top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume! 2

Updated: Mar 27, 2023

அணிமா 2


முந்தைய தின மதியம் தொடங்கிய படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்தது. படத்தின் இறுதிகட்டம் என்பதால் வேறு வழியில்லை, முடித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டியதாகிப்போனது ஈஸ்வருக்கு.


அதுவும் அந்தப் படத்தின் கதாநாயகன் கால்ஷீட்டுக்குத் தகுந்தாற்போல் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் வேறு. அதனால் எழுந்த சலிப்புடன் தொடர் சண்டைக்காட்சிகளால் ஏற்பட்ட களைப்பும் தூக்கமின்றி சிவந்த கண்களுமாக கேரவனுக்குள் நுழைந்தவன் அதில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்துகொண்டான்.


தூக்கத்தில் அப்படியே கண்கள் சொருகவும், அதைக் கலைப்பதுபோல் வெளியில் எதோ அரவம் கேட்க, உறக்கம் தடைப்பட்ட எரிச்சலில் கேரவனின் கண்ணாடியைத் தள்ளி வெளிப்புறம் பார்த்தான்.


அங்கே அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகளின் வருகை தொடங்கியிருந்தது.


அப்பொழுதுதான் அவனது கேரவனை ஒட்டி இரண்டு பெண்மணிகள் நடந்து வரவும், வேகமாக பைக்கில் வந்தவன் அவர்களை உரசியது போல் நின்றதைப் பார்த்து பதட்டமடைத்தவன் கீழே இறங்க நினைக்க, அதற்குள் அவனே இல்லை! இல்லை! அவளே தலைக்கவசத்தைக் கழற்றியிருந்தாள்!


உடல் முழுவதும் மறைக்கும் ஜெர்கின், ஜீன்ஸ் பேன்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தாள்! அவளது கூந்தலும் அவள் அணிந்திருந்த ஜெர்கினுக்குள் மறைந்திருந்தது.


அந்த நபர் ஒரு பெண் என்பதை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை!


அங்கே சூழ்ந்திருந்த இருளையும் புகை மூட்டமாய் சூழ்ந்திருந்த பனியையும் தனது ஆயிரம் கரம் கொண்டு விரட்டப் போராடிக்கொண்டிருந்தான் பகலவன்.


அவன் வாரி இறைத்துக்கொண்டிருந்த கொஞ்சமே கொஞ்சமான ஒளியில் அவளது விழிகள் இரண்டும் விண்ணிலிருந்து தெறித்த நட்சத்திரம் போன்று ஜொலித்துக் கொண்டிருந்தன.


மற்றபடி அந்த மாமி அவளை விளித்ததைப் போன்றே முகமூடி கொள்ளைக்காரி போல் அவளது முகம் முழுவதையும் துணியினால் மூடியிருந்தாள்.


முதலில் வேகமாக பைக்கை ஓட்டி வந்து அந்த மாமியை அதிர வைத்த வீரம், பிறகு குறும்பு, பின்பு கோபம், அதைத் தொடர்ந்து போலியான ஒரு பயம், ஒரே ஒரு நொடி தோன்றி மறைந்த கருணை, மொத்தத்தில் ஆனந்தம்! என நவரசங்களில் பல இரசங்களை சில நிமிடங்களிலேயே வாரியிறைத்துக் கொண்டிருந்தன அவளது அந்த அழகான விழிகள்!


அவள் அந்த பைக்கை கிளப்பிச்சென்ற லாவகம், அவளது தன்னபிக்கையின் அளவைச் சொல்லாமல் சொன்னது.


அவள் அங்கிருந்து சென்றபிறகும் அவள் விட்டுச்சென்ற உற்சாகம் அவனிடம் மிச்சமிருக்க அவனது களைப்பும் சோர்வும் அவனை விட்டு மொத்தமாகப் பறந்திருந்தது.


அப்பொழுது அவனது உதவியாளன் அவனது வலது கை, கண், காது, மூக்கு எல்லாமுமான தமிழ்க்கதிர், சுருக்கமாக தமிழ் சுடச்சுட காஃபியைக் கொண்டுவந்து அவனுக்கு முன் நீட்டவும், புன்னகை முகமாக அதை வாங்கிப் பருகத்தொடங்கினான் ஈஸ்வர்.


அவனது முகத்தில் தோன்றியிருந்த புன்னகையைப் பார்த்து மயக்கம் வராத குறைதான் தமிழுக்கு.


"அண்ணா! என்ன மேஜிக் நடந்தது இங்க?" வியப்பு மாறாமல் தமிழ் கேட்கவும், "என்னடா உளர்ற!" எனக் கோபமின்றி மிகவும் குழைந்தே ஒலித்தது ஈஸ்வரின் குரல்.


"ஐயோ! சிட்டி சிரிக்குது எல்லாரும் பாருங்க இந்த அதிசயத்த!" உண்மையிலேயே ஈஸ்வரது மகிழ்ச்சி தமிழையுமே தொற்றிக்கொண்டது. கனவிலிருந்து விழித்தவன் போல் அங்கிருந்து சென்றான் அவன்.


அந்த மாமி சொன்னத போல் அந்த சில நிமிடங்களில் அவன் மனதில் வர்ணஜாலங்களை அள்ளித்தெளித்துச் சென்றிருந்தாள் அந்த மலர்காரிகை. அந்த இதம் அந்த வாரம் முழுதும் உற்சாகமாக அவனைத் தொடர்ந்தது என்றால் மிகையில்லை. அதைதான் அன்றைய தினம் அந்தத் தொலைக்காட்சி நிருபர் மொத்தமாகக் குலைத்திருந்தான்.


வீட்டிற்கு வந்த பிறகும் அவனது மனம் அமைதி பெறாமல் தவிக்கவும் ஏனோ அந்த முகம் அறியா பெண்ணின் நினைவு வந்து அவனை மொத்தமாக ஆட்கொண்டது. அன்று தான் அடைந்த உவகை தனக்குக் காலம் முழுதும் கிடைக்காதா? என ஏங்கவே தொடங்கியிருந்தான்!


'அணிமாமலரே!’ அவனையும் அறியாமல் அவளது பெயரை ஒரு முறை சொல்லிப் பார்த்தான் ஜெகதீஸ்வரன்! மனம் முழுதும் திகட்டாமல் தித்தித்தது!


***


ஜெகதீஸ்வரன் வில்லனாகவும் தமிழ்த் திரைப்பட உலகின் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் அனுபவ் கதாநாயகனாகவும் நடித்த படத்தைக் கோலாகலமாக வெளியிட்டிருந்தனர்.


பலவித சர்ச்சைகளுக்கிடையே அன்றைய தினம் அதிகாலை ஐந்து மணிக்கு அந்தப் படம் திரையிடப்பட்டது. தமிழகத்தின் தலை நகரின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் திரை அரங்கம் ஒன்றில் நண்பர்கள் புடைசூழ அந்தப் படத்தைக் காண வந்திருந்தாள் மலர்.


அவள் அந்தப் திரைப்படத்திற்கு அதிகாலையிலேயே செல்ல வேண்டும் என்று முந்தைய நாள் இரவே சொல்லப் போக, சூடாமணி அவளை வசைபாடத் தொடங்கிவிட்டார்.


"ம்மா மலரைப் பத்தி உங்களுக்கே தெரியும் இல்ல? அவளால தொடர்ந்து மூணு மணிநேரமெல்லாம் ஒரே இடத்துல உட்கார்ந்து படமெல்லாம் பார்க்கவே முடியாது. ஏதோ அதிசயமா அவளே ஒரு படம் பார்க்கணும்னு சொல்றான்னா, விடுங்களேன் பார்த்துட்டு வரட்டும். நானே அவளை ட்ராப் பண்றேன். நோ ஒற்றீஸ்" என்று பிரபாகர்தான் தங்கைக்காக அன்னையிடம் ஆஜர் ஆனான்.


வெங்கடேசன் வேறு மகனுடன் சேர்ந்து மகளுக்காகப் பரிந்து கொண்டு வரவும் அதற்கு மேல் அவளைத் தடுக்கவில்லை சூடாமணி. "நீங்க ரெண்டு பேர் கொடுக்குற சப்போர்ட்லதான் அவ இந்த ஆட்டம் ஆடுறா. இன்னும் எங்க அம்மாவும் அப்பாவும் வேற வந்தாங்கன்னா, சுத்தம். அவளை ஒரு வார்த்தை கூட சொல்ல விடமாட்டாங்க" என்று வாய்க்குள்ளாகவே முனகியபடி அடுக்களைக்குள் புகுந்துகொண்டார்.


ஒருவாறாக அதிகாலையிலேயே அவளைத் திரையரங்கில் விட்டுச் சென்றான் பிரபா. படம் தொடங்கி கதாநாயகனின் பிம்பம் திரையில் தோன்றவும் வண்ண காகிதங்கள் மலர்கள் என வாரி இறைக்கப் பட, விசில் சத்தம் காதை கிழிக்க, அவளது தோழர் படையினர் குதூகலத்துடன் படத்தைக் காணத் தொடங்கினர்.


ஆனால் மலர் மட்டும் எந்தச் சுவாரசியமும் இன்றி அந்தப் படத்தைப் பார்க்கவும், ‘பாவி இவளால வேற வழியில்லாம என் பாய் ஃபிரெண்ட கட் பண்ணி விட்டுட்டு வந்திருக்கேன். எதுக்குடா வந்தோம்ன்ற ரேஞ்சுக்கு உட்கார்ந்துட்டு இருக்கா இவ!’ என்று எண்ணிய லாவண்யா அவளைப் பலவாறாக மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.


அங்கிருந்த அனைவரும் நாயகனின் துதிப் பாடிக்கொண்டிருக்க, மலர் மட்டும் ஈஸ்வரைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தாள். அதுவும் சண்டைக்காட்சிகள் தோன்றும்போதெல்லாம 'ஐயோ' என்றிருந்தது அவளுக்கு. இத்தனைக்கும் கதாநாயகனுக்கு நிகரான வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது ஈஸ்வருக்கு.


இடைவேளையின் பொழுது அனைவரும் எழுந்து வெளியில் வரவும் அவளது தோழிகள் அனுபவ் புகழ் பாட, ஒருத்தி அந்தப் படத்தின் வில்லனான ஈஸ்வரை இகழவே தொடங்கிவிட அதற்குமேல் பொறுமையை இழுத்துப்பிடிக்க முடியவில்லை.


"என்னங்கடி பெருசா அனுபவ்... அனுபவ்...னு அவன் புராணம் பாடிட்டு இருக்கீங்க. சரியான தேவாங்கு மாதிரி இருக்கான். பார்த்தீங்க இல்ல ஈஸ்வர, என்ன ஹைட்டு, சிக்ஸ் பேக்ஸ் வெச்சிட்டு என்ன ஃபிஸிக்! எல்லாத்துக்கும் மேல நிஜத்தில் அவர் செம்ம டிசிப்ளின்ட் பெர்சன் தெரியுமா? நடிப்புக்காகன்னாலும் போயும் போயும் அந்த தேவாங்கு கிட்ட அவர் அடி வாங்குறத பார்த்தால் எனக்கு அப்படியே பத்திட்டு வருது! நிஜத்தில் அவர் ஒரு அடி அடிச்சா தாங்குமா அந்த தேவாங்கு? என்னைப் பொறுத்தவரையில் அவர்தான் என்னோட நிஜ ஹீரோ!" திரைப்படத்தையும் நிஜத்தையும் குழப்பிக்கொண்டு கோபத்தின் உச்சியில் கொஞ்சம் கத்தவே தொடங்கிவிட்டாள் மலர்.


அங்கே அவர்களுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த ஈஸ்வரின் உதவியாளன் தமிழ் அவளை வியந்துபோய் பார்க்கவும் அதைக் கவனித்த அவளுடைய நண்பன் நரேன் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு இரகசியமாக, "மலர்! இங்க நின்னுட்டு நீ இப்படி பேசறது ஆபத்து. எஃப்.டீ.எஃப்.எஸ் வேற. அனுபவ் ரசிகர் மன்ற பசங்க நிறைய பேர் வந்திருக்காங்க. பிரச்சினை ஆயிடும், ப்ளீஸ் புரிஞ்சிக்கோ!" எனக் கூறவும்தான் சுற்றுப்புறம் உரைத்தது மலருக்கு.


தான் ஏன் இவ்வாறு பேசினோம் என்று யோசித்தவள், ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு, "சாரி!" என்று சொல்லிவிட்டு அவளது இயல்பிற்குத் திரும்பினாள்.


எல்லோரும அவர்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களை வாங்கிக்கொள்ள, அவளுக்கு காஃபி அருந்தும் எண்ணம் தோன்றவும் அதை வாங்கச் சென்றாள் மலர்.


தமிழ் குறுக்கே நின்றவாறு கைப்பேசியைக் குடைந்து கொண்டிருக்கவும், வழிவிடுமாறு அவனிடம் சொல்லும் பொருட்டு, "எக்ஸ்கியூஸ் மீ" என்ற மலரின் வார்த்தை அவனை எட்டாமல் போக, "ஹலோ வெள்ள சட்டை போட்ட அண்ணா! கொஞ்சம் நகருங்க. நான் காஃபி வாங்கிட்டுப் போறேன்" என்று அவள் கொஞ்சம் சத்தமாகச் சொல்ல, அவன் பதறி வழியை விட்டு விலகினான்.


‘தேங்க்ஸ்’ என்ற வார்த்தையுடன் காஃபியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள் மலர்.


"ஏன் மலர் இவ்ளோ டென்ஷன் ஆன? இது உன்னோட டிசைன்லயே இல்லையே ம்!" என லாவண்யா வியக்கவும், "ப்ச்! விடு" என்று கூறிவிட்டுப் படத்தைத் தொடர உள்ளே சென்றாள். அதன் பிறகு யாருடனும் அவள் ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை.


அந்தச் சூழ்நிலையும் அதிகப்படியான சத்தமும் சேர்ந்து அவளுக்கு தலை வேறு வலிக்கத் தொடங்கியது. உடல் முழுதும் குருதியில் நனைய ஈஸ்வர் அந்த ஹீரோவிடம் அடிவாங்குவதாக அமைந்திருந்த அந்தப் படத்தின் இறுதிக் காட்சியைக் காண மனமின்றி, எழுந்து வெளியிலேயே வந்துவிட்டாள்.


அவள் நேரம் செலவு செய்து இதுபோல் படம் பார்ப்பது என்பதெல்லாம் மிகவும் அபூர்வம்தான்.


சிறிது நேரம் கிடைத்தாலும் கீ போர்டை எடுத்துக்கொண்டு அவர்களது வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்து விடுவாள். அங்கே சூடாமணி பராமரித்து வரும் தோட்டம் தான் அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம். மனது ஒன்றி பாடல் பாடுவது மட்டுமே அவளது ஒரே பொழுதுபோக்கு. கூடவே அவளது ராசாவும் ரோசாவும் சேர்த்துக்கொண்டால் அவளது நேரம் அவளிடம் இருக்காது.


அதுவும் சில நாட்களாக அவள் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு சில பொறுப்புகளால் பொழுதுபோக்கு என்ற ஒன்றே அவளுக்கு இல்லாமல் போயிருந்தது.


திரைக்கூடத்தை விட்டு வெளியில் வந்து காஃபி ஒன்றை வாங்கி பருகியவாறு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தாள் அணிமாமலர்.


அப்பொழுதுதான், முரட்டுத்தனமான ஜீன்ஸ், கருப்பு நிற டி ஷர்ட் எனச் சீருடை அணிந்து, பார்க்கவே பயம் தரும் மல்லர்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும் பௌன்சர்கள் எனப்படும் பிரத்தியேக பாதுகாவலர்கள் நான்கு பேர் புடைசூழ, ஆறடி உயர்தத்தில், மா நிறத்திற்கும் சற்று அதிகமான நிறத்தில், சிவப்பு நிற முழுக் கை சட்டையும் அடர் நீல ஜீன்சும் அதற்கு பொருத்தமான ஷூவும் அணிந்து, அணிந்திருந்த கூலர்ஸை ஒருகையால் கழற்றியவாறு, மறு கையால் தலைமுடியைக் கோதியபடி, அந்த மிகப் பெரிய அரங்கமே நிறைவதுபோல் உள்ளே நுழைந்தான் ஜெகதீஸ்வரன். எதிர்பாராத அந்த நேரத்தில், அவனை நேரில் கண்டதும் ஒரு நொடி திகைத்துப்போய் எழுந்து நின்றுவிட்டாள் மலர்.


படம் இன்னும் முடியாத நிலையில், வெகு சிலர் மட்டுமே அங்கே இருக்க, அவன் மனம் கொண்ட மலர்க்காரிகை என அவன் கற்பனையில் வடித்த உருவம், நேரில் நிற்கவும் அவனும் கூட ஒரு நொடி அதிர்ந்துதான் போனான்.


நல்ல நேர்த்தியான உயரத்தில் அவளது ரோஜா நிறத்தை எடுப்பாகக் காட்டும் கருநீலத்தில் பூக்கள் போட்ட சுடிதாரில், பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுடன், எளிய நகைகள் அணிந்து ஒப்பனை என்பதே சிறிதுமின்றி, களைப்பினால் கொஞ்சம் சொக்கிய கண்களுடன் சம்பங்கிப் பூப்போன்ற விரல்களில் காஃபி கோப்பையைப் பிடித்துக்கொண்டு நின்றவளைக் காணவும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனத்தைப் போல் அவளைத் தாண்டி அவனது கண்களை வேறெங்கும் திருப்ப இயலவில்லை. இருவருக்குமே தங்களை நிலைப்படுத்திக் கொள்ள சில நொடிகள் பிடித்தன.


அந்தப் படத்தின் முதல் காட்சி திரையிடப் படவும், அதை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில், அதில் நடித்த நடிகர் நடிகையர் என ஒவொருவரும் ரசிகர்களை ஊக்குவிக்கும் விதத்தில் சென்னையின் முக்கிய திரை அரங்குகளுக்குச் செல்ல, இங்கே வந்திருந்தான் ஜெகதீஸ்வரன்.


சில நொடிகளில் தன்னிலைக்குத் திரும்பிய மலர், தனது கைப்பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தவாறு, சில எட்டுகளில் அவனை நெருங்க, அவளைத் தடுக்க எத்தனித்த பவுன்சர் ஒருவனைப் பார்த்து, "விடு மால்லிக்! ஒரு பிரச்சனையும் இல்ல!" என ஈஸ்வர் சொல்ல, ஆச்சரியத்தில் அவளது விழி விரிய, "தேங்க்ஸ்!" என்ற மலர் அவள் கையில் வைத்திருந்த, புத்தகத்தைப் பிரித்து, பேனாவுடன் அவனிடம் நீட்டி, "ஆட்டோக்ராஃப் ப்ளீஸ்" எனக்கூற, அந்தப் புத்தகத்தைப் பார்த்தவனுக்குச் சிரிப்பே வந்துவிட்டது. அது குழந்தைகள் படிக்கும் 'ஹான்செல் அண்ட் க்ரேட்டல்' கதைப் புத்தகம்.


மிகவும் முயன்று சிரிப்பை அடக்கிய ஈஸ்வர் அதில் கையெழுத்திட்டுக்கொண்டே, "இந்த புக்கெல்லாமா படிக்கிறீங்க? உங்களப் பார்த்தால குட்டி பாப்பா மாதிரி ஒண்ணும் தெரியலையே!" என்று கிண்டல் இழையோடக் கேட்க,


ஒரு வேகத்தில், "உங்களப் பார்த்தாக் கூடத்தான் வில்லன் மாதிரியே இல்ல! இருந்தாலும் நீங்க வில்லனா செம அடி வாங்கறீங்க இல்ல? அது மாதிரிதான்!" என்று துடுக்காகச் சொல்லிவிட்டு, உடனே உணர்ந்து நாக்கைக் கடித்துக்கொண்டாள்.


அவளைக் கூர்மையாக பார்த்துக்கொண்டே, அந்தப் புத்தகத்தை அவளிடம் திரும்பக் கொடுத்தவாறு, "ஆஹான்! நான் வில்லனோ இல்லையோ, தைரியமா என்னையே கலாய்க்கற நீங்க சரியான வில்லிதான் போங்க!" என்று பதில் கொடுத்தான் ஈஸ்வர்.


‘இப்படியெல்லாம் ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது ஜெகதீஸ்வரன்தானா?!’ என அவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழுக்குதான் இதைக் கொஞ்சமும் நம்ப முடியவில்லை. தமிழ் அவர்களை நெருங்குவதற்குள் அவனுடன் ஒரு செல்ஃபீயும் எடுத்து முடித்திருந்தாள் மலர்.


அவனைக் கவனித்துவிட்டு, "என்ன தமிழ்! படம் எப்படி வந்திருக்கு. மக்கள் என்ன சொல்ராங்க?" என்று ஈஸ்வர் கேட்க,


"வேறென்ன சொல்றதுண்ணா! வழக்கம்போல எல்லாரும் உங்களைக் கழுவிக் கழுவி ஊத்தறாங்க! ஆனா இங்க உங்களுக்காக ஒருத்தங்க ஒரு கூட்டத்தோட சண்டையே போட ஆரமிச்சிட்டாங்க தெரியுமாண்ணா?" என்று மலரைப் பார்த்துக்கொண்டே தமிழ் சொல்லிக்கொண்டிருக்க, விழி விரித்து அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தவள், சொல்ல வேண்டாம் என்பதுபோல் ஜாடை செய்யவும்,


அதைக் கவனிக்காத பாவத்தில், "இவங்கதான் அது!" என்று அவளைக் காண்பித்து சொல்லியே முடித்திருந்தான்.


ஆயாசத்தில், "அட ஈஸ்வரா!" என்று மலர் சொல்லிவிட, அதைக் கேட்டு சத்தமாகவே சிரிக்கத்தொடங்கினான் ஜெகதீஸ்வரன்.


அதற்குள் படம் முடிந்து மக்கள் கூட்டமாக வெளியில் வரத்தொடங்கவும், "மீ எஸ்கேப் பை! பை! பை! ஹீரோ!" என்று சத்தமாகச் சொல்லியவாறு அங்கிருந்து பறந்து சென்றாள் அணிமாமலர்!


அவளின் அந்த ஹீரோ என்ற ஒற்றை வார்த்தை ஜெகதீஸ்வரனை மலரீஸ்வரனாக மாற்றி இருந்தது. வியப்பில் சிலையாகவே மாறிப்போனான் அவளது ஹீரோ!


***



0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page