top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·4 members

31. பிடிவாதம்

ராயல் அமிர்தாஸில் வேலை செய்பவர்களுக்கான தனிப்பட்ட வாயிலின் வழியாக மல்லியை தனது கைகளில் தூக்கி வந்த ஆதி, தனது காரிலேயே அவளை கேர் ஃபார் லைஃப்பிற்கு கொண்டுசென்றான். உதவிக்காக சுமாயாவும் அவனுடன் வந்தாள்.


தனது கைகளிலேயே அவளைத் தூக்கிவந்தவன், நேராகத் தாமரையின் கன்சல்டன்சி அறை நோக்கிச் சென்று, அங்கே நோயாளிகளைப் பரிசோதிக்கவென போடப்பட்டிருந்த படுக்கையில் மென்மையாக அவளை படுக்கவைத்தான்.


அவன் அங்கே வந்து சேருவதற்கு, முன்பாகவே தாமரையை அழைத்து, ஒரு பெண்ணை அங்கே அழைத்துவருவதாக சொல்லியிருக்கவே அவளுமே தயாராக காத்திருந்தாள். அவளிடம் நடந்த அனைத்தையும் விளக்கினான் ஆதி.


அவன் கூட அவள் ஏதோ உடல்நிலை சரியில்லாமல்தான் மயங்கி விழுந்தாள் என்று எண்ணியிருந்தான். ஆனால் மல்லியை பரிசோதித்த தாமரையின் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்தது.


“என்ன தாமர, என்ன ஆச்சு இவளுக்கு. ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்று பதறினான்.


“இல்ல…ணா, இந்த பொண்ணு ஜூஸ் மாதிரி எதாவது குடிச்சாளா?” என்று சந்தேகத்துடன் வினவினாள் தாமரை.


“ஆமாம், நம்ம ஹோட்டல்லதான ஜூஸ் குடிச்சா. அதுவும் பிரெஷ் ஜூஸ்தான். அது கெட்டுப்போயிருக்க சான்ஸே இல்ல!” என அவன் திண்ணமாகக் கூற,


ஒரு நிமிடம் அவனது முகத்தைப் பார்த்தவள், “இல்லண்ணா, அந்த பொண்ண கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டேன். நத்திங் டு ஒர்ரி. ஆனா… யாரோ அந்த ஜூஸ்ல அப்யுசிவ்வான ஒரு டேப்லெட்ட கலந்து கொடுத்திருக்காங்க.” என்று சொன்னாள் தாமரை. அதிர்ந்தான் ஆதி.


'ராயல் அமிர்தாஸ்' அவனது கோட்டை. அதற்குள்ளேயே அதுவும் அவனது முழுமையான பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிட்ட ஒரு பெண்ணிற்கு இப்படி நேர்ந்திருக்கிறது என்றால் அது எப்படி சாத்தியம் என்று பதறினான். அந்தச் சூழல் அவனுக்கு அம்முவின் இருதி நாளை நினைவு படுத்த, மனதின் ஆழத்திற்குள் முள் தைத்தது.


“ரேர் கேசஸ்ல ஐ.சி.யு...ல இருக்கற ட்ராமா பேஷண்ட்ஸுக்கு சில ட்ரக்ஸ் யூஸ் பண்ணுவோம். அது மினிமம் இருபது நிமிஷத்துல வேலைசெய்யத் தொடங்கிடும். அதுக்கப்பறம் கிட்டத்தட்ட பன்னன்டு மணிநேரம் வரைக்கும் அவங்க தன்னை மறந்த நிலையில மயக்கத்துல இருப்பாங்க. பொண்ணுங்கள செக்‌ஷுவலி யூஸ் பண்ணிக்கவும் இந்த அதே டிரக்ஸ யூஸ் பண்றதா கேள்விப்பட்டிருக்கேன், அண்ணா. ஒருத்தரோட உயிர காக்கற அந்த மருந்ததான் இப்படி கேவலமா, தப்பான காரியத்துக்கும் உபயோக படுத்துறாங்க!” என்று வருந்தினாள்.


ஆதியின் கவலைப் படர்ந்த முகத்தைப் பார்த்து, “தப்பா எதுவும் நடக்கறதுக்கு முன்னாடியே, நீங்கதான் இந்தப் கப்பாத்திடீங்களே! அப்பறம் ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க?” என்று கேட்டள் தாமரை.


“காப்பாத்திட்டேன்தான். ஆனா என்னோட இடத்திலேயே ஒரு பொண்ணுக்கு பாதுகாப்பு இல்லனு நினைக்கும்போது, எனக்கே கொஞ்சம் கேவலமா இருக்கு தாமரை” என்ற ஆதி, “சரி இப்ப மல்லிக்கு என்ன மாதிரி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்?” என்று கேட்டான்.


“ஒரு ட்ரீட்மெண்டும் தேவை இல்லண்ணா. நாளைக்கு காலைல வரைக்கும் இப்படியே மயக்கத்துல இருப்பாங்க அவ்வளவுதான். வேணும்னா இப்பவே கூட நீங்க அவங்கள வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம். டீஹைட்ரேஷன் ஆகாம இருக்க தண்ணி மட்டும் கொடுத்துட்டே இருந்தா போதும்” என்றாள் தாமரை


கொஞ்சம் யோசித்து தயங்கிய ஆதி, “இல்ல, தாமர. இந்த பொண்ணு என் கம்பெனி ஸ்டாப். இந்த நெலமையில அதுவும் இந்த நேரத்துல இவள வீட்டுல கொண்டு போய் விட்டா அது இவளுக்கு தேவை இல்லாத கெட்ட பேர ஏற்படுத்தும். அதனால, ஏதோ ஒடம்பு சரியில்லன்னு அவளோட வீட்டுக்குத் தகவல் கொடுத்துட்டு, ராத்திரிக்கு மட்டும் இங்க வச்சிருந்து காலைல டிஸ்சார்ஜ் செஞ்சு அனுப்பமுடியுமா?” என்று கேட்டான்.


“செய்யலாம் அண்ணா. ஒரு பொண்ணுக்காக இதகூட செய்யமாட்டனா என்ன?” என்றவள், “டீஹைட்ரேஷன் ஆகாம இருக்க ஒரே ஒரு பாட்டில் ட்ரிப்ஸ் மட்டும் போட சொல்றேன்” என்று முடித்தாள் தாமரை.


அதற்குள் அவளுக்கும் அவசர வேலை வந்துவிடவே அங்கே வந்த வினோத்திடம் தகவலைச் சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு சுமாயா மூலமாக மல்லியின் வீட்டிற்குத் தகவல் கொடுத்தான் ஆதி. பின்பு சுமாயா வீட்டிற்குக் கிளம்பிவிட, சிறிது நேரத்திற்கெல்லாம் பரிமளா, ஜெகன் மற்றும் தீபனும் அங்கே வந்துசேர்ந்தனர்.


வினோத் பரிமளாவிடம் மல்லியின் நிலை குறித்து விளக்கிக்கொண்டிருக்க, அருகே இருந்த ஜன்னல் வழியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் ஆதி.


அடுத்தநாள் மல்லி வீட்டிற்குச் செல்லும்வரையிலுமே வினோத்துடன் அவனது அறையிலேயே இருந்த ஆதி, மல்லியை அடிக்கடி சென்று கண்காணித்துக் கொண்டிருந்தான்.


மல்லி அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்றபின், அங்கே அவள் தங்கியிருந்ததற்கான தொகையைச் செலுத்திவிட்டு வினோத்திடம் விடைபெற்றுக் கிளம்பும் சமயம், “என்னடா, அந்த பொண்ணு உனக்கு ரொம்பவும் ஸ்பெஷல் போலவே?” என்று கேட்டான் வினோத்.


புன்னகை முகத்தில் படர, “ரொ...ம்பவே ஸ்பெஷல்தான். உனக்குச் சீக்கிரமே தெரியவரும்!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி நேராக ராயல் அமிர்தாஸ் வந்து சேர்ந்தான் அதி.


வந்த நொடி முதல் சசியுடன் சேர்ந்துகொண்டு, சிசி டிவி கேமரா பதிவுகள் ஒவ்வொன்றையும் அவன் ஆராய, காஞ்சனாவின் நடவடிக்கைகள் மட்டும் கொஞ்சம் சரியில்லாதது போல் தோன்றியது. மேலும் மணி அங்கே இல்லாமல் போனது தெரிய வந்தது.


மணி... ஆதி மற்றும் சசி இருவரின் நம்பிக்கைக்குரிய நபர் என்பதால் அவன் மீது பெரிதாக சந்தேகம் இல்லை என்றாலும், அவன் அங்கே இல்லாமல் போன காரணம் குறித்து தெரிந்து கொள்ள அவனை அங்கே வரச்சொல்லி தகவல் அனுப்பினான் ஆதி.


பின்பு மணியிடம் விசாரிக்க, காஞ்சனாதான் அவனை முக்கியமான கோப்பு ஒன்றை எடுத்துவருமாறு அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தது தெரியவந்தது.


பின்பு காஞ்சனாவை அங்கே வரவழைத்த ஆதி, அவளிடம் விசாரிக்க முதலில் மறுத்தவள் பின்பு விஜித் கொஞ்சம் கடுமையாகக் கேட்டதிலும், சுமாயா அறைந்த அறையிலும் அனைத்தையும் ஒப்புக்கொண்டாள்..


முதலிலிருந்தே அங்கே தனக்கு கீழே பயிற்சிக்காக வரும் நபர்கள் அங்கே வளரத்தொடங்கினால், அதை விரும்பாமல் அவர்களை வீண் பழி சுமத்தி வேலையில் நீடிக்கவிடாமல் செய்வதை வழக்கமாக்க செய்துகொண்டிருந்தாள் காஞ்சனா.


மல்லி அவளது திறமையால் நிர்வாகத்தில் நல்ல பெயரை சம்பாதிப்பதை பொறுக்கமுடியாமல் அவளை அங்கிருந்து கிளப்ப, சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம், ஒருவன் கைப்பேசியில் அவளை அழைத்துப் பேசினான். அவன் கூரியர் மூலம் அவளுக்கு அனுப்பும் ஒரு திரவத்தை, மல்லிக்கு ஏதாவது குளிர்பானத்தில் கலந்து கொடுத்துவிட்டு அவனுக்குத் தகவல் கொடுக்குமாறும், அப்படிச் செய்தால் அவளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அவளது வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவதாகவும் சொன்னான். கடைசிவரை தன் பெயரை அவன் சொல்லவே இல்லை.


அந்த நபர் யார், எவர் என்பதையோ, அதற்குப்பின் இருந்த காரணத்தையோ தெரிந்துகொள்ள காஞ்சனா முனையவேயில்லை. கரும்பையும் கொடுத்து அதைத் தின்ன கூலியும் கொடுக்கவே, தோண்டித் துருவாமல் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதித்துவிட்டாள்.


அந்த முகம் தெரியாதவனுடன் கைப்பேசியில் சிலமுறை பேசியதுடன் சரி. மற்றபடி அவனை அவள் நேரில் பார்க்கவும் இல்லை. அதற்கான தேவையும் அவளுக்கு ஏற்படவில்லை.


அவன் சொன்னதுபோல் அந்த மருந்து அவளது கைக்கு வந்து சேரவும், அதை மல்லிக்குக் கொடுக்க அந்த பார்ட்டியை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டாள். அந்தத் தகவலையும் அந்த மர்ம மனிதனுக்குத் தெரியப்படுத்தினாள். மணி அங்கே இருக்கும் பட்சத்தில் மல்லியை அவன் காப்பாற்றிவிடும் வாய்ப்பு இருந்ததால், அவனை அங்கிருந்து அப்புறப்படுத்தினாள்.


ஆனால் ஆதியின் கண்கள் மல்லியையே தொடரவும் முதலில் கொஞ்சம் பதறியவள், பின்பு அதை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அவன் அவளையே பின் தொடர்வான் என்பதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.


அவ்வளவுதான், இதற்குமேல் அவள் வேறு எந்தத் தகவலையும் ஆதிக்கு கொடுக்கவில்லை. கொடுக்கவில்லை என்பதைவிட அவளால் கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை.


அதன் தொடர்ச்சியாக அவளால் வேறேதும் பிரச்சினையை கிளப்பமுடியாத வண்ணம் அவள் பேசிய அனைத்தையும் கானொளியாகப் பதிவுசெய்ததுடன், அவளது கைப்பேசி மற்றும் மடிக்கணினி என அனைத்தையும் அவளிடமிருந்து கைப்பற்றி, அவளை தானாகவே வேலையை விடவும் வைத்து, அங்கே அவள் இருந்த சுவடே இல்லாமல் செய்தான் ஆதி.


காஞ்சனாவின் கைப்பேசியிலிருந்து அவள் குறிப்பிட்ட அந்த எண்ணிற்கு அழைக்க, அது உபயோகத்தில் இருக்கவில்லை.


அடுத்து வந்த நாட்களில் அந்த எண்ணைப் பற்றி விசாரிக்க அது போலியான முகவரியில் பதிவாகியிருந்ததும், அது காஞ்சனாவைத் தொடர்பு கொள்ள மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.


மல்லியை யாரோ குறிவைத்து பின்தொடர்வது மட்டுமே புரிந்ததே தவிர, அதற்கான காரணம் ஏதும் ஆதிக்கு விளங்கவில்லை. வேறு யாரையும் நம்ப முடியாமல் அவளது பாதுகாப்பிற்காக மட்டுமே அவனது எல்லா வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு, ஆதி டெக்ஸ்டைல்ஸின் டிசைனிங் பிரிவில் அவளுக்கு அருகிலேயே வந்து சேர்ந்தான்.


அன்று அவர்களது அலுவலகத்தில் மின்தூக்கியில் அவளைச் சந்தித்தது முதல் ரூம் பிரெஷ்னர் தொடங்கி மற்ற அனைத்திலும் அங்கே நடந்த மாற்றங்கள்!


அந்த வீரா மல்லியிடம் வம்பு செய்ததைப் பார்த்து கொலைவெறி கொண்டது!


மணியை வைத்து அவனுடைய கையை உடைத்தது!


சுமாயாவை அவளுக்குத் துணையாக அவளுடைய வீட்டிலேயே குடி வைத்தது!


அம்முவைப் பற்றி மனம்விட்டு அவளைப் பேச வைத்தது!


அவளது கனவுகளைப் பற்றி அவனுக்குத் தெரியவந்தது!


அம்முவின் நகைகளைக் கண்டுபிடித்தது!


அதைத் தொடந்த அவள் மீதான கொலை முயற்சி என அனைத்தையும் சொன்னவன்.


“அன்னைக்கே உனக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்லனு எனக்கு தெளிவா புரிஞ்சுது, மல்லி. அதுவும் நீ சீரியஸ்ஸா ஹாஸ்பிடல்ல இருந்தப்பக், உன்ன உரிமையோட நெருங்க முடியாம நான் தவிச்ச தவிப்பு உனக்கு சொன்னா புரியாது. அதனாலதான் அவசரமா அந்தக் கல்யாண முடிவ எடுத்தேன். ரெண்டு தடவ சுமாயா வீட்டுக்கு வரமாதிரி குழந்தைங்களோட சேர்ந்து கார்ட்டூன் பார்த்துட்டு நீ அடிக்குற கூத்தையெல்லாம் பார்த்துட்டு போயிருக்கேன்! அதுக்குள்ள அமெரிக்கா போயே ஆகவேண்டிய சூழ்நிலை ஏற்படவே, பக்காவா பாதுகாப்பு ஏற்பாடுகள உனக்காக செஞ்சு வெச்சிட்டு அங்க போனேன்” என்று சொல்லி முடித்தான் ஆதி.


முதலில் மகிழ்ச்சி! பின்பு துயரம்! அதன் பின் வியப்பு! நெகிழ்ச்சி! என வெவ்வேறு மனநிலையுடன் அனைத்தையும் கேட்டு முடித்து, அம்முவின் மரணத்திற்குப் பின் நியாயமான ஒரு காரணம் இருக்கும் என்ற நம்பிக்கையில், இறுதியாக சலனமற்ற ஒரு மனநிலைக்கு வந்திருந்தாள் மல்லி.


அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனை மட்டுமே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது . அவளது மரணத்திற்கு ஏதாவது ஒரு விதத்தில் நியாயம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் மனதில் எழுந்தது. அதன் காரணத்தை புரிந்துகொள்ள, “எனக்கு கடைசியா அம்மு பேசின அந்த வீடியோவ பார்க்கணும், தேவா” என்றாள் மரகதவல்லி. கட்டாயம் அதைப் பார்த்தே தீரவேண்டும் என்ற பிடிவாதம் அவளின் குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது.

6 Views

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page