top of page

Anbenum Idhazhgal Malarattume 28

அணிமா 28


சென்னை திரும்பியது முதல் எண்ணம் முழுதும் ஜீவனின் நினைவிலேயே தவிக்க, மேற்கொண்டு ஏதும் செய்ய இயலாத நிலையில், ஒரு நாள் மன அமைதிக்காக அவள் வழக்கமாகச் செல்லும் மாங்காடு கோவிலுக்குச் சென்றாள் மலர்.


அன்று அவரது திருமண நாள் என்பதற்காக, தன் குடும்பத்துடன் அங்கே வந்திருந்தார் குமார். முன்பே கூகுள் தேடல் செய்து, அவரை பற்றி அறிந்திருந்ததால், அவரை பார்த்த மாத்திரத்திலேயே அவர்தான் குமார் என்பது அவளுக்குப் புரிய, ஒரு ரசிகையைப் போன்று அவரிடம் பேசியவள், ஊரில் இருக்கும் பட்சத்தில், வாரம்தோறும் வெள்ளியன்று அவர் அங்கே வருவார் என்பதையும் தெரிந்துகொண்டாள்.


அடுத்த வாரத்திலேயே, மீண்டும் அவரை அங்கே சந்தித்து சுபாவைப் பற்றி அவரிடம் பேசவேண்டும் என்பதை மலர் சொல்ல, அதற்கு மேல் அவளைப் பேசவே விடவில்லை குமார்.


தொடர்ந்துவந்த நாட்களில், அவரை மறுபடி மறுபடி தொடர்புகொண்டு, ஒரு கட்டத்தில் சுபாவின் தற்போதைய நிலையைப் பட்டும் படாமலும் அவரிடம் சொன்னவள், அவளுக்கு குடும்பத்தின் ஆதரவு தேவை என்பதையும் அவருக்குப் புரிய வைக்க முயன்றாள்.


அந்த சந்தர்ப்பத்தில்தான், திருமணத்தை நிறுத்திவிட்டு சுபா மாயமானதற்குப் பிறகு, ஈஸ்வர் கடந்துவந்த சூழ்நிலைகளையும், அவனது மன வேதனைகளையும் அவளிடம் விளக்கினார் குமார்.


"எவ்வளவோ துன்பப் பட்டு, இப்பதான் நல்ல நிலைமைக்கு வந்திருக்கான் ஈஸ்வர். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும், இது வரைக்கும், குல தெய்வத்தைக் கும்பிடக்கூட எங்க ஊரு பக்கமே வரல அவன்.


இப்படி ஒரு நிலைமையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்தி அந்த பொண்ணு செஞ்சிட்டு போன வேலைக்கு, அவளுக்காகலாம் என்னால ஈஸ்வர் கிட்ட பேசவே முடியாது! அவளையே நேரில் வந்து அவனைப் பார்க்க சொல்லு. அதன் பிறகு அவங்க பாடு!" என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டார் குமார்.

சுபாவினுடைய இருண்ட பக்கங்களை அவரிடம் சொல்ல இயலாமல், அங்கிருந்து மௌனமாகக் கிளம்பிப்போனாள் மலர்.


ஆனால், ஈஸ்வரை முதன்முதலில் பார்த்த பொழுது, அவனுடைய கரிசனம் நிறைந்த சிறிய செயல் மூலம், அவள் மனதில் அவன் அழுத்தமாக ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினாலோ இல்லை ஜீவனைப் போலவே, சுபாவின் வார்த்தைகளால் அவளையும் அறியாமல் அவன்மேல் அவள் வளர்த்துக்கொண்டிருந்த அதீத அன்பினாலோ, குமார் சொன்னதன் மூலமாக அவள் அறிந்துகொண்ட, அவன் அனுபவித்த துயரங்களை, தானே அனுபவித்ததைப்போல உணர்ந்தாள் மலர்.


அந்த நொடி அவனுக்கு ஆதரவாக, அவனது அருகிலேயே இருந்து தனது அன்பை, காதலை மொத்தமாக அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது.

***

சில தினங்களிலேயே, அவளைத் தொடர்பு கொண்ட சுபா அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு ஏற்ப, அசோக் அவளிடம் விவாகரத்து கோரியதால், மகனுடன் சென்னைக்கே வந்துவிட முடிவு செய்துவிட்டதாக கூறி, அவளுக்கு தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் ஏற்பாடு செய்து கொடுக்கும் படி கேட்கவும், மாம்பலத்தில் அவர்களுடைய பிளாட்டிலேயே அவர்களைத் தங்க வைக்கலாம் என முடிவு செய்தாள் மலர்.


அது ஒரு விதத்தில் அவளுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது எனலாம். அவள் மாமியை திருநீர்மலையில் சந்தித்த அன்றுமாலைதான் சுபா அவளுடைய ஜீவனுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.


அன்று விமான நிலையத்திலிருந்து அவர்கள் இருவரையும் அழைத்துவந்து, மாம்பலம் பிளாட்டில் பத்திரமாகத் தங்கவைத்துவிட்டு, அடுத்த நாள் அவளை, மாமிக்கும் மாமாவுக்கும் தோழி என்று அறிமுகம் செய்து வைத்தாள் மலர். அவள் சென்னை வருவதற்குள்ளாகவே, அவள் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் சென்னை கிளையிலேயே சுபாவுக்கு வேலையும் கிடைத்து விடவே, ஜீவனைக் கவனித்துக்கொள்ள மாமியின் உதவி தேவைப்பட்டது. அதை மாமியிடம் மலர் கேட்கவும், மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் மாமி.


தொடர்ந்து வந்த நாட்களில், குடும்ப நீதி மன்றத்தில், இருவரும் பரஸ்பரம் பிரிய விரும்புவதாக, விவாகரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு, வேலைக்குச் செல்ல தொடங்கினாள் சுபா. அந்த நிலையிலும் பிறந்த வீட்டினரைத் தொடர்பு கொள்ள விரும்பவில்லை அவள்.


ஜீவனை, மலரும் ஜெய்யும் படித்த பள்ளியிலேயே சேர்த்தனர். அவர்களுடைய வீட்டின் அருகிலேயே அந்த பள்ளிக்கூடம் இருக்கவும், மாமாவே ஜீவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வர். நேரம் கிடைக்கும்பொழுது மலரும் அவர்களுடன் இணைந்து கொள்வாள்.


மறுபடியும் ஒருமுறை மாங்காட்டு கோவிலில், குமாரைச் சந்தித்த மலர், சுபா சென்னைக்கே வந்துவிட்டதை அவருக்குத் தெரியப்படுத்தினாள். அவர் நிதானமாக அதைக் கேட்டுக்கொண்டார் அவ்வளவே.


முதல் முறை அவருக்கு இருந்த கோபம் இல்லை என்றாலும், இறங்கி வரும் மனநிலையில் அவர் இல்லை என்பது மலருக்குப் புரிந்தது. ஆனால் மலரைப் பற்றி அவருக்கு ஒரு நல்லெண்ணம் உருவாகியிருக்கவே அவளுடைய குடும்பத்தினரைப் பற்றி குமார் விசாரிக்கவும், வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் அவரிடம் கூறினாள் மலர்.


அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் தான் மலர் என்ற அவர்களுடைய உறவு முறை விளங்கவும், மிகவும் மகிழ்ந்து போனார் குமார்.

அதன் பின்பு விட்டுப் போன அவர்களுடைய சொந்தத்தைத் தொடரும் முயற்சியிலும் இறங்கினார்.


மலர் அவரை சுபாவிற்காகத்தான் தொடர்பு கொண்டாள் என்பது, எக்காரணம் கொண்டும் யாருக்குமே தெரிய வேண்டாம் என இருவருமே எண்ணியதால், ஒருவரை ஒருவர் அறிந்ததாகக் கட்டிக்கொள்ளாமலேயே, பிரபா ஜீவிதா திருமணம் உட்பட அனைத்தையும் நடந்தி முடிந்தனர்.


அந