top of page

Anbenum Idhazhgal Malarattume! 23 & 24

Updated: Mar 7, 2021

அணிமா-23


அழகான கிராமத்து ஓட்டுவீடு, தேவையான வருமானத்தை தரும் விவசாய நிலங்கள், வீட்டில் ஒரு அங்கமாய் இருக்கும் பசுக்கள் என, எளிமையான வாழ்க்கை பரந்தாமனுடையது.

விவசாயத்தை உயிராக நினைக்கும், தந்தைக்குத் தப்பாத மகன் ஈஸ்வர். விவசாயம் அவனது சுவாசம். அந்த ஊர் வானம் பார்த்த பூமிதான் என்றாலும், அவர்களுடைய வயல்வெளி கிணறு வற்றாமல் நீர் வழங்க, ஓரளவிற்கு விவசாயம் செய்ய முடிந்தது.

அதனை மேம்படுத்தும் ஆசை அவன் மனதில் சிறு வயது முதலே, அவனுடன் சேர்ந்தே வளர்ந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவனுக்கு வேளாண்மை சம்பந்தமாக படிக்கவே விருப்பம் இருந்தது.

சுபானுவும் அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அதுவும் அவளுக்கு, பொறியியல் படித்து, அது சார்ந்த துறையில் வேலைக்குச் சென்று, கைநிறைய சம்பாதிப்பது, வெளிநாட்டு வாழ்க்கை என பெரிய அளவில் கனவுகளும் எதிர்பார்ப்புகளும், கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் செலவு செய்வது என்பது, தந்தையின் சுமையை பெரும் அளவிற்கு ஏற்றிவிடும் என்பது நிதர்சனமாகப் புரியவே, வேளாண் சம்பந்தமான பொறியியல் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதைத் தவிர்த்து, 'பி.எஸ்.சி அக்ரி' சேர்ந்தான் ஈஸ்வர்.

***

சுபானு, காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்து படிக்க, சென்னையில், அவனுடைய குமார் சித்தப்பா வீட்டின் அருகிலேயே தங்கிக்கொண்டு, கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினான் ஈஸ்வர்.

கூடவே, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், குமாருடைய வீட்டில் அவர் வைத்திருக்கும் 'ஜிம்'மில் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக்கொண்டான் அவன். குமாருடன் சண்டை பயிற்சிகளிலும் ஈடுபாடு காட்டத்தொடங்கினான்.

குமார் எதாவது பண உதவி செய்தால் அதை அவன் தவிர்க்கவே, அவனது தன்மானம் புரிந்து, அவன் விடுமுறையில் இருக்கும் சமயங்களில், தான் வேலை செய்யும் திரைப்படங்களிலேயே, சண்டைக் காட்சிகளில் நடிக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து, அதன் மூலம் அவனுடைய செலவுகளுக்கு, வருமானமும் செய்து கொடுத்தார், அவனைத் தனது சொந்த மகனாகவே பாவிக்கும் அவனுடைய சித்தப்பா.

ஈஸ்வர் பயிற்சி செய்யும் அதே நேரங்களில் உடற் பயிற்சி செய்யவென குமாருடைய வீட்டிற்கு வருவான், அவனை விட இரண்டு வயதே மூத்தவனான கருணாகரன்.

செங்கமலம் பாட்டியின் சொந்த சகோதரியின் மகனான குமார் மற்றும் அவருடைய அக்கா நிர்மலா இருவரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட, அவர்களைப் பரந்தாமனுடன் சேர்த்து, தமது பிள்ளைகளாகவே வளர்த்து, படிக்க வைத்து, திருமணமும் செய்துவைத்தனர் செங்கமலம் பாட்டியும் அவருடைய கணவரும்.

நிர்மலாவை மிக வசதியான, அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்திந்தனர்.

அப்பொழுது கருணாகரனின் பெரியப்பா, இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று, தொழிற்துறை அமைச்சராக இருந்தார்.

அந்த கட்சியில் அவரது கை மிகவும் ஓங்கி இருந்தது. அவனுடைய தந்தை அண்ணனுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்.

கருணாகரன் சிறுவனாக இருந்த பொழுதே, அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துபோக, திருமணமே செய்துகொள்ளாமல், அரசியலே வாழ்க்கை என்று இருக்கும் அவனுடைய பெரியப்பா, அவனது பொறுப்பை எடுத்துக்கொண்டு, அவனை தன் அரசியல் வாரிசாகவே மாற்றினார்.

கருணாகரன் அவனுடைய பெரியப்பாவுடன் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே கல்லூரியில் சேர்ந்து, 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்துக்கொண்டிருந்தான்.

ஏற்கனவே அத்தை மகன் என்ற உறவு அவனுடன் இருந்த பொழுதிலும், ஏதாவது விசேஷ சமயங்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு இருக்க, அந்த சந்தர்ப்பத்தில்தான், ஈஸ்வர் மற்றும் கருணாகரன் இருவரும் அதிகம் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.