Thookanam Kuruvikal-2
கூடு-2
வீட்டைக் கட்டி பார்! கல்யாணத்தைச் செய்து பார்! என்பது பழமொழி. அன்றைக்கு இருந்த நிலைமையில் அம்மாவுக்கோ அல்லது அப்பாவுக்கோ நல்லவை தீயவை சொல்லப் பெரியவர்கள் என்று யாரும் இல்லை. பெரியவர்களுடைய ஆலோசனையையோ அல்லது அனுமதியையோ கேட்டே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால்தானோ என்னவோ வீடு கட்ட வேண்டும் என்ற அவ்வளவு பெரிய முடிவை நிமிட நேரத்திற்குள் எடுத்தாள் அம்மா. எதையும் யோசிக்காமல் அதற்குத் தலை அசைத்தார் அப்பா. முடிவு எடுத்ததும் நாட்கள் கடத்தாமல், நல்ல ஒரு சுப முகூர்த்த நாளில் எளிமையாகப் பூஜை போட்டு, கடகால் எடுத்தனர். எங்கள் பக்கத்துக்கு 'போர்ஷன்'னில் குடி இருக்கும் கோகுல், கௌதம் அண்ணா, காவேரி அத்தை, மாமா, கவிதா அம்மா, கவிதா என எல்லோரும் அங்கே வந்திருந்தனர். அம்மாவின் சொந்த அண்ணனான கணேஷ் மாமாவும், அவர் மனைவி சங்கரி அத்தையும் கூட வந்தனர். அவர்கள் பிள்ளைகள் வீட்டிலேயே இருந்த போதிலும் அங்கே எட்டி கூட பார்க்கவில்லை. அவர்கள் முகத்தில் கூட மகிழ்ச்சிக்கான சாயல் கொஞ்சமும் தெரியவில்லை. அது எனக்கு பெரியதாகப் படவில்லை. ஏனென்றால் கோகுல் மற்றும் கவிதா உடன் இருந்ததே எனக்கு போதுமானதாக இருந்தது. கிட்டத்தட்ட பத்து வருடங்களாக நாங்கள் ஒரே குடும்பமாக வசிப்பதால், எங்களுக்குள் பிணைப்பு அதிகம். அன்று பூஜை முடிந்து நாங்கள் ரயில் மூலம் மாம்பலம் வந்தோம். பின்பு 'தொடங்கிய காரியம் நன்றாக முடிய வேண்டும்' என்ற பிரார்த்தனையுடன் கோதண்டராமர் கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு, அங்கே இருக்கும் கல் யானை மேல் சிறிதுநேரம் உட்கார்ந்து விளையாடிவிட்டு வீட்டிற்குப் போனோம். இப்பொழுது இருப்பது போல், 'மொபைல் போன்' வசதி அப்பொழுதே இருந்திருத்தல் புகைப்படங்களாக எடுத்து தள்ளி சொற்பமான எங்கள் மகிழ்ச்சிகளைச் சேமித்து இருந்திருக்கலாம். *** 'காண்ட்ராக்டர்' மூலமாகச் செய்யாமல் தாங்களே பொருட்களை வாங்கி கொடுத்து, மேஸ்திரி ஒருவர் மூலமாக சில தினங்களிலேயே வேலையைத் தொடங்கினார்கள் அம்மாவும் அப்பாவும். அம்மாவின் நகைகள் எல்லாம் வீட்டின் அஸ்திவாரமாகவும், சுவர்களாகவும் எழும்பி நிற்க, அதுவும் போதாமல் மேற்கொண்டு செலவுகளுக்குப் பணம் தேவைப்படவும்தான் பிரச்சினை ஆரம்பித்தது. அப்படி ஒரு சூழ்நிலை உருவாகும்போதுதான் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் கவிதா அம்மாவிடம் போய் உதவி கேட்டனர் அம்மா அப்பா இரண்டு பேரும். அன்று கூடவே நானும் இருந்ததால் எனக்கு ஓரளவிற்கு இதெல்லாம் தெரிந்தது. கவிதா அம்மா கணவனை இழந்த இளம் விதவை. எங்கள் குடியிருப்பில் குடித்தனம் இருப்பவர்களுடைய சிறு சிறு தேவைகளுக்கு அவ்வப்பொழுது குறைந்த வட்டியில் பணம் கொடுத்து உதவுவார் அவர். அவ்வளவு பெரிய தொகையை அம்மா மொத்தமாகக் கேட்கவும், அவர் அதிகம் தயங்கவே, "நாங்க சொந்த வீட்டுக்கு போனா இங்க கொடுக்கற வாடகை மிச்சம்தான கவிதா அம்மா. கோமுவும் இப்ப வளந்துட்டா இல்ல, தாம்பரம் 'மெப்ஸ்'ல எதாவது கம்பெனில வேலைக்கு போகலாம்னு இருக்கேன். கொஞ்சம் கொஞ்சமா வட்டியோட கடனை கொடுத்துடுவேன் பயப்படாதீங்க. ஒரு நம்பிக்கைக்காக வேணா இந்த பத்திரங்களை நீங்களே வெச்சுக்கோங்க!" என அம்மா சொல்ல, மனை பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு இரண்டு நாட்களிலேயே அந்த பணத்தைக் கொடுத்தார் கவிதா அம்மா. அந்த பணம் அம்மா அப்பா கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்குத் தளம் போடவென 'சிமெண்ட்' ஜல்லி, கம்பிகள் எனப் பொருட்களாக மாறியது. அப்பா சில தினங்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு எங்களைக் கவனித்துக்கொள்ள அந்த பொருட்களைப் பாதுகாக்க அம்மா மாமாவின் வீட்டிலேயே தங்கினாள். நாளை 'ரூஃப்' போடப்போகிறோம் என்கிற நிலைமையில், மிகப்பெரிய மோசடியைச் சுமந்துகொண்டு எங்களுக்கு ஒரு 'ரெஜிஸ்டர் போஸ்ட்' வந்தது. அதிலிருந்த 'கோர்ட் நோட்டிஸ்'ஸை பிரித்துப் படித்ததும் அப்பாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அதை எடுத்துக்கொண்டு எங்கள் பக்கத்துக்கு 'போர்ஷன்'னில் குடியிருக்கும் கௌதம் அப்பாவிடம் போய், "இதுல 'ஸ்டே ஆர்டர்னு' போட்டிருக்கு. அங்க தொடர்ந்து வீடு கட்டக்கூடாதுனு யாரோ சம்பந்தம்ங்கறவர் ஸ்டே வாங்கி இருக்கார்.” எனச் சொல்லிக்கொண்டு பதட்டத்துடன் அதை காண்பிக்க, அதைப் படித்துப்பார்த்த கோகுல் அப்பா, "ஆமாம் ஜில்லுப்பா (அங்கே எல்லோருக்குமே நான் ஜில்லுதான்) இது ஸ்டே ஆர்டார்தான்!" என்றார். பெரும்பாலும் அங்கே வசிப்பவர்களுக்கு நிலம், வீடு சொத்து என எதுவும் இருக்க வாய்ப்பில்லை. எல்லோருமே வேலைக்குப்போய் வருமானம் ஈட்டி வாழ்க்கையை நடத்தும் கீழ் நடுத்தர மக்கள்தான். 'கோர்ட்' 'கேஸ்' இதெல்லாம் கதையிலும் சினிமாவிலும் மட்டுமே பார்த்து வழக்கம். அந்த சூழலை எப்படிக் கையாளுவது என்ற வழிகாட்டுதல் பெரும்பாலும் எங்களைப் போன்றவர்களுக்கு உடனடியாக கிடைக்க வாய்ப்பில்லை. கௌதம் மற்றும் கோகுலுடைய அப்பா எங்கள் அப்பாவை அழைத்துக்கொண்டு எங்கெங்கோ சுற்றினார். அதுவரை நானும் கோமுவும் காவேரி அத்தையின் பாதுகாப்பில் கோகுலுடனும் அந்த குடியிருப்பில் இருக்கும் மற்ற நண்பர்களுடனும் விளையாடிக்கொண்டிருந்தோம். கவுதம் அண்ணா பன்னிரண்டாம் வகுப்பில் இருக்க, கோகுல் அப்பொழுது பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது ஒரே 'ஏஜ் க்ரூப்'பில் இருவருமே இருந்ததால், அவனை கோகுல் என்றுதான் நான் அழைப்பேன். வாடா போடா எல்லாம் அப்பொழுது வெகு சகஜம். அவனுக்கு சமயத்தில் அந்த டா கோபத்தை கூட கொடுக்கும். என்னுடன் பேசாமல் இரண்டு மூன்று நாட்கள் இருப்பான். பிறகு சமாதானம் ஆகும். இந்த... 'ங்க... ர்...' எல்லாம் திருமணத்திற்குப் பிறகு அத்தைக்காகவும் மாமாவுக்காகவும் வந்து ஒட்டிக்கொண்டு நிரந்தரமாகிப்போனவை. யாரும் இல்லாத நேரத்தில் மட்டுமே நான் அவருக்கு ஜில்லு... அவர் எனக்கு கோகுல்' *** அந்த செய்தியை அறிந்து பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தாள் அம்மா! அப்பா அந்த 'நோட்டிஸ்'ஸை கையில் வைத்துக்கொண்டு யார் யாரையோ தேடி அலைந்து கொண்டிருந்தார். 'அதைச் சரி செய்யப் பெரிய வழக்குரைஞராகப் பார்க்க வேண்டும்; அதற்கு அதிக செலவாகும்' என்பதைத் தாண்டி எனக்கு ஒன்றும் விளங்கவில்லை அந்த வயதில். அம்மா அப்பா, எங்கள் இரண்டுபேரையும் அழைத்துக்கொண்டு பெருங்களத்தூர் போக, "நீ இருக்கற நிலைமையில உனக்கு இந்த வீடு தேவையா! ஏற்கனவே அந்த சம்பந்தம் ஒரு வில்லங்கமான ஆளு. ஒரே ஊர்க் காரனை பகைச்சிட்டு என்னால இங்க நிம்மதியா வாழ முடியாது. இந்த நிலத்தை எனக்கே கொடுத்திடு, எதாவது ஒரு அமௌன்ட் கொடுக்கறேன்னு சொல்லலாம்னு இருந்தேன் . நல்ல வேளை! அதுக்குள்ள நீ வீடு கட்ட ஆரம்பிக்கவும் விட்டுட்டேன். நீ வேணா போய் அவன் கைல கால்ல விழுந்து கேட்டு பாரு!" என மாமா அம்மாவைத் திட்டித்தீர்க்க, அப்பா தயக்கம் மேலிட அவரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் நின்றார். கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்கக்கூட தோன்றாமல் அம்மா நிற்க, அப்பாவின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த கோமு எழும்பி அம்மவின் கண்ணீரை தன சின்ன கைகளால் துடைத்தாள். அதனால்தான் கொதி தாங்காத அரிசியாக கோகுல் யாரிடமாவது சண்டைக்குக் கிளம்பினால் கூட நான் அதை ரசிப்பது. என்று எழுதி இருந்தவள் அதன் முடிவில் கண்களில் நட்சத்திரம் மின்னும் ஒரு 'இமோஜி'யை வரைந்திருநதாள். அடுத்த பக்கத்தை திருப்ப கைகள் நடுங்கியது கோகுலுக்கு. *** மாமா வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல மனமின்றி எங்களையும் அழைத்துக்கொண்டு அதே ஊரிலேயே குடி இருக்கும் சம்பந்தம் என்பவனின் (என்பவரின் என எழுதி அதை அடித்து என்பவனின் என மாற்றி எழுதியிருந்தாள் சரசு.) வீட்டிற்கு சென்றனர் அம்மாவும் அப்பாவும். திறந்தே இருந்த அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டுக் காத்திருக்க, நாற்பதைக் கடந்த தோற்றத்தில் உடல் நன்றாக பருத்துப்போயிருந்த பெண்மணி ஒருவர் வெளியில் வர, "இங்க சம்பதுன்னு ஒருத்தர்" என அப்பா தயங்கிச் தயங்கி சொல்ல, ஒரு ஏளனப் பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றார் அவர். அவருடைய கொண்டையும் இரண்டு மூக்கிலும் அவர் பெரியதாக அணிந்திருந்த மூக்குத்தியும் பார்க்கவே எனக்கு மிரட்சியாக இருந்தது. அழவே தொடங்கிவிட்டாள் கோமு. அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு, நான் கோமுவை சற்று தள்ளி அழைத்துச்சென்றுவிட, அங்கே சுற்றித்திரிந்த கோழியையும் அதன் குஞ்சுகளையும் பார்த்து சற்று சமாதானம் ஆனாள் கோமு. அங்கே நெடுநெடுவென வளர்ந்த ஒருவன் எங்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே நிற்கவும் அச்சத்துடன் என் உடையை பிடித்துக்கொண்டாள் கோமதி. அதேநேரம் அங்கே உரத்து ஒலித்த குரல்களில் கலவரமாகிப்போய் நான் அவளை இழுத்துக்கொண்டு ஓடி வந்து தூரமாகவே நின்றவாறு பார்க்க, நெடிய உயரத்துடன், மா நிறமும் வழுக்கை விழுந்த தலையுமாக, மிகப்பெரிய தொப்பையுடன் வேட்டியை மடித்துக்கட்டி, ஒரு துண்டை தோளில் போட்டுக்கொண்டு மனதில் இருக்கும் குரூரம் முகம் முழுதும் பொங்கி வழிய ஏதோ மிரட்டிக்கொண்டிருந்தார்... கொண்டிருந்தான் அந்த சம்பந்தம். ஒரு பக்கம் கோமுவை