top of page

Valasai Pogum Paravaikalaai - 5

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

5

வசந்தம்


வசந்தகுமார் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். பிறந்த உடனேயே குப்பையோடு குப்பையாகத் தூக்கி வீசப்பட்ட அவருக்கு ஒரு தொண்டு இல்லம் அடைக்கலம் கொடுத்தது. ஆரம்பக்கல்வி வரை அங்கேயே கிடைத்துவிட அதன் பிறகு அவர் போராடி தன் தகுதியை வளர்த்துக்கொண்டார்.

அந்தத் தொண்டு நிறுவனத்தின் நடைமுறைப்படி பதினெட்டு வயதானதும் தற்காலிகமாக ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவர் வெளியில் வந்துவிட, அதன் பிறகு அவர் தங்கியிருந்தது சென்னை சைதாப்பேட்டையிலிருந்த ஒரு மேன்ஷனில்தான்.


தண்ணீர் பிடிக்கவென வெளியில் வரும்பொழுது அறிமுகமாகி எதார்த்தமாக ஏற்படும் ஒரு ஈர்ப்பினால் வலியப்போய் கற்பகத்திடம் பேச்சுக் கொடுக்கப் போக அவரிடமும் ஒரு இணக்கம் தெரியவும் அது முற்றிப்போய் காதலாகக் கனிந்தது.


ஒரு வெறியுடன் அவர் தன் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள அந்தக் காதலே காரணமாகவும் ஆகிப்போனது.


அன்றைய தினத்தில் அப்பா தவறிப்போயிருக்க அம்மா மட்டுமே கற்பகத்துக்கு. ஆணும் பெண்ணுமாக அரை டசன் பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி.


சொந்த வீடு என்ற ஒன்றைத் தவிரப் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி சேமிப்பு எதுவும் இல்லை. உடன் பிறந்தவர்களெல்லாம் திருமணமாகி அவரவர் வாழ்கையை அவரவர் பார்த்துக்கொள்ள அவரை அதிகம் படிக்க வைக்கக் கூட யாரும் முயற்சியெடுக்கவில்லை.


அரசு வேலையுடன் ஒருவன் வந்து உங்கள் பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்லவும் அவர்களிடமிருந்து ஊசி முனை மறுப்பு கூட கிளம்பவில்லை. கற்பகத்தின் அம்மா வசந்தகுமாரிடம் மகளின் கையைப் பிடித்துக் கொடுத்துவிட்டார்.


அவருடைய முதல் பணி நியமனம் விழுப்புரம் அருகில் ஏதோ ஒரு கிராமத்தில் போடப்பட்டிருக்க, திருமணம் முடிந்து அங்கேதான் வாழ்கையைத் தொடங்கினர்.


திருமணம் முடிந்ததும் முதல் காரியமாக மனைவியைப் படிக்க வைக்கும் முயற்சியில்தான் இறங்கினார் வசந்தன்.


தூசுத் தும்பில்லாமல் வீட்டைப் பராமரிப்பதிலும் விதவிதமாகச் சமையல் செய்து கணவனின் வயிற்றை நிரப்புவதிலும் இருக்கும் ஆர்வம் கற்பகத்துக்குத் துளி அளவு கூட படிப்பில் இல்லாமல் போனது.


வசந்தன் ஆனவரை முட்டி மோதியதுதான் மிச்சம். மனைவியிடம் அவருடைய ஆசிரியர் வேலை ஒன்றும் செல்லுபடி ஆகவில்லை. ஒரு நிலையில் அவரே சலித்துப்போய் விட்டுவிட்டார்.


அதன் பிறகு அவர்களுடைய காதல் வாழ்க்கையின் பரிசாய் குயிலி பிறந்தாள். அவள் வளர வளர அவர்களுடைய வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாக ஆனது.


அரசுப்பள்ளியில் சேர்ந்து தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்கள் எந்தவிதத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்ற எண்ணத்துடன் தன் மகளைத் தனித்து அடையாளம் காண்பிக்க விரும்பாமல் தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவளைப் படிக்க வைத்தார் வசந்தன்.


ஒரு பக்கம் இப்படிப் போக, மற்றொரு பக்கம் தன் சுற்றுப்புறத்தில் தான் வேலை செய்யும் பள்ளியில் என தன் கண்ணுக்கு எதிரில் நடக்கும் சிறு சிறு அநியாயங்களைக் கூட பொறுக்க முடியாமல் வசந்தன் எதிர்த்துக் கேள்வி கேட்கத் தொடங்கவும் பணியிட மாறுதல் என்பது அவருடைய வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிப்போனது.


*********


பூஞ்சிட்டுநல்லூர் எனும் சிறு கிராமத்தில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக அவரது வாசம்.


அது வானம் பார்த்த பூமிதான். அந்த ஊர் மக்கள் விவசாயத்தை விட்டு விலகி மாற்றுத் தொழில்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.


இருப்பதென்னவோ வெறும் எழுபது எண்பது குடும்பங்கள்தான் என்றாலும் ஆயிரத்தெட்டு ஜாதி, இனப் பேதங்கள் அந்த ஊருக்குள்ளே தலை விரித்து ஆடியது. ஒவ்வொன்றிலும் தலைக் கொடுத்துச் சிக்கிச் சின்னபின்னப் பட்டாலும் அனைத்திற்கும் ஈடுகொடுத்துப் போய்க்கொண்டிருந்தார். குறிப்பாக, அங்கே வெகு சகஜமாக நடந்தேறிய குழந்தைத் திருமணத்தை முழு மூச்சாக எதிர்த்து நின்றார்.


பெண் குழந்தைகள் வயதிற்கு வந்த கையுடன் துரிதமாக ஒரு வரனைப் பார்த்து திருமணத்தை முடித்துவிடுவது அந்த ஊராரின் வழக்கம். வயது வந்தப் பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதென்பது அவர்களுக்கு அவ்வளவு தன்மானக் குறைவு.


வசந்தன் அந்த ஊருக்கு வந்தப் பிறகு அதனை அவர் முழுமூச்சாக எதிர்த்து நிற்க, அந்த ஊர் மக்களுக்கு விரோதியாகவும் படிப்பில் அதிக நாட்டம் உள்ள பெண் பிள்ளைகளுக்குக் குலதெய்வமாகவும் ஆகிப்போனார்.


இத்தோடல்லாமல் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பிள்ளைகளையும், குறிப்பாக சில நரிக்குறவர் இனப் பிள்ளைகளைக் கட்டி இழுத்து வந்து படிக்க வைத்தார்.


பொதுவாக அவர்கள் இந்த ஊர் பள்ளியைத் தேடி வரவே மாட்டார்கள். தப்பித்தவறி வந்தாலும் கூட ஓரிரண்டு மாதங்களுக்கு மேல் இங்கே இவர்கள் கொடுக்கும் குடைச்சல் தாக்குப்பிடிக்க முடியாமல் தாழ்வு மனப்பான்மையில் மனம் புழுங்கித் தங்கள் வாழ்க்கை முறைக்கே ஓடிப் போய்விடுவார்கள்.


ஆனால் இவர் வந்தப் பிறகு அவர்களை விடாமல் பிடித்து வைத்து கல்வி கற்க வைத்தார். அப்படிச் சேர்ந்த பிள்ளைகளில் ஒரு சிறுமி ஐந்தாம் வகுப்பிலும் மற்றொரு பையன் ஏழாம் வகுப்பிலும் படிகிறார்கள்.


இதெல்லாம் அங்கே யாருக்கும் ரசிக்கவில்லை.


*********


அஞ்சுகம், தங்கம், குயிலி மூவருமே ஒரே வகுப்பில்தான் படிகிறார்கள். மூவருக்குள்ளும் ஐந்தாம் வகுப்பில் தொடங்கிய நட்பு உயிரோடு உயிராகப் பின்னிப் பிணைந்து என்றும் அழியா கல்வெட்டாகப் பதிந்துதான் போனது.


அந்த ஊரிலேயே வசதி படைத்த பண்ணையக்காரர் மாசிலாமணியின் மகள் என்பதைத் தாண்டி தங்கத்தைப் பற்றிச் சொல்லப் பெரிதாக எதுவும் இல்லை.


எப்படியும் அரைகுறைப் படிப்புடன் நிறுத்திவிட்டு ஒரு முரடனை தன் தலையில் கட்டத்தான் போகிறார்கள் எனும் சலிப்பில் தங்கம் அலட்சியம் காண்பிக்க ஏதோ சுமாராகப் படித்துவிடுவாள். ஆனாலும் அதீத ஆர்வம் காரணமாக விளையாட்டுப் போட்டிகளில் அவள்தான் முதல் இடத்தில் இருப்பாள்.


*********


அந்த ஊரின் சலவைத் தொழிலாளி பச்சையப்பனின் மகள்தான் அஞ்சுகம்.


அதுவே குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட கிராமம் என்பதனால் அவர்களுக்குப் பெரிதாக வருமானம் இல்லை. அறுவடை சமயத்தில் பயிர் வைப்பவர்கள் ஊர் பொதுவில் கொடுக்கும் நெல்லையும், ஏதாவது இழவு விழுந்தால் இறுதி ஊர்வலத்தில் இவர்கள் போடும் சேலை மரியாதைக்கு காணிக்கையாக ஐம்பது நூறு என அவர்கள் பார்த்துக் கொடுக்கும் காசையும் வைத்துக்கொண்டு அரை வயிற்றைக் கூட நிரப்ப இயலாது.


அதுவும் அஞ்சுவுடன் சேர்த்து நான்கு பிள்ளைகளை வஞ்சனையில்லாமல் பெற்றுப்போட்டதால், வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களும் பற்றாக்குறைதான்.


பிள்ளைகளைப் பட்டினியிலிருந்து காக்கும் பொருட்டு பச்சையப்பனும் அவன் மனைவி அன்னம்மாளும் தினமும் இரவில் போய் கையேந்தி ஊர் மக்கள் கொடுக்கும் கூழோ சோறோ, அதை வாங்கி வந்து அன்றாட வயிற்றுப்பாட்டைப் பார்ப்பார்கள்.


மூன்று ஆண்டுகளுக்கு முன் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறையில் மனைவி மற்றும் மகளுடன் வசந்தன் சுற்றலா சென்றிருந்த சமயமாகப் பார்த்து, திரும்பி வந்தப் பிறகும் கூட அவரால் எதுவும் செய்ய இயலாத நிலையில் பதினைந்து வயதே ஆன அஞ்சுவுடைய அக்காவைப் பக்கத்து ஊரிலேயே திருமணம் செய்து அனுப்பிவிட்டனர்.


அதன் பின் நாட்களில், இடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாய் அவளுக்கு இங்கேதான் வாசம். இலவச இணைப்பாக அவளுடைய கணவனும் இங்கேயே வந்து உட்கார்ந்துகொள்ள, அந்த அரை வயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் போனது. அதுவும் அந்தப் பத்திற்குப் பத்து குடிசையில் இத்தனை பேருடன் எப்படிதான் புழங்குகிறார்களோ என்றுதான் பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.


படிப்பின் வாடை படவும் இதையெல்லாம் பார்த்து தன்மான உணர்வு அதிகம் தலைத்தூக்க ஆரம்பிக்க, அஞ்சுவுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வரும். இதுவே, நல்லப் படிப்பு படித்து மேலேறி வரவேண்டுமென்ற ஒருவித வைராக்கியத்தை அவளுக்குள் உருவாக்கியது. அதன் காரணமாகப் படிப்பில் அதிக ஈடுபாடு உண்டாகிப்போக வகுப்பிலேயே முதல் மாணவி அவளாகதான் இருந்தாள்.


*********


குயிலியைப் பற்றிச் சொல்வதென்றால் ஒரு விதத்தில் அவளும் அவளுடைய அம்மாவைப் போலவேதான்.


’வாத்தியார் பிள்ளை மக்கு’ என்கிற பழமொழியை மெய்ப்பித்தாள். தகப்பன் கணக்கிலும் அறிவியலிலும் புலி என்றால், குட்டிப் புலியோ கணக்குப் பாடத்தில் புல்லைத்தின்று அறிவியல் பயில தலையால் தண்ணீர் குடித்தது.


யாருக்கு என்ன வருகிறதோ அதைச் செய்தால் போதும் என அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் ‘எப்படியோ போ!’ என மனைவியை விட்டது போல அவரால் மகளை விட முடியுமா என்ன? ஓரளவுக்கு இழுத்துப்பிடித்துப் படிக்க வைத்தார். அவளும் சுமாராகப் படித்துத் தேறிக் கொண்டிருந்தாள்.


அவளுடைய உயிருக்கு உயிரான தோழியர் என்கிற முறையில் தங்கம், அஞ்சுகம் இருவரும் சேர்ந்து கொண்டு படிப்பைக் காரணம் காட்டிப் பெரும்பாலான நேரங்கள் இங்கேதான் இருப்பார்கள்.


இருவரும் மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்குப் போய் புத்தகப் பையை வீசிவிட்டு நேரே இங்கே வந்துவிடுவார்கள்.


தினமும் விதவிதமாகப் பலகாரங்கள் செய்து அசத்துவார் கற்பகம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தால் மனைவியின் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருப்பார் வசந்தன். இந்த உலகத்திலேயே அவருக்கே அவருக்கென்று அமைந்த முதல் உறவல்லவா அவள்! அதுதான் காரணம்.


கணவன் துணையுடன் வேலை செய்வதால் கற்பகத்துக்கு எந்த ஒரு சிரமும் இருக்காது. விடுமுறை நாள் என்றாலோ மனைவியைச் சமையலறைக்குள்ளேயே நுழையவிடமாட்டார் மனிதர். ஆரம்ப காலத்தில் தனியாகச் சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்த பழக்கம்தான் காரணம்.


இதையெல்லாம் பார்த்து தோழியர் இருவரும் வேறு அவர்கள் புகழைப் பாடவும் அம்மா அப்பாவை எண்ணி குயிலிக்கு அப்படி ஒரு பெருமிதம். வாழ்ந்தால் அவர்களைப் போல வாழ வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.


விடுமுறை சமயங்களில் எங்காவது போய் கூடை நிறைய மருதாணியைப் பறித்து அள்ளி வந்து மூன்று பேருமாகச் சேர்ந்து உரலிலிட்டு கையில் படாமல் கரண்டியால் தள்ளிக்கொண்டே மாங்குமாங்கென்று அரைத்து முடிப்பார்கள்.


அதை அவர்களுடைய கை கால்கள் முழுவதும் அப்பி விடுவதுடன் ஆசை ஆசையாக தானும் வைத்துக்கொள்வார் கற்பகம். எல்லாம் முடிந்ததும் அவருடைய இடது கையில் மருதாணியை வைத்து முடித்து வைப்பார் வசந்தன். அதன் பின் இங்கே அரிக்கிறது அங்கே கொசு கடிக்கிறது எனக் கைகளை நீட்டி அவர்கள் படுத்தும் பாட்டிற்கும் கொஞ்சமும் சுணங்காமல் சீப்பை வைத்து வருடிக்கொண்டிருப்பார் அவர்.


அவர்கள் ஊர்ப் பக்கமெல்லாம் மருதாணி இலையை அழவணம் என்று சொல்லுவார்கள். மருதாணியைக் கையில் வைத்துக்கொண்டால் அது அழியும் வரை அழுதுகொண்டே இருப்பார்கள் என்ற ஒரு மூட நம்பிக்கையும் அங்கே உண்டு என்பதால் தங்கத்துக்கு வீட்டில் சரியான மண்டகப்படி காத்திருக்கும்.


அம்மா மட்டுமில்லை அண்ணிகளின் கெடுபிடிக்கும் பயந்து பட்டும் படாமல் கையைக் கழுவிக்கொண்டு தங்கம் மட்டும் எப்பொழுதுமே நேரத்துடன் கிளம்பிவிடுவாள், அதுவும் மனமே இல்லாமல்தான்.


அதன் பிறகு இரவு உணவைப் பிசைந்து மற்ற மூவருக்கும் ஊட்டி விடுவார் வசந்தன். வயிறு காயாமல் மகள் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்கிற ஒரே நிம்மதியில் அஞ்சுவை அவர்கள் கண்டுகொள்ளாமல் போக அவர்கள் வீட்டிலேயே படுத்து உறங்கியும் போவாள் அவள்.


மற்றவர் பார்வைக்கு அதெல்லாம் கேலிக் கூத்தாக இருந்தாலும் அதையெல்லாம் மூளைக்குள்ளேயே கொண்டுபோக மாட்டார் வசந்தன்.


சமீப காலமாக அதிலும் ஒரு சிக்கல் உருவாகியிருந்தது. அதாவது அஞ்சுகம் இங்கே இருப்பதால் அவர்கள் ஜாதியைக் காரணம் காட்டி தங்கத்தை அவர்கள் வீட்டிற்கு அனுப்புவதையே தவிர்த்தனர் அவளுடைய பெற்றோர்.


முன்பு போல அவள் வீட்டிற்கு வருவதில்லையே எனப் பள்ளியில் இருக்கும்போது குயிலி குறைபட்டுக்கொள்ள, “நான் அஞ்சுவ தொட்டுக் கட்டிப்பிடிச்சுப் பழகறது வீட்டுல யாருக்குமே பிடிக்கலடீ குக்கூ! உங்க வீட்டுக்கு வரதுனாலதான் எனக்கு ஊர் வழக்கமே தெரியலன்னு சொல்லிப் பெரிய அண்ணி திட்டித் தீர்க்கறாங்க. அப்பாவும் அண்ணனும் அவங்களுக்குதான் ஃபுல் சப்போர்ட்டு. அவங்கள மீறி அம்மாவால வாயே திறக்க முடியல. கேட்டா அண்ணனுங்கதான் உன்னை காலத்துக்கும் பார்த்துக்கணும். அதனால அவங்க பேச்சைக் கேட்டு நடன்னு சொல்றாங்க. கூடவே உங்க அப்பா அம்மாவையும் ஜாதி கெட்டவங்கன்னு சொல்லி அண்ணனுங்க கேவலமா பேசறாங்கடீ. சாரையும் கற்பகம் அம்மாவையும் போய் அப்படி சொன்னா என்னால தாங்கிக்க முடியுமா சொல்லு? நான் அங்க வரதால உங்க அப்பா அம்மாவுக்கு ஏன் இந்தக் கேவலம் சொல்லு” என அவள் கண்ணீர்விட்டே அழுதிருக்கிறாள்.


அதை அப்படியே வந்து வீட்டில் சொன்னாள் குயிலி.


தங்கம் பூப்படைந்ததும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஊரின் நடைமுறை படி பெண் பிள்ளைகள் பூப்படைந்ததும் அவர்களைப் பள்ளியை விட்டே நிறுத்திவிடுவார்கள். அதற்கு வசந்தகுமார் குறுக்கே நிற்பதால் சமீபமாக அந்த வாடிக்கை மாறியிருக்கிறது. ஆனாலும் அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எல்லோரும் ஆளாளுக்கு உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டேதான் இருந்தார்கள். குறிப்பாக மாசிலாமணி, அதாவது தங்கத்தின் அப்பா.


அவருக்கு மூன்று மகன்கள். கடைசியாகதான் தங்கம். அவருடைய மூத்த மருமகளின் தம்பிக்கே அவளைக் கொடுக்க முடிவாகியிருக்க, வசந்தகுமார் தடைபோட்டு நிற்பதால் மூன்று வருடங்கள் அதைத் தள்ளிப்போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர். அவருக்கு அது அப்படி ஒரு ஆத்திரத்தைக் கொடுத்தது. வசந்தகுமாரைச் சிக்க வைக்கச் சரியான நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் அவர். அவருக்கு அப்படி ஒரு சந்தர்ப்பமும் விபரீதமாக கை சேர்ந்தது.


*********

2 comments

2 comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
Sumathi Siva
Sumathi Siva
27 ago 2022

Wow excellent

Me gusta
Contestando a

thank you

Me gusta
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page