top of page

Poove Unn Punnagayil - 19

அத்தியாயம்-19

மூன்று தளங்களைக் கொண்டு வெகு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த கே.ஆர் லா அசோசியேட்ஸ் அலுவலகத்தின் வரவேற்பில் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தான் சத்யா.


உள்ளே நுழைந்ததும் அங்கே பணியிலிருந்த பெண்ணிடம் அவன் கைப்பேசியில் படம்பிடித்துவைத்திருந்த வக்கீல் நோட்டிஸை காண்பித்து தகவல் சொல்ல, "ஓஹ்... பேமிலி இஷ்யூவா, கே.ஆர் சார் ஜூனியர் யாராவதுதான் அட்டென்ட் பண்ணுவாங்க. கூப்பிடுவாங்க, அதுவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணுங்க" எனக் கொஞ்சும் குரலில் சொல்லவிட்டு அவள் பாட்டிற்கு தன் வேலையைத் தொடர, அரைமணிநேரம் ஆகியும் அவனுக்கு அழைப்பு வந்தபாடில்லை.


எரிச்சல்தான் மூண்டது சத்யாவுக்கு. அங்கே போடப்பட்டிருந்த இருக்கைகள் மொத்தமும் நிரம்பிவழிய, 'இங்க கூட இவ்வளவு கூட்டமடா யப்பா, ஊர் மொத்தம் வம்பும் வழக்குமாதான் இருக்கும்போலிருக்கு!' என்று எண்ணி மலைத்தவாறு தன் கைப்பேசியை குடைய, "மிஸ்டர் சத்யா, உங்கள கூப்பிடறாங்க! ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல, பெருமாள்னு ஒருத்தர் இருப்பாரு. போய் பாருங்க" என்று அந்த பெண் சொன்ன அடுத்த நிமிடம், 'ஷ்..அப்பாடா' என்கிற ஆசுவாசத்துடன் அங்கே சென்றான் சத்யா.


அங்கே வரிசையாகக் கணினிகளுடன் மேசைகள் போடப்பட்டிருக்க, ஆண்களும் பெண்களுமாகப் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தனர்.


'ப்ச்... நல்ல லாயரை பிடிச்சான். தனியா பிராக்டிஸ் பண்ற ஒருத்தரும் இவனுக்கு கிடைக்கல போலிருக்கு' என் கடுப்படித்துக்கொண்டே அங்கே இருந்த ஆபிஸ் அசிஸ்டன்ட்டிடம் "இங்க மிஸ்டர் பெருமாள்னு" என அவன் இழுக்க, அவரை சுட்டிக்காட்டினான் அவன்.


கே.ஆர் சார் ஜூனியர் என்று அவன் நினைத்த அந்த மனிதருக்கே ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும்.


அவருக்கு முன்னே போடப்பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தவன், தான் வந்த காரணத்தைச் சொல்ல, "நோட்டீஸ் எங்க" எனக் கேட்டார் அவர் நீட்டி முழக்கி.


தன் கைப்பேசியில் அதனைக் காண்பிக்க, "ஒரிஜினல் நோடீஸ ஏன் எடுத்தது வரல" எனகுறைபட்டுக்கொண்டே அதைப் பிடுங்கிப் படித்தவர், "மிஸ்ஸர்ஸ் ஹாசினி எங்க?" என அடுத்த கேள்வியைக் கேட்க, "இல்ல, அவங்க வரல" என்றான் சத்யா.


"ப்ச்... அவங்களுக்கு பதில் நீங்க எப்படி பேச முடியும்? ஆமாம் நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?"


அடுத்து கறாராக வந்து விழுந்த கேள்விக்கு, 'யப்பா, இங்கயே இவ்வளவு குறுக்குவிசாரணை செய்யறாங்களே, கோர்ட் கேஸுன்னு போனா... என்னல்லாம் கேட்பாங்க" என மனதில் எண்ணியவன், "நான் அவங்களோட மாமாதான். அவங்க வர மனநிலைல இல்ல. அவசரப்பட்டு ஒரு ரிலேஷன்ஷிப் முறிஞ்சுபோகக்கூடாதேன்னுதான், பேசிப்பார்க்கலாம்னு நானே வந்தேன்” என்றான் சத்யா சுற்றிவளைக்காமல்.


"ரொம்ப நல்லது, அப்பறம் பாருங்க எங்க ஃபெர்ம்ல அதிகமா டைவர்ஸ் கேஸெல்லாம் எடுக்கறதில்ல. ரொம்ப தெரிஞ்சவங்கன்னா மட்டும்தான். மத்தபடி ஒன்லி ப்ராப்பர்டி கேஸஸ்தான். இதுவே ஜீவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஜீவானந்தம் சார் சொன்னாரேன்னுதான் சார் எடுக்க சொல்லியிருக்காங்க" என அவர் சொன்னதும் அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது சத்யாவுக்கு.


'இப்படி ஒரு அவமானம் அத்தானுக்கு தேவையா? ப்ச்... ஜீவன்ல வேலை செய்யறான்னு தெரிஞ்ச பிறகும் இவனுக்கு இந்த பெண்ணை கட்டி கொடுத்தது எவ்வளவு பெரிய தப்பு ச்ச!' என அவன் மனதிற்குள் கொதித்துக்கொண்டிருக்க, "சார், லாயர் சக்திக்குத்தான் இந்த கேஸை அசைன் பண்ணியிருக்கார், சம்பந்தப்பட்டவங்க வேற வரலங்கறீங்க, அவங்க உங்க கூட பேசுவங்களான்னே தெரியலையே" என அவர் இழுக்க, "அப்ப... நீங்க இந்த கேஸை அட்டென்ட் பண்ணலியா" என்றான் அவன் குழப்பத்துடன், "நான் இங்க பீ.ஆர்.ஓ தான். லாயர் இல்ல. நான் எப்படிங்க கேஸ் அட்டண்ட் பண்ண முடியும்" என அவர் சிரித்துக்கொண்டே கேட்க, 'ஐயோ' என்றிருந்தது அவனுக்கு. மனதின் எரிச்சலை மறைத்துக்கொண்டு, "அவங்க இப்ப எங்க இருப்பாங்க, நான் போய் பேசி பார்க்கறேன்" என அவன் கேட்க, "அங்கே இருந்த அட்டெண்டரை கூப்பிட்டு, "சக்தி மேடம் கிட்ட கூட்டிட்டு போ" என அவர் பணிக்க, மூக்கால் அழுதுகொண்டேதான் அவனைப் பின்தொடர்ந்து மூன்றவது தளத்துக்கு போனான் சத்யா.


அங்கே ஜூனியர் வக்கீல்களுக்கென தனித்தனியாக தடுத்து கேபின்கள் போடப்பட்டிருந்தன.


'ஒரு செகண்ட் இங்கயே வெயிட் பண்ணுங்க சார், மேடம் கிட்ட கேட்டுட்டு வந்துடறேன்" என பவ்வியமாக சொல்லிவிட்டு உள்ளே சென்றவன், சில நொடிகளில் திரும்ப வந்து, "உள்ள போங்க சார்" என்றவாறு அங்கிருந்து அகல, அந்த கேபினுக்குள் நுழைந்தான் சத்யா.


அங்கே நிரம்பி வழிந்த ஏசியின் குளுமையுடன் இழைந்து வந்த இனிமையான நறுமணம் முகத்தில் மோதி மனதிற்கு ஒரு புத்துணர்வை கொடுக்க, நேரெதிரே உட்கார்ந்திருந்த பெண்ணிடம் அவனுடைய பார்வை செல்லவும், அப்படியே பனி மழையில் நனைந்தது போல் அவனுடைய உடல் சிலிர்த்து, ஆச்சரியத்தில் அவனுடைய விழிகள் வெளியில் வந்து தெரித்துவிடுவது போல விரிந்தன.


'அட, நம்ம வக்கீலாம்மா' என அவன் மனம் குத்தாட்டம் போட, குனிந்து எதையோ எழுதிக்கொண்டிருந்த சக்தி அவனை நிமிர்ந்து பார்க்கவும், ஒரே ஒரு நொடி மட்டும் ஒரு திகைப்பு அவளுடைய முகத்தில் படர, பொய்யோ எனும்படி அடுத்த நொடிக்குள் அது காணாமல் போய் ஒரு அந்நியத்தன்மை வந்து ஒட்டிக்கொண்டது அவளுடைய பார்வையில். உட்கார் எனும்படியாக அவள் கை காண்பிக்க, அவளுக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் கௌசிக் உட்கார்ந்திருப்பதையே அப்பொழுதுதான் கவனித்தான் சத்யா.


அவனுடைய உற்சாகமெல்லாம் பின்னுக்குப்போக சத்யா வந்து கௌசிக்கின் அருகில் உட்காரவும், ஒரு கடுமை படர்ந்தது அவனுடைய முகத்தில்.


அதை மனதில் குறித்துக்கொண்டே, "உங்க நேம்" என அவனை இதற்கு முன் பார்த்ததை மறந்தேபோன பாவத்தில் அவள் கேட்க, "சத்யநாராயணன், நான் ஹாசினியோட தாய் மாமா" என்றான் அவன் கண்கள் சிரிக்க. 'எஸ், அன்னைக்கு அந்த பெண்ணை பார்த்தோம் இல்ல' என்ற எண்ணத்துடன் அவளுடைய முகத்தை மனதில் கொண்டுவர முயன்றுகொண்டே, "அவங்கதான முக்கியமா வந்திருக்கணும். ஏன் வரல?" எனக் கேட்டாள் சக்தி சற்று கடுமை ஏறிய குரலில்.


'அவள் வரமாட்டாள். ஏனென்றால் அவள் விவாகரத்து கோரும் மனநிலையில் இருக்கிறாள்' என்றா சொல்லமுடியும் அவனால். இப்படிப் பட்ட கேள்விகள் எழுந்தால் எப்படி சமாளிக்கவேண்டும் என அவன் எதையெதையோ தயார்செய்துகொண்டு வந்திருக்க, இந்த அழகான வக்கீலம்மாவை பார்த்ததும் அனைத்தும் மறந்துபோனது சத்யாவுக்கு.


என்ன சொல்வது என அவன் யோசித்துக்கொண்டிருக்க, அதற்குள், "ஒரு வேளை அவ வர விருப்பப்படலன்னாலும், அவங்க அம்மா அப்பாதான வந்திருக்கணும். நீங்க ஏன் எல்லா விஷயத்துக்கும் மூக்கை நுழைக்கறீங்க?" என கௌசிக் முகத்தில் அறைந்தாற்போல அவனிடம் கேட்டுவிட, அவனுடைய முகமே சிறுத்துப்போய்விட்டது.


அதை பார்த்து சக்திக்கே ஒரு மாதிரி ஆகிவிட, தன்னை சமாளித்துக்கொண்டவன், "எங்க அத்தான் பார்த்துவெச்ச மாப்பிள்ளையா மட்டும் இருந்திருந்தா, இந்த அளவுக்கு வரவிட்டிருக்கவே மாட்டார். ஆனா இது நீங்களா தேடிட்ட வாழ்க்கைதான?. என் மருமகளோட லவ் பைலியர் ஆகக்கூடாதுன்னு, இழுத்துப்பிடிச்சு உங்க கல்யாணத்தை செஞ்சுவெச்சதும் நான்தான். இப்ப இந்த கல்யாணம் பாதியிலேயே முடியக்கூடாதுன்னு இழுத்து பிடிக்கறதும் நான்தான். அப்பறம் நான் மூக்கை நுழைக்காம வேற யார் நுழைப்பாங்க" என சத்யா கெத்தாக கொடுத்த பதிலடியில், சக்தியே கொஞ்சம் அசந்துதான் போனாள்.


ஏற்கனவே கடினப்பட்டுப்போயிருந்த கௌசிக்கின் முகம் மேலும் கடுமையாக மாற, "பரவாயில்ல மேடம், நான் என் சைட் பாயின்டஸ் எல்லாம் உங்க கிட்ட சொல்லிட்டேன் இல்ல. கோர்ட்ல கேஸ் பைல் பண்ணிடுங்க. இந்த சமாதான பேச்சுவார்த்தையெல்லாம் வேலைக்கே ஆகாது போலிருக்கு" என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டு, "பேப்பர்ஸ் ரெடி பண்ணிட்டு சொல்லுங்க. நான் வந்து சைன் பண்றேன்" என்றவாறு எழுந்து நின்றான் கௌசிக்.


"நீங்க இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு பேசறது ரொம்ப தப்பு கௌசிக். உங்க ரெண்டுபேரோட வாழ்க்கையும் இதுல அடங்கியிருக்கு" என இறங்கிவந்து சத்யா சொல்ல, "எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம்" என்று சொல்லிவிட்டு கிளம்பியேவிட்டான் அவன்.


சில நொடிகள் மௌனமாக உட்கார்ந்திருந்தவன், "உங்க கட்சிக்காரர் விவரம் புரியாம பேசிட்டு இருக்கார் மிஸஸ் சக்தி. அன்னைக்கு அவர் எங்க வீட்டு பெண்ணை கை நீட்டி அறைஞ்சிருக்கார். நெத்தியில வேற பெருசா காயம் பட்டிருந்துது. அதை அவ செல்பீ கூட எடுத்து வெச்சிருக்கா. செய்யறதையும் செஞ்சிட்டு, இதுவரைக்கும் இவன் ஒரு சாரி கூட கேக்கல. நாங்க போலீசுக்கு போயிருந்தா இவங்க குடும்பத்தோட நிலைமை என்ன ஆகியிருக்கும். டொமஸ்டிக் வயலன்ஸ்னு சொல்லி உள்ள வெச்சிருக்க மாட்டாங்க. நீங்க வக்கீல்தான மிஸஸ் சக்தி. நீங்களே சொல்லுங்க. நானும் எங்க அக்காவும்தான் ஹாசினியையும் அவங்க அப்பாவையும் தடுத்து வெச்சிருக்கோம். அது புரியாம பேசிட்டு இருக்கார் உங்க கட்சிக்காரர்" என அவன் கடுப்புடன் சொல்லிக்கொண்டே போக, ஒவ்வொரு முறை மிஸஸ் சக்தி என்று அவன் சொல்லும்போது அவள் முகம் அஷ்ட கோணலாக மாற, அது, ரணகளத்திலும் ஒரு குதூகலமாக ஒரு சிறு உற்சாகத்தைக் கொடுத்தது அவனுக்கு.


"என்ன, கௌசிக் அவங்கள அடிச்சாரா?” என ஒரு அதிர்வுடன் கேட்டுவிட்டு “ஹொவ் டேர் ஹி இஸ்? அந்தப் பொண்ணு மேல இருக்குற தப்பெல்லாம் மட்டும் லிஸ்ட் போட்டாரே தவிர தான் பண்ண இந்த கீழ்த்தரமான வேலையைப் பத்தி அவர் மூச்சு கூட விடல பாருங்க” என்று உண்மையிலேயே கோபத்தில் கொதித்தவள்,


“எஸ் மிஸ்டர் சத்யா, நீங்க சொன்ன மாதிரி போலீஸ்க்கு போயிருந்தீங்கன்னா அவங்களுக்கு பெரிய தலைவலியாத்தான் போயிருக்கும். யூ நோ சம்திங், இந்த மாதிரியான ஃபேமிலி பஞ்சாயத்து எல்லாம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. அதனாலேயே நான் இந்த டைவர்ஸ் கேஸ்ல எல்லாம் தலையைக் கொடுக்கவே மாட்டேன். ஆனா பாருங்க, 'நீதான் இதையெல்லாம் நல்லா டீல் பண்ணுவ'ன்னுசொல்லி, எங்க சீனியர் இதையெல்லாம் என் பக்கம்தான் தள்ளிவிடுவாரு. இதுகூட மிஸ்டர் கௌசிக் காம்ப்ரமைஸ் போறதுக்காக கேட்கவேதான் இந்த கேசையே எடுத்தோம்” என்றாள் சக்தி ஒரு சலிப்புடன்.


"ஓ மை காட், மிஸ்சஸ் சக்தி, ப்ளீஸ் நீங்க அவசரப்பட்டு எந்த ஒரு டெசிஷனுக்கும் வந்துடாதீங்க. இதுல இவங்க ரெண்டுபேர்ல யார்கிட்ட பிரச்சனைன்னே தெரியல. இல்ல பிரச்சன ரெண்டு பேர் கிட்டயுமே இருக்கான்னும் புரியல! ஒருவேளை ரெண்டு பேரையும் ஒரே இடத்தில் உட்கார வெச்சு நேருக்கு நேர் பேசவெச்சாதான் பிரச்சனை தீருமோ என்னவோ. அதை சொல்லி புரிய வைக்கலாம்னுதான் நான் இங்க வந்தேன். எங்க வீட்டு மாப்பிள்ளை என்னடான்னா முறுக்கிக்கிட்டு போறாரு. இதுக்கு பேரு தான் மாப்பிள்ளை முறுக்கு போல இருக்கு" என அவன் தீவிரமாகச் சொல்ல, அவன் பேசிய விதத்தில் சிறு புன்னகை படர்ந்தது சக்தியின் முகத்தில். "என்ன மிஸஸ் சக்தி, நான் சொல்றது கரெக்ட்தான" என அவன் அப்பாவியாக முகத்தைவைத்துக்கொண்டு கேட்கவும், 'யோவ் நான் ஒன்னும் மிஸஸ் இல்ல, ஸ்டில் என்னோட ஃப்ரீடத்தை மிஸ் பண்ணாத மிஸ்தான்' என்று நாவின் நுனி வரை வந்துவிட்ட வார்த்தையை மிக முயன்று விழுங்கினாள் சக்தி. பின்னே, தானே வலியப்போய் அவனுடைய வலையில் சிக்குவாளா அவள்?


அதற்குள் கதவைத் திறந்து கொண்டு கையில் சில கோப்புகளுடன் உள்ளே நுழைந்தார் ஞானம், அவளுடைய வாகன ஓட்டுநர். அங்கே அவனைப் பார்த்ததும் வியப்பில் அவர் முகம் பிரகாசிக்க, "அட நம்ம சத்யா தம்பி, எப்படி இருக்கீங்க தம்பி? நல்லா இருக்கீங்களா?" என அவர் விகற்பம் இல்லாமல் சரளமாக அவனிடம் நலம் விசாரிக்க சக்தியின் நிலைமைதான் பரிதாபகரமாகிப்போனது.


"பார்த்தீங்களா மிஸஸ் சக்தி, உங்களுக்குத்தான் என்னை அடையாளம் தெரியல போலிருக்கு. ஆனா நம்ம ஞானம் அண்ணா, என்னை எப்படி ஞாபகம் வச்சுட்டு விசாரிக்காறாரு பாருங்க. சூப்பர் அண்ணா நீங்க!" என அவன் அவரை வெகுவாகப் பாராட்டித்தள்ள, உச்சி குளிர்ந்து போன ஞானம் தன்னையும் மறந்து, "தம்பி எங்க சக்தி அம்மாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல. நீங்க என்ன அவங்கள மிஸஸ்ங்கறீங்க" என அவர் வெள்ளந்தியாக உண்மையைப் போட்டு உடைத்துவிட்டு, "அது எப்படி சக்தி அம்மா உங்களை மறந்தாங்க? அவங்க ஞாபகசக்தியை பத்தி உங்களுக்கு தெரியாதே, எங்க கே.ஆர். சார்க்கே செக்ஷன் ஏதாவது மறந்துபோச்சுன்னா, இவங்ககிட்டதான் கேட்பாரு" என சக்தியுடைய ஞாபசக்திக்கு ஒரு பாராட்டுப்பத்திரம் வாசித்தவர், "அன்னைக்கு எனக்கு உடம்பு சரியில்லாம போய், நான் தெரியாம இவர் பைக்கை தட்டிட்டு, இவருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரிக்கு கூட கூட்டிட்டுபோனீங்களே..ம்மா" என சில நொடிக்குள் பிளாஷ் பேக் அனைத்தையும் அவர் ஓட்டிக்காண்பிக்க, "ஐயோ ஞானம் அண்ணா, இப்பதான் ஞாபகம் வருது" என்றவாறு அசடுவழிய தலையில் கை வைத்துக்கொண்டாள் சக்தி, 'சரியான ஓட்டவாய் மாரிமுத்து அண்ணா நீங்க, தனியா சிக்குவீங்க இல்ல அப்ப இருக்கு உங்களுக்கு' என உள்ளுக்குள்ளே அவரை கருவியவாறு.


அவளுடைய முக மாறுதல்களை ரசித்தவாறே ஒரு வெற்றிப் புன்னகை பூத்தான் சத்யா. உள்ளுக்குள்ளே கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய பதிலுக்கு அவனை நன்றாக முறைத்துவைத்தாள் சக்தி. பின்னே அவன் செய்யும் சேட்டைக்கு அவனைப் பார்த்து என்ன ரொமான்டிக் லுக்கா விடுவாள் அவள்?


****************

Some Titbits from upcoming epiosode...


//"பேருக்கு முன்னால இந்த மிஸ் மிஸஸ் எதையாவது ஒண்ணை சேர்த்து சொன்னாதான் உங்களுக்கு தூக்கம் வருமா?" என அவனை முறைத்துக்கொண்டே அவள் கண்டன குரலில் கேட்க, "அது அப்படி இல்லங்க, ஒரு பெண்ணை சட்டுன்னு எப்படி பேர் சொல்லி கூப்பிட முடியும் சொல்லுங்க, நீங்க லாயர் வேற? மேடம்னு கூப்பிட்டா ஒரு வயசான பீல் வருது இல்ல" என அவன் இடக்காகக் கேள்வி கேட்க,//


//"ஒண்ணு தெரியுமா ஹாசினி, இது எங்க அக்காவோட சிம்மாசனம், இதுல உட்கார பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்து போற மனப்பான்மை, சுய சிந்தனை, கொஞ்சம் அதிகமா சுயமரியாதை அப்படிங்கற சில தகுதிகள் வேணும். அதெல்லாம் உன்கிட்ட இருக்கா?" என அவன் கூர்மையாகக் கேட்க, "ஏன், மாம்ஸ்... அதெல்லாம் என் கிட்ட இல்லங்கறீங்களா?" என ரோஷமாக கேட்டாள் ஹாசினி.//

0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page