top of page

Anbenum Idhazhgal Malarattume! 18

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

Updated: Apr 7, 2023

அணிமா-18


'யார் இந்தக் குழந்தை' என்ற கேள்வி மூளையைக் குடைந்தாலும், அதன் முகம் அவன் மேல் கொண்ட நம்பிக்கையை அப்பட்டமாகப் பறை சாற்ற, தன் நிலை உணர்ந்தவன் கலக்கத்தைக் கைவிட்டு துரிதமாகச் செயல்பட தொடங்கினான் ஈஸ்வர்.


ஓட்டுனர்களுடன் இணைந்து, ஜீவனையும் சேர்த்து முதலில் சில குழந்தைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு அவன் கைப்பேசியில் துரிதப்படுத்த சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் அங்கே வந்துவிட அதற்குள் அனைத்து ஊடகங்களும் பொதுமக்களும் அங்கே குவியத் தொடங்கினர்.


நேரம் கடத்தாமல் மேலும் சில ஆம்புலன்ஸ்களில் மீதமிருந்த குழந்தைகளும் மலரும் ஏற்றப் பட்டனர்.


அந்த ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து ஈஸ்வரின் வாகனம் அரசு பொது மருத்துவமனை நோக்கி விரைந்தது.


அவன் எப்படி காரைச் செலுத்தினான் எப்படி மருத்துவமனை வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனால் விடை சொல்ல முடியாத நிலையில் அங்கே வந்து சேர்ந்திருந்தான் ஈஸ்வர்.


இவை அனைத்திற்கும் நடுவில் போலீசார் அந்த இடத்தை முழுவதுமாக சோதனை செய்ய அங்கே இருக்கும் அறையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் ஒருவன் மயங்கிக் கிடக்க அவனையும் ஆம்புலன்சில் ஏற்றி அங்கே கொண்டு வந்தனர்.


மலர் மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் போய்க்கொண்டிருந்தது.


‘சென்னை புறநகர் பகுதியில் உள்ள மர்ம இடத்தில் பிரபல திரைப்பட வில்லன் நடிகர் ஈஸ்வரின் புது மனைவியுடன் பல பகுதிகளிலிருந்து காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.


பின்னணி என்ன? கண்டுபிடிக்குமா காவல்துறை!’ என்ற செய்தியுடன் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் அவர்களுக்கே உரித்தான பதறவைக்கும் இசையுடன் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.


ஈஸ்வருடைய முகத்தையும் மலர் ஆம்புலஸில் ஏற்றப்படும் காட்சியையும் மருத்துவமனையையும் மாற்றி மாற்றிக் காண்பித்து தமது ‘டீ.ஆர்.பி’யை எகிற வைக்கப் போராடிக் கொண்டிருந்தன காட்சி ஊடகங்கள்.


அந்தச் செய்தியைப் பார்த்து பதறிப்போய் முதலில் அங்கே ஓடி வந்த தமிழ், பிரச்சினையின் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்த ஈஸ்வரைத் தேற்றும் வகை தெரியாமல் அவன் அருகில் வந்து நின்றுகொண்டான்.


அடுத்த விமானத்திலேயே அங்கே வந்துவிடுவதாக அவனுக்குத் தகவல் அனுப்பியிருந்தான் ஜெய்.


தொடர்ந்து அடித்துப் பிடித்து அங்கே ஓடி வந்தனர் ஈஸ்வர் மற்றும் மலருடைய குடும்பத்தினர்.


மலருக்கு தலையில் ஏதோ தகடு கிழித்து அதிக ரத்தம் வெளியேறி இருந்தது. உள்ளுக்குளே ஏதாவது அடி பட்டிருக்கிறதா என்பதைக் கண்டு பிடிக்க மேற்கொண்டு எக்ஸ்-ரே, சீ.டீ போன்ற பரிசோதனைகளைச் செய்து கொண்டிருந்தனர்.


குழந்தைகளுக்கு எந்தக் காயங்களும் இல்லை. ஆனாலும் அவர்களை மயக்க நிலையிலேயே வைத்திருக்க ஏதோ மயக்க மருந்தைத் தொடர்ந்து அவர்கள் மேல் ‘ஸ்ப்ரே’ செய்து வைத்திருக்கின்றனர். அதில் சுவாசக் கோளாறு ஏற்பட்டு ஒரு குழந்தை மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்க, மற்ற குழந்தைகள் ஓரளவிற்கு நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்தனர்.


கிட்டத்தட்ட இரண்டு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அங்கே வந்த மருத்துவர் ஈஸ்வரை நோக்கி, "உங்க ஒய்ஃப்க்கு பயப்படற மாதிரி ஒண்ணும் இல்ல. தலைல சின்னதா தையல் போட்டிருக்கோம். ஸ்ட்ரெஸ்னால ஏற்பட்ட மயக்கம்தான். கொஞ்ச நேரத்துல கண் விழிச்சுடுவாங்க. டோன்ட் ஒர்ரி" என்று சொல்லிவிட்டு, மலர் அனுமதிக்கப் பட்டிருந்த சிறப்பு பிரிவின் உள்ளே சென்று அவளைப் பார்க்கலாம் என்று அனுமதித்தார்.


அதுவும் ஒருவர் மட்டுமே உள்ளே சென்று பார்க்கலாம் என்ற நிலையில், ஈஸ்வர் கேட்டுக்கொண்டதன் பேரில் இரண்டு பேருக்கு அனுமதி கிடைத்தது.


முதலில் சூடாமணி உள்ளே சென்று மயக்க நிலையில் இருந்த மகளைப் பார்த்துவிட்டு வந்து அழுகையில் கரைய, அடுத்தாக அங்கே சென்றான் ஈஸ்வர்.


அங்கே ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டில்கள் போடப்பட்டிருந்தன. அதில் மலரைத் தேடி அவன் அவள் அருகில் செல்லவும் அவளது நிலை கண்டு அவனது இதயம் வெளியில் வந்து விழுவது போல் துடித்தது.


அவனையும் மீறி அவனது கண்களில் கண்ணீர் வழிய அவளது கையை எடுத்து தனது நெஞ்சில் அழுத்திக்கொண்டான் ஈஸ்வர். அப்பொழுது அவனை நோக்கி "ஹீரோ!" என்று கூவிக்கொண்டே ஓடி வந்தான் ஜீவன்.


"திஸ் இஸ் ஹாஸ்பிடல் பேபி! டோன்ட் ஷவ்ட்" என்று அவனைப் பின் தொடர்ந்து வந்த ஒரு பெண் மருத்தவர் மெல்லிய குரலில் அவனை எச்சரிக்க,


"நோ ஐம் நாட் அ பேபி. ஐம் அ பாய்! பிக் பாய்! லைக் மை ஹீரோ!" என்றான் அவன் கெத்தாக.


புரியாமல், ஈஸ்வர் அவனை ஒரு பார்வை பார்க்கவும், "எஸ் மிஸ்டர் ஈஸ்வர், ஹி இஸ் அ பாய்! அடையாளம் தெரியாம இருக்க இவனுக்குப் பெண் குழந்தை மாதிரி டிரஸ் செஞ்சிருக்காங்க. இதே மாதிரி ரெண்டு பெண் குழந்தைகளையும் பையன் மாதிரி மேக் அப் செஞ்சு மாத்தி வெச்சிருக்காங்க" என்று விளக்கமாகச் சொன்ன அந்த மருத்துவர் தொடர்ந்து,


"இவன் உங்க கிட்ட வரணும்னு சொல்லி ஒரே பிடிவாதம் பிடிச்சான். அதனாலதான் இங்க அழைச்சிட்டு வந்தேன். ஹனி! ஹனி! னு சொல்லி ஒரே அழுகை. இவங்களைதான் சொல்றான்னு நினைக்கறேன். இவனைக் கொஞ்ச நேரம் உங்க கூட வெச்சுக்க முடியுமா?" என்று தன்மையுடன் கேட்டார்.


அது வரை மலரின் நினைவில் மூழ்கி அனைத்தையும் மறந்திருந்தவன், அவள் ஜீவனை இவனிடம் ஒப்படைத்தது நினைவில் வர, "வித் ப்ளெஷர்!" என்று சொல்லி அவனைத் தனது தோள்களில் தூக்கிக்கொண்டான்.


அந்த மருத்துவர் அங்கிருந்து சென்று விட, ஈஸ்வரின் முகத்தையே சில நொடிகள் உற்று நோக்கிய ஜீவன், முதலில் தனது பிஞ்சு விரல்களால் ஈஸ்வரின் முகத்தை வருடி தனது விரல்களைப் பார்த்துக்கொண்டவன், "நான் உங்களை பார்த்துட்டேன் ஹீரோ! ஐம் வெரி ஹாப்பி!" என்றான் கண்களில் பொங்கும் மகிழ்ச்சியுடன்.


அவனது இரு கன்னங்களிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து, "எங்க பர்த்டே அன்னைக்கு உங்கள பார்க்கலாம்னு ஹனி சொன்னா. ஆனா அதுக்கு முன்னாலயே நான் உங்கள பாத்துட்டேன் ஹீரோ! ஹனி கிட்ட சொல்லலாமா?" என்று சொல்லிவிட்டு அப்பொழுதுதான் மலரைக் கவனித்தவனாக, "ஹனிக்கு ஃபீவரா? அதனாலதான் தூங்கறாளா?" என்று கேட்க, "ஆமாம்!" என்பதுபோல் தலையை ஆட்டினான் ஈஸ்வர்.


"ஹனிமாவைப் பார்த்து" என்று சொல்லிவிட்டு தனது விரல்களைப் பிரித்து எண்ணியவாறு, "எய்ட் டேஸ் ஆச்சு தெரியுமா ஹீரோ! உங்க கல்யாணம்கு கூட சுசீ பாட்டி என்னை ஏமாத்தி விட்டுட்டு வந்துட்டாங்க" என்று குறையாகச் சொல்லிவிட்டு கீழே இறங்கியவன், மலர் படுத்திருந்த கட்டில் மேல் ஏறி அவள் அருகில் உட்கார்ந்து மலரின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு, "கேர்ள் ஃப்ரென்ட் நீ தூங்கு. நான் டிஸ்டர்ப் பண்ணல" என்று கிசுகிசுப்பாகச் சொல்லி, ஈஸ்வரிடம் வந்து நின்றுகொண்டான்.


அவனது செயல்களில், அனைத்துத் துயரங்களையும் தாண்டி மென் புன்னகை ஒன்று எட்டிப் பார்த்தது ஈஸ்வரின் முகத்தில்.


மருத்துவர்கள் அனுமதித்த நேரத்தையும் தாண்டி சில நிமிடங்கள் செல்லவும் அவனை நோக்கி ஒரு செவிலியர் வர, ஜீவனை அழைத்துக்கொண்டு வெளியில் வந்தான் ஈஸ்வர்.


'யார் இந்தச் சிறுவன்?' என்ற கேள்வி மட்டுமே மேலோங்கி இருந்தது அவனிடம்.


"ஹீரோ! எனக்கு இந்த கேர்ள் டிரஸ் பிடிக்கல. ஐ நீட் டு சேஞ்ஜ்!" என்று தயக்கத்துடன் ஜீவன் சொல்ல, தமிழை அழைத்து ஜீவனுக்கு சில உடைகள் வாங்கி வருமாறு பணித்துவிட்டு அவனிடம் திரும்பி "நீ யாரு கண்ணா?" என்று ஈஸ்வர் கேட்கவும், "நான் ஜீவன் ஜீவனேஷ்வரன்!" என்றானவன் கெத்தாக.


அங்கே இருந்த அவர்களுடைய குடும்பத்தினர் அனைவருமே என்ன நடக்கிறது என்பது புரியாமல் அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கே வந்த ஜெய், அது அவன் தலைமையில் வரும் வழக்கு என்பதினால் சூழ்நிலையைக் கையில் எடுத்துக்கொண்டான்


பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் கொடுத்துவிட்டுப் புயலென உள்ளே நுழைந்தான். அந்தச் சூழ்நிலையில் மலர் கண் விழிக்கவும் அவளிடம் தனியாக விசாரணை நடத்தி அவளது வாக்குமூலத்தை வாங்கவென ஒரு பெண் காவலர் பின் தொடர உள்ளே சென்றான் ஜெய்.


அப்பட்டமாகக் கோபம் முகத்தில் தெரிய ஜெய் அவளை நோக்கி செல்வதைப் பார்த்த ஈஸ்வரும் அவனுடன் அங்கே வந்தான், ஜீவனை சாருமதியிடம் ஒப்படைத்துவிட்டு.


அப்பொழுதுதான் மயக்கம் தெளிந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மலரை நெருங்கி அவளுடைய கையை பற்றி அவளைத் தூக்கி நிறுத்தி, மற்றவர் என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே அவளை ஓங்கி அறைந்திருந்தான் ஜெய். கண்களில் பூச்சிப் பறக்க உடல் இறுகி அசையாமல் நின்றிருந்தாள் மலர். அவள் இருக்கும் நிலையை உணர்ந்த ஈஸ்வர்தான் கலங்கிப் போனான்.


கொஞ்சமும் தாமதிக்காமல் அவளை இழுத்து தன்னுடன் ஈஸ்வர் அணைத்துக்கொள்ள, "ணா இவள விடுங்கண்ணா! இவளைப் பற்றி உங்களுக்குச் சரியா தெரியாது. மேடம்தான் சரியான வீராங்கனை ஆச்சே. அங்க ஒருத்தனை எழுந்து உட்கார முடியாத அளவுக்கு மரண அடி அடிச்சிட்டு வந்திருக்காங்க. இவ நினைச்சிருந்தா நான் அடிக்க வரும்போதே தடுத்திருப்பா. அதனால இவ தெரிஞ்சேதான் இந்த அறையை வாங்கிட்டு இருக்காண்ணா" என்று தோழியைப் பற்றி நன்கு அறிந்தவனாக ஜெய் சொல்லிக்கொண்டே போக, ஜெகதீஸ்வரனின் கோபம் தெறிக்கும் அனல் பார்வையில் நிலை உணர்ந்து சற்று அடங்கினான்.


ஈஸ்வர் ஏதோ சொல்ல வர அதற்குள் அங்கே இருந்த மருத்துவர், "அதுக்காக நீங்க ஒரு பேஷண்டை அடிச்சது தப்பு. ப்ளீஸ் இதோட நிறுத்திக்கோங்க" என்று சொல்ல, "சொல்லு என்ன நடந்தது நீ எப்படி அந்த இடத்துக்குப் போன?" என்று ஜெய் காவல் துறை அதிகாரியாகக் கேள்வி கேட்க,


ஒரு நொடி ஈஸ்வரின் முகத்தைப் பார்த்தவள் தயக்கத்துடன் "என் நாத்தனாரோட சன் ஜீவனேஸ்வரன் கொஞ்ச நாளாக என் பாதுகாப்புலதான் இருக்கான். அவங்க அம்மாவுக்கு அவங்க குடும்பத்தோட தொடர்பு இல்ல. அதோட அவங்களுக்கு உடம்பு சரியில்லை. அதனால நான்தான் ஜீவனைக் கவனிச்சிட்டு இருக்கேன். எனக்குக் கல்யாணம் நடந்ததால அவனை ஒரு வாரமா மாம்பலத்துல தெரிஞ்சவங்க பாதுகாப்புல விட்டிருக்கேன்” என்று மலர் சொல்ல, அதிர்வுடன் அவளைப் பார்த்தான் ஈஸ்வர்.


"என்ன உன் நாத்தனார் பையனா? புரியல?" என ஜெய் குழப்பமாகக் கேட்க,


"ஆமாம், என் ஹஸ்பண்டோட சிஸ்டர் சுபாவோட சன்" என்று சொல்லவிட்டு, ஈஸ்வரை ஏறெடுத்துப் பார்க்கவும் தயங்கியவளாகத் தலை குனித்தவள்,


"சாரி ஹீரோ!" என முணுமுணுத்துவிட்டு,


"ஜீவன் ஒரு இடத்தில நிற்க மாட்டான் அவ்வளவு வாலு! அதனால சேஃப்டிக்காக ஒரு சின்ன ‘ஜீ.பீ.ஆர்.எஸ்’ டிவைஸ அவனோட இடுப்புல அரைஞாண் கயித்தோட தாயத்து போல கோர்த்து கட்டி இருக்கேன். இன்னைக்கு காலை ஆறு மணியில இருந்து அவனைக் காணும்னு மாமி ஃபோன் பண்ணாங்க. நான் அந்த ‘ஜீ.பீ.ஆர்.எஸ்’ஸை ட்ராக் பண்ணி பார்க்க, அந்த இடத்தைக் காமிச்சுது. முதல்ல என்ன செய்யறதுன்னு புரியவே இல்ல. என் ஹஸ்பண்ட்க்கு ஃபோன் பண்ணேன். அவர் ஷூட்டிங்கில் இருந்தால அவரால அட்டண்ட் பண்ண முடியல. என் ஃபிரென்ட் ஜெய் ஊரில் இல்லை. அதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியல” என்று காட்டமாகச் சொன்னவள் அதன் பிறகு நடந்ததை விவரிக்கத் தொடங்கினாள்.


***


மாமி மலரை அழைத்து ஜீவனைக் காணவில்லை என்ற செய்தியைச் சொல்ல அங்கே எதிர் பிளாட்டிற்குள் சென்றிருப்பான் என்றுதான் நினைத்தாள் மலர், ஏனென்றால் முன்பே ஒருமுறை அதுபோல் நடந்திருந்தது.


அதனால் அவளது கைப்பேசியில் ‘ஜீ.பீ.ஆர்.எஸ்’ கருவியை ‘ட்ராக்’ செய்ய அது மாம்பலத்தில் இருந்து வெகு தொலைவு தள்ளி பல்லாவரத்தில் இருப்பதாகக் காண்பிக்கவும் பதறியவள் பைக்கில் அந்தப் பகுதியை அடைந்தாள்.


அந்தச் சூழ்நிலை வயிற்றில் அமிலத்தைக் கரைக்க துணைக்கு ஈஸ்வரை கைப்பேசியில் அவள் அழைக்கவும் அவளது அந்த அழைப்பு ஏற்கப்படவில்லை.


வேறு வழி இன்றி பைக்கைச் சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டு அந்த ஆளரவம் இல்லாத பகுதியில் சுற்றுச்சுவர் தாண்டி உள்ளே குதித்தவள் சிறிது தூரம் நடந்து வந்து அந்த வீட்டை நெருங்கினாள்.


அங்கே கேட்ட பேச்சுக் குரலில் தயங்கி அங்கே இருந்த ஜன்னல் ஓரமாக நின்று அதைக் கவனிக்க, அங்கே நான்கு பேர் இருந்தனர். அவர்கள் பேசுவது அவளுக்குத் துல்லியமாகக் கேட்டது.


"இதுக்கு மேல இந்தப் புள்ளைங்கள வெச்சு மேனேஜ் பண்ணுறது தொல்லை புடிச்ச வேல. இந்த ஜீவன் பையன புடிக்கறதுக்குள்ள நம்ம தாவு தீர்ந்து போச்சு. எவன் செய்யறான்னு தெரியல, நம்ம லிங்க் ஆளுங்கள வரிசையா போட்டு தள்ளிட்டு இருக்கான். இப்ப இந்த செட்ட நம்ம தல சொன்ன மாதிரி அந்த அஞ்சு மேத்தா க்ரூப்ல சேர்த்துடலாம்! இதுல இந்த ஜீவன ஏதோ வெளிநாட்டுக்குக் கிளப்ப போறாங்களாம்!" என்று அதில் தலைமையாக இருப்பவன் போல் தோன்றியவன் சொல்லவும்,


மற்றொருவன் "அப்ப அந்த அணிமாமலர் பொண்ணு, வேதா ப்ரோ?" என்று கேட்க, "ஏய் என்ன! அந்தப் பொண்ணைத் தேடிப் போய் என்னை சாவ சொல்றியா? ஆள விடு!" என்றான் வேதா அலுப்பாக.


"அப்ப நம்ம தல?" என்று அவன் மறுபடி கேட்கவும், "அதை அப்பறமா பார்த்துக்கலாம்! நான் போய் நம்ம பெரிய வேனை கொண்டு வரேன். இதுங்கள வெளிய தூக்கிட்டு வந்து போடு" என்று சொல்லிவிட்டு அங்கிருந்த ஒருவனை மட்டும் அழைத்துக்கொண்டு அந்த வேதா என்பவன் சென்றுவிட,


அங்கே இருந்த இருவர் உள்ளே சென்று மயங்கிய நிலையில் இருந்த ஒவ்வொரு குழந்தையாக அங்கே இருந்த போர்டிகோ போன்ற பகுதியில் கொண்டு வந்து கிடத்தினர்.


பேச்சே வரவில்லை மலருக்கு அந்த இடத்தில் ஒரு சேர இத்தனை குழந்தைகளை எதிர்பார்க்கவில்லை அவள்.


இவர்கள் அனைவரையும் எப்படிக் காப்பாற்ற போகிறோம் என்ற எண்ணம் தோன்ற பயம் என்பதை முற்றிலுமாக உணர்ந்தாள் மலர்.


ஏற்கனவே ஜெய் காவல்துறை நிலைப் பற்றி சொன்னது நினைவில் வர, அவர்களைத் தொடர்புகொள்ளவும் விரும்பவில்லை. மறுபடி மறுபடி ஈஸ்வரை மட்டுமே அழைக்கத் தோன்றியது.


அதற்குள் எல்லாக் குழந்தைகளையும் அவர்கள் அங்கே கொண்டுவந்துவிட, வேறு எண்ணம் தோன்றாமல், அவளுடைய கைப்பையில் எப்பொழுதும் இருக்கும் தற்காப்பு ஸ்பிரேவைக் கையில் எடுத்துக்கொண்டு எதிர்பாராத நேரத்தில் அங்கே சென்றவள் இருவருடைய முகத்திலும் அது தீரும் வரையில் மாற்றி மாற்றி ‘ஸ்பிரே’ செய்ய நிலை குலைந்தனர் இருவரும். அந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அவர்களை அடித்து நொறுக்கினாள். ஒரு கட்டத்தில் அவர்கள் சோர்ந்துபோக முதலில் ஒருவனை இழுத்துச் சென்று அங்கே இருந்த அறையில் தள்ளிக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டுத் திரும்பினாள்.


அதற்குள் எழுந்து வந்த மற்றொருவன் அவளைப் பிடித்து அவளது தலையை அந்தக் கதவினில் பலமாக மோத, அதில் பதிக்கப்பட்டிருந்த தகரம் அவளது பின்னந்தலையில் நன்றாக கிழித்துவிட இரத்தம் கசிய தொடங்கி தலை பயங்கரமாக வலித்தது.


அடுத்த நொடியே கொஞ்சம் சுதாரித்தவள், அவனை மறுபடி தாக்கவும் ஏற்கனவே அரை மயக்கத்திலிருந்தவன் மொத்தமாக மயங்கிச் சரிந்தான்.


உடனே மறுபடியும் கைப்பேசியில் ஈஸ்வருக்கு முயல இந்த முறை அவன் அழைப்பை ஏற்கவும் அவள் அவனிடம் அந்த இடத்தைச் சொல்ல, ஏற்பட்ட காயத்தால் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அந்தக் குழந்தைகளைக் காப்பற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் தலைதுக்க, அழுகை வந்துவிட்டது அவளுக்கு.


அவள் மேலும் பேசுவதற்குள் அவன் மறுபடி எழுந்து வர அருகில் கிடந்த ஒரு உடைந்த குழாயினால் பலம் கொண்ட மட்டும் அவனைத் தாக்கினாள் மலர். அதற்குள் அவளது கைப்பேசி கீழே போய் விழுந்து சிதறியது.


அதை எடுத்து அவள் பொருத்துவதற்குள் அங்கிருந்து தெறித்து ஓடினான் அந்தக் கும்பலை சேர்ந்தவன். அவனைத் துரத்திப் பிடிக்கும் அளவிற்கு அவளுக்கு வலிமை இல்லாது போல் தோன்றவும் சோர்ந்துபோய் அப்படியே சுவரில் சாய்ந்தவாறு உட்கார்ந்துவிட்டாள்.


அந்த குழந்தைகளில் ஜீவனைக் காணாமல், "ஜீவன்! ஜீவன்! மை பாய் ஃப்ரெண்ட், எங்கடா இருக்க?" என ஈனமான குரலில் அவள் அழைக்க, அவள் குரலில் ஜீவனின் மயக்கம் லேசாகத் தெளியவும் அவளை உணர்ந்து மெதுவாக அவளை நோக்கி நகர்ந்து வந்தவன் "ஹனி!" என்றவாறு அவள் மடியில் படுத்துக்கொண்டான். அந்த உடையில் அவனை எதிர்பார்க்காததால் அவன்தான் ஜீவன் என்பதைப் புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது மலருக்கு.


அதற்குள் ஈஸ்வர் அங்கே வந்துவிட நிலைமையே மாறிப்போனது. அனைத்தையும் சொல்லி முடித்தாள் அணிமாமலர்.


***


"சின்னதா சில செக் அப் பண்ணிட்டு அவங்களை அனுப்பறேன். அதுவரைக்கும் வெளியில வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்!" என்று அங்கிருந்த மருத்துவர் சொல்ல, செவிலியர் ஒருவர் திரைச்சீலைகளை இழுத்து விடவும் மூவரும் வெளியில் வந்தனர். ஜெய் அங்கே அனுமதிக்கப்பட்டிருந்த மற்ற குழந்தைகளை நோக்கிச் சென்றான்.


அப்பொழுது மொட்டை அடிக்கப்பட்ட தலையுடன், குச்சி போல் ஒல்லியான தேகத்துடன், வாடி வதங்கிய கொடியாக இருக்கும் ஒரு இளம் பெண்ணைச் சக்கர நாற்காலியில் வைத்துத் தள்ளிக்கொண்டு அங்கே வேகமாக வந்துகொண்டிருந்தார் சுசீலா மாமி.


அவரைப் பின்தொடர்ந்து ஓட்டமும் நடையுமாக அங்கே வந்துகொண்டிருந்தார் குமார்.


அனைவருமே 'யார் அந்தப் பெண்?' என்ற குழப்பத்துடன் அவளை உற்று நோக்க, "அம்மா!" என்று அழைத்துக்கொண்டே அவளை நோக்கி ஓடினான் ஜீவன்.


அந்தப் பெண் அருகில் நெருங்கி வரவும் அங்கே நின்றுகொண்டிருந்த சாருமதி, "ஐயோ! சுபா! சுபாம்மா!" என்றவாறு கதறிக் கொண்டு அவளை நோக்கி ஓடினார். அவரைத் தொடர்ந்து செங்கமலம் பாட்டியும் சுபாவை நோக்கிப் போனார் தள்ளாடியபடி.


அவள் தனது உடன் பிறந்த சகோதரி 'சுபானு' என்பது புரிந்ததும் அவளுக்குதான் மலர் உதவி செய்து கொண்டிருக்கிறாள் என்பது விளங்க உச்சக்கட்ட அதிர்ச்சியில் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்துவிட்டான் ஈஸ்வர்.


அவனை நோக்கி வந்த குமார், "கண்ணா! பாருடா நம்ம சுபாடா. அவ பிள்ளையைப் பாருடா! அப்படியே உன்னையே உறிச்சி வெச்சு பிறந்திருக்காண்டா. புத்திக் கேட்டுப் போய் அவ பண்ண தப்புக்கெல்லாம் நிறையவே அனுபவிச்சுட்டாடா அந்தப் பொண்ணு. இதுக்கு மேல அவ துன்பப்பட ஒண்ணுமே இல்லடா ஈஸ்வரா! இனிமேல் நீதான்டாப்பா அவளுக்கு எல்லாமே!" என்று சொல்லிக்கொண்டே போனார்.


ஏதும் பேசத்தோன்றாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர். அப்பொழுது ஆதரவாக அவனது கரத்தில் தனது கரத்தைக் கோர்த்துக்கொண்டு அவனது அருகில் வந்து உட்கார்ந்தாள் அணிமாமலர்.


அதைக் கண்டு ஓடிவந்த மலருடைய ஜீவன், ஜெகதீஸ்வரனை அன்புடன் அணைத்துக்கொண்டான்.


அதில் அவனுடைய கண்கள் பனிக்க அந்த இளம் தளிரை தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான் ஜெகதீஸ்வரன்.


அவனைப் பற்றியிருந்த கையின் அழுத்தம் கொடுத்த வலியில் அவனது மனதின் வேதனையின் அளவை உணர்ந்தாள் அணிமாமலர்.




Kommentare

Mit 0 von 5 Sternen bewertet.
Noch keine Ratings

Rating hinzufügen
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page