top of page

Thookanam Kuruvikal-1

கூடு-1

'சிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத! வாசனை பாட்டொன்று கேளு கண்ணம்மா!!' கைப்பேசி இசைக்க, வியர்வை சொட்டச் சொட்ட வந்து அதை எடுத்தவன், "சொல்லுடா ஜில்லு!" என மூச்சுவாங்கக் கேட்க, எதிர்முனையிலிருந்துகொண்டு, "என்ன கோகுல் இது; என்ன செஞ்சிட்டு இருக்கீங்க; ஏன் இப்படி மூச்சுவாங்குது!" என பதறினாள் அவனால் 'ஜில்லு' என அழைக்கப்பட்ட சரஸ்வதி! "ஒண்ணுமில்லடா ஜில்லு! ஃபிரிட்ஜ லாரில ஏத்த ஹெல்ப் பண்ணேன்! அதான்!" என கோகுல் சொல்ல, "ப்ச்! எதுக்கு இந்த தேவையில்லாத வேல! அதையெல்லாம் அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் ஆளுங்களே கவனிச்சுப்பாங்க இல்ல! பழக்கமில்லாத வேலையெல்லாம் ஏன் செய்யறீங்க!" அவள் அக்கறையுடன் கடிந்துகொள்ள, "உண்மையிலேயே அவங்க மூவர்ஸ் தாண்டா! வெறும் மூணு பேர்தான் வந்திருக்காங்க! என்ன இருந்தாலும் நம்ம பொருள் இல்லையா! சும்மா வேடிக்கை பார்க்க முடியல" என்ற கோகுல், "சொல்லு எதுக்கு கூப்பிட்ட" எனக் கேட்க,


“அதை மறந்துட்டேன் பாருங்க!" என்றவள், "என்னோட டைரியை மறந்து அங்கேயே வெச்சிட்டு வந்துட்டேன்! அதை லாரில போடாம உங்க லேப்டாப் பேக்ல வெச்சு எடுத்துட்டு வாங்க என்ன?" என அவள் தீவிரமாய் சொல்ல, அதற்கு முன்பாகவே அவன் அவளது பொக்கிஷத்தை பத்திரப்படுத்தியிருக்க, "டன் ஜில்லு!" என்று சொல்லிவிட்டு, "பவி குட்டி கிட்ட போனை கொஞ்சம் குடு!" என்று சொல்ல, கைப்பேசி அவனுடைய மகளின் கைக்குப் போனது. பின் அவளது கொஞ்சல்கள், கேள்விகள், தேவைகள் அனைத்தும் முடிந்தபிறகு அவனுடைய அம்மா அப்பாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தான் கோகுல் இதழில் மலர்ந்த சிரிப்புடன். *** நல்ல சம்பளத்தில் மத்திய அரசில் வேலை அவனுக்கு. எனவே மூன்று வருடத்துக்கு ஒருமுறை கட்டாய இடமாற்றம் தவிர்க்க முடியாதது. வேலைக்குச் சேர்ந்த பிறகு அவனுக்கு இது மூன்றாவது இடமாற்றம். இந்த முறை சென்னைக்கே கிடைத்தது ஒரு மிகப்பெரிய ஆறுதல். மூன்றுவருட மும்பை வாசம் ஒருவழியாக முடிவுக்கு வந்த மகிழ்ச்சியுடன் மும்பையிலிருந்து சென்னை நோக்கி இதோ 'சென்னை எக்ஸ்பிரஸ்' ரயிலில் அவனது பயணம். அவனுடைய அண்ணன் கவுதமும் அண்ணி கலாவதியும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துகொண்டிருக்க, 'லோன்' மூலம் தாம்பரம் பகுதியில் ஒரு 'பிளாட்' வாங்கியிருந்தனர். அவனுடைய வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு 'பிளாட்' காலியாக இருக்க, அதையே வாடகைக்கு எடுத்திருந்தான் கோகுல். 'எம்.காம்' முடித்துவிட்டு 'கிண்டர்கார்டன்' பயிற்சி எடுத்திருந்த சரஸ்வதி, இந்தியா முழுவதும் தன் கிளைகளைப் பரப்பியிருக்கும் 'சீ.பீ.எஸ்.ஈ' பள்ளி ஒன்றில் வேலையில் இருக்கிறாள். கூடவே அவனது வற்புறுத்தலின் பெயரில் அவனுடைய வழிகாட்டுதலுடன் 'சீ.ஏ இன்டர்' வரை தேறி மேற்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறாள் அவள். அவர்கள் மகள் பவித்ராவையும் அவள் வேலை செய்யும் பள்ளியிலேயே சேர்த்திருக்கின்றனர். தாம்பரத்தில் உள்ள அந்த பள்ளியின் கிளைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு மகளுடன் சரஸ்வதி ஒரு மாதம் முன்பாகவே அங்கே சென்றிருக்க, மும்பையில் தன் பணியை நிறைவுசெய்துகொண்டு அவனுடைய மொத்த குடும்பத்தையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறான் கோகுல். நிரந்தர கூடு இல்லாமல் பறந்துகொண்டே இருக்கும் காரணத்தால் இதுவரை சொந்த வீடு என்ற எண்ணம் இல்லாமல் இருந்தவன் அதற்கான காலம் வந்துவிட்டதாகத் தோன்றவும் அதைப் பற்றி அவனுடைய ஜில்லுவிடம் பேசி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். இந்த எண்ணம் அவளுடைய மனதை அதிகம் துன்பப்படுத்தக்கூடும் என்று வருத்தமாக இருந்தது அவனுக்கு. 'ஆனாலும் செய்துதான் ஆகவேண்டும்; வேறு வழி இல்லை புரையோடிப்போயிருக்கும்காயத்திற்குச்சிறு அறுவை சிகிச்சை தேவைதான்' என எண்ணிக் கொண்டான் அவன். சில நிமிடங்களை முகபுத்தகத்தில் விரயம் செய்ய, ஒரு நிலைக்கு மேல் அது அலுப்புத் தட்டவும், எதாவது புத்தகம் படிக்கலாம் எனத் தோன்ற, பாதி படித்துவிட்டு வைத்திருந்த 'வன்முறைக்கு அப்பால்' புத்தகத்தின் நினைவு வந்தது அவனுக்கு. அதை எடுக்கலாம் என்று அவனது 'லேப்டாப்' பைக்குள் கையை விட அவனுக்குத் தட்டுப்பட்டது அவனுடைய 'ஜில்லு'வின் 'டைரி' புன்னகையுடன் அதை அவன் வெளியில் எடுக்க, 'படிக்கலாமா? வேண்டாமா?' என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு. திருமணமான இந்த ஆறு ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான். ஒவ்வொரு வருடமும் அவளுடைய 'நாட்குறிப்பு' வேண்டுமானால் புதிது புதிதாக மாறலாம்! ஆனால் அதில் அவள் எழுதும் அந்த கதை மாறவே மாறாது. அவள் மனதில் வேரூன்றிப் போன அவளது சொந்த கதை. கொஞ்சம் சோகமான கதையும்தான். அந்த கதை அவனுக்குப் புதிதான கதையுமில்லைதான்! இருந்தாலும் அவன் அதைப் படிக்க நினைப்பதற்கு ஒரு காரணம் உண்டு! அது அதன் நடுநடுவே அவள் சிதறவிட்டிருக்கும் அவளது 'காதல்!' அவனுக்கு மட்டுமே சொந்தமான அவளது 'காதல்!' அந்த காதல் 'டைரியை படி!' என அவனைத் தூண்ட அதைப் பிரித்தான் கோகுல்! முத்து முத்தான கையெழுத்தில், 'கூடு தேடும் ஒரு குருவியின் கதை!' என அழகாக வார்த்தைகளைக் கோர்த்திருந்தாள் அவனுடைய 'ஜில்லு' என்னும் சரஸ்வதி! அந்த நாளேட்டில் அவள் வாழ்ந்து வடித்திருக்கும் கதையை தொடர்ந்து படிக்கத்தொடங்கினான் கோகுல். *** எனக்கு பாரதியார் கவிதைகள் நிரம்பப் பிடிக்கும். ஒரு உண்மையைச் சொன்னால் பல வருடங்கள் எனக்குத் துணையாய் நின்றது அவரது கவிதைகளும் ஒரு சில திரை இசை பாடல்களும்தான். பாரதியாரின் கவிதையில் 'காற்று' என்றொரு வசன கவிதை உண்டு. அதில் ஒரு பந்தலில் இரண்டு கயிறுகள் தொங்கிக்கொண்டிருக்கும். ஒன்று சாண் மற்றொன்று முக்கால் சாண் என்ற அளவிலிருந்ததாக பாரதி சொல்லுவார். ஆணும் பெண்ணுமாக உயிர் கொடுத்து அவற்றுக்குப் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்திருப்பர் பாரதி! ஆண் கயிற்றைக் கந்தன் என்றும் பெண் கயிற்றை வள்ளியம்மை என்றும் சொல்லுவார் அவர். ஆணின் காதலையும் பெண்ணின் நாணத்தையும் அதில் அழகாகப் புனைந்திருப்பர் பாரதி. அதைப் படிக்கும்போதெல்லாம் என் அம்மா அப்பாவின் நினைவுதான் வரும் எனக்கு. அவ்வளவு அன்னியோன்னியம் தெரியும் இருவரிடமும். அம்மாவின் சொல்லுக்கு அப்பா இல்லை என்ற வார்த்தையைச் சொல்லியே நான் கேட்டதேயில்லை. அந்த விஷயத்தில் மட்டும் கோகுல் அப்படி இல்லை. நல்லவேளை அப்படி இல்லை! சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவர். அதனால் எல்லாவற்றிற்கும் தலையாட்டும் வழக்கம் அவரிடம் கிடையாது. கோகுலுக்கு என்மீது அத்தனை அன்பு! அப்பாவுக்கு அம்மாவின்மேல் இருந்ததை போல! 'ஆரம்பிச்சுட்டா!' என்ற எண்ணத்துடன் புன்னகைத்துக்கொண்டான் கோகுல். அப்பா கோபால்! சுருக்கமாகக் கோபி! எதோ ஒரு தனியார் கம்பெனியில் சொற்ப சம்பளத்தில் வேலையிலிருந்தார். அதுவும் நிரந்தர வேலை என்றெல்லாம் கிடையாது. என்னுடைய கோகுலிடம் இருப்பது மாதிரி ஒரு கம்பீரம் அவரிடம் இல்லை என்றாலும் அப்பா ரொம்ப அன்பானவர். மறுபடியும் ஒரு புன்னகை கோகுலிடம்! அம்மா வத்சலா! ஒரு 'ஹோம் மேக்கர்' ஒடிசலான தேகத்துடன் சந்தன நிறத்தில் அழகாக இருப்பாள்! அப்பாவின் வருமானத்தில் அப்பாவுடன் சேர்த்து என்னையும் தங்கையையும் நன்றாகவே பார்த்துக்கொண்டாள். குட்டி தங்கை கோமதி! நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது பிறந்தவள். மாம்பலத்தில் ஒரு ஒண்டுக்குடித்தனத்தில் குறைந்த வாடகையில் ஒரு புறாக்கூண்டில் எங்கள் வாழ்க்கை. கோமதியை பள்ளியில் சேர்த்த பிறகு செலவுகள் நீளவும் அதுவரை தனியார்ப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த நான் ஐந்தாம் வகுப்பிற்குப் பிறகு அரசுப் பள்ளிக்கு மாற்றப்பட்டேன்! அதன் காரண காரியமெல்லாம் ஆராயும் வயது அப்பொழுது எனக்கு இல்லை! இப்பொழுது இருப்பதுபோல் இல்லாமல் அரசுப்பள்ளிகளுக்கு மக்களிடம் நல்ல மரியாதை இருந்த காலம் அது. எனவே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. ஓரளவிற்கு எங்கள் சின்னசின்ன ஆசைகளை அம்மாவும் அப்பாவும் நிறைவேற்றி விட அந்த எளிமையான வாழ்க்கையே இன்பம் கொடுப்பதாக இருந்தது எனக்கு. தெளிந்த நீரோடை போல எங்கள் வாழ்க்கை அமைதியாகச் சென்றுகொண்டிருந்தது சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு மனையை அம்மாவின் பெயரில் எழுதிவிட்டு தாத்தா இறந்துபோகும் வரை. தாத்தா இறந்து அவருக்கு செய்யவேண்டிய அந்திம காரியங்கள் முடிந்த கடைசி தினம்தான் அவர் அப்படி ஒரு உயிலை எழுதி இருந்ததே எல்லோருக்கும் தெரிந்தது. தாத்தா தன் சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை என் மாமாவுக்குக் கொடுத்துவிட்டு அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் அவர் வாங்கி போட்டிருந்த மனையை அம்மாவின் பெயரில் எழுதியிருந்தார். அன்று மாமா அம்மாவிடம் போட்ட சண்டையில் அந்த மனையை அம்மாவுக்குக் கொடுக்க அவர் துளியும் விரும்பவில்லை என்பது எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த எனக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அம்மா விட்டுக்கொடுக்காமல் அந்த மனை பத்திரத்துடன்தான் அங்கிருந்து கிளம்பி வந்தாள். அன்று இரவு எல்லோரும் உண்டு முடித்து, அம்மா படுக்கையை விரிக்கவும் நான் அம்மாவை அணைத்தவாறு படுத்துக்கொள்ள அப்பொழுது, 'ஏன் வத்சு! உங்க அண்ணன் இவ்வளவு சாபம் கொடுக்கிறான்! அப்படியாவது அந்த மனை நமக்கு வேணுமா?' எனக் கேட்ட அப்பாவுக்கு, "இல்லைங்க! எங்க அம்மா மட்டும் இப்ப உயிரோட இருந்திருந்தா ரெண்டு கிரவுண்ட் மனையோட இருக்கற அந்த வீட்டிலேயே எனக்கு ஒரு பங்கு வாங்கி கொடுத்திருப்பாங்க! அண்ணா புத்தி தெரிஞ்சுதான் அப்பா இதை ரகசியமா செஞ்சிருப்பாரு! அண்ணாவுக்கு கவர்மண்ட் வேலை வாங்கி கொடுக்க அப்பா நிறையப் பணம் செலவழிச்சாரு! எனக்குப் போட்ட இருபது பவுன் நகையைத் தவிர பெருசா ஒண்ணும் செய்யலியேன்னு அவருக்கு மனசுல குறை. அதனாலதான் இந்த அரை கிரவுண்ட் நிலத்தை நமக்கு கொடுத்திருக்காரு! அவர் அதை அங்க வாங்கிப்போடும்போது அது பத்தாயிரத்துக்கும் குறைவு! இப்ப ஒரு அஞ்சு லட்சம் பெரும் அவ்வளவுதானே!" என நீளமான பதிலைச் சொன்னாள் அம்மா. அப்படியும் அப்பா மௌனமாக இருக்கவும், 'அந்த இடத்துல நாம நமக்குன்னு சின்னதா ஒரு வீடு கட்டணும்ங்க" என அம்மா சொல்லவும், "என்ன வீடா! விளையாட்றயா நீ!" என அதிர்ந்தார் அப்பா. 'தூக்கணாம் குருவி இருக்கு இல்ல; அது ஆணும் பெண்ணுமா சேர்ந்து அதோட அழகான கூட்டை கட்டும்" என அம்மா தொடங்க, "ஐ! குருவி கதை!" என ஆவலாக அம்மாவிடம் ஒன்றிக்கொண்டாள் அப்பாவின் கையை தலையணையாக்கி படுத்திருந்த கோமதி. இரண்டு பக்கத்திலும் படுத்திருந்த எங்கள் இருவரையும் அணைத்துக்கொண்டு, "ஆமாம் கண்ணு; தர்ப்பை புல் தெரியுமா?" என அம்மா கேட்க, 'தெரியாது' என்பதுபோல் உதட்டைப் பிதுக்கினாள் கோமு. 'தாத்தாவுக்குத் திதி கொடுத்தோமே; அப்ப அய்யர் வெச்சிருந்தாரே அந்த புல்தான' என நான் கேட்க, 'கரெக்ட்! அதேதான்' என்ற அம்மா, "அதைக் கொண்டுவந்து அம்மா குருவியும் அப்பா குருவியும் சேர்ந்து அவங்களுக்காக அழகான கூட்டை கட்டும்! பாம்பு மாதிரி ஆபத்தான எந்த ஒரு ஜீவராசியாலையும் அதோட குஞ்சுகளுக்கு எந்த ஒரு ஆபத்தும் வரக்கூடாதுன்னு அந்த கூட்டை தென்னை மரம் பனை மரம் மாதிரி உயரமான மரத்துலதான் கட்டும்' என அம்மா சொல்ல, 'ஹைட்டான மரத்துல பாம்பு ஏறாதாம்மா?' எனக் கேட்டேன் நான். 'அது அந்த மரத்துல இருக்கும் ஓலை இருக்கு இல்ல அதோட நுனியில் கூடு கட்டும் கண்ணு! அங்க பாலன்ஸ் இருக்காது! அதனால பாம்பால அந்த கூட்டுகிட்ட போக முடியாது' என விளக்கினாள் அம்மா. கோமு, ஆர்வமாக 'ம்' கொட்டவும், "அந்த கூட்டுக்குள்ள ஈரமா இருக்கற களிமண்ணைக் கொண்டு வந்து ஒட்டி, நிறைய மின்மினி பூச்சிகளை பிடிச்சிட்டு வந்து அதில் பதிச்சு அந்த கூட்டுக்கு லைட் போடும் அந்த அப்பா குருவி" என்றார் அப்பா அம்மாவின் கதைக்குள் புகுந்து. "அதே மாதிரி அந்த கூட்டுக்குள்ள அதோட குஞ்சுகளுக்கு தனியா ரூம் கூட கட்டும்!" என அம்மா சொல்ல, 'அம்மா நாம வீடு கட்டினா எங்களுக்குத் தனியா ரூம் எல்லாம் கட்ட வேணாம்! இப்ப இருக்கற மாதிரியே எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்' என்றேன் நான். ஏனென்றால் நாங்கள் அப்பொழுது வசித்த வீட்டில் தனியாக அறை என்ற ஒன்றே கிடையாது! ஒரே ஒரு அறை அத்துடன் சிறிய சமையல் அறை அவ்வளவுதான்! குளியல் அறை; கழிப்பறை எல்லாம் அந்த காம்பவுண்டுக்குள் வசிக்கும் எட்டு குடும்பங்களுக்கும் பொதுவாக இருக்கும். எனவே அந்த ஒற்றை அறையே எங்கள் வரவேற்பறை, படுக்கை அறை அனைத்துமாக இருந்தது. சித்தப்பா, அத்தை யார் வந்தாலும் எல்லோரின் படுக்கையும் அங்கேதான். அதனால்தானோ என்னவோ தனியாக ஒரு அறை தேவையற்றதாக எனக்கு தோன்றவே அப்படிக் கேட்டேன்! 'ஆமாம் வத்சு; இப்பவே வீடு கட்டணும்னு முடிவோட இருக்க; நாம இப்ப இருக்கற நிலைமையில சிங்கிள் பெட் ரூமோட கட்டினா போதும் இல்ல' என அப்பா இடையில் புக, 'இல்லைங்க; இன்னும் நிறைய வருஷத்துக்கு அந்த வீட்டுல நம்ம வாழ்க்கை இருக்கு. பிள்ளைங்க சீக்கிரமே வயசுக்கு வந்துருவாங்க; அப்ப எக்ஸ்ட்ரா ரூம் தேவை படும்! அப்பறம் அவங்க படிச்சு வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் வீட்டை இன்னும் பெருசா மாத்தி கட்டிக்கலாம். மாப்பிளைங்க பேரன் பேத்திங்க எல்லாரும் வந்தா தங்கணும் இல்ல!' அவளுடைய கனவுகளை அடுக்கிக்கொண்டே போனாள் அம்மா! அம்மா மனதில் கட்டியது ஆகாசக் கோட்டையெல்லாம் இல்லை. ஒரு சாதாரண மனிதனின் அடிப்படைத் தேவையான ஒரு சொந்த இருப்பிடம்தான். சிறிய கூடு மட்டும்தான். ஆனால் அதுகூட வாய்க்காமல் கருகிப்போனாள் அம்மா அப்பாவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு. அந்த வரியில் கலைந்திருந்த எழுத்துக்களில் படிந்திருந்த அவனுடைய ஜில்லுவின் கண்ணீர் கரை கோகுலின் மனதைச் சுட்டது!

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page