top of page

TIK-23

இதயம்-23

மல்லி தூங்குகிறாள் என்று நினைத்து சத்தம் எழுப்பாமல், ஆதி குளியல் அறையில் புகுந்து கொண்டதால் அவன் அங்கே வந்ததையே அறியவில்லை மல்லி. அவன் குளித்து, முடித்து அவள் அருகில் வந்து உட்காரவும் அந்த மெல்லிய அதிர்விலும், அவனிடமிருந்து எழுந்த குளியல் சோப்பின் மணத்திலும், கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த மல்லி அவன் வரவை உணர்ந்து திடுக்கிட்டு முகத்தைத் துடைத்தவாறே எழுந்து அமர, அழுது சிவந்திருந்த அவளது முகத்தைப் பார்த்தவாறு, “என்னாச்சு மல்லி? மறுபடியும் கனவு கண்டியா?” என்று கேட்டவாறு ஆதி அவளது நெற்றியில் கை வைத்துப் பார்க்கவும், களைத்து வந்திருப்பவனிடம் எதையாவது பேசி அவனது மனநிலையைக் கெடுக்க வேண்டாம் என எண்ணியவன் என்ன சொல்வது என்று புரியாமல் பொதுவாகத் தலையை ஆட்டி வைத்தாள். பிறகு நேரத்தைப் பார்க்க மணி பதினொன்றைத் தொட்டிருக்கவும், “ஐயோ! ரொம்ப நேரம் ஆகிவிட்டதே… என்ன சாப்பிடுறீங்க இட்லி எடுத்துட்டு வரட்டுமா?” என மல்லி கேட்க, “ராணிம்மா கிட்ட சொல்லிட்டேன்… இட்லி அனுப்பிட்டாங்க…” என ஆதி சொல்லவும், வெளியில் சென்று உணவு டிரேவை எடுத்து வந்தாள் மல்லி. சாப்பிட்டுக்கொண்டே, “கண்களெல்லாம் இப்படி வீங்கியிருக்கு ஏன் அழுத மல்லி?” என அவன் மறுபடி கேட்கவும், அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்த மல்லி, “நீங்க ஏன் மாம்ஸ் உங்க ஸ்டேட்டசுக்கு தகுந்த பெண்ணை தேர்ந்தெடுக்காமல் என்னைக் கல்யாணம் பண்ணிங்க?” எனக் கேட்கவும், திடுக்கிட்டவன், “உன்னுடைய இந்தக் கேள்விக்கான பதிலை, நான் உனக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சொல்லிவிட்டேன் மல்லி! அதுக்குள்ள மறந்துட்டியா?” என்றான் ஆதி அழுத்தமான குரலில். “மல்லியை மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறேன்” என்று ஆதி அன்று சொன்னது மல்லிக்கு நினைவில் வர, குற்ற உணர்ச்சியில் அவளது விழிகள் தானாகவே தாழ்ந்தது ஆனாலும், “அதுதான் ஏன்?” என்றவள், “உங்களுக்கு ஏற்கனவே கயல் பெரியம்மா வழியில் ஒரு பெண்ணுடன் கல்யாணம் முடிவாகி இருந்ததுதானே? அம்மு இறந்ததும் அதை நீங்கதான் நிறுத்தினீங்கன்னு சொன்னாங்களே! அதனால அம்முவின் அந்த போட்டோவை பார்த்த பிறகுதான் என்னை மணக்கும் முடிவுக்கு வந்தீங்களோன்னு தோன்றியது?” என அவள் மனதில் உள்ளதை மறைக்காமல் சொன்னாள் மல்லி. ஆதியின் முகம் இறுகிப்போய் கண்கள் கோபத்தில் சிவந்தது. “அத்தையும் சித்தியும் உன்னை ஏதாவது சொன்னாங்களா? நான் உன்னைக் கீழே போகவேண்டாம்னு சொன்னேன் இல்லையா? ஏன் போன?” என அவன் அடிக்குரலில் சீறவும், “இல்ல... இல்ல... நான் கீழே போகல! இங்க பால்கனிலதான் உட்கார்ந்திருந்தேன். “சின்ன அத்தையும், பெரியம்மாவும் ஸ்விமிங் பூல் பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருந்தாங்க! இந்த இடம் அமைதியாக இருக்கவே அவங்க பேசியது எனக்கு நன்றாகவே காதில் விழுந்தது” என்று கூறிவிட்டு. “சாரி நான் அதை கவனித்துக் கேட்டதும் தப்புதான்!” என்ற மல்லி அவர்கள் பேசியதை, முழுவதுமாக ஆதியிடம் சொல்லத்தொடங்கினாள். பால்கனி கூடை ஊஞ்சலில் உட்கார்ந்து, கைப்பேசியில் எதையோ படித்துக்கொண்டிருந்தாள் மல்லி. கீழே நீச்சல் குளம் அருகே எதோ அரவம் கேட்கவும் அவள் எட்டிப்பார்க்க, கயலும் சுலோச்சனாவும் எதோ பேசிக்கொண்டே அங்கே போடப்பட்டிருந்த லவுஞ்சில் வந்து உட்கார்ந்தனர். பொதுவாக லட்சுமியோ வரதனோ அங்கே வருவதில்லை. ஆதி மட்டும் நேரம் கிடைக்கும்பொழுது அங்கே நீந்துவான் என்று லட்சுமி ஒருமுறை சொல்லியிருக்கிறார். அவர்கள் அங்கே உட்காரவும் முதலில் அதை விநோதமாகப் பார்த்தவள், பின்பு அதை கண்டுகொள்ளாமல் கைப்பேசியில் மூழ்கியிருந்தாள் மல்லி. ஆனால் திடீரென்று மல்லியின் பெயர் அவர்களிடம் அடிப்படவும், ஆர்வத்துடன் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என அவள் கவனிக்கத் தொடங்கினாள். சுலோச்சனாதான், “இன்னும் இங்கே வந்து முழுசா பத்து பதினைந்து நாள் கூட ஆகல. ஆனா இந்த லட்சுமி அக்கா என்னடான்னா மல்லி மல்லின்னு நொடிக்கு நூறு மல்லி கூப்பிடுறாங்க” என அலுத்துக்கொண்டார். “அண்ணிக்கு என்ன; அவங்களை மாதிரியே ஒண்ணும் இல்லாத இடத்திலிருந்து மருமகளை எடுத்தது இப்படிக் கூப்பிட்ட உடனே ஓடி வருவதற்குத்தானே!” என கயல் எள்ளலாகச் சொல்லவும், “இல்லையா பின்னே! உங்க மூத்தார் பெண்ணைத்தானே முதலில் ஆதிக்கு பேசினாங்க. அவனுக்குமே பிடிச்சிப்போனதாலதானே நிச்சயம் செய்ய நாள் குறிச்சோம். இந்த அம்மு பொண்ணு செத்துப்போன துக்கத்துலதானே, ஆதி அந்தக் கல்யாணத்தை நிறுத்தினான்! அதற்குப் பிறகும் கூட, இவனுடைய தொழில் வளர வளர இன்னும் எவ்வளவு பெரிய இடத்திலிருந்தெல்லாம் பெண் கொடுக்க வந்தாங்க. ஏதேதோ சொல்லி ஆதிதான் தட்டிக்கழிச்சிட்டே இருந்தான். திடீர்னு இந்தப் பெண்ணை எப்படி அவனுக்கு பிடிச்சதுன்னுதான் புரியல” என அவர் அடுக்கடுக்காகச் சொல்லவும், அதிர்ந்தாள் மல்லி. ‘ஆதிக்கு அந்தப் பெண்ணை பிடித்திருந்தது!’ என்ற வார்த்தையே அவளை நோகச் செய்ய போதுமானதாக இருந்தது. அடுத்து, “எங்க மூத்தார் எவ்ளோ பெரிய ஆளு ஹ்ம்ம்! எங்க அனு மட்டும் இங்கே மருமகளா வந்திருந்தா, ஆதி நம்மகிட்ட இப்படி அலட்சியமாக நடந்துப்பானா என்ன? இல்ல அண்ணனும்தான் இப்படி விட்டேத்தியா இருப்பாங்களா? அண்ணி முன்னல்லாம் எப்படி இருந்தாங்க; இப்ப எப்படி இருக்காங்க பார்த்தியா! ஹ்ம்ம்” என ஒரு நெடிய மூச்சுடன் முடித்தார் கயல். “அப்படி என்ன இந்த மல்லி பொண்ணுகிட்ட கண்டாங்களோ! நம்ம குடும்பத்துக்கு கொஞ்சம் கூடப் பொருந்தாத ஒண்ணும் இல்லாத இடத்திலிருந்து வந்திருந்தாலும் அவளைத் தலையில் தூக்கி வச்சு ஆடுறாங்க. பார்க்கலாம் இதெல்லாம் இன்னும் எதனை நாளைக்குன்னு?” என விஷத்தைக் கக்கி கொண்டிருந்தார் சுலோச்சனா. மறுபடி மறுபடி, ‘ஒண்ணும் இல்லாத இடம்’ என்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கவும், அதில் சுள்ளென்று கோபம் ஏற, பதிலுக்கு எதுவும் பேசமுடியாத இயலாமையில் அழுகை வந்தது அவளுக்கு. அங்கிருந்து உள்ளே சென்று, அமைதியாக சோபாவில் படுத்துக்கொண்டாள் மல்லி. சிறிது நேரத்தில் லட்சுமி அவளை அழைப்பதாக ராணி வந்து சொல்லவும், குளிர்ந்த நீரில் முகத்தைச் கழுவிக்கொண்டு, எதையும் வெளியில் காண்பிக்காமல் கீழே அவள் செல்லவும், அவர்கள் அனைவரும் கிளம்புவதால் ஒரு மரியாதையை நிமித்தம் மல்லியை வரச்சொன்னதாக லட்சுமி கூறினார். அனைவரும் கிளம்பிவிட, பிறகு லட்சுமியுடன் கோவிலுக்கு சென்று வந்து உணவு உண்ணக்கூடப் பிடிக்காமல் அவர்கள் அறைக்குள் நுழையவும், யாருமற்ற தனிமையில் பெற்றோர் மற்றும் தீபனின் நினைவு வரவுமே கட்டுப்படுத்த முடியாமல் அழுகை வந்துவிட்டது மல்லிக்கு. ஒருவாறு திக்கித்திணறி அவனிடம் சொல்லி முடித்தாள் மல்லி. அமைதியாக அவள் சொன்னவற்றைக் கேட்டுக்கொண்டிருந்தவன் மல்லியிடம். “உனக்கு சினிமால மிகவும் பிடித்த ஹீரோ யாரு? எனக் கேட்கவும், ‘என்னடா இது இந்த நேரத்துல, சம்பந்தமே இல்லாமல் இப்படிக் கேட்கிறானே!’ என்று இருந்தது மல்லிக்கு. அவள் அவனைப் பார்த்த பார்வையில் அது அவனுக்குப் புரிய, “இல்ல காரணமாகத்தான் கேக்கறேன் சொல்லு” என அவன் அதிலேயே இருக்க, “ம் பாஹுபலி! என்றாள் மல்லி. “ம் யாரு ப்ரபாசா?” என அவன் கேட்க, “ஆமாம் அவர்தான் எனக்குப் பிடித்த ஹீரோ!” என்றாள் மல்லி கொஞ்சம் எரிச்சல் கலந்தக் குரலில். ஒரு மென் புன்னகை ஒன்று தோன்றியது ஆதியின் முகத்தில். அதை மறைத்துக்கொண்டு. “சரி! கிரிக்கெட்டர்!” என்று அவன் கேட்க, ஐயோ என்று இருந்தது மல்லிக்கு இருந்தாலும் இழுத்துப் பிடித்த பொறுமையுடன், “டி. ஜே. பிரேவோ” என்றாள் அவள். “பார்றா! ஹ்ம்ம் கிரிக்கெட்லம் கூட பார்ப்பியா நீ?!” என அவன் வியக்க, “ப்சு.. இந்த தீபன் குரங்கால நானும் பார்ப்பேன்” என்றவள், “இப்ப என்ன அதுக்கு?” என்றாள். “சரி!” என்றவன், “இவங்களையெல்லாம் உனக்கு பிடிக்கும்போது அதுபோல் அந்த அனுவை எனக்குப் பிடித்தால் உனக்கு ஏன் அழுகை வரணும்?” என்ற அதி முக்கியமான கேள்வியை அவளிடம் கேட்டான் ஆதி. “ஈ” எனப் பற்களை கடித்தவளை, “விளையாட்டுக்காக இல்லை மல்லி உண்மையாகத்தான் கேட்கிறேன்” என்றவன் பிறகு தீவிரமான குரலில். “அம்மா, அப்பா முடிவுசெய்த அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருந்தது என்னவோ உண்மைதான்” என்றவன் ஒரு நொடி மௌனத்திற்குப் பிறகு. “அனுஷ்கா, நயன்தாரா, இந்த நடிகையர் திலகம் படத்துல நடிச்சாங்களே அவங்க பேர் என்ன?” என அவன் கேட்கவும், அனைத்தையும் மறந்து, “கீர்த்தி சுரேஷ்! அவங்களை எனக்கும் ரொம்பப் பிடிக்கும்” என்றாள் மல்லி. மனதிற்குள்ளேயே, “லூசு!” எனச் செல்லமாக அவளைக் கொஞ்சிக்கொண்டவன். “ஹான்... கீர்த்தி சுரேஷ் அவங்க எல்லாரையும் எனக்குப் பிடிக்கும் அதுக்காக நீ அழுவியா என்ன?” என்று அவன் கேட்க, “அதுவும் இதுவும் ஒண்ணா?” என மல்லி பதில் கேள்வி கேட்கவும், “கண்டிப்பா ஒண்ணுதான்! அதற்குமேல் அவளிடம் எனக்கு எந்த எமோஷனல் பாண்டிங்கும் ஏற்படல. அதனால்தான் ஒரு சூழ்நிலையில் அவளை 'ஜஸ்ட் லைக் தட்' என்னால தூக்கியெறிய முடிந்தது! விட்டுக்கொடுக்க முடியாமல் கார்னர் செய்து உன்னைக் கல்யாணம் செய்துகொண்ட என்னைப் பார்த்து தெனாவெட்டா என்ன கேள்வி கேக்குற நீ? ம்! அம்முவின் அந்த போட்டோவை பார்த்த பிறகுதான் என்னை மணக்கும் முடிவுக்கு வந்தீங்களான்னு கேட்டால்... ம்! இதற்கெல்லாம் சேர்த்துவைத்து சரியான தண்டனை இருக்குடி உனக்கு” என முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அவன் சொன்ன விதத்தில் உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது மல்லிக்கு. அவளது முக மாறுதல்களைப் பார்த்து எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “கொஞ்சம் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிஞ்சிட்டு பேசு மல்லி” என்றான் ஆதி. “அவங்க அப்படிப் பேசியதையும் அந்த போட்டோவையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி அப்படி நினைச்சிட்டேன் சாரி!” என்றாள் மல்லி உள்ளே போன குரலில். “நீ கூடத்தான் அம்மு சொன்னால்தான் என்னைக் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன! அதுக்காக நான் இப்படிதான் மோசமாக ரியாக்ட் செஞ்சேனா என்ன?” எனக் கேட்டவன். “உண்மையிலேயே நாம உங்கள் வீட்டிற்கு, மறுவீடு சென்ற அன்று நீ உன் கனவைப் பற்றிச் சொன்னவுடன், நான் உன் தாத்தாவின் அந்த புத்தகத்தைத் தேடி ஐயங்கார்குளம் போயிருந்தேன் மல்லி! அம்முவினுடைய பொருட்களுடன்தான் அந்த நோட்புக்கும் அந்த போட்டோவும் இருந்தது! அந்த லெட்டரும் அந்த நோட்புக் உள்ளேதான் இருந்தது. அது அனைத்தையும் பார்த்த பிறகுதான் உன் கனவுகளை நான் நம்பத் தொடங்கினேன்!” என்றவன் அன்றைய நாளில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தான். அந்தக் கடிதத்தில் இருந்த செய்தி அவனைஅதிர்ச்சியின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது. 'இப்படிக் கூட கனவுகள் வருமா?’ என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் பிறகு மல்லி மற்றும் அம்மு இருவரும் படித்த பள்ளியை நடத்திவருபவரைப் பற்றி அறியக் கூகுளின் உதவியை நாடியவன், அது தங்கவேலு மற்றும் ரத்தினவேலுவுடையது என்பது தெரிய வரவும் அதிர்ந்துதான் போனான். இது அவனுக்கு புதிய தகவல். காவல்துறை மூலமாக நேரடியாக அவர்களது பள்ளிக்கூடத்தில் சென்று விசாரணை செய்யத் தொடங்கினால், அவர்கள் ஆதாரங்களை அழித்துவிடும் வாய்ப்பிருப்பதால், அன்று இரவு முழுவதும் அவர்களின் மற்ற நிறுவனங்களைப்பற்றிய தகவல்களைத் திரட்டியவன், அடுத்த நாளே டெல்லி சென்றான் அவனது நண்பரான அமைச்சர் புவி அரசனைச் சந்திக்க, வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்தவர், மேலும் நேர்மையாளராகவும் இருப்பவரை மரியாதையை நிமித்தம் நேரில் சென்று சந்தித்து அந்தக் கடிதத்தைப் பற்றி சொன்னவன், அவர் மூலமாக அந்த தங்கவேலுவின் நிறுவனங்களில் வருமானவரிச் சோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான். அந்தப் பிரச்சினையில், தங்கவேலுவும், அவரது மகனும் தன்னிலை மறந்து மூழ்கியிருக்க 'முல்லை’ யின் ஏதோ ஒரு மூலையில் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருந்த உண்மைகளை மறந்தே போனார்கள். அதைப் பயன்படுத்திக்கொண்டு அங்கே அந்தப் பெண்களின் எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. தாமரையின்மேல் இருந்த மதிப்பினாலும், நண்பனிடம் கொண்ட நம்பிக்கையாலும் அவர்களது மருத்துவமனையின் பெயர் அதில் வெளிவராமல் பார்த்துக்கொண்டான் ஆதி. அது மட்டுமே அவன் செய்த தவறாக ஆகிப்போனது. மல்லியிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான் ஆதி. “அம்மு விஷயத்தில் நான் நினைத்துக்கொண்டிருந்தது அனைத்துமே தவறு என்பதும் அப்பத்தான் எனக்குப் புரிந்தது. இதில் நீ உணர வேண்டியது என்ன…னா நம்ம கல்யாணம் நடந்த பிறகுதான் அந்த போட்டோவையே நான் முதன்முதலில் பார்த்தேன்” என நீளமாக அவனது நிலையை விளக்கியவன், “நீ நம்பினாலும், நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை!” என்று முடித்தான் ஆதி. அவன் சொன்ன விஷயங்களைக் கேட்டு என்ன சொல்வது என்று புரியாமல் உறைந்துபோய் உட்கார்ந்திருந்த மல்லியை, “என்ன! இன்னும் நம்பிக்கை வரலியா?” என ஆதி கேட்க, 'இல்ல! அப்படிலாம் இல்ல! உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப்போறேன்!” என மல்லி சொல்லவும், “நீ எங்க அம்மா மாதிரி நிறைய மெகா சீரியல் பார்ப்பியா?” என ஆதி கேட்க, “இல்லையே கார்ட்டூன் தான்!” என்றவள் தானே வலியப்போய் மாட்டிக்கொண்டோமோ என்று நினைத்து நாக்கைக் கடித்துக்கொண்டாள். “அதுதான்! இன்னும் கொஞ்சம் கூட அறிவே வளரல!” என்றான் அவளது நினைப்பைப் பொய் ஆக்காமல். “ம்! இதெல்லாம் ரொம்ப ஓவர் மாம்ஸ்!” என்று அவள் சிலிர்த்துக்கொள்ள, “பின்ன! எங்க அத்தை, சித்தி ரெண்டுபேரையும் பார்த்து சீரியல் வில்லி பீல்...ல மிரண்டு போய் இருக்கியே?” என்றவன். “பாரு மல்லி! இவங்களைப் போன்றவர்கள் எல்லா குடும்பங்களிலும் இருப்பாங்கதான். ஒருத்தர் நல்ல விதமாக நடந்துகொண்டால், எதிர்மறையாக நடப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். குடும்பத்தில் மட்டுமில்லை படிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில், அக்கம்பக்கத்தில். அவர்களை ஒதுக்கி விடவும் முடியாது, ஒதுக்கவும் கூடாது. ஏனென்றால், எதோ ஒரு வகையில் அவர்களும் நம்மைச் சார்ந்தவர்கள்தானே. ஆனால் இதையெல்லாம் எதிர்கொண்டு, இதுபோன்ற மக்களைக் கடந்து போய்விடவேண்டும் இதை நம் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு அழுது புலம்பக் கூடாது” என்றவன், “அதுவும்! ஆதி டெஸ்ட்டைல் டிசைன்ஸ் லிமிடெடின் எம்.டி திருமதி.மரகதவல்லி தேவாதிராஜன் அப்படி இருக்கவே கூடாது!” எனச் சொல்லி அவளை அதிரவைத்தான் மரகதவல்லியின் தேவாதிராஜன்.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page