37. புதிய பரிமாணம்
புதுப்பிக்கப்பட்டு அழகிய பொலிவுடன் திகழ்ந்த மல்லியின் கிராமத்து வீட்டிற்கு அவளை அழைத்துவந்தான் ஆதி.
வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்ததும் ஜிவ்வென்ற ஒரு உணர்வு மனதில் எழ உடல் சிலிர்த்தது மல்லிக்கு. மகிழ்ச்சியில் கண்களில் நீர் கோர்க்க ஆதியின் முகத்தைப் பார்த்தாள்.
விரிந்த புன்னகையூடே புருவத்தைத் தூக்கி, “எப்படி!” என்பது போல் அவன் அவளைப் பார்க்க, “மாம்ஸ்!” என்றவாறு அவனது கையில் நெற்றியால் முட்டியவள் அவளது கண்ணீரை அவனது சட்டையிலேயே துடைக்க, அதில் அவளுடைய கண்ணீருடன் சேர்ந்து வகிட்டில் வைத்திருந்த குங்குமமும் அவனது சட்டையில் படிந்தது.
“ஏய்! ஏண்டி இப்படி சட்டையை கறையாக்கற. இதுதான் நீ எனக்குக் கொடுக்கற ரிட்டன் கிஃப்ட்டா? நான் வேற இல்ல எதிர்பார்த்தேன்” என்று கிரக்கமான குரலில் ஆதி சொல்லிக்கொண்டே அவன், கன்னத்தையும், இதழ்களையும் சுட்டிக்காட்ட, நாணம் மேலிட தலை குனிந்தாள் மல்லி.
அப்பொழுது, வீட்டின் ரேழியில் நின்றுகொண்டிருந்த தீபன் அவர்களை நோக்கி ஓடிவந்தான். மல்லியை இடித்துத் தள்ளிவிட்டு, “தேங்யூ மாம்ஸ்” என்றவாறு ஆதியை அணைத்துக்கொள்ள, மல்லியின் காதுகளில் புகை வராத குறைதான்.
“அடப்பாவி தீபா, இங்க ஒருத்தி நிக்கறது உன் கண்ணுக்கு தெரியல? இவங்கள போய் கட்டி பிடிச்சுக்கற. இது டூ மச். இவங்க எனக்கு மட்டும்தான், மாம்ஸ்! இனிமே நீ இவங்கள அத்தான்னே கூப்பிடு” என்று தீபனிடம் சீறினாள்.


