top of page

Anbenum Idhazhgal Malarattume! 20

Writer: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Apr 7, 2023

அணிமா 20


மலர் ஈஸ்வருடைய மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொள்ளவும், வலியில்தான் அப்படிச் செய்கிறாளோ என்ற எண்ணம் தோன்ற, "என்ன ஆச்சு மலர் தலை ரொம்ப வலிக்குதா ரொம்ப முடியலன்னா பெயின் கில்லர் போட்டுக்கறயா!" என்று அக்கறையுடன் கேட்டான் ஈஸ்வர் மென்மையான குரலில்.


"ப்ச் வலி தலையில இல்ல மனசுல! அதுக்கு பெயின் கில்லரெல்லாம் கிடையாது நம்ம சொசைட்டி போயிட்டு இருக்கற நிலைமையைப் பார்த்தால் நானே கில்லரா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!" என்றாள் மலர் குழந்தைகள் கடத்தப்படுவதின் பின்னணியை குறித்து ஜெய் சொன்ன தகவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில்.


மலர் சொன்ன விதத்தில், 'இன்றைக்கு ஒரே நாளில், இருக்கறவங்க எல்லாரையம் கொலையா கொன்னுட்டு பேசுறா பாரு பேச்சு!' என்ற எண்ணம் தோன்றவும், அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, நக்கல் கலந்த குரலில்,


"நல்ல தாட் அப்படி எதாவது ஐடியா வந்தால் என்னை உங்க அசிஸ்டண்டா சேர்த்துக்கோங்க கில்லர் குருவே! தனியா போய் மண்டைய உடைச்சுக்காதீங்க!" என்றான் ஈஸ்வர்.


அதற்கு அவனை முறைக்க முயன்று தோற்றவள், "அப்படியே செய்வோம் சிஷ்யா! என் கூடவே வந்து எனக்கு விழ வேண்டிய அடியையெல்லாம் நீங்க வாங்கிக்கோங்க! உங்க உடம்பு தாங்கும்" என்று அவனை ஏற இறங்க பார்த்துக்கொண்டே அவன் சொன்ன பாணியிலேயே மலரும் பதில் கொடுக்க,


"திமிறுதாண்டி உனக்கு!" என்று சொல்லி சத்தமாகசிரித்தே விட்டான் ஈஸ்வர்.


அதற்கு அவளது இதழில் விரலை வைத்தவாறு அவனை முறைத்தவள், கிசுகிசுப்பான குரலில், "ஷ்.. மெதுவா!" என்றாள் மலர், ஜீவன் உறங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு.


பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், "ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்! இப்ப சொல்லு!" என்றான் ஈஸ்வர் மொட்டையாக.


"என்ன சொல்லணும்?" புரியாமல் மலர் கேட்கவும், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே எதோ சொல்ல வந்த" என்றான் ஈஸ்வர், சிறிது நேரத்திற்கு முன் அவள் சொல்லவந்ததை அலட்சியப் படுத்த விரும்பாமல்.


சட்டென, அவளுடைய கண்கள் அங்கே உறங்கிக்கொண்டிருந்த ஜீவனைத் தொட்டு மீண்டது.


மென்மையாக அவனுடைய கூந்தலை வருடியவள், "நாம வெளியிலே போய் பேசலாமா?


இவன் தூங்கிட்டு இருக்கானு நம்பவே முடியாது; நாம பேசுவதை கவனிச்சிட்டு காலைல எழுந்தவுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்டு இல்லைனு செஞ்சிடுவான்!" என்றாள் இதழில் பூத்த புன்னகையுடன்!


அவள் சொன்னதும், ஈஸ்வரின் பார்வையுமே மருகனிடம் சென்றது கனிவுடன்!


பின்பு மலர் பின்தொடர, அவர்களுடைய அறையை ஒட்டியிருந்த, மிகப்பெரிய பால்கனியை நோக்கிச் சென்ற ஈஸ்வர், அங்கே போடப்பட்டிருந்த திவானில் சென்று அமர்ந்தான்.


அவனுக்கு எதிராகப் போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர எத்தனித்த மலரை இழுத்து, தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தவன், "இப்ப சொல்லு" என்றான் அதைத் தெரிந்துகொள்ளும் ஆவலுடன்.


"நான் என்ன செஞ்சாலும் அப்பாவும் அண்ணாவும் கோபப்படவே மாட்டாங்க; அவங்களே டென்சன் ஆகி இதுவரைக்கும் என்கிட்டே பேசவே இல்ல!


எங்க அம்மா என்னை நோக்கு வர்மத்தாலேயே தாக்கிட்டு போயிட்டாங்க!


ராசாவும் ரோஸாவும் போன் போட்டு அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டாங்க!


ஒரு படி மேல போய் ஜெய் என்னை அடிக்கவே செஞ்சுட்டான்!


இப்படி இருக்கும்போது நீங்க மட்டும் ஏன்னு ஒரு வார்த்தை கூட கேக்காம என்னை சப்போர்ட் பண்றீங்களே அது எப்படி ஹீரோ?


அதுவும் மீடியால எல்லாம் உங்களை வெச்சுதான் என்னை அடையாளம் காட்டுறாங்க! உங்களுக்கு என் மேல் கோபம் வரவே இல்லையா?" என்று கேட்டாள் மலர் வியப்புடன்.


"ப்ச்! கோபமெல்லாம்; ஆனால் இதையெல்லாம் முன்னமே நீ சொல்லியிருக்கலாமே என்கிற வருத்தம் ஆதங்கம் இதெல்லாம் நிறையவே இருக்கு!


இருந்தாலும் உன்னைக் காயப்படுத்தி பார்க்க எனக்கு விருப்பம் இல்ல!


எனக்கு உன்னிடம் பிடிச்சதே இந்த தைரியமும், தெளிவும்தான்!


எதோ ஒரு புள்ளியில் என்னையே உன்னிடம் பார்த்த மாதிரி எனக்கு ஒரு பீல்!


அந்த பீல்தான் எனக்கு இப்படி ஒரு லவ் உன்மேல் ஏற்படக் காரணமும் கூட.


அதையே உன்னிடமிருந்து பறிக்க நான் தயாரா இல்ல!


அதை மத்தவங்க செய்யவும் நான் அனுமதிக்க மாட்டேன்!


உன் இயல்பு மாறாமல் நீ இருந்தால்தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்!" என்று தன் மனதில் இருப்பதை நீளமாகப் பேசி முடித்தான் ஈஸ்வர்.


அவன் சொன்ன வார்த்தைகளில் பெருமை பொங்க அவனுடைய முகத்தைப் பார்த்தவள் அவனிடம் இன்னும் நெருங்கி அவனுடைய வலியத் தோள்களில் அழுந்த முத்தமிட்டவள் அங்கேயே தனது முகத்தைப் பதித்துக்கொண்டாள் மலர்.


அவளுடைய மனதில் தோன்றிய வார்த்தைகளால் விவரிக்க இயலாத மகிழ்ச்சியையும் நிறைவையும் அவளது இந்தச் சிறிய செயல் ஈஸ்வருக்கு உணர்த்த அவளுடைய உச்சியில் இதழ் பதித்து நிமிர்ந்தவன்,


"என் கிட்ட சுபாவைப் பற்றி முன்னாடியே சொல்லியிருக்கலாம் நீ ஏன் மறைச்சேன்னு தெரியல ஆனால் அவளையும், அவளுடைய குழந்தையையும் பத்திரமா காப்பாற்றி என்னிடம் கொடுத்திருக்க!"அதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லணும் தேங்க்" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளது விரல்கொண்டு அவனது இதழ் மூடி அந்த வார்த்தையைத் தடுத்தவள்,


"ப்ளீஸ்! தேங்க்ஸ்லாம் வேண்டாமே ஆக்சுவலி இதெல்லாம் நான்!" என்று மலர் தொடங்கவும் "அம்மா! ஹனி!" என்று அழைத்துக்கொண்டே, உறக்கம் தெளியாமல் புதிய சூழ்நிலை ஏற்படுத்திய கலவரத்துடன் அந்த பால்கனி கதவைத் தள்ளிக்கொண்டு அங்கே நுழைத்தான் ஜீவன்.


அங்கே ஈஸ்வரை பார்த்ததும் அவனிடம் மிச்சம் இருந்த தூக்கமும் பறந்து போக "ஹீரோ!" என்று கூவிக்கொண்டே ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டான் குட்டி ஜீவன்.


"ஐயோ! இவன் உங்களை விடவே மாட்டான் போல இருக்கே நாளைக்கு நீங்க எப்படி ஷூட்டிங் போவீங்க?" என்றாள் மலர் பதட்டம் நிறைந்த குரலில்.


எழுந்து நின்று ஜீவனைத் தோளில் தூக்கிக்கொண்டே, "ஹகூனா மத்தாத்தா! க்ரேட்டல்! நான் ஒரு வாரத்துக்கு எல்லா ஷூட்டிங்கையும் கேன்சல் பண்ண சொல்லிட்டேன்!" என்றான் ஈஸ்வர்.


அவன் சொன்ன க்ரேட்டல்! என்ற வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு, "ஐ! ஜாலி! ஹீரோ! உங்களுக்கு ஹான்செல் அண்ட் க்ரேட்டல் கதை தெரியுமா?" என்று கேட்டான் ஜீவன் மிகவும் தெளிவாக, குதூகலத்துடன்.


அவன் தொடங்கினால் நிறுத்த மாட்டான் என்பது தெரிந்ததால், 'வேண்டாம்' என்பதுபோல் மலர் கையை ஆட்ட அதற்குள் "தெரியுமே!" என்று சொல்லி தானே போய், வலிய அவனிடம் மாட்டிக்கொண்டான் ஈஸ்வர்.


"ஹே! அப்ப அந்தக் கதையை சொல்றீங்களா ஹீரோ!" என்று ஜீவன் ஆர்வத்துடன் கேட்கவும் உள்ளே சென்று, அவனைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, தானும் அருகில் படுத்துக்கொண்டு கதையை சொல்லத் தொடங்கினான்.


அவர்களுக்கு அருகில் வந்து உட்கார்ந்த மலருடைய மடியில் உரிமையுடன் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு அவளுடைய துப்பட்டாவின் நுனியைப் பிடித்தவாறு இடது கை கட்டைவிரலை வாயில் வைத்துக்கொண்டு அந்தக் கதையை ஆர்வத்துடன் கேட்கத்தொடங்கினான் ஜீவன்.


ஈஸ்வர் கதை சொல்லி முடித்ததும், மலரின் முகத்தை உற்று நோக்கிய ஜீவன், "ஹனிம்மா! இந்த கதைல வர மாதிரி நான்தான் ஹன்சல் நீதான் க்ரேட்டல் இல்ல?


அவங்க ரெண்டு பேர் மாதிரி நம்ம கூட கெட்டவங்க கிட்ட மாட்டிகிட்டோம் இல்ல?


அதே மாதிரியே அங்கே நிறைய பாய்ஸ் அண்ட் கேல்ஸ்லாம் ஸ்டாச்யூ ஆகி இருந்தாங்க இல்ல?"


"கதைல ஹீரோ வரல அவங்களே தப்பிச்சாங்க! ஆனா நிஜத்துல நம்ம ஹீரோ வந்து நம்ம எல்லாரையும் காப்பாத்திட்டார் இல்ல?


வி ஷல் லிவ் வெரி ஹாப்பி எவர் ஆஃப்டர்! ஆம் ஐ ரைட்? ஹனிம்மா!" என்று, அடுக்கடுக்காக தனது சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டே போனான் ஜீவன்.


அவர்களுடைய சூழ்நிலையை தொடர்புப்படுத்தி, அழகாக அவன் பேசியதைக் கேட்டு அசந்துதான் போனார்கள் மலர் மற்றும் ஈஸ்வர் இருவரும்!


"ஹனீமாஆஆ! சொல்லு!" விடாமல் மறுபடி ஜீவன் கேட்கவும் அடுத்த நொடியே, கண்கள் பனிக்க அவனை இறுக அணைத்துக்கொண்டு, "ஆல்வேஸ் யூ ஆர் கரெக்ட் டா மை பாய் ஃப்ரென்ட்!" என்று சொல்லவிட்டு, அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வரை உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டாள் மலர்.


"அப்படினா இவன்தான் உன்னோட அந்த சோ கால்ட் பாய் ஃப்ரென்டா?" என்று குரலில் கிண்டல் தொனிக்க ஈஸ்வர் கேட்கவும், அசடு வழிய, 'ஆமாம்!' என்பதுபோல் தலையை ஆட்டினாள் மலர்.


அதைப்பார்த்து, தானும் அதைப்போலவே தலையை ஆட்டி, "எஸ் ஹானிதான் என்னோட கேர்ள் ஃப்ரென்ட்!" என்று ஜீவனும் தீவிர பாவனையுடன் சொல்லவும் சிரித்தேவிட்டான் ஈஸ்வர்.


அதன் பிறகு ஜீவன் அடித்த லூட்டியில், அவர்களுடைய இரவு, தூங்கா இரவானது.


விடிந்த பிறகும், "ஹீரோ கூடத்தான் பிரஷ் பண்ணுவேன்!


ஹீரோ தான் குளிக்க வைக்கணும்!


ஹீரோ கூடத்தான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவேன்!" என ஜீவன் ஒவ்வொன்றிற்கும் ஈஸ்வரையே தேட, அதுவரை பார்த்தே இராத அந்த மாமனின்மேல் அவன் கொண்ட அன்பு, வீட்டில் அனைவரையுமே அதிசயிக்க வைத்தது, ஈஸ்வரையும் சேர்த்து.


***


மலருடன் ஜீவனையும் அழைத்துக்கொண்டு, சுசீலா மாமி வீட்டிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்.


தங்கைக்காக அவர்கள் செய்த உதவிகளுக்கு, மாமா, மாமி இருவரிடமும் மனதிலிருந்து நன்றியைச் சொன்னான் அவன்.


"நாங்க என்னப்பா பண்ணோம்? மலர்தான் மொத்தமா பக்கத்துல இருந்து அந்த பொண்ணையும், இந்தக் குழந்தையையும் கவனிச்சிண்டா!


நாங்க சும்மா அவளுக்கு துணையா இருந்தோம் அவ்வளவுதான்" என்றார் மாமி பெருந்தன்மையுடன்.


"மாமி! நீங்க மட்டும் எனக்கு சப்போர்ட் பண்ணலைனா என்னால ஒண்ணுமே செஞ்சிருக்க முடியாது" என்றாள் மலர் நன்றியுடன்.


பிறகு அங்கே மலர் குடும்பத்தினருக்கு சொந்தமான பிளாட்டில் இருக்கும் சுபானுவின் பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அவர்கள் அங்கிருந்து கிளம்பினர்.


வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை நோக்கி அவர்கள் வரவும், அங்கே இருந்த நடை மேடையில் படுத்திருந்த, அந்த மனநலம் பாதிக்கப்பட்டவர், கண்களைச் சுருக்கி ஈஸ்வரை கேள்வியாகப் பார்க்க, அவரிடம் நெருங்கி, "ஹாப்பி மேன்! இவர்தான் என்னோட ஹீரோ! ஹாண்ட்சம்மா இருக்கார் இல்ல?" என்று ஜீவன் அவரிடம் கேட்கவும், கண்கள் மின்ன ஆமாம் என்பதுபோல் தலையை ஆட்டினார் அவர்.


"பைத்தியம்னு சொல்ல கூடாதுன்னு இவனுக்கு மாமா ஹாப்பி மேன்னு சொல்லிகொடுத்திருக்கார்" என்று அதற்கு விளக்கம் கொடுத்தார், அவர்களை வழி அனுப்ப வந்த சுசீலா மாமி.


அவர் அதைச் சொன்னதும்தான், அந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரைப் பற்றி அன்று ஒருநாள், தமிழ் சொல்லிக்கொண்டிருந்தது ஈஸ்வருக்கு நினைவில் வந்தது.


ஜீவன், அவனுக்காகக் கோபாலன் மாமா கொடுத்த ஆப்பிள்களில் ஒன்றை அந்த மனிதனிடம் கொடுக்க, கண்கள் மின்ன அதை வாங்கிக்கொண்டான் அவன்.


அப்பொழுது விசாரணைக்காக அங்கே வந்த ஜெய், மாமியிடம், 'அங்கே யார் யாரெல்லாம் குடியிருக்கிறார்கள்?' என்று தொடங்கி, சில சம்பிரதாய கேள்விகளைக் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டான்.


அங்கே கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லை என்று மாமி மூலம் தெரித்துக்கொண்டான் அவன்.


"நான் உள்ளே போய், கொஞ்சம் என்கொய்ரி பண்ணனும்; நீங்க கிளம்புங்கண்ணா நான் முடிந்தால் மதியம் வீட்டுக்கு வரேன்" என்று ஜெய் ஈஸ்வரிடம் சொல்ல, அவர்கள் கிளம்பிச் சென்றார்கள்.


மாமி உள்ளே செல்லவும், அந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை, ஆராய்ச்சியுடன் பார்த்துக்கொண்டே, அந்தக் குடியிருப்பின் உள்ளே சென்றான் ஜெய்.


அவனை உணர்ச்சியற்ற ஒரு பார்வை பார்த்துவைத்தான் அந்த மனிதன்.


***


மதியம், சாப்பிட்டு முடித்து, பாட்டியின் அறையில், ஒரு துப்பட்டவை பிடித்தவாறு, வாயில் விரலை போட்டுகொண்டு, ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தான் ஜீவன்.


செங்கமலம் பாட்டி அவனுக்கு அருகில் உட்கார்ந்துகொண்டு, அவனது கைகள், கால்கள் என வருடிக்கொண்டிருந்தார்.


"எல்லாமே முறைப்படி நடந்திருந்தா நம்ம ஜீவிக்கு செய்யற மாதிரி பார்த்து பார்த்து செஞ்சிருப்போம் இப்படி ஆகிப்போச்சே" என்று சன்னமான குரலில் அவர் புலம்பவும்,


"ராஜமாதா! இப்ப இதெல்லாம் பேசாதீங்க; அண்ணி எதிர்பார்த்த மாதிரி அவங்களுக்கு எதுவுமே அமையல; இந்த மட்டுமாவது அவங்க மீண்டு வந்திருக்காங்களேன்னு நாம சந்தோஷம்தான் படனும்; ஸோ முடிஞ்சு போனதை பேசவே வேண்டாமே ப்ளீஸ்!" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள், சுபானுவிற்கு மருந்துகளைப் பார்த்து கொடுத்துக்கொண்டிருந்த மலர்.


அங்கே வந்த மதி மகளின் கையை பற்றி தன் கன்னத்தில் அழுத்திக்கொண்டு "ஐயோ! இவ்வளவு மருந்தையா இவ சாப்பிடணும்?" என்று வருத்தத்துடன் கேட்க,


"என்ன பண்றது மாமி! வேறு வழி இல்லை இது சித்த மருந்து என்பதால் கொஞ்சம் சேஃப் பயப்படாதீங்க?" என்றாள் மலர்.


அப்பொழுது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் ஜெய்.


அனைவரையும் நலம் விசாரித்து சில நிமிடங்கள் அவர்களுடன் பேசிவிட்டு, "மலர் நீ ஃப்ரீயா இருந்தால் கேஸ் பற்றி உன்னிடம் கொஞ்ச நேரம் பேசணுமே" என்று அவன் சொல்லவும் பாட்டியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து அவனுடன் வெளியில் வந்தாள் மலர்.


"அவர் மாடியில ரூம்லதான் இருக்கார் அங்கேயே பேசலாம்!" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று மூன்றுபேருக்கும் பழரசம் எடுத்துக்கொண்டு வந்தாள் மலர்


பின்பு அவள் ஜெய்யுடன் அவர்களுடைய அறைக்கு வரவும் "வா ஜெய்! போலீஸா வந்திருக்கியா இல்ல என்னோட தம்பியா வந்திருக்கியா?" என்று ஈஸ்வர் அவனை வார,


"தெய்வமே! போலீஸெல்லாம் இல்ல; உங்க அப்பாவி தம்பியாத்தான் வந்திருக்கேன்! " என்று அழுதுவிடுபவன் போன்று அவனுக்குப் பதில் சொன்ன ஜெய், "இந்தக் கடத்தல் கேஸ் கொலை கேஸ் இதெல்லாம் கூட ஈஸியா கண்டுபிடிச்சிடுவேன் போல இருக்கு.


ஆனால் இந்த மலர் எப்படி சுபா அக்காவை மீட் பண்ணா என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுக்காம எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.


தயவு செஞ்சு உங்க ஹீரோயினை சொல்லிட சொல்லுங்க.


ஏற்கனவே ஆட்டமா ஆடுவா இப்ப உங்க சப்போர்ட் வேற சேர்ந்தால் சுத்தம்" என்று அலுத்துக்கொண்டான் அவன்.


எடுத்து வந்த பழரசத்தை மலர் அவர்களுக்குக் கொடுக்க அதை வாங்கிப் பருகியவாறு ஜெய்க்கு ஆதரவாக, "சொல்லிடு ஹனி! பாவம் பையன் பிழைச்சு போகட்டும்" என்றான் ஈஸ்வர்.


"என்னாது... ஹனியா!" என்று மற்ற இருவரும் ஒரே குரலில் சொல்ல,


"ஆமாம் என் மருமகன்தான் எனக்குச் சொல்லி கொடுத்தான்" என்றான் ஈஸ்வர் உல்லாசமாக.


"ஐய... அவன் ஹனின்னு சொன்னாலே எனக்குப் பிடிக்காது இதுல நீங்களுமா?" என்று மலர் அலுத்துக்கொள்ள, அதில் கடுப்பான ஜெய் "போதும் உங்க ரொமேன்ஸ பிறகு வெச்சுக்கலாம் நடந்ததைச் சொல்லு மலர்" என்று கெஞ்சுவது போல் கேட்கவும்.


"பிழைச்சு போ" என்று சொல்லிவிட்டு, "உனக்கு ஞாபகம் இருக்கா ஜெய் நான் ஆன்சைட்காக டெக்சாஸ் கிளம்பின அன்றைக்கு நீ என்னை ட்ராப் பண்ண ஏர் போர்ட் வந்திருந்தயே" என்று அனைத்தையும் சொல்லத் தொடங்கினாள் மலர்.


சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பாக ‘ஆன்சைட் அசைன்மெண்ட்’ காரணமாக அமெரிக்கா செல்வதற்கு விமான நிலையம் வந்திருந்தாள் மலர். அவளை வழி அனுப்பவேன அவளுக்கு துணையாக அங்கே வந்திருந்தான் ஜெய்.


மலருடைய நண்பர்களுக்காக அவள் விமான நிலையத்தின் 'செல்கை' (Departure) பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிக்கு உட்புறமாக நின்றவாறு காத்திருக்க அதே வேலியின் மறுபுறம், அதில் கையை ஊன்றியவாறு நின்றிருந்தான் ஜெய்.


அப்பொழுது திடீரென்று "ஏய் மலர் டக்குனு பார்க்காதே கேஷுவலா பார்க்குற மாதிரி திரும்பிப்பாரேன்!" என்று ஆர்வத்துடன் அவளுக்கு பின் புறமாக பார்த்தவாறு ஜெய் சொல்ல


'என்ன இவ்வளவு பில்ட் அப் கொடுக்கறான்' என்று எண்ணியவாறு யதார்த்தமாக திரும்பி பார்த்தாள் மலர்.


தமிழ் பயணப்பொதிகள் அடங்கிய ட்ராலியை தள்ளிக்கொண்டு வர அவனை பின் தொடர்ந்து வெளிர் நீல ஜீன்சும் உடற்பயிற்சி செய்து உரமேறிய திரண்ட தோள்களை எடுப்பாகக் காட்டும் கருப்பு நிற டீஷர்ட்டும் அணிந்து ஏறு போன்ற நிமிர்வன கம்பீர நடையுடன் அங்கே வந்துகொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.


அவனுடைய ஆளுமையான தோற்றமும், தெளிவான முகமும் கூர்மையான கண்களும் நெட்ஒர்க் கிடைத்த நொடி கைப்பேசியில் குவியும் 'நோட்டிபிகேஷன்' போல மலருடைய மனதில் அவளுடைய அனுமதியின்றி நிறைந்துபோனது.


"ப்பா என்னமா இருக்காரு மனுஷன் சினிமால இருப்பதை விட நேரில் நேரில் செம்ம ஹாண்ட்சம்மா இருக்காரு இல்ல!" என ஜெய் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவளது மூளையை எட்டவே சில நிமிடங்கள் பிடித்தன.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page