top of page

TIK-13

இதயம்-13

இந்த திருமணத்தைப் பற்றி தெரியவந்தால், தோழிக்கு அமைந்திருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து, அம்மு மகிழ்ச்சிதான் அடைவாள் என்ற எண்ணம் மல்லியின் மனதில் தோன்றவே, அதுவரை இருந்த கலக்கம், தயக்கமெல்லாம் அவளை விட்டுப் போயிருந்தன. அதன் பிறகு நடந்த சடங்குகளிலெல்லாம், முழுமையான மகிழ்ச்சியுடனேயே ஆதியுடன் தன்னை இணைத்துக்கொண்டாள் மல்லி. பொரியிடுதல் எனும் சடங்கிற்காக பெண்ணின் சகோதரனை அய்யர் அழைக்க, பெருமை ததும்ப மேடைக்கு வந்தான் தீபன். பிறகு அய்யர் சொல்லச் சொல்ல அங்கே சடங்குகள் தொடர்ந்தது. தீபன் கைகளால் பொரியை அள்ளிக் கொடுக்க, ஆதியின் கரங்களின் மேல் தனது கரங்களை வைத்து அதை, வாங்கிய மல்லி பிறகு ஹோம நெருப்பில் அந்தப் பொறியை இட்டு மகிழ்ச்சியுடன் தம்பியை நோக்கினாள். பிறகு அரசாணிக்காலைச் சுற்றிவந்தனர். இரண்டாவது முறையும் அதே போல் செய்து பிறகு, மல்லியின் பாதத்தை மென்மையாகப் பற்றி அங்கே மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த அம்மியின் மேல் வைத்து மெட்டியை அணிவித்தான் ஆதி. அதற்கு அருகில் நின்றிருந்த சசிகுமாரின் மனைவி வினோதினியோ, “ஆதி அண்ணாவுக்கு மெட்டியை தீபனைப் போடச்சொன்னாங்க. இப்ப அவங்க மட்டும், மல்லியின் காலை பிடிக்கணுமா இதெல்லாம் கொஞ்சம் ஓவர்” என கலாட்டா செய்ய, அதற்கு ஆதி கொஞ்சமும் யோசிக்காமல், “வினோ! நாங்களெல்லாம் இன்னைக்கு ஒரு முறை மட்டுமே பொண்டாட்டி காலை பிடிப்போம் உங்க வீட்டுல நடக்குற மாதிரி தினமும் இல்லை” என்று அவளை வார, சசிகுமாரோ, “டேய் உங்க போதைக்கு நான்தான் ஊறுகாவாடா” என்று கூறி விட்டு, மனைவியை நோக்கி, “வினிமா தினமுமெல்லாம் அப்படி இல்லைனு சொல்லிடும்மா; மாமா பாவமில்ல” என்று கூற, அங்கே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது. பிறகு ஐயர் சொல்லிக்கொடுக்க, அதுபோல் மல்லி ஆதியிடம் மேலே சுட்டிக்காட்டி, “துருவனைப் பார்த்தீர்களா?” எனக் கேட்க அதுபோல் ஆதியும், “நான் பார்த்தேன். நீ அருந்ததியைப் பார்த்தாயா?” எனக் கேட்க, அருந்ததி பார்த்தல், சேஷமிடுதல், கங்கணம் களைதல் என எல்லா சடங்குகளும் முடிந்தன. பின்பு ஐயர் நீர் நிரம்பிய குடத்தினுள் மலர்களுடன் ஒரு பாலாடை சிறு மரப்பாச்சி பொம்மை அத்துடன் ஆதியின் மோதிரத்தையும் போட்டு மணமக்கள் இருவரையும் எடுக்கச் சொன்னார். அதை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு, ஆதி செய்த சேட்டைகளில் மல்லி செங்கொழுந்தாக சிவந்துதான் போனாள். அவனை எல்லோரும் ஓட்டி எடுத்தாலும் கடைசியாக, அவளே மோதிரத்தை எடுக்கும்படி விட்டுக்கொடுத்து அவளை மகிழ்விக்கத்தான் செய்தான் ஆதி. லட்சுமியின் கால்களில் பணித்து பாலாடையையும் மரப்பாச்சியையும், மல்லி அவரிடம் கொடுக்க, அவற்றை, தனது சேலையின் முந்தானையில் வாங்கிக்கொண்டவர் கண்கள் கலங்க, “என் பலநாள் கனவு ஒருவழியாய் இன்றுதான் பலித்தது. அதுபோல் நீ சீக்கிரமே எங்கள் குலம் விளங்கச் செய்ய வேண்டும்” என அவர் ஆசி வழங்க, யாரும் கவனிக்காதவாறு கண் சிமிட்டி ஆதி அவளைப் பார்த்த பார்வையில் விதிர்விதிர்த்துப் போனாள் மல்லி. பெரியவர்கள் அனைவரிடமும் மணமக்கள் ஆசி பெற்று பிறகு, ஆரத்தியுடன் அனைத்துத் திருமண சடங்குகளும் இனிதே முடிந்தன. பிறகு, அவர்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறையில் விளக்கேற்ற, ஆதியுடன் மல்லியை அழைத்துச் சென்றார் லட்சுமி. உடன் வரதன் ஜெகன் பரிமளா சசி மற்றும் சில நெருக்கமான உறவினர்களும். பூஜை அறையின் உள்ளே நுழையும் முன்பே பரிமளா மல்லியிடம் கிசுகிசுப்பாக, “மல்லிமா ஒரே தீக்குச்சியில் விளக்கு ஏற்றணும். இல்லனா பொண்ணு செலவாளின்னு சொல்லுவாங்க” என்று கூறவும், ‘இது வேறா’ என்று இருந்தது மல்லிக்கு. அங்கே, பளபளவென மின்னிய, நன்கு பெரியதாக இருந்த வெண்கலத்தாலான காமாட்சியம்மன் விளக்கு மஞ்சள் குங்குமமிட்டு, எண்ணை ஊற்றி தயாராக வைக்கப் பட்டிருந்தது. ஒரே தீக்குச்சியில் விளக்கை ஏற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அந்த விளக்கைத் தவிர அங்கிருந்த வேறு எதுவும் மல்லியின் கண்களுக்குத் தெரியவில்லை. மிகுந்த பயபக்தியுடன் விளக்கை ஏற்றினாள் மல்லி. அப்பொழுது அங்கே வைக்கப் பட்டிருந்த படங்களின் நடுவில் தனது தங்கையைப் பார்த்த ஆதி, “எதையாவது பேசி மல்லியை டைவர்ட் பண்ணுடா மச்சான்” என சசிகுமாரின் காதில் கிசுகிசுக்க, அடுத்த நொடியே சசி ஆதியிடம், “டேய் புது மாப்பிள, ஹனிமூனுக்கு எங்கடா பிளான் பண்ணியிருக்க?” என்று கேட்டு வைக்க, “நாம என்ன சொன்னால் இவன் என்ன பேசுறான் பார்” என பல்லைக் கடித்தான் ஆதி. “என்னடா அடுத்த வாரத்திலிருந்து ஸ்கூல் யூனிஃபார்ம் சேல்ஸ் ஆரம்பித்துவிடும். உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியுமா சொல்லு, நான் இன்றைக்கே கிளம்பிடுறேன்” என அவன் நக்கலுடன் பதில் கொடுக்க, மல்லி ஏன் தலை நிமிர்த்து பார்க்கப் போகிறாள்? தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளைகளில் கூட்டம் அலை மோதும். சீருடை மட்டுமின்றி புத்தகப் பைகள் குறிப்பேடுகள் மற்ற எழுதுபொருட்கள் என அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆதி இல்லாமல் சமாளிக்க முடியாது. இதை நன்கு உணர்ந்த சசி, “உன் இஷ்டம்டா மச்சான்” எனத் தப்பிக்கும் நோக்கத்தில் சொல்ல, பிறகுதான் மூச்சே விட முடிந்தது மல்லிக்கு. பிறகு உறவினர் அனைவரும் உணவு உண்பதற்குச் சென்றுவிட, சசிகுமார், வினோதினி மற்றும் தீபனுடன் ஆதியும் மல்லியும் கல்யாண கோலத்தில் காஞ்சிபுரம் சென்று அத்திகிரி வரதராஜ பெருமாளையும் பின்பு காஞ்சி காமாட்சி அன்னையையும் தரிசித்து வந்தனர். கோவிலுக்குச் சென்று வருவதற்குள் ஆதியிடம் நன்றாக ஒட்டிக்கொண்டான் தீபன். கோவிலில் கடவுள் தரிசனம் முடிந்து மண்டபத்தில் அமர்ந்திருக்கும் சமயம் ஆதியை எப்படி அழைப்பது என்று புரியாமல் அத்தான் மாமா என மாற்றி மாற்றி குழப்பியடித்துக் கொண்டிருந்தான் தீபன். ஆதி, “என்னை எப்படி கூப்பிடறதுன்னு நீங்க ரெண்டுபேரும் சீக்கிரமே ஒரு முடிவுக்கு வந்துடுங்க” என்று சிரித்துக் கொண்டே அக்காள் தம்பி இருவரையும் பார்த்து பொதுவாகச் சொல்ல, சற்று யோசித்த தீபன், “மாம்ஸ்! நான் உங்களை மாம்ஸ் னுதான் கூப்பிடப்போறேன். ஓகே வா மாம்ஸ்!” என்று கூற, “உங்கக்காவுக்கு ஓகே ன்னா எனக்கும் ஓகே தான்” என்று மல்லியைப் பார்த்துக் கொண்டே ஆதி பதில் கொடுக்க, அதற்கு, “ஓஹோ” என்று குதூகலித்தனர் சசியும் விநோதினியும். அதில் முகம் சிவந்து போன மல்லி திக்கித்திணறி, “எனக்கும் மாம்ஸ் ஓகே தான்” என்று கூற, அவளது பாவனையில் பரவச நிலைக்குப் போனான் ஆதி. “மச்சான்! இது கோவில் டா” என சசி அதற்கும் ஓட்ட, “டேய், ஸ்கூல் பையனை பக்கத்துல வச்சிட்டு! இப்படி விவஸ்தை இல்லாமல் பேசாதே” என சசியிடம் ஆதி கிசுகிசுக்க, வெட்கத்தில் மேலும் மேலும் சிவந்து அவள் அணிந்திருந்த புடவைனின் நிறத்திலேயே மாறிப்போயிருந்தாள் மல்லி. வீடு வந்து அவர்கள் சாப்பிட்டு முடித்து ஓய்வாக உட்கார, மதியம் ஆகியிருந்தது. அதற்குள்ளாகவே, முத்துராமன் பெரியப்பாவின் குடும்பத்தினர் ஆதியின் பெரிய மாமா குடும்பத்தினர் என ஒரு சிலர் மட்டுமே எஞ்சி இருக்க மற்ற அனைத்து உறவினர்களும் கிளம்பியிருந்தனர். பெண்களெல்லாம் அங்கே இருந்த அறையில் உட்கார்ந்திருக்க, மல்லியும் அங்கேதான் இருந்தாள். அப்பொழுது, “திருமாங்கல்யம் கட்டற நேரத்துல உங்க மச்சினன் பொண்ணுக்கு அப்படி மயக்கம் வரவும் நான் பயந்தே போயிட்டேன் அண்ணி. அபசகுனம்னு தப்பா எடுத்துப்பீங்களோன்னு” எனத் தயக்கத்துடன் சொன்னார் பரிமளா. “சரியாக, எப்படி அந்த நேரத்தில் அந்த பொண்ணுக்கு மயக்கம் வந்ததோ எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி நடந்ததும் நன்மைக்குத்தான். நீங்க எதாவது நினைப்பீங்களோன்னுதான் நான் கவலைப்பட்டேன் அண்ணி. அவள் என் ஓரகத்தியின் சொந்த தங்கையின் மகளும்தான். அவள் தாலி முடிவது எனக்கும் உங்க அண்ணாவிற்கும் பிடிக்கவில்லைதான் அண்ணி. தம்பிக்கும் இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. சொந்தக்காரங்க பேச்சுக்கு பயந்துதான், வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக்க வேண்டியதாய் போச்சு. நீங்க எதுவும் பீல் பண்ணாதீங்க” என் முடித்தார் லட்சுமி. அப்பொழுது அது அனைத்தையும் கேட்டவாறு மல்லியின் அருகில் உட்கார்ந்திருந்த முத்துராமனின் மனைவி வசந்தா அவளிடம், “பெரியம்மா இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காதே மல்லிம்மா! உன் வீட்டுகாரோட சித்தி சுலோச்சனா என் பிறந்த வீட்டு வழியில் சொந்தம்தான். ஏதாவது பேசி எல்லாரையும் நோகடிச்சிடுவா. அவரோட அத்தையும் அதே டைப்தான். அவங்க பொண்ண வேற சுலோவோட பையனுக்கு கொடுத்திருக்காங்க. நீ எதுக்குமே அவகிட்டலாம் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ கண்ணு” என அக்கறையுடன் எச்சரிக்கும் குரலில், கிசுகிசுப்பாக சொல்லி முடித்தார். “புதிய சூழலில் எப்படிப் பொருந்தப்போகிறோமோ” என்ற அச்சத்துடனேயே, தலையாட்டி அனைத்தையும் கேட்டுக்கொண்டாள் மல்லி. சிறிது ஓய்விற்குப் பின் சசிகுமார் முத்துராமன் என ஒவ்வொருவர் குடும்பமாக அங்கிருந்து கிளம்பத் தொடங்கினர். பரிமளாவும் ஜெகனும் தீபனை அழைத்துக் கொண்டு மகள் மற்றும் மருமகனுக்குப் பாலும் பழமும் கொடுக்க தயார் செய்யவென அனைவரிடமும் விடைபெற்று அவர்களது வீட்டிற்குச் சென்றனர். *** “நான் பெரிய வீட்டுக்குப் போய் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்கணும். நீ மல்லியை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப்போய்விட்டு பிறகு அங்கே வந்துவிடு” என்று மகனிடமும், “பத்திரமாக போயிட்டு வாம்மா” என மருமகளிடமும் சொல்லிவிட்டு. புது மருமகளை வரவேற்கும் மகிழ்ச்சியுடன், கணவருடன் வடநெம்மேலியில் இருக்கும் அவர்களது பங்களாவிற்குக் கிளம்பினார் லட்சுமி. நேரே மல்லியின் வீட்டிற்கு மணமக்கள் செல்ல ஆரத்தி சுற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்று பரிமளா அவர்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து அவர்களை உபசரித்தார். பின்பு ஆதி அவரிடம், “அத்தை தீபன் சின்னவனாக இருப்பதால் இந்த மறுவீடு சம்பிரதாயம் என்று இங்கே வந்து தங்க வேண்டாம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால் காலையில் வந்துவிட்டு மலையில் செல்கிறோம்” எனச் சொன்னான். அவருக்கும் உள்ளுக்குள்ளே மறுவீடு பற்றிய கவலை இருந்துகொண்டுதான் இருந்தது. மருமகன் தன்னிடம் நேருக்கு நேராகப் பேசுவதிலேயே கொஞ்சம் அசந்துபோன பரிமளா, அவனது புரிதலான நடவடிக்கையால் மேலும் மகிழ்ந்துதான் போனார். திருமணத்திற்கு வந்தவர் வராதவர் என அந்தக் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் குட்டீஸ் உட்பட மல்லியையும் ஆதியையும் வந்து சந்தித்துவிட்டுச் செல்ல அனைவரிடமும் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான் ஆதி. சிறிதுநேரம் அங்கே இருந்துவிட்டுக் கிளம்பினர் இருவரும். கிளம்பும் நேரம் சமையல் அறைக்குள் சென்று கண்ணீர் வடித்தார் பரிமளா. ஹாலில், ஆதியின் அருகில் உட்கார்ந்திருந்தவாறு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. அன்னையின் மனம் அறிந்தவளாக. தீபன் அங்கே இருக்க முடியாமல் வெளியில் சென்று நின்றுகொண்டான் அவர்களை வழியனுப்பும் பொருட்டு. ஜெகன் மட்டும், “மல்லி! கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பாள். ஆனால் மிகவும் பொறுப்பான பொண்ணு. இனிமேல் நீங்கதான் அவளைப் பத்திரமா பார்த்துக்கணும்” கண்களில் நீர் திரள மருமகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அதற்கு ஆதி, “உங்க மகளைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் கவலையே வேண்டாம். அவளைப் எப்பொழுது பார்க்கவேண்டும் என்று தோன்றினாலும் தயங்காமல் நீங்கள் அங்கே வரலாம். அதுபோல் ஒரு வார்த்தை எனக்கு மெசேஜ் செய்தால் போதும், நாங்களே இங்கே வந்துவிடுவோம்” என பரிமளாவிற்கும் கேட்கும் விதமாகச் சொல்ல, “ரொம்ப சந்தோசம் மாப்பிளை” என்றார் ஜெகன் திருப்தியுடன். முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்த பரிமளாவும் பின்பு சந்தோஷமாகவே மகளையும் மருமகனையும் வழியனுப்பிவைத்தார். *** ஆதி மற்றும் மல்லி மட்டும் பின்னால் அமர்ந்திருக்க ஓட்டுநர் வண்டியை ஓடிவர கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து சென்றுகொண்டிருந்தது ஆதியின் ஆடி. மற்றவர் மனதைப் புரிந்து நடக்கும் கணவனது குணத்தில் பெருமை பொங்க அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. அவளுடன் நெருங்கி உட்கார்ந்த ஆதி அவளுடைய காதின் அருகில் குனிந்து மெல்லிய குரலில், “இது காரும்மா; ட்ரைவர் வேறு இருக்கார்; நீ இப்படியெல்லாம் பார்த்து வைக்காதே; எனக்கு என்னென்னவோ தோணுது!” எனச் சொல்லவும், ‘ஐயோ இப்படி மாட்டிக் கொண்டோமே’ என்று நினைத்தவள் தனது நாணப் புன்னகையை மறைக்க வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். அதைப் புரிந்துகொண்டவன் அவளது கையை இறுக்கப் பற்றிக் கொண்டான் உன்னை விட மாட்டேன் என்பதுபோல். ஏசியின் குளிரிலும் வியர்வை பூக்கத் தொடங்கியது மல்லிக்கு அவனது அருகாமையில். *** கடற்கரைக் காற்று இதமாக வீசிக் கொண்டிருக்கும் மாலை நேரம். மிகப் பெரிய இரும்பு கேட்டைக் கடந்து பிரமாண்டமான மாளிகையைப் போன்ற அந்தப் பங்களாவின் முன் சென்று நின்றது கார். ஆலம் சுற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார் லட்சுமி. மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக் கொண்டார் வரதன். பின்பு, யோசனையுடன் அன்னையை நோக்கியவன், “அம்மா மல்லியிடம் பேசவேண்டி இருக்கிறது. நாங்கள் ஆபீஸ் ரூமில் இருக்கிறோம். எதாவது ஜூஸ் மட்டும் அனுப்புங்கள்” என்றான் ஆதி. “தம்பி” என்று அவர் மகனை இறைஞ்சுதலுடன் பார்க்க, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று ஜாடை காட்டிவிட்டு, மல்லியின் கைபிடித்து அருகில் இருந்த அலுவலக அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் ஆதி. கொஞ்சமும் மறுப்பின்றி அவனுடன் சென்றாள் மல்லி. ‘இன்னும் என்ன சொல்லப்போகிறானோ?!’ என்ற கேள்வியுடன். அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை உட்காரச்செய்து, அருகில் இருந்த மேசையில் சாய்ந்துகொண்டு சற்று அமைதியாக இருந்தவன் பின்பு, “உனக்கு என்னிடம் முழு நம்பிக்கை இருக்கா மல்லி?” என்று கேட்க, அதில் அவனை ஒரு புரியாத பார்வைப் பார்த்தவள், “என்னலாம் செஞ்சு விடாமல் என்னைக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க மாம்ஸ். உங்களை நம்பாமல் நான் வேறு யாரை நம்பப்போறேன்” எனச் சொல்லவும், அவளது மாம்ஸ் என்ற அழைப்பில் குளிர்ந்தவன், “ஓ ஒரு வழியா தீபன் உனக்கு சொல்லிக் கொடுத்துட்டானா?” என்று அவன் விஷமமாகக் கேட்க, அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமல் விழித்தாள் மல்லி. அவளின் பார்வையைக் கண்டு சிரித்தவன் “முண்டக்கண்ணி! மாம்ஸ்னு என்னை கூப்பிட்டயே அதைச் சொன்னேன்” என்று கூற, நாக்கைக் கடித்தவள், “அப்படியா சொன்னேன்?” என்று கேட்க, “அப்படித்தானே மேடம் சொன்னீங்க” என அவன் அவளைப்போலவே சொல்லவும் என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள் மல்லி. “ஓகே ஜோக்ஸ் அபார்ட்; நீ சொன்னதுபோல் என் மேல் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நம்பிக்கையை எப்பொழுதுமே நீ கைவிடக்கூடாது” என்றான் ஆதி. “நான் உங்களை நம்பத்தான் செய்யறேன். ஆனால் நீங்கதான் என்னை நம்பல மாம்ஸ். இல்லனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருப்பீங்க” என்று கூற, “இல்லை மல்லி நானும் உன்னிடம் முன்பே பல விஷயங்களைப் பேசத்தான் வந்தேன். அதைக் கேட்கும் மனநிலையில் நீ கொஞ்சம் கூட இல்லை. அதுவும் நீ அம்முவிற்கு ஏடாகூடமா ஒரு சத்தியத்தை செய்துட்டு, அதிலேயே இப்படி விடாப்பிடியாக இருக்கும்போது எனக்கும் வேறு வழி தெரியல” என்று தன் நிலையை விளக்கினான் ஆதி. “அதுக்காக இந்த அவசரக் கல்யாணம் தேவையா?” என மல்லி விடாமல் கேட்கவும், “தேவைதான்; உன்னை முழுமையாக என் பாதுகாப்பில் வைக்க இந்தக் கல்யாணம் அவசியம் தேவைதான்” என்று கோபக் குரலில் சொன்னவன். “புரிஞ்சிக்கோ மல்லி அன்றைக்கு உனக்கு நடந்தது ஒரு விபத்து இல்லை கொலை முயற்சி! அதற்கான காரணத்தைத்தான் என்னால கண்டுபிடிக்க முடியல! முழுசா நாற்பது நாள், உன்னைப் பிரிந்து நான் பட்ட துன்பம் உன்னால் புரிஞ்சிக்க முடியாது மல்லி! ஏன்னா இன்னொரு இழப்பை என்னால் தாங்கற நிலையில் நான் இல்லை! ஏற்கனவே என் தங்கையை இழந்து, நாங்கள் அனுபவிக்கும் வேதனை உனக்குத் தெரியாது மல்லி! அவள் தற்கொலை செய்துகொண்டு ஒரேயடியாகப் போய்விட்டாள். அதிலிருந்து எங்களால்தான் இன்னும் மீண்டு வர முடியல மல்லி!” கண்களில் நீர் திரையிட சொல்லிக்கொண்டே போனான் ஆதி. அவன் பேசியதைக் கேட்டு உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள் மல்லி. அதற்குள் கதவைத் தட்டிவிட்டு அங்கே வேலை செய்யும் பெண்மணி பழரசத்தை அங்கே வைத்துவிட்டுச் செல்ல, அவளிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை பருகியவாறே, “இதை முதலில் குடித்து முடி மல்லி பிறகு பேசலாம்” என்றான் ஆதி. மறுபேச்சின்றி அதை முழுவதும் பருகினாள் மல்லி. பிறகு கொஞ்சம் உணர்வு வரப்பெற்றவளாக “என்ன சொல்றீங்க தேவா! ஒண்ணுமே புரியல” என்று கூறவும், அங்கே இருந்த டிராவிலிருந்து அம்முவின் செயினை எடுத்தவன் மல்லியின் கைகளில் அதை வைத்துவிட்டு, “நான் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடையாதே மல்லி!” என்று கூறி விட்டு, “உன் உயிர்த் தோழி அம்மு என் தங்கைதான். அவளுடையராஜா அண்ணா வேறு யாரும் இல்லை நான்தான்! ஆனால் அவள் இப்பொழுது உயிருடன் இல்லை. இந்த உண்மையைச் சொன்னால் உன்னால் தாங்க முடியாது என்பதால்தான் அவசரமாக இந்தக் கல்யாணத்தை நடத்தினேன். உன்னை என் கண்களில் வைத்துப் பாதுகாக்க!” என்று முடித்தான் ஆதி. அம்மு உயிருடன் இல்லை என்பதை அறிந்த பிறகு தனக்கு நடந்தது விபத்து இல்லை என்ற விஷயம் கூட மனதில் பதியவில்லை மல்லிக்கு. தீயினால் சுட்டதுபோல் அந்தச் செயினை கீழே நழுவ விட்டு, “விளையாடாதீங்க தேவா!” என்று கண்களில் கண்ணீர் பொங்க தள்ளாடியவாறு எழுந்து நின்ற மல்லியை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்த ஆதி. “உனக்கு ஏதாவது செய்கிறதா நீ நார்மலாக இருக்கியா மல்லி” என்று கேட்க, “ம்” என்றுமட்டும் சொன்னாள் மல்லி. “அம்மா, அப்பா ரொம்ப நாளுக்குப் பிறகு இப்பதான் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்காங்க. அதனால் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ மல்லி” என்றபடி அவளை ஹாலுக்கு அழைத்து வந்தான் ஆதி. அங்கே பெரியதாக மாட்டப் பட்டிருந்த படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள், அவர்கள் வீட்டுச் செல்ல இளவரசி அமிர்தவல்லி. அந்தப் புகைப் படத்தையும் ஆதியையும் மாறிமாறிப் பார்த்த மல்லிக்கு, அப்பொழுதுதான் தேவாவைப் பார்த்தவுடன் தனக்குப் பிடித்துப்போனதற்கான காரணம் புரிந்தது. அண்ணன் தங்கை இருவருக்கும் இருக்கும் முக ஒற்றுமையும் ஒரே மாதிரியான காந்தக் கண்களும் சொல்லாமல் சொல்லியது அவளுடைய தேவாவின் முகம் அவளுக்கு மிகவும் பரிச்சயமாக இருந்ததன் காரணத்தை.

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page