Nilamanagai - 16 (1) (C)
Updated: Sep 27
நிலமங்கை - 16 (1)
நிதரிசனத்தில்...
மயிரிழையில் உயிர் தப்பியதில் தாமு சற்று அதிர்ந்து போயிருக்க, சில நிமிடங்கள் எதைப் பற்றியும் சிந்திக்க முடியாத அளவுக்கு அவனது மூளை வேலை நிறுத்தமே செய்துவிட்டது.
நான்கு பெரிய ரக கார்கள் மற்றும் பத்து புல்லட்டுகளை நிறைத்திருக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட சிறப்பு பயிற்சிகள் பெற்ற மெய்காப்பாளர்கள் அடடங்கிய பாதுகாப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருக்கிறான் தாமோதரன்.
இவனுக்கு ஒன்றும் செல்வத்துக்கு ஒன்றும், மேலும் அவனது முக்கிய பாதுகாவலர் இருவருக்கும் என லைசன்ஸுடன் கூடிய துப்பாக்கிகளும் வாங்கி வைத்திருக்கிறான்.
வழக்கமாக அவன் எங்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் இல்லாமல் அவன் செல்வதில்லை என்பதுதான் வழக்கமாக இருந்தது.
இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்துக்கொண்டு நிலமங்கையுடன் சகஜமாக நடமாட முடியாது என்கிற ஒரே காரணத்துக்காக, என்று அவள் வெளிநாட்டிலிருந்து திரும்ப வந்தாளோ, அன்றே தன் கான்வாயை தவிர்துவிட்டு தன்னுடைய பாதுகாப்பு வளையத்தை மொத்தமாக தளர்த்திவிட்டிருந்தான்.
அவனுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது தெரியும்தான். ஆனால் எதிரிகள் இவ்வளவு தூரம் கொலை செய்யும் அளவுக்கு இறங்குவார்கள் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம் அந்த அளவு தைரியம் இங்கே யாருக்கும் கிடையாது.
இதை செய்தது யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்து அவனது மூளையைக் குடைந்துகொண்டிருந்தது.
அருகில் நின்றவளை பாதுகாப்பாக தன் கைவளைவிற்குள்ளேயே வைத்தபடி பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னை மீட்டுக் கொண்டவன், விக்ரமை அழைத்து தகவலைச் சொன்னான்.
"அறிவில்ல உனக்கு? எப்படிடா இவ்ளோ லதார்ஜிக்கா உன்னால இருக்க முடியுது. காலையில நீ தனியா டிரைவ் பண்ணிட்டு வந்துருக்கேன்னு சொன்ன பாரு, அப்பவே உள்ளுக்குள்ள ஏதோ நெருடிச்சு" என்று வகையாக அவனை கடிந்து கொண்டவன், "நீ அங்க நடுரோட்டுல தனியா நின்னுட்டு இருக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு இங்க பதைபதைச்சிட்டே இருக்கும், சரி ஜாக்கிரதையா இரு நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்லி அவனை மேற்கொண்டு பேசவே விடாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில், ஒரு மருத்துவர் ஒரு செவிலியர் உட்பட சகல வசதிகளையும் உள்ளடக்கிய, சென்னையில் உள்ள மிகப் பிரபல மருத்துவமனையின் பெயரை தாங்கிய ஆம்புலன்ஸ் ஒன்று அங்கு வந்து நின்றது.
துரிதமாக இருவரையும் அதன் உள்ளே அழைத்துச் சென்று உட்கார வைக்க, "முதல்ல இவங்கள பாருங்க" என்றான் தாமு.
"இல்லல்ல, இவருக்கு தான் நிறைய காயம் இருக்கு அதனால இவர அட்டென்ட் பண்ணுங்க" என்று அவள் அவன் காயங்களைப் பார்த்து அக்கறையுடன் சொல்ல, இப்படி மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருந்தால் தாமதமாகும் என்பதை உணர்ந்து, மறுத்துப் பேசாமல் சிகிச்சைக்கு ஒத்துழைத்தான்.
முதலில் தாமுவின் கையில் ஏற்பட்டிருந்த காயங்களை சுத்தம் செய்து ஆங்காங்கே பேண்டைட் போட்டுவிட்டு, அவளுடைய காயங்களுக்கும் மருந்து தடவி, நெற்றியில் பிளாஸ்டர் ஒட்டி, மருத்துவரும் செவிலியரும் இருவருக்கும் ஊசியையும் செலுத்தினர். போதும் போதாத குறைக்கு சில மாத்திரைகளை வேறு கொடுத்து உட்கொள்ள வைக்க, சார் சார் என வரிசையாக வந்து நின்ற வாகனங்களிலிருந்து இறங்கிய, சீருடை அணிந்த பாதுகாவலர்கள் பத்துபேர், அந்த ஆம்புலன்ஸை வந்து சூழ்ந்து கொண்டனர்.
அந்த நொடிவரைக்கூட தைரியமாக இருந்த நிலமங்கைக்கு இந்தக் கூட்டத்தை பார்த்ததும் ஒரு மாதிரி படபடப்பாகிப்போனது.
"டென்ஷன் ஆவாத, என் பிரண்ட் விக்ரமோட கான்வாய்… எமர்ஜன்சிக்கு அனுப்பியிருக்கான்" என்றவன், 'பாத்தியா என்னோட பவர' என்பதுபோல கெத்தாக தன் மீசையை முறுக்கிவிட்டபடி மிதப்பாக அவளை ஒரு பார்வை பார்க்கவும், மிகவும் முயன்று தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொண்டவள், அவனுடைய கரத்தை அழுத்தமாகப் பற்றிக் கொண்டாள்.
அவளுடைய முக குறிப்பை பார்த்து, 'என்ன ரியாக்ஷன் இது, இப்படி நம்மள கன்ப்யூஸ் பண்றாளே?' என என்னதான் நினைக்கிறாள் என்று எதையுமே அனுமாணிக்க முடியாமல் தவித்தான் தாமோதரன்.
முதலில் வீடு போய் சேர்ந்தால் போதும் என்று தோன்ற, "முடிஞ்சுருச்சுதான டாக்டர்" என்று அவன் கேட்க, "ஓவர், உங்களுக்கு எதுவும் டிஸ்கம்ஃபர்ட்ஸ் இல்லனா நீங்க வீட்டுக்கு போகலாம். இல்லனா ஹாஸ்பிடல் போய் ஒரு ஒன் டே அப்சர்வேஷன்ல இருக்கீங்களா?" என அந்த மருத்துவர் கேட்க, "நோ… நோ… ஹைலி இம்பாசிபிள்" என்று மங்கையும், "நோ நீட் டாக்டர், வீ ஆர் பர்பெக்ட் லி ஆல் ரைட்"என்று தாமுவும் ஒரு சேர சொல்லிவிட்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அதைப் பார்த்து புன்னகைத்த மருத்துவர், "தென் ஃபைன்" என்று இங்கிதமாக ஒப்புக்கொள்ள, இருவரும் அந்த ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறங்க, அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
சரியாக அதே நேரம் அவர்களை நெருங்கி வந்து நின்றது அந்தப் பக்கமாக கடந்து போன காவல்துறையின் ரோந்து வாகனம்.
அங்கே ஓரமாக, விபத்துக்குள்ளான அவனது வாகனம் வேறு இருக்க, இந்த கொலை முயற்சியை பற்றி காவல்துறைக்கு எந்தத் தகவலும் செல்ல வேண்டாம் என முடிவு செய்தவன், காவல் துறை அதிகாரி இறங்கி வந்து கேள்வி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தபடி இருக்க, அந்த வாகனத்தில் இருந்து இறங்கி வந்த அதிகாரி அவனுக்கு பரிச்சயமானவராக இருக்கவும் அவனுக்கு வசதியாகப் போனது.
"ஹாய் மிஸ்டர் டீஜே, ஆக்சிடென்ட் மாதிரி இருக்கே, யாரோ என்னவோன்னு நெனச்சிட்டு வந்து பார்த்தா நீங்க நின்னுட்டு இருக்கீங்க. வண்டி பிரண்ட் சைடு ஃபுல்லா டேமேஜ் ஆகியிருக்கு. யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லையே" என்று சரமாறியாக கேள்விகளை கேட்ட அந்த அதிகாரியின் முகத்தில் அதிர்ச்சி ரேகை படர்ந்திருந்தது. அவருடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதால், இவனுக்கு பெரிதாக எதுவும் நடந்திருந்தால் மேலிடத்திலிருந்து அவரை குடைந்தெடுத்து விடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்.
"நத்திங் மிஸ்டர் செந்தில், நானும் என் வைஃபும் மட்டும்தான் வண்டியில இருந்தோம். ரெண்டு பேரும் சேஃப். ஒரு கன்டெய்னர் லாரிக்காரன் தட்டிட்டு, பயத்துல நிறுத்தாமல் போயிட்டான். ஹிட் அன்ட் ரன் கேஸ் தான். இன்ஃபேக்ட் இவங்க எல்லாருமே ஜஸ்ட் இப்பதான் வந்தாங்க" என்றான் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல்.
"வண்டி நம்பர் எதுவும் நோட் பண்ணிங்களா" எனக் கேட்டார் அந்த அதிகாரி.
"இல்ல, ஷாக்ல இருந்ததுனால நோட்டீஸ் பண்ணல. இந்த ரீஜின்ல ஏதாவது சர்வைலன்ஸ் கேமரா இருந்தா நீங்கதான் செக் பண்ணி சொல்லணும், அது கூட யார் என்னன்னு தெரிஞ்சுக்கதான் மத்தபடி நான் எதுவும் கம்ப்ளைன்ட் பண்ண விரும்பல, ஐ மீன் இத பத்தி எதுவும் எந்த ரெக்கார்ட்லயும் வரக்கூடாது. பிகாஸ் இதையெல்லாம் ஹேண்டில் பண்ற அளவுக்கு எனக்கு இப்ப டைம் இல்ல" என்று சொல்ல, "புரிஞ்சுது சார், பட் இந்த ஆக்சிடென்ட் ஆன வெகிகிள்" என்று அந்த அதிகாரி இழுக்க,
"ஹாங், நாங்களே ரெக்கவரி பண்ணிக்கிறோம், யூ நீட் நாட் பாதர்" என்று அவன் அழகாக அவருக்கு பதில் கொடுக்க, வைத்த கண் வாங்காமல் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலமங்கை.
இது கொலை முயற்சி என்று அவளுக்குதான் நன்றாகவே புரிகிறதே! தனக்கு விளங்கிய இந்த விஷயம் இவனுக்குப் புரியாமலா இருக்கும்? இருந்தும் ஏன் இப்படி சொல்லி வைத்தான் என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது. ஒரு விதத்தில் இவன் இதை பெரிது படுத்தாமல் விட்டது அவளுக்கு ஒரு சிறு ஆசுவாசத்தைத்தான் கொடுத்தது.
இப்படி கண்டும் காணாமலும் விட்டதுபோல தோன்றினாலும், தனிப்பட்ட முறையில் அதற்கு பின்னால் இருப்பவர்களை கண்டுபிடித்து அவர்களை தொங்கவிட்டு உரிப்பான் அவன் என்பதை அவள் அந்த நேரம் அறியவில்லை.
அதற்கு மேல் எந்தக் கேள்வியும் கேட்டுக் குடையாமல் அந்த காவல்துறை அதிகாரி விடைப் பெற்று கிளம்பினார்.
இதற்கிடையில் ரெக்கவரி வாகனமும் வந்து, உடைந்து நொறுங்கி இருந்த அவனது காரை அள்ளிப்போட்டு எடுத்துச் செல்ல, இப்படி ஒரு பெரும் விபத்து நடந்ததற்கான ஒரு சிறு அடையாளம் கூட இல்லாமல் மாறிப் போனது அந்த இடமும் சூழ்நிலையும்.
மின்னல் வேகத்தில் இவ்வளவு துரிதமாக நடந்தேறிய ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, இவனைப் பற்றி தான் அறிந்து வைத்திருப்பது கொஞ்சம்தான் அறியாதது அதிகம் என பிரமித்து போய் நின்றிருந்தாள் நிலமங்கை.
"ஷெல் வீ மூவ் சர்" என அவனுடைய அந்த பாதுகாப்பு குழுவின் தலைமை அதிகாரி மிகப் பணிவுடன் கேட்கவும், "யா, ஷ்யூர்" என்றவன் அவர் காண்பித்த வாகனத்தில் அவளுடன் போய் அமர்ந்தான்.
இரண்டு பேருமே அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி, பொன்மருதம் நோக்கிப் பயணப்பட்டனர்.
அவர்கள் ஊரை விட்டுச் சற்று தள்ளி, முக்கிய சாலையின் மீதே, அவனுடைய அலுவலக ரீதியான பயன்பாட்டிற்காக ஒரு மிகப்பெரிய விருந்தினர் மாளிகையை கட்டி வைத்திருந்தான் தாமு.
அந்த எல்லை வரை மட்டுமே அவனது பாதுகாப்புப் படைக்கு அனுமதி. அவனுடைய ஊர் அவனுடைய கோட்டை என்பதால் அங்கே அவனுக்கு எதராக ஒரு சிறு துரும்பு கூட அசையாது என்பது அவனது அசைக்க முடியாத நம்பிக்கை.
எனவே, வழக்கம் போல அங்கே வந்து இறங்கிக் கொண்டவன், சில நிமிட ஓய்வுக்கு பின் விக்ரமின் ஆட்களை திரும்ப அனுப்பிவிட்டன்.
அடுத்த வேலையாக அவனுடைய பாதுகாப்புக் குழு தலைமை அதிகாரிக்கு அழைத்து அவனது மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் அங்கே வந்துவிடும்படி சொல்லிவிட்டு துண்டிக்க, அடுத்த நொடி செல்வத்திடமிருந்து அழைப்பு வரவும், “சொல்லுடா” என்றபடி அதை ஏற்றான்.
“இன்னாண்ணா இப்படி ஆயிடுச்சு? நீ அம்மாந்தொலவு போவப் போறேன்னு ஒரு வர்த்த சொல்லிருக்கலாம் இல்ல?” என்று எதிர் முனையில் அவன் அங்கலாய்க்க, “டேய் நீ வேற, யாரு விக்ரம் சொன்னானா” என இவன் சலிக்க, “பின்ன, எப்புடி நீ அவுங்க ரெண்டு போரையும் இப்புடி தனியா போக வுட்டன்னு சொல்லி என்ன லெப்ட் ரைட்டு வாங்கிடுச்சு. ஏண்ண இப்படி செஞ்ச” என்று செல்வம் விடாமல் புலம்ப, “அதான் பத்துரமா வந்து சேந்துபுட்டோம் இல்ல, வுட்ரா. தட்டிட்டு போனவன் யாரு என்னன்னு விசரிக்க சொல்லியிருக்கேன். அத மட்டும் என்னனு கவனி” என்றவன், “இத பத்தி வூட்டுல யாருக்கும் எதுவும் தெரியக் கூடாது சொல்லிட்டேன்” என அவனை எச்சரித்தே அழைப்பிலிருந்து விலகினான்.
அதன் பின் மங்கையை அழைத்துக் கொண்டு தன் இருசக்கர வாகனத்தில் வீடு வந்து சேர்ந்தான்.
*****
அவர்களுக்கு விபத்து நடந்த அந்தச் செய்தி பற்றி இரண்டு குடும்பத்தினருக்குமே தற்சமயம் ஏதும் தெரிய வேண்டாம் என்று முடிவு செய்தவர்கள் அவர்கள் அங்கே வந்த சுவடே தெரியாமல் நேராக மாடிக்குக் சென்று விட்டனர்.
கதவைத் திறந்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவன் முதல் காரியமாக தன் கைகளில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்டர்களை ஒவ்வொன்றாக பிய்த்து எடுத்தான்.
அதைப் பார்த்துவிட்டு, "ஐயோ நீ இன்னா பண்ற தாமு, இத போய் இப்படி வெடுக்கு வெடுக்குன்னு பிக்கற. நோவெடுக்கப் போவுது" என்று மங்கை பதற, "இதோட போயி உன் அத்தைக்கு முன்னால நின்னன்ணு வை, அழுது ஊர கூட்டிப்புடும். வேர்த்து ஒழுவற வேர்வைல இதெல்லாம் ஏற்கனவே பாதி பிச்சுகுனு தொங்குது, அதனால தொட்ட உடனே கையோட வந்துருச்சு பாரு. நோவலாம் செய்யல நீ கவலப்படாத" என்று சொல்லிக்கொண்டே தான் அணிந்திருந்த டி ஷர்ட்டை கழற்றி சோபாவில் எறிந்தான்.
ஆணோ பெண்ணோ விருந்தாளி போல வந்து போவோர்கள் எதிரில் வேண்டுமானால் நாகரிக சாயத்தை பூசிக்கொள்ளத் தோன்றுமே தவிர, பிறந்தது முதலில் இதே வீட்டிலேயே வளர்ந்து இவர்கள் வாழ்க்கையில் அங்கமாகிப்போன மங்கையிடம் என்றுமே அவன் நாசூக்காக நடந்து கொண்டதில்லை.
மேல் சட்டை அணியாமல் இடுப்பில் ஒரு லுங்கியையோ வேட்டியையோ சுற்றிக்கொண்டு அவன் வீட்டில் வளைய வரும் சமயங்களில் எவ்வளவோ நாள் மங்கை அங்கேயேதான் இருந்திருக்கிறாள். கிராமத்து விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இதெல்லாம் சங்கடமான விஷயம் ஒன்றும் கிடையாது.
ஆனாலும்…
நாள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சியுடன் சேர்ந்து உழைப்பின் உரம் ஏறிய அவனது திரண்ட தோள்களும், திண்ணிய மார்பும், வற்றிய வயிறும், களையான முகத்தை இன்னும் கவர்ச்சியாக காட்டும் அவனது அடர்ந்த மீசையும் என ஒவ்வொன்றும் அவனது ஆண்மையின் கம்பீரத்தை அவனுடைய மங்கையின் கருத்துக்கு விருந்தாக்க, சில நொடிகள் அவனிடமிருந்து தன் பார்வையை திருப்ப முடியாமல் திண்டாடிப் போனவள் கண்கள் கூசியது போல இமைகளைத் தழைத்துக் கொண்டாள்.
அவள் தன்னையே பார்ப்பதை கவனித்து விட்டு 'என்ன?' என்பது போல் அவன் புருவத்தை உயர்த்த, க்ஷன நேரத்தில் நடந்துபோன இந்த சம்பவத்தில் அவளுடைய முகம் சூடாகி சிவந்து போனது.
அவன் இருந்த மனநிலையில் முதலில் இதை கவனிக்காமல் போனாலும் அவளிடம் ஏற்பட்ட மாறுதலை உணர்ந்த பிறகு சிறகில்லாமல் வானத்தில் பறந்தான் தாமோதரன்.
அவனுடைய விரிந்த புன்னகை அவன் உணர்ந்த செய்தியை அவளுக்கு உணர்த்த, அதற்கு மேல் அந்த இடத்தில் நிற்கக் கூட முடியாதவளாக வேகமாக அறைக்குள் போனவள், குளியல் அறைக்குள் புகுந்து கதவை தாளிட்டுக் கொண்டாள்.
எதிர்பாராத நேரத்தில் திடீரென்று உண்டான அந்த மாயவலை சொற்ப நேரத்துக்குள் அறுபட்டு போனதில் பாவம் தாமோதரனுக்குதான் சற்று ஏமாற்றமாகவும், ‘இந்த ஆயுள் முடியும் வரை இவள் தன்னை நெருங்கவே மாட்டாளா?’ என அதிக ஆயாசமகவும் இருக்க, ஒரு நீண்ட பெருமூச்சு எழுந்தது.
கதவைத் தள்ளிக்கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தவன் சலிப்புடன் அப்படியே கட்டிலில் சரிந்தான். அவனது ஒவ்வொரு அணுவும் நிலமகையின் ஆலிங்கனத்துக்காக ஏங்கித் தவித்தது.
*****

Hi Friends...
Thank you all for all your support. Kindly Share your valuable comments.
இந்த அத்தியாயத்தின் அடுத்த பகுதியுடன் விரைவில் வருகிறேன்.