக்காயம் முற்றிலும் ஆறவில்லை.


தீப்புகையினால் உண்டான நுரையீரல் பாதிப்பும் சுலபத்தில் சரியாகவில்லை.


இந்த நிலையில்தான் மல்லிக் அவளைச் சென்னைக்கு அழைத்து வந்தது.


கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவளைக் காண்பித்து, முறையான மருத்துவம் செய்து ஓரளவிற்கு அவளை மீட்டு வந்தான்.


ஆனால் அதற்குள்ளாக சோமய்யாவின் மனநிலை மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருந்தது.


அவன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் தவம் கிடப்பதன் காரணம் புரியாமல் குழம்பினான் மல்லிக்.


இத்தனை மெனக்கெடல்களுக்கிடையில் அவனது வேட்டையைத் தொடங்கியிருந்தான் அவன்.


முதன்முதலாக அவன் குறித்து வைத்திருந்த ஏஜென்ட்களின் பட்டியலிலிருந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து சந்தீப்பின் பெயரைச் சொல்லி அவளை மிரட்டி நள்ளிரவு நேரத்தில் தாம்பரம் புறவழிச்சாலைக்கு வரச்சொன்னான்.


அவள் ஒரு பெண் என்பதுகூட அவன் மனதை இளக்கவில்லை. மாறாகத் தாய்மை உணர்வுடன் இருக்க வேண்டிய ஒரு பெண் இது போன்ற ஒரு கேவலமான மோசடியில் ஈடுபட்டது அவனது கோபத்தை அதிகரிக்கவே செய்தது. கொஞ்சமும் தயங்காமல்அவளை எரித்துக் கொன்றான் மல்லிக்.


அவள் இறப்பதற்கு முன்பாக டிப்புவைப் பற்றி அவன் அவளிடம் விசாரிக்க அவளிடமிருந்து உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.


அண்ணன் மகனைக் கண்டுபிடிக்கும் வழி தெரியாமல் அவனைப் பெற்றவர்கள் இருவரையும் பார்த்துப் பார்த்து நொந்தவன் தன்னுடைய இயலாமையை வெறுத்தவனாகத் தொடர்ந்து ஒவ்வொரு ஏஜெண்டாகக் கொன்று மனதில் எரியும் தீயை அணைக்க முயன்றுகொண்டிருக்கிறான்.


அப்படிதான் அந்த மகாபலிபுரம் விடுதியில், அந்தப் பெண்களை அவன் கொன்றதும் கூட.


ஆனால் அன்றைய தினத்தில் அந்தப் பெண்கள் மலரைக் கடத்த முயன்றதையோ, அந்தக் கொலைகளில் அவள் சிக்கி இருந்ததையோ, அறிந்திருக்கவில்லை அவன்.


தற்செயலாக ஒருநாள் சோமய்யாவை அழைத்து வர, அவன் வழக்கமாகப் படுத்துக் கிடக்கும் இடத்திற்கு மல்லிக் செல்லவும் அங்கே மாமா, மாமி இருவரிடமும் மலர் பேசிக்கொண்டிருப்பதை அவன் கேட்க நேர்ந்தது.


அவன் செய்யும் கொலைகளில் அவள் சிக்கி இருப்பதை அப்பொழுதுதான் அறிந்துகொண்டான் மல்லிக்.


சோமய்யாவிற்கு உணவளித்து, அவள் அவனிடம் கரிசனத்துடன் நடந்துகொள்வதை அவ்வப்பொழுது பார்த்திருக்கிறான் அவன். அதனால் அவளிடம் ஒரு நன்மதிப்பு உருவாகி இருந்தது.


மேலும் ஜீவிதாவின் நாத்தனார் என்ற முறையில் அவளை நன்றாகவே அவனுக்குத் தெரியும்.


அதுமட்டும் இல்லாமல் மல்லிக் ஈஸ்வருடன் நெருங்கிப் பழகும் காரணத்தால் ஈஸ்வர் மலரை விரும்புவது, அவனுக்கு அரசல்புரசலாகத் தெரிந்துதான் இருந்தது.


எனவே மலரை அந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றும் பொருட்டு அந்த ஒலிப்பதிவைப் போலீசுக்குக் கிடைக்கும்படி செய்துவிட்டான்.


அதே நேரம் கடத்தப்பட்ட சிறுவன் ஒருவன் அந்த ஏஜென்ட் வந்த வாகனத்துக்குள் இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக அவனைக் காப்பாற்றும் வாய்ப்பும் அன்று அவனுக்குக் கிடைத்தது.


கூடவே அன்று அவனால் கொலை செய்யப்பட்டவன் மூலமாக, அந்த சிறுவனை அவன் வேதா என்பவனிடம் ஒப்படைக்க இருந்ததும் தெரிய வந்தது.


அந்த வேதாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவன் இறங்க ஜீவன் கடத்தப்பட்ட அன்றுதான் அவனை நெருங்கியிருந்தான் மல்லிக்.


அவன் அந்த இடத்திற்கு வந்த நேரம் ஈஸ்வர் எல்லா குழந்தைகளையும் ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டிருந்தான்.


அதில் அவன் மனதில் நிம்மதி படரவும் அங்கே தனக்கு எந்த வேலையும் இல்லை என்பதை உணர்ந்தவன் அங்கேயே மறைவான இடத்தில் நின்றவாறு வேதாவிற்காகக் காத்திருந்தான்.


அவன் எதிர்பார்த்தது போலவே அங்கே நடந்த எதையும் அறியாத வேதா அங்கே வந்து அந்தச் சூழ்நிலையைக் கண்டு பயந்து அங்கிருந்து நழுவிச் செல்லவும் அவனைப் பின்தொடர்ந்தவன் அவனையும் அவனுடன் இருந்த மற்றொருவனையும் கொன்று எரித்தான்.


அந்தப் பிணங்களை அடையாளம் காட்ட ஈஸ்வருடன் மலர் சென்ற பொழுதும் கூட அந்த இடத்திற்கு அவர்களுடன் வந்த மல்லிக் அந்தக் கயவர்களை எண்ணி மனதிற்குள் நகைத்துக்கொண்டான்.


***


மல்லிகேஸ்வரன் சொன்ன அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டான் ஈஸ்வர்.


"நீ இத அப்பவே என்கிட்ட சொல்லியிருக்கலாமே!" என நடந்தவற்றைக் குறித்து ஆதங்கப்பட மட்டுமே அவனால் முடிந்தது.


பின்பு நினைவு வந்தவனாக, "மலரோட டீடெயில்ஸ் எல்லாம் செத்துப்போனவங்க கிட்ட இருந்துதே, அது எப்படி?" என்று ஈஸ்வர் கேட்கவும்,


அந்தச் செய்தி அவனுக்குப் புதிது. எனவே, "அவுனா?!" என்று அதிர்ந்த மல்லிக், "நாக்கு தானி குறிஞ்சி ஏமி தெல்லேதே அண்ணையா!" (எனக்கு அதுபற்றி எதுவும் தெரியாதே அண்ணா) என்றான் குழப்பத்துடன்.


அதே நேரம், சுசீலா மாமி குடி இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் நுழைவாயிலில் நின்றிருந்த ஆம்புலன்சில், சோமய்யாவை ஏற்ற போராடிக்கொண்டிருந்தனர் சிலர்.


உடல் விறைத்து அதில் ஏற அவன் முரண்டு பிடிக்கவும், "அண்ணா ப்ளீஸ்! எனக்காக இந்த வண்டில ஏறுங்க! உங்களுக்கு நல்லதுதான் செய்ய நினைக்கிறோம்!" என்று மலர் இதமாகச சொல்லவும் அதில் அவன் கொஞ்சம் இளக,


அவனது முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தைக் கவனித்தவள், "ப்ளீஸ் அண்ணா என்னை நம்புங்க. உங்களுக்கு எந்தக் கெடுதலும் வராது!" என்றாள் மலர் கனிவுடன்.


அவளது வார்த்தைகளுக்கு மறுப்பின்றி, ஆம்புலன்சில் ஏறப்போனவன், ஒரு நொடி தயங்கி நின்று அந்த பிளாட்டின் முதல் தளத்தில் இருக்கும் வீட்டின் ஜன்னலை வெறித்தவாறு ஏதோ முணுமுணுக்கவும் அதை மலர் உற்றுக் கவனிக்க அதில் "சங்கரய்யா!" என்ற வார்த்தை மட்டுமே அவளுக்குப் புரிந்தது.


தனது தேநீர் விடுதியிலிருந்து, அந்தக் குடியிருப்பின் முன்பாக கூடியிருந்தவர்களைப் பார்த்துவிட்டு அங்கே வந்த தீனா, மலரை நோக்கி, "என்ன மலரு! இவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கபோறியா?" என்று கேட்கவும்,


"அம்மாம்ப்பா தீனா! ஒரு பெரிய ஆஸ்பத்திரில இவனை காமிக்க ஏற்பாடு பண்ணியிருக்கார் நம்ம ஈஸ்வர்!" என அவளை முந்திக்கொண்டு பதில் சொன்னார் அங்கே நின்றுகொண்டிருந்த கோபாலன் மாமா.


இதற்கிடையில், சோமய்யா உச்சரித்த 'சங்கரய்யா' என்ற பெயரில் கொஞ்சம் குழம்பிய மலர், சுசீலா மாமி குடி இருக்கும் பிளாட்டின் எதிர் பிளாட்டில் தங்கி இருக்கும் சங்கரைப் பற்றித்தான் அவன் எதோ சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.


ஏனென்றால் அந்த வீட்டின் ஜன்னலை நோக்கியவாறேதான் சோமய்யா முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.


ஒரு நாள் நெடுநேரம் காணாமல் போன ஜீவனை, அவனுடைய வீட்டிற்குள் உறங்கிய நிலையில் அவர்கள் கண்டுபிடித்ததும் அவளது நினைவில் வந்தது.


தனது எண்ணங்களிலிருந்து கலைந்த மலர், சோமய்யாவைப் பார்க்கவும், அவன் மனமின்றி ஆம்புலன்சில் ஏறினான்.


அவனை ஏற்றிக்கொண்டு, அந்த ஆம்புலன்ஸ் அங்கிருந்து விரையவும், மாமியுடன் அவர்களுடைய வீட்டிற்குப் போனாள் மலர்.


***


பட்டிபுலம் கடற்கரையை ஒட்டி அமைந்திருந்தது, நீச்சல்குளம், ஜிம் என அனைத்தையும் உள்ளடக்கிய அந்தப் பிரமாண்டமான பண்ணை வீடு.


அழகிய மிகப் பெரிய தோட்டத்திற்கு நடுவிலிருந்தாலும், ஆள் அரவமே இன்றி சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, பார்ப்பவரை மிரளவைக்கும் விதமாக இருந்தது அந்த இடம்.


கடல் அலைகளின் ஒலி செவிகளில் இரைச்சலைக் கொடுக்க, தலை கீழாகத் தொங்கவிடப்பட்ட நிலையிலிருந்ததால் பலமாகத் துடிக்கும் இதயம் அவனது வாய்வழியாக வெளியில் விழுந்து தெறித்திடுமோ என்பதுபோல், அலறிக்கொண்டிருந்தான் சங்கரய்யா!


உயிர் பயம் அவனது கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.


அணிமா 36


மாமியின் வீட்டில் மலர் இருக்கும் சமயம் அவளைக் கைப்பேசியில் அழைத்த ஈஸ்வர் தான் அவளுக்காக வெளியில் காத்திருப்பதாகச் சொல்லவும், மாமியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பி வந்தாள்.


அவளுடைய எண்ணம் முழுவதும் சோமய்யாவையும் சங்கரையும் பற்றியே சுழன்றுக் கொண்டிருந்தது.


காரில் ஏறியது முதல் ஒரு வார்த்தை கூட பேசாமல் அருகில் அமர்ந்திருந்த அவனுடைய திருமதியை ஈஸ்வர் ஒரு புரியாத பார்வை பார்க்க, அவளுடைய கண்கள் அந்த காரின் டாஷ்போர்டில் பதித்து வைக்கப்பட்டிருந்த விநாயகப்பெருமானையே வெறித்திருக்க, அவளுடைய சிந்தனை வேறு எங்கோ இருப்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


அவளுடைய எண்ண ஓட்டத்தைக் கணிக்க முடியாமல், "என்ன ஹானிமா! உன் மண்டைக்குள்ள என்ன குடையுது? அதுதான் நீ சொன்ன மாதிரி சோமய்யாவோட ட்ரீட்மெண்ட்க்கு ஏற்பாடு பண்ணிட்டோமே? இன்னும் என்ன பிரச்சனை?" என்று ஈஸ்வர் கேட்க,


"இல்ல ஹீரோ! அவரைக் குணப்படுத்துறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நாம டிப்புவைக் கண்டு பிடிக்கறதும்!" என்றவள்,


"மாமி வீட்டுக்கு எதிர்ல, சங்கர்னு ஒருத்தன் குடியிருக்கான் ஹீரோ! அவனுக்கு ஒரு முப்பது வயசு இருக்கும்!" என மலர் சொல்லிக்கொண்டிருக்க, அந்தப் பெயரைக் கேட்டதும், ஒரு நொடி திடுக்கிட்டுப்போனான் ஈஸ்வர்.


இருந்தாலும் குறுக்கே பேசாமல், அவள் பேசுவதைத் தொடர்ந்து கவனிக்கத் தொடங்கினான். நிறுத்தாமல் சொல்லிக்கொண்டிருந்தாள் மலர்.


"அவன் தரமணில எங்கயோ வேலை செய்யறான்னு கேள்விப்பட்டேன். சுபா அண்ணி ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருந்த சமயம் நான் அவங்க கூட அங்கேயே தங்கி இருந்தேன். மாமியும் மாமாவும்தான் ஜீவனைப் பார்த்துக்கிட்டாங்க. அப்ப ஒரு நாள் ஈவினிங் அவனை ரொம்ப நேரமா காணாம பயந்துபோய் மாமி எனக்கு ஃபோன் பண்ணாங்க. பிறகு பதறி அடிச்சிட்டு அங்க வந்து ஒவ்வொரு ஃபிளாட்டா போய் நான் அவனைத் தேடினேன். அப்ப அந்த சங்கர் ஃபிளாட்லதான் ஜீவன் இருந்தான்.


அங்க அவன் தன்னை மறந்து தூங்கிட்டு இருந்தான். அப்பறம் அவனை வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தேன். அந்த சங்கர் ரொம்ப வேடிக்கையா பேசறதல, அவன் வீட்டுக்கு அங்க இருக்கிற பிள்ளைங்க எல்லாருமே சகஜமா போவாங்க.


ஜீவனைக் கொஞ்சம் கண்டிச்சு வெக்கறதால எப்பயாவது எங்களுக்கு தெரியாம நைசா அங்கே போயிடுவான். அதனால அன்னைக்கு நான் அதை வித்தியாசமா எடுத்துக்கல.


யூஷுவலா அவன் அந்த நேரத்துல தூங்க மாட்டான். அம்மாவைப் பிரிஞ்சு இருக்கற ஏக்கத்தாலதான் அப்படி ஸ்ட்ரேஞ்சா பிஹேவ் பண்ணறான்னு மாமியும் சொன்னாங்க. ஸோ... அதுக்கு பிறகு அவனுடனேயே நிறைய நேரம் செலவு செய்ய ஆரம்பிச்சேன்!" என்று சொன்னவள்,


ஈஸ்வருடைய முகத்தைத் திரும்பி பார்த்து, "ஜீவனைக் கடத்திட்டுப் போனதுக்கும், அவனுக்கும் ஏதோ பெரிய தொடர்பு இருக்குமோனு எனக்கு டவுட்டா இருக்கு! ஏன்னா, சுபா அண்ணிக்கு உடம்பு சரியில்லாததால, கோபாலன் மாமாதான் ஜீவனைக் கவனிச்சிக்கிட்டாங்க! அவங்க கால்ல பிராக்ச்சர் ஆனதால அவன் பின்னாலேயே அவரால ஓடிட்டு இருக்க முடியல!


மாமியாலயும் மாமா சுபா அண்ணி ரெண்டு பேரையும் கவனிச்சிக்கிட்டு, ஜீவனையும் பார்த்துக்க முடியல! காமன் ஏரியாலதான விளையாடிட்டு இருக்கான்னு விட்டுட்டாங்க! நம்ம கல்யாண பிஸில என்னாலயும் அங்க போக முடியல! அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக்கிட்டுதான் அவனை ஈஸியா கடத்தி இருகாங்க!" என்று மலர் சொல்லிக்கொண்டே போக அவனது கட்டுப்பாட்டை இழந்து கார் ஒரு நொடி அதிர்ந்து பின்பு நேரானது.


"என்ன ஆச்சு ஹீரோ?" என்று மலர் பதறவும்,


"இல்ல மலர்! நீ நினைக்கிற மாதிரி மாமாவுக்கு காலில் அடிபட்டது எதேச்சையா நடந்த மாதிரி தெரியல! பக்காவா பிளான் பண்ணி எல்லாத்தையும் செஞ்சிருக்கானுங்க! ஓ மை காட்!" என்று ஆத்திரத்தில் ஸ்டியரிங்கைக் குத்தினான் ஈஸ்வர்!


"ஐயோ! என்ன சொல்றீங்க ஹீரோ!" என மலர் பதறிய அதேநேரம், அவனுடைய செய்கையினால் எழுந்த ஹாரன் ஒலியில் அருகில் சென்ற வாகனங்களிலிருந்த சிலர் எரிச்சலுடன் ஈஸ்வரைப் பார்க்க, அவனை அடையாளம் கண்டுகொண்ட ஓரிருவரின் பார்வையில் வியப்பு கூடியது.


உடனே தன்னிலை உணர்ந்து சாலையில் கவனத்தைச் செலுத்தியவாறு, "ப்ச்! பிளான் பண்ணிதான் மாமாவோட காலை உடைச்சிருக்காங்க மலர்! இது உனக்குப் புரியலையா?!" என்றான் ஈஸ்வர் எரிச்சலுடன்.


சிந்தனை வயப்பட்டவளாக,"ஓ! அப்படி நடந்திருக்கவும் சான்ஸ் இருக்கு இல்ல?" என்றவள்,


"பேசாம ஜெய் கிட்ட அவனைப் பத்தி சொல்லிடலாமா ஹீரோ? அவனைப் பிடிச்சு விசாரிச்சாங்கன்னா ஏதாவது இன்ஃபர்மேஷன் கிடைக்க வாய்ப்பிருக்கு!" எனக் கேட்டாள் மலர்.


"ப்ச்! அவசரப்படாதம்மா. கொஞ்சம் வெயிட் பண்ணு. நான் பார்த்துக்கறேன்!" என்றான் ஈஸ்வர் மல்லிகார்ஜுனை மனதில் வைத்து.


"ஐயோ! அந்த சங்கரைப் பத்தி மாமிகிட்ட கேட்டேன். அவன் முன்ன மாதிரி அடிக்கடி கண்லயே படலன்னு சொன்னாங்க. எப்பவாவதுதான் அங்க வாரான் போல இருக்கு! தப்பிச்சிட்டான்னா அவனைக் கண்டுபிடிக்கறது கஷ்டம்!" என்றாள் மலர்.


அந்த நேரம் சங்கரய்யாவைப் பற்றி அனைத்தையும் அவளிடம் விளக்கமாகச் சொல்ல விரும்பாதவனாக, "நான்தான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டேன் இல்ல! ஜெய் மேல இருக்கற நம்பிக்கை உனக்கு என் மேல இல்லையா மலர்?!" என ஈஸ்வர் காட்டமாகக் கேட்கவும்,


அதில் பதறியவளாக, "ஐயோ! அப்படிலாம் இல்ல, ஏதோ எனக்கு தோனினத சொன்னேன் அவ்வளவுதான். சாரி!" என்றாள் மலர் உள்ளே போன குரலில்.


"பரவாயில்ல விடு! இத்தோட இதைப் பத்தி எதுவும் யார்கிட்டயும், ஈவன் மாமிகிட்ட கூட பேசாதே!" என அவளை எச்சரிக்கும் விதமாகச் சொன்னான் ஈஸ்வர்.


பேசிக்கொண்டே அவர்கள் வீடு வந்து சேர்ந்துவிட வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.


அங்கே சாருமதியிடம் கதைக் கேட்டுக்கொண்டிருந்த ஜீவன், மாமனைக் கண்ட மாத்திரத்தில்,"ஹீரோ!" எனக் கூவிக்கொண்டே அவனை நோக்கி ஓடி வந்து அவன் மீது தாவி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டான். அதன் பின் அவர்களுடைய நேரம் அவனால் களவாடப்பட்டது.


***


மாம்பலத்தில்... அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகிலேயே அவனது ஆட்களை நிறுத்தி வைத்து, சங்கரைய்யாவிற்காகக் கட்டம் கட்டிக் காத்திருந்தான் ஈஸ்வர்.


இரண்டு தினங்கள் கடந்து, நள்ளிரவு நேரத்தில் சாலையிலேயே ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு இறங்கிய சங்கர், பதுங்கியபடி உள்ளே செல்ல எத்தனிக்க அவர்களிடம் வகையாகச் சிக்கினான்.


அவன் கொஞ்சமும் எதிர்பாராத நேரத்தில் மயக்கமடையச் செய்து, அவனைப் பட்டிபுலம் கொண்டுவந்தனர். ஈஸ்வர் ஏற்பாடு செய்திருந்த கூலிப்படை ஆட்கள்.


அங்கே ஈஸ்வருக்குச் சொந்தமான பங்களாவின் கார் ஷெட்டில் அவன் மீது ஓர் சிறு கீறல் கூட விழாமல் அவனைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.


அவன் மயக்கமாக இருக்கும் போதே அவனைக் கொண்டுவந்து அப்படி அவனைத் தொங்கவிட்டுவிட்டு, அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விடவே சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவன் கண் விழித்துப் பார்க்க எதுவுமே புரியவில்லை அவனுக்கு.


மிகப்பெரிய எம்.யூ.வி. வகை கார்கள் நான்கு முதல் ஐந்து வரை நிறுத்த வசதியாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த ஷெட்.


சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்க, அதன் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரே ஒரு 'குவாலிஸ்' தவிர ஒரு ஈ காக்கைகூட இல்லை அந்த இடத்தில்.


அவனுடைய அசைவிற்கு ஏற்ப சுழன்று கொண்டிருந்தது அவனைப் பிணைத்திருந்த கயிறு.


அது எந்த இடம் என்பதுகூட அவனுக்குப் புரியவில்லை. வெகு நேரமாய் அவன் எழுப்பிக்கொண்டிருந்த ஓலத்திற்கு கண்டிப்பாக யாரேனும் வந்திருக்க வேண்டும். அப்படி நடக்காத காரணத்தால், சுற்றுப்புறத்தில் யாருமே குடியிருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.


அவனுடைய ஓலம், அனற்றலாக மாறி, அதிகாலை வரை அப்படியே தொடர்ந்தது. பொருத்தப்பட்டிருந்தக் கூரை தகடுகளிலிருந்த சிறிய இடைவெளிகளைப் பயன்படுத்திக்கொண்டு, ஆதவனின் வெளிச்ச கீற்றுகள், உள்ளே நுழைய, அந்த ஷெட்டின் ஷட்டர் திறக்கப்படும் ஓசையில், அவனது உடல் ஒரு நொடி அதிர்ந்தது.


அதில் அந்தக் கயிறு சுற்றத்தொடங்கவும், பளீர் என்று உள்ளே நுழைத்த வெளிச்சம் அவன் கண்களைக் கூசச்செய்ய, அவன் பார்வை தெளிவாகத் தெரியவே சில நிமிடங்கள் பிடித்தன.


அதற்குள், அவனுக்கு அருகிலேயே வந்திருந்தனர் ஈஸ்வர், மல்லிக் இருவரும். மல்லிக் யாரென்று தெரியாமல் போனாலும் ஈஸ்வரை அவனுக்கு நன்றாகவே அடையாளம் தெரிந்தது.


அவனுடைய அச்சம் எக்கச்சக்கமாக எகிற, "சார்! அந்தப் பையன் உங்க மருமகன்னு தெரியாம கடத்திட்டேன், முன்னாலயே தெரிஞ்சிருந்தா அவர் இருந்த திசை பக்கமே தலை வெச்சிருக்க மாட்டேன்! என்னை மன்னிச்சி விட்ருங்க!" என்று அலறினான் அந்த சங்கரய்யா.


"ஏண்டா நாயே! கோடீஸ்வரன் வீட்டுப் பையன்னா மட்டும் உனக்கு இவ்வளவு பயமா? அப்படினா, பணம் இல்லாதவங்க வீட்டுப் பிள்ளைங்கள உன்னைப்போல பண வெறி பிடிச்ச ஓநாய்ங்களுக்கு நேந்து விட பெத்துப்போட்டு வெச்சிருக்காங்கனு நினைப்பா உனக்கு?" என்று ஆத்திரத்துடன் கேட்டான் ஈஸ்வர்.


விட்டால் அவனை அங்கேயே கொன்று போட்டிருப்பான் மல்லிக். அவ்வளவு வெறி இருந்த பொழுதிலும் ஈஸ்வரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனது கோபத்தை அடக்கி நின்றிருந்தான்.


"இல்ல... பணத்துக்காக இப்படியெல்லாம் செஞ்சிட்டேன். தயவு செஞ்சு என்னை விட்ருங்க. இந்தத் தொழிலையே விட்டுட்டு நான் எங்கேயாவது ஓடிப் போயிடறேன்!" எனக் கெஞ்சத்தொடங்கினான் சங்கரய்யா.


"உனக்கு தெரிஞ்ச உண்மையெல்லாம் சொல்லிட்டு, நான் சொல்றத அப்படியே செய்யறதா இருந்தா, உன்னை இறக்கி விட சொல்றேன்! முடியாதுன்னா சொல்லிடு! நாங்க இங்கிருந்து இப்படியே கிளம்பறோம்! அதுக்கு பிறகு இந்தப் பக்கம் ஒரு காக்கா குருவி கூட வராது! இப்படியே கிடந்தது இங்கயே சாகவேண்டியதுதான்!" என்று மிரட்டலாகவே சொல்லி முடித்தான் ஈஸ்வர்.


அவன் சொற்படி கேட்டு நடப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பது தெளிவாகப் புரியவே, மறுப்பின்றி அதற்கு ஒப்புக்கொண்டான் சங்கர்.


அதன் பிறகு அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவாலிஸில், ஈஸ்வரின் அடியாட்கள் மூலம் ஏற்றப்பட்டவன், அங்கிருந்து வேறு எங்கோ அழைத்துச்செல்லப்பட்டான்.


ஈஸ்வர் அவனது காரில், மல்லிக்குடன் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்தான்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, அந்த வாகனம் ஏதோ ஒரு இடத்தில் நிற்க, ஆளரவமற்ற அந்த இடத்தில், ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவனுடைய காரைப் பார்த்து அதிர்ந்த சங்கர் அமைதியாகப் போய் அதில் ஏறினான்.


அதன் பிறகு ஈஸ்வர் ஜாடை செய்யவும், அந்தக் காரிலிருந்த மடிக்கணினியை உயிர்ப்பித்து, சில படங்கள் மற்றும் சில கோப்புகளைப் பற்றி அவனிடம் விவரித்தவன் ஈஸ்வரின் கட்டளைப் படி ஒரு காணொலியை அந்த காரிலேயே இருந்த அவனது கைப்பேசியில் பதிவு செய்து தொடர்ந்து ஈஸ்வர் சொன்ன சில மின்னஞ்சல் முகவரிகளுக்கு அதை அனுப்பியவன் அதன்பின் அதிலேயே பத்திரமாக அனைத்தையும் வைத்துவிட்டு அந்த காரிலிருந்து இறங்கினான்.


அப்பொழுது, அங்கே நடக்கும் ஒவ்வொன்றையும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த மல்லிக்கைப் பார்த்து, "நீ இவனை என்ன செய்யணும்னு நினைச்சியோ இப்....ப அதைத் தாராளமா செஞ்சிக்கோ! பட் இதுவே கடைசியா இருக்கணும் ரைட்!" என்றவன் தொடர்ந்து “இதுக்குப் பிறகு நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது! நம்ம டிப்புவைக் கண்டுபிடிக்கறது அவ்வளவு சுலபமான வேலை இல்லைன்னு உனக்கு இப்ப புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! ஆனாலும் அவனைப் பத்திரமா கண்டுபிடிச்சு உங்க கிட்ட சேர்க்க வேண்டியது இனிமேல் என்னோட பொறுப்பு! அதுவரை நீ உன் பிழைப்பைக் கவனிச்சிட்டு சோமண்ணாவையும் உங்க அண்ணியையும் பக்கத்துல இருந்து ஆறுதலா பார்த்துக்கோ! அது போதும்! புரிஞ்சிதா?" என்றான் ஈஸ்வர் கண்டிப்புடன்.


"தப்புகுண்டா அண்ணய்யா! நீங்க என்ன சொன்னாலும், அட்டனே சேஸ்தானு!" என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு, பிள்ளைகளை உயிருடன் இழந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் பல தாய்மார்களின் சாபங்கள் அனைத்தும் உயிர்பெற்று வந்ததைப் போன்று தோற்றம் அளித்த மல்லிக் சங்கரை வெறியுடன் நெருங்கினான்.


உயிர் பயத்தில் தன்னை நோக்கி அவன் கெஞ்சிய கெஞ்சல்களுக்கெல்லாம், "சாரி சங்கரய்யா! ஐ காண்ட் ஹெல்ப் யூ! யூ ஹவ் டு பே ஃபார் வாட் யூ ஹவ் டன்!" என்று கொஞ்சமும் இளக்கமின்றி சொல்லிவிட்டு, அடுத்த நொடியே அவனது வானகத்தில் ஏறிப் பறந்தே போனான் ஈஸ்வர்.




© KPN NOVELS COPY PROTECT
bottom of page