Anbenum Idhazhgal Malarattume 29
அணிமா-29
மனைவியின் வாய் மொழியாகச் சகோதரியின் நிலையைக் கேட்டு உணர்ந்தவனின் மனம் வேதனையில் துடித்தது.
அந்த நொடி சுபாவை பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் அவளைத் தேடி பாட்டியின் அறைக்கு வஅந்தான் ஈஸ்வர்.
அவள் உறக்கத்தில் இருக்கவும், மனம் வருந்தியவனாக, அவளது தலையை மென்மையாக வருட, மெல்லியதாக முளைத்திருந்த அவளது தலை முடி அவனது கையில் குத்தவும், அவனுடைய மனம் வலித்தது.
அவனுடைய ஸ்பரிசம் உணர்ந்து, கண் விழித்த சுபா, மெல்ல எழுந்து உட்காரவும், "நீ படுத்துக்கோ! நான் சும்மாதான் வந்தேன்" என்றான் ஈஸ்வர்.
அவனுடைய முகத்தில் படர்ந்திருந்த வேதனை, அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை அவளுக்குப் புரியவைக்க, "மலர் எல்லாத்தையும் சொல்லிட்டாளா?" என்று கேட்டுவிட்டு, "விடு ஜகா! இப்ப இந்த நிமிஷம் நான் நிம்மதியா இருக்கேன்! அதுதான் உண்மை!
நம்ம குடும்பத்தோட இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்குப் பொக்கிஷம்! இது கிடைச்சதே எனக்கு வரம்! எனக்கு இது போதும்! என்னை நினைச்சு நீ வருத்தப்படாதே! இப்போதைக்கு உன்னோட சந்தோஷம்தான் எங்க எல்லாருக்கும் முக்கியம். நீ ஒருத்தன் சந்தோஷமா இருந்தால், இந்த குடும்பம் மொத்தமே சந்தோஷமா இருக்கும்!” என வேகமாகச் சொன்னவள், கொஞ்சம் மூச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள்.
“ஜீவி கல்யாணம் நடந்ததிலிருந்தே, மலரை உனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சா, உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு அடிக்கடி தோணிட்டே இருந்தது. என் ஆசை புரிஞ்ச மாதிரி, எப்படியோ, உங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு போய், உங்க கல்யாணம் நடந்து முடிஞ்சுது.
மலருக்கும் உனக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்கன்னு அவ சொன்ன உடனே, ரொம்பவே சந்தோஷப்பட்டேன் ஜகா!
உங்க கல்யாணம் என்னால டிலே ஆகக்கூடாதுன்னு அவகிட்ட ரொம்பவே கெஞ்சினேன்.
அவ எங்க அதை காதுல வாங்கினா.
நான் குணமாகி வந்து உங்க கல்யாணத்துல கலந்துக்கணும்ன்னு ஒத்த கால்ல நின்னா.
பாட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வெச்சிட்டாங்க. எப்படியோ நான் நினைச்சது நினைக்காதது என எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சது!!" என்று சொல்லி முடித்தாள் சுபா.
"முதலில் உன் மேல் கோபம் இருந்தபோது எனக்கு தோணல! ஆனால் இப்ப இப்படி உன்னைப் பார்க்கும் போது வேதனையா இருக்கு சுபா!
இப்ப ஒரு சகோதரனா நான் உனக்கு என்ன செய்யணும்னு எனக்கு புரியல! நீயே சொல்லு உனக்கு நான் என்ன செய்யணும்?" என்று ஈஸ்வர் கேட்கவும்,
அதில் முகம் இறுக, "கண்டிப்பா நான் நேரம் வரும்போது உன்னிடம் ஒண்ணு கேட்பேன் அப்ப அதை மறுக்காமல் நீ எனக்கு செய்யணும்!" என்று தீவிரமாகச் சுபா சொல்லவும், அவள் முக பாவனையைப் படிக்க முயன்றவாறு, "கட்டாயம் நான் செய்வேன் சுபா! அது என் கடமை!" என்றான் ஈஸ்வர்.
அப்பொழுது உறக்கம் கலைந்து அங்கே வந்த ஜீவன் அன்னையின் அருகில் உக்கார்ந்து அவளது கழுத்தை கட்டிக்கொண்டே, "அம்மா உனக்கு வலி எதுவும் இல்ல..ல்ல" என்று அக்கறையுடன் கேட்க, "இல்லடா செல்லம்; அம்மா நல்லா இருக்கேன்" என்றாள் அவள் அவனது கன்னத்தில் இதழ் பதித்து.
இருவரையும் நிறைந்த மனதுடன் ஈஸ்வர் பார்த்துக்கொண்டிருக்க அப்பொழுது ஈஸ்வரை கைப்பேசியில் அழைத்த ஜெய் "அண்ணா! இங்கே பல்லாவரம் பக்கத்துல இருக்கும் ஒரு குப்பை கிடங்கில் இரண்டு பேரோட பாடி கிடக்கு.
கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்காங்க" என்று சொல்ல, "ஐயோ! அடுத்த கொலையா?" என்றான் ஈஸ்வர் அலுப்புடன்.
"ப்ச்! ஆமாம் அண்ணா!” என்றவன், “நான் கெஸ் பண்ண வரைக்கும் அந்தக் குழந்தைகள் கடத்தலில் சம்பந்தப்பட்டவங்களாகத்தான் இருக்கும்! அதாவது மலர் சொன்ன வேதாங்கறவனும் இன்னும் ஒருத்தனும்னு நினைக்கிறேன்"