விதைப்பந்து - 2
விதை பந்து - 2
கதை பிறந்த கதை!
பாரத தேசத்தோட தென் பகுதில 'மகிலாரோப்பொயம்' அப்படின்னு ஒரு நகரம் இருந்தது. அதை 'அமரசக்தி'ன்னு ஒரு ராஜா ஆட்சி பண்ணார்.
அந்த ராஜாவுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி அப்பறம் அனந்த சக்தின்னு மூணு பிள்ளைகள்.
அவங்க மூணுபேரும் சரியான குறும்புக்காரங்க, படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாதவங்க, சொல்பேச்சு கேக்காத சரியான முரட்டு முட்டாளுங்க!
அந்த ராஜாவும் பல குருமார்களை அவங்களுக்காக நியமிச்சு பார்த்தார்.
ம்ஹும் ஒண்ணுமே வேலைக்கு ஆகல!
அவங்களோட அட்டகாசம் தாங்காம எல்லாரும் தெறிச்சு ஓடினாங்க.
அந்த சமயத்துல ராஜா தன்னோட கவலையை அவரோட அரசவைல சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார்.
அவரோட அந்த நிலைமையை நினைச்சு வருந்தின விஷ்ணு சர்மா அப்படிங்கற ஒரு பண்டிதர் முன்வந்து, "உங்க பிள்ளைகளை ஒரு ஆறு மாசத்துக்கு என் கிட்ட விடுங்க!
நான் அவங்களுக்கு கல்வியை போதிக்கறேன்" அப்படின்னு சொன்னார்.
அந்த அரசவைல இருந்தவங்க எல்லாரும் அவரை நினைச்சு உள்ளுக்குளேயே சிரிச்சாங்க.
வெளிப்படையா சிரிச்சா ராஜா தண்டனை கொடுத்தா என்ன பண்றது?
அவர் மேல உண்மையான அக்கறை இருக்கற சில பேர் வேண்டாம் அப்படிங்கற மாதிரி ஜாடை செஞ்சாங்க.
ஆனா அவர் அதை பத்தியெல்லாம் கவலை படல, நம்பிக்கையோட பிள்ளைகளை அனுப்பச்சொல்லி ராஜாகிட்ட கேட்டார்.
அந்த ராஜா அந்த ஏற்பாட்டுக்கு சந்தோஷமா ஒப்புக்கொண்டார்.
சந்தோஷமா அவரோட அந்த முட்டாள் பிள்ளைங்கள அந்த விஷ்ணுஷர்மாவோட அனுப்பி வெச்சார்.
அந்த அரச குமாரர்களை தன் வீட்டுக்கு கூட்டிட்டுவந்த விஷ்ணு சர்மா அவங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கல.
ஏன்னா அவங்க அதை காதுகொடுத்து கேக்க மாட்டாங்கன்னு அவருக்கு தெரியும்.
அதனால அவர் ஒரு புது யோசனையை கடைபிடிச்சார்.
அந்த குமாரர்களுக்கு எளிமையா புரியற மாதிரி சில கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சார்.
அவங்களுக்கு அது பொழுதுபோக்காவும் வேடிக்கையாவும் இருந்ததால அந்த கதையை ஆர்வமா கேட்டாங்க அந்த பிள்ளைங்க.
அந்த கதைகள் ரொம்பவே எளிமையா இருந்ததால அவங்க மனசுல ஆழமா பதிஞ்சுது.
ஆனா அந்த கதைகள் மூலமா அவங்களே அறியாம அவங்க அரசியல் தந்திரங்களை கத்துக்கிட்டாங்க.
அவங்களுக்கு மன முதிர்ச்சி ஏற்பட்டது.
ஒரு அரசாங்கத்தை நிர்வகிக்கற திறமை அந்த கதைகளால அவங்களுக்கு வந்து சேர்ந்தது.
முட்டாளா கூட்டிட்டு போன அந்த அரச குமாரர்களை நாலும் தெரிஞ்ச மேதாவிகளா அவங்க அப்பா கிட்ட ஒப்படைச்சார் விஷ்ணு சர்மா!
ராஜா சந்தோஷத்துல திக்குமுக்காடி போய் பல பரிசுகள் கொடுத்து அவரை கோரவித்தார்.