23 - வாழ்க்கையின் அர்த்தம்!
சூர்யா குயிலி இருவரின் குடும்பத்திற்கும் நடுவிலிருந்து கமலக்கண்ணன்தான் எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருந்தார்.
வசந்தகுமாரை அழைத்து, “சரணுக்கு ஆயுஷ் ஹோமம் செய்யணும்னு அண்ணி ஆசைப்படறாங்க” என அவர் தொடங்கியதுமே, "எதுக்கு கண்ணா இப்ப இதெல்லாம், குயலி மனசுல என்ன இருக்குன்னே தெரியல. வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கா. நிதானமா உட்கார்ந்து பேசலாம்னா, அதுக்குக்கூட அவளுக்கு நேரமில்ல. அவளை இப்ப எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ண முடியாது. எல்லாத்துக்குமே கொஞ்சம் அவகாசம் வேணும்" என்று தயங்கினார் அவர்.
"தப்பா நினைச்சுக்காத வசந்தா. எங்க குடும்பத்துல எல்லாரும் சரண நேர்ல பார்க்கற ஆவல்ல இருக்காங்க. கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஒண்ணு ஏற்பாடு செய்யலன்னா தினமும் ஒவ்வொருத்தரா வந்து உன்னைத் தொந்தரவு பண்ண ஆரம்பிப்பாங்க. எப்ப யார் என்ன பேசுவாங்கன்னு ஒண்ணும் சொல்ல முடியாது. அது பிள்ளை மனசை பாதிக்கும், அதனாலதான்.
சும்மா ஒரு கெட் டூ கெதர் அப்படிங்கறத விட ஆயுஷ் ஹோமம் பண்ணலாம்னு சொல்லி ருக்கு அண்ணி சொன்னாங்க. சூர்யாவும் உடம்பு சரியில்லாம போய் பிழைச்சு வந்திருக்கான் இல்ல, அதனால ஒரு பரிகார பூஜையும் செய்யலாம்னு சொல்றாங்க. உனக்கு இதுல எல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் சில விஷயங்களை அவாய்ட் பண்ணிட்டுப் போக முடியல. மத்தவங்க இழுக்கற இழுப்புக்குப் போக வேண்டியதா இருக்கு” என அவர் அதற்கு விளக்கமும் கொடுக்க மகளிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டார் வசந்தன்.
அன்றே அழைத்து, அவள் சம்மதம் சொல்லி விட்டதாகவும் சொன்னார். ஆனால் அதன் பிறகுதான், சூர்யா குயிலி இருவரும் சேர்ந்துதான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்களுடைய பெரிய அண்ணி. கூடவே குலதெய்வ வழிபாடு என்று வேறு இழுத்து விட, ஒவ்வொன்றாக நீண்டு கொண்டே போனது. கொஞ்சம் தருமசங்கடமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவது தனது கடமை என்ற எண்ணத்தில் கமலக்கண்ணன் தன்னாலான வரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
தங்கள் குடும்பத்து வாரிசுக்காக முதன்முதலில் செய்யப்போகும் ஒரு விசேஷம் என்பதால் பெரிய திருமண மண்டபம் ஏற்பாடு செய்து தடபுடல் செய்துகொண்டிருந்தார் சிகாமணி.
சூர்யா இந்த நிலைமையில் இருக்கும்போது கூட இவர்களுடைய பேத்தி நிலாவின் மஞ்சள் நீராட்டு விழாவை வீம்பாக நடத்தி முடித்திருந்தாள் மமதியின் அம்மா, அதுவும் இவர்கள் இல்லாமலேயே. அந்தச் செலவுகளுக்கான பணத்தையும், கழுத்தில் கத்தி வைக்காதக் குறையாக சிகாமணியிடமிருந்துதான் பிடுங்கியிருந்தாள். மகன் இருக்கும் நிலையில் வேறு எந்த மன உளைச்சலும் வேண்டாம் என அவரும் அவள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டார். அந்தப் புகைச்சலை, பேரனுக்குச் செய்து அழகு பார்த்துத் தணித்துக்கொள்ள அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள் என்று கூட சொல்லலாம்.
இனிமேலாவது மருமகள் மகனுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்கிற பிரார்த்தனையும் நிறையவே இருந்தது.
மகனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறான், வழக்கம் போல அலுவலகம் போய் வருகிறான் அவ்வளவுதான். அதைத் தாண்டி சூர்யாவிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் விழா என்பதால் ருக்மணியும் சிகாமணியும் உற்சாகம் பொங்க ஓடி ஓடி எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தனர்.
குடும்பத்தில் எல்லோருக்கும் ஜவுளிகள் வாங்க, பத்திரிக்கை அடிக்கக் கொடுக்க, இன்னும் சில பல வேலைகளை வைத்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டியதாக இருக்க, சமையல் வேலைக்கு அஞ்சுவை வரச்சொல்லி என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு கணவருடன் கிளம்பிப்போய்விட்டார் ருக்மணி.
உணவு மேசையில் உட்கார்ந்து காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள் அஞ்சு. அழைப்பு மணியின் ஓசைக் கேட்டுப் போய் கதவைத் திறக்க, சூர்யாதான் அலுவலகத்திலிருந்து திரும்பியிருந்தான்.
“என்னம்மா... உன்னை வேலை செய்ய வெச்சிட்டு அம்மா கிளம்பிப் போயிட்டாங்களா?” என இயல்பாகக் கேட்டபடி அவன் உள்ளே நுழைய, உங்க வீட்டுக்காரம்மா இங்க இருந்திருந்தா என்னை ஏன் கூபிடப்போறாங்க?” என வேண்டுமென்றே அவனுடைய வாயைப் பிடுங்கினாள் அவள்.
“ஏம்மா... இங்க இருக்கறவங்க என்னை வெச்சு செய்யறது போறாதா? நீயுமா?” என அவன் அலுப்புடன் கேட்க, “என்ன நீயுமா?” என அவள் அதிலேயே நிற்க, “எனக்கு செம்ம டயர்டா இருக்கு. ஒரு காஃபி கொடு... அப்பறம் இந்தப் பஞ்சாயத்தை வெச்சுக்கலாம்” என்றபடி அவனது அறை நோக்கிப் போனவன் குளித்து உடை மாற்றி சில நிமிடங்களிலேயே திரும்ப வந்தான்.
அவனுக்கான காஃபி உணவு மேசை மேல் தயாராக இருக்க அதை எடுத்துப் பருகியபடி, “என்னையே இந்தக் கேள்வி கேட்கறியே, உன் ஃப்ரெண்டை விட்டு வேச்சிருப்பியா நீ? அங்க என்ன ரியாக்ஷன்” என ஏக்கம் ததும்ப ஆர்வமாகக் கேட்டான்,.
உணர்ந்தாலும் அதை வெளி காண்பிக்காமல், “எங்க... எனக்கும் அவளுக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்” என நொடித்தவள், “சார், இதெல்லாம் நான் அவ கிட்ட கேட்கக்கூடாது, நீங்கதான் கேட்கணும். அன்னைக்குப் பையனைப் பார்த்துட்டு வந்ததோட சரி, அப்பறம் அவ இருக்கற திசைப் பக்கமே திரும்பல நீங்க? அப்பறம் எங்க இருந்து” என அவனைக் கடிவதுபோல் சொல்ல, மீண்டும் அழைப்பு மணி ஒலித்தது.
போய் பார்த்தால், இனிப்பும் பழங்களும் அடங்கிய பையைக் கையில் ஏந்தியபடி தங்கம்தான் நின்றிருந்தாள்.
“ஹேய் வாடி... என்ன உன் காத்து திடீர்னு இந்தப் பக்கம் அடிச்சிருக்கு” என அவளை எதிர்கொண்டாள் அஞ்சு.
“இல்லடி, நம்ம கம்பனில முதல் மாச சம்பளம் வாங்கிட்டேன். சூர்யா சார் அப்பா அம்மாவைப் பார்த்து ஸ்வீட் கொடுக்கலாம்னுதான். போன வாரமே வரணும்னு பார்த்தேன், வேலை சரியா இருந்துது” என்றபடி உள்ளே நுழைந்தாள் தங்கம்.
வழக்கமான நல விசாரிப்புகளுடன் வாங்கி வந்தவற்றை சூர்யாவிடம் கொடுத்தவள், அஞ்சுவைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
“ப்ச்...” என உதட்டைச் சுழித்தாள் அஞ்சு.
“என்ன?” என்று இருவரின் முகத்தையும் அவன் பார்க்க, “போங்க சூர்யா சார் நீங்க” என அலுத்துக்கொண்டாள் அஞ்சு.
“என்னம்மா, சொன்னாதான தெரியும்?” என்று சொல்ல, “ஏன் சார் நீங்க இதுவரைக்கும் குயிலி கிட்ட பேசவே இல்ல?” என்று கடுப்பானாள் தங்கம்.
“அதுக்கான நேரம் இன்னும் வரலம்மா... ப்ச்...” என அலுத்துக்கொண்டான் சூர்யா.
“நேரமெல்லாம் தானா வராது. அதை நாமதான் ஏற்படுதிக்கணும்” எனத் தங்கம் நொடிக்க, “அப்படி சொல்லு தங்கம். அன்னைக்கு அவ கிட்ட அவ்ளோ சொல்றேன்! திரும்ப பழைய லைஃப்க்குப் போகணும்னு நினைச்சாலே போரா இருக்குன்னு சொல்றா அவ” என்றவள்
“உங்களுக்குத் தெரியுமா சூர்யா சார், எனக்கு, தோ இருக்காளே இவளுக்கெல்லாம் நிறைய படிக்கணும், கெத்தா வேலை பார்க்கணும்னு எல்லாம் எதிர்காலத்தைப் பத்தி நிறைய கனவுகள் இருந்துது.
ஆனா இந்த குயிலி லூசு இருக்கு பாருங்க அதுக்குப் பெரிய ஆசை லட்சியம் எதுவுமே கிடையாது. மனசுக்கு ரொம்ப பிடிச்சவனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும். அப்படியே காதல் சொட்ட சொட்ட குடும்பம் நடத்தணும். அவனுக்கு விதவிதமா சமைச்சு போடணும். பையன் ஒண்ணும் பொண்ணு ஒண்ணுமா பிள்ளைகளைப் பெத்துட்டு ஆசை ஆசையா வளர்க்கணும் ரொம்ப சராசரியான ஆசை மட்டும்தான். இதை அவ சொல்லும்போதெல்லாம் நானே அவளைத் திட்டித் தீர்த்திருகேன்னா பார்த்துக்கோங்க.
அப்படிபட்டவ எவ்வளவு ஆசையோட, எதிர்பார்ப்போட உங்களைக் கல்யாணம் பண்ணிட்டு இருப்பா. அவ எங்க கிட்ட எதுவும் சொல்லலன்னாலும் உங்க அம்மா பழி சொல்ற மாதிரி, உங்கப் பிரிவுக்கு நிச்சயம் அவ காரணம் இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்க லவ்” எனச் சொல்லிக்கொண்டே போனவள் தங்கத்தின் கண்டனப் பார்வையில் பட்டெனப் பேச்சை நிறுத்தினாள். சூர்யாவின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து அவளுக்குப் பரிதாபமாகிப்போனது.
தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “சரியான லூசு! இவளுக்கு எப்ப என்ன பேசணும்னே தெரியாது. நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க” எனத் தங்கம் சொல்லிக்கொண்டிருந்ததைக் காதில் வாங்கியபடியே உள்ளே போய் ஒரு குவளையில் பழரசத்தை எடுத்து வந்து அவளுடைய கையில் திணித்தவள், மீண்டும் உள்ளே சென்று குக்கர் வைத்துவிட்டு வந்தாள்.
“ப்ச்... காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொத்திட்டுப் போன கதையா ஆகிடப்போகுதேன்னு பயத்துல நான் பேசிட்டு இருக்கேன். என்ன பார்த்தால் பைத்தியம் மாதிரிதான் தோனும் உனக்கு” என அஞ்சு தங்கத்திடம் கடுப்படிக்க, என்ன சொல்கிறாள் என புரியாமல் விழித்தான் சூர்யா.
“என்னடி உளர்ற லூசு” என தங்கம் குழம்ப, “நான் லூசும் இல்ல, உளறவும் இல்ல” என அவளுக்கு பதில் கொடுத்தவள், ‘அன்னைக்கு அவ ஆஃபிஸ் ரூம்ல ஒருத்தர் இருந்தார் இல்ல அவரை உனக்கு நியாபகம் இருக்கா? அவரைப் பத்தித்தான் சொன்னேன். அன்னைக்கு நாம போன பிறகு அங்க ஒரு பத்து நிமிஷம் இருந்திருப்பாரா அந்த மனுஷன். அது வரைக்கும் அவரோட பார்வை குயிலியை விட்டு அங்க இங்க நகரல” என அஞ்சு சொல்ல, “யார சொல்ற, அந்தப் பெரியவரையா’ எனக் குழப்பமாகக் கேட்டாள் தங்கம்.
“என்ன லூசுன்னு சொல்லிடு நீ லூசு மாதிரி பேசற” என அவளை முறைத்தவள், “நம்ம பீஸ்ட் பட விஜய் மாதிரி ஸ்டைலா தலைல கொஞ்சம் தாடில கொஞ்சம் நரை முடியோட, காப்பான் பட சூர்யா மாதிரி எக்சர்சைஸ் பாடியோட கோட் சூட்டெல்லாம் போட்டுட்டு சும்மா கெத்தா ஒருத்தர் இருந்தாரே அவரு” என்றாள் அஞ்சு.
அதைக் கேட்கும்போதே 'எவன் அவன்' என்பதாகக் கடுப்பானது சூர்யாவுக்கு. ‘அடிப்பாவி, இவ சொல்றத பார்த்தா இவதான் அந்த முகிலன செமையா சைட் அடிச்சிருப்பா போலிருக்கே?’ என்று எண்ணியவள், “ஆமா, இவ சொல்ற மாதிரி ஹீரோ கணக்காதான் இருக்காரில்ல அந்த மனுஷன்’ என்று யோசிக்க, அது அவளுடைய முகத்தில் அப்படியே பிரதிபலித்தது.
அஞ்சு குறுகுறுவென அவளைப் பார்க்க, “ஏய்... எதையாவது உளறாத! அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என சூர்யாவின் வயிற்றில் பாலை வார்த்துப் பதறினாள் தங்கம்.
“என்னடி இல்ல, என்ன இல்ல?” என்றவள், “நீங்களே சொல்லுங்க சூர்யா சார், யாராவது அழுதுட்டு இருந்தாதான நாம போய் ‘மனசு கஷ்டத்துல இருக்கியா’ன்னு கேட்போம்? அந்தப் பெரியவர் சொன்ன ஜோக்குக்கு அவ பாட்டுக்குக் கெக்கபெக்கன்னு சிரிச்சிட்டு இருக்கா? அவ கிட்ட போயி ‘ஏதாவது மனசு கஷ்டத்துல இருக்கியா குயிலி’ன்னு ரொம்ப அக்கறையா கேட்கறாரு. அதை நீ கவனிக்கவே இல்லையா” என அவன் சொன்னதைப் போலவே பாவனையுடன் சொல்ல, தங்கத்துக்குச் சிரிப்பே வந்துவிட்டது.
உண்மையில் குயிலியின் மனநிலையை உணர்ந்துதான் முகிலன் அப்படிக் கேட்டான் என்பதைப் பெண்கள் இருவரும் உணரவில்லையே தவிர சூர்யாவுக்கு அது புரிந்துவிட்டது.
“இதெல்லாம் எப்ப நடந்தது அஞ்சு” என அவன் தீவிரமாகக் கேட்க, “நீங்க அவங்க வீட்டுக்குப் போயிருந்தீங்க இல்ல, அன்னைக்குதான்” என்றாள்.
வெளியில் தன்னை அழுத்தமாகக் காண்பித்துக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே மறுகுகிறாளோ என அன்றே அவனது மனதில் நெருடியது.
“இல்ல அஞ்சு, மனசுல கஷ்டத்தை வெச்சிட்டு வெளியில காட்டிக்காம இருக்காங்க இல்ல அவங்க கிட்ட போய் ஒரு சின்ன ஜோக் சொன்னாக் கூட, அப்படி சிரிப்பாங்க! அன்னைக்குப் பிள்ளையை என் கிட்ட விட்டுட்டு உள்ளுக்குள்ள வேதனையோடதான் ஹோட்டலுக்கு வந்திருப்பா!” என அவளை உணர்ந்து வருந்தினான் சூர்யா.
“தெரியுது இல்ல, அதை நீங்கதான் சரி செய்யணும். அவ மனசு ரொம்ப காயப்பட்டுப் போயிருக்கு. காசு பணத்துக்கோ, வேற எதுக்கோ அவளுக்குக் குறைச்சல் கிடையாது. ஒரு துணைக்காகவோ இல்ல ஒரு பாதுகாப்புக்காகவோ இல்ல வேற எந்த ஒரு தேவைக்காகவும் அவ உங்கள தேடமாட்டா. அந்தளவுக்கு அவ ஸ்ட்ராங். அன்பையும் நம்பிக்கையும் மட்டும் கொடுங்க போதும். அப்பதான் அவளோட அன்பு உங்களுக்குக் கிடைக்கும். உங்க கைலதான் இருக்கு. நீங்க இப்படி யோசிச்சிட்டு இருந்தீங்கன்னா, இந்த சூரியனை மேகம் மூடிடும்” என எச்சரிக்கும் விதமாக அஞ்சு சொல்ல, “இப்பதான் உருப்படியா ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்க அஞ்சு” என அவளுக்கு ஒத்து ஊதினாள் தங்கம்.
அப்பொழுது மேசை மேலிருந்த அவனது செல்ஃபோன் ஒளிர்ந்து அவனுக்கு அழைப்பு வருவதாகச் சொன்னது அதுவும் குயிலி சரணுடன் அவன் இணைந்திருக்கும் படத்துடன். "இந்த சம்பவமெல்லாம் கூட நடந்திருக்கா?" என அஞ்சு முணுமுணுக்க, மூண்ட சிரிப்பை அடக்குவதற்குள் போதும் போதும் என்று ஆனது தங்கத்துக்கு.
சரண் வீடியோ காலில் வரவும் அவனது முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது. அப்பாவின் முகத்தைப் பார்த்த நொடி, “லவ் யூ ப்பா... ஆஃபிஸ்ல இருந்து வந்துட்டீங்களா” என்றுதான் தொடங்கினான் அவன்.
“லவ் யூ டா செல்லம். தோ வீட்டுல தான் இருக்கேன். இங்க பாரு இங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு” என மகனுக்குப் பதில் சொல்லும்போது அவனுடைய குரல் குழைந்து கொஞ்சியது.
மற்ற இருவருக்கும் ஒரு “ஹாய் ஆன்ட்டி” சொன்னதுடன் சரி, அதற்குப் பின் அவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை சரண்.
அன்றைய பொழுதுக்கு அப்பாவிடம் சொல்ல நிறைய சங்கதிகள் அவனிடம் இருந்தது. அடுத்து, அவர்கள் சொந்த ஊருக்குச் செல்வது பற்றிய நிறையக் கேள்விகளும் இருந்தன. குயிலி அவர்களுடன் வராதது குறித்தும் அதிகம் குறைபட்டுக்கொண்டான். பின்னாலிருந்து கற்பகம் ஏதோ சொல்வதும் தெரிந்தது. ஆனால் பேச்சு சுவாரஸ்யத்தில் இருவரின் கவனமும் அதில் இல்லவே இல்லை.
‘எப்படா முடிப்பாங்க’ என வீட்டிற்குச் சீக்கிரம் செல்ல வேண்டுமே என்கிற கவலையுடன் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள் தங்கம். அவர்கள் இருவரும் பேசி அழைப்பைத் துண்டித்த போது அஞ்சு சமையலையே முடித்திருந்தாள். நேரம் ஆனதால் இருவரும் விடைப்பெற்றுக் கிளம்பினர்.
மகனிடம் பேசி முடித்தப் பிறகு அவனையும் குயிலியையும் தவிர வேறெதுவுமே அவனுடைய நினைவில் இல்லை.
நிலாவை நினைத்து நினைத்தே அவன் குயிலியை நெருங்கத் தயங்கி நிற்கிறான். பிரிந்து சென்ற பின் மமதி என்பவள் அவனது வாழ்க்கைக்குள் வரவே இல்லை என்றாலும் நிலாவைக் கொண்டு மமதியின் அம்மா கொடுக்கும் தொல்லைகள் சகிக்க முடியாத அளவுக்கு அதிகம்தான். அது இனி தொடர்ந்தால் குயிலியுடனான உறவுக்குள் அதிக சிக்கல்களைக் கொண்டு வரும்.
தன்னையும் அறியாமல் சரணையும் நிலவையும் ஒப்பிட்டுப் பார்த்தது மனம்.
தொடக்கத்தில், எங்கே நிலாவின் மனதில் பதிந்திருப்பது போல இவன் மனதுக்குள்ளும் தன்னைப் பற்றிய தவறான ஒரு பிம்பம் பதிந்திருக்குமோ என்கிற பயம் அவனுக்கு அதிகமாகவே இருந்தது. நேரில் பார்த்த பிறகு அது சற்று மட்டுப்பட்டாலும் முழுதாக விலகவில்லை.
அன்று சரணை முதன்முதல் நேரில் பார்த்த தினம், பேசி முடித்து இவர்கள் கிளம்பும் தருவாயில் மகனுக்கு எதிரே மண்டியிட்டு நின்றவன், “சாரி... அப்பாவை மன்னிச்சிடு செல்லம். அப்பாவைக் கெட்டவன்னு மட்டும் நினைச்சிடாத. என்னோட... (தவறான முடிவுகளால் உனக்குப் பெரிய அநீதியை இழைத்துவிட்டேன்) எனக்கு... (நீ பிறந்தது பற்றித் தெரியவே தெரியாது) உன்னை... (இப்படி தனியா வளர விட்டுவிட்டேன்) உன்... (கூடவே நான் இருந்திருக்கணும்)” என ஏதேதோ சொல்ல வந்து வார்தைகளற்று அவன் தழுதழுக்க, “ப்பா... ஏன் சாரிலாம் கேட்கறீங்க. நீங்க ரொம்ப நல்லவங்கன்னு அம்மா சொல்லியிருக்காங்க. அம்மாக்கு லண்டன்ல ஜாப் கிடைச்சதால அங்கப் போயிட்டாங்க. இல்லன்னா நீங்க எங்க கூட இருந்திருப்பீங்கன்னு சொன்னாங்க. ஃபாரின் கன்ட்ரீஸ்க்கு வேலைக்குப் போற நிறைய அப்பா அவங்க ஃபேமிலி கூட, கிட்ஸ் கூட சேர்ந்து இருக்க மாட்டாங்களாமே. தாத்தா சொல்லியிருக்காங்க. ஸோ... நத்திங் ராங்!” எனப் பெரிய மனிதனாக அவன் கொடுத்த பதிலில் நெகிழ்ந்துபோய் மகனை அப்படியே அணைத்துக்கொண்டான். மனதை அறுத்துக் கொண்டிருந்த பயமும் வேரோடு நீங்கிப்போனது.
குயிலியை 'இப்படிக் கூட ஒரு பெண் இருப்பாளா?' என்றுதான் அவனுக்கு வியப்பானது.
ஏற்கனவே அவளுக்குக் கொடுத்த தொல்லைகளே மன்னிப்புக்கு அப்பாற்பட்டது. இதில் இப்பொழுது மீண்டும் அவளது வாழ்க்கையில் தானும் நுழைந்து மறைமுகமாக நிலாவையும் அவள் மீது திணிக்க அவனது மனம் இடங்கொடுக்கவில்லை. ஆனால் மேலும் மேலும் தாமதம் செய்யப்போய் மீண்டும் குயிலியை இழக்கும் சூழல் உண்டாகிப்போனால் அவனது வாழ்க்கையே அர்த்தமற்றதாகிவிடும் என்ற எண்ணம் தோன்ற அவனது தயக்கமெல்லாம் தூர ஓடிப்போனது. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் சரணிடம் பூசி மெழுகி எதையும் நியாயப்படுத்த இயலாது. அனைத்தையும் சீர் செய்ய, தக்க தருணம் இதை விட்டால் வேறு அமையாது. எனவே நிலாவை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்க என்ன செய்யலாம் என்பது மட்டுமே அவனது ஒரே கேள்வியாக இருந்தது.
Superji
finally Surya starts action