En Manathai Aala Vaa 43
Updated: Nov 8, 2022
மித்ர-விகா-43
ஆதவனின் கிரணங்கள் ஜன்னலில் பதித்திருந்த கண்ணாடியை ஊடுருவி அவர்களுடைய அறை முழுவதும் மஞ்சள் நிற ஒளிக் கற்றைகளை வாரி இறைக்க, அதன் இளம் சூடு அந்த அறை முழுவதும் ஆக்ரமித்திருந்த ஏசி யின் குளிரில் கரைந்து கொண்டிருந்தது.
முதலில் கண்விழித்த மித்ரன், பூனைக் குட்டி போல அவனது கை வளைவுக்குள் சுருண்டிருந்த அவனுடைய அஜூபாவை உணரவும் அவனது இதழ்களில் ஒரு மந்தகாச புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
பல முறை கடுப்புடன் நினைத்திருக்கிறான் 'இப்படி சிங்கம் மாதிரி சிலுப்பிட்டு நிக்கறவள இந்த அன்பு ஏன் இப்படி பப்பி பப்பின்னு கொஞ்சறான்?' என்று.
இப்பொழுதுதான் உணர்ந்தான் அவன் எதிரிலிருப்பவரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி அவளென்று. நாம் என்ன கொடுக்கிறோமோ அதை அப்படியே நமக்குத் திருப்பி கொடுப்பவள் அவள் என்று.
அவளை அப்படியே மென்மையாகத் திருப்பியவன் ஆவலுடன் அவளது முகத்தைப் பார்க்க, ஆழ்ந்த உறக்கத்திலிருத்தலும் அன்றலர்ந்த புது மலர் போல் அவ்வளவு மென்மையுடன் தெளிவாக இருந்தது அவளது முகம்.
மருத்துவமனையில் மயக்கத்திலிருக்கும் பொழுது, கண்களுக்குக் கீழ் கருவளையம் சூழ்ந்திருக்க, வேதனையின் சாயல் மண்டிக் கிடந்த அவளுடைய முகம்தான் நினைவில் வந்தது அவனுக்கு.
இப்பொழுது முற்றிலும் மீண்டிருப்பதாகவே தோன்றினாலும் ஓரத்தில் கொஞ்சமாக ஒரு பயம் தோன்றி அவனது நெஞ்சை அடைத்தது. டாக்டர் அகிலாவிடம் அவ்வளவு வீராப்பாகப் பேசிவிட்டு, கட்டுப்பாடுகளை இழந்து இப்படிச் செய்துவிட்டோமே என்றுதான் உறுத்தலாக இருந்தது அவனுக்கு.
என்னதான் அவள் இசைந்து கொடுத்தாள் என்றாலும் தான் அவசரப்பட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது அவனுக்கு. இவ்வளவு தூரம் போராடி அவளுடன் இப்படியான ஒரு இனிமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டது ஒன்றும் பெரிதில்லை, நண்பன்... காதலன்... கணவன்... இந்தப் பரிமாணங்களையெல்லாம் தாண்டி சாமிக்கண்ணு அய்யாவைப்போல அன்புவைப்போல அவளது அப்பாவைப்போல அவளுடைய மதிப்பிற்குரிய ஆண்மகனாகவும் இருக்க வேண்டும் என அவனுடைய நெஞ்சம் அடித்துக் கொண்டது.
அவளை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்பதினால் இல்லை, அவனை அவளுக்குப் பிடித்திருக்கிறது என்கிற ஒரே காரணத்தினால் தன்னை விட்டுக்கொடுக்க இயலாமல்தான் திரும்ப சரிசெய்ய இயலாத தன் தவறுகளையெல்லாம் மறந்து அவள் தன்னை ஏற்றுக்கொண்டிருக்கிறாள் என்பது தெளிவாக மனதிற்குப் புரிய, அவள் வாழ்க்கையில் தான் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும் என்கிற வெறியே உண்டானது அவனுக்கு
அவளிடம் பேசினால்தான் மனம் கொஞ்சம் தெளிவடையும் என்று தோன்ற, போய் பல் துலக்கி முகம் அலம்பிக்கொண்டு வந்தவன், இன்னும் அவள் உறக்கம் தெளியாமல் இருக்கவும் அவளுடைய மென் பஞ்சு கன்னத்தில் அழுந்த தன் இதழைப் பதித்தான் மித்ரன்.
கன்னம் உணர்ந்த ஈரத்தைப் புறங்கையால் துடைத்தவள், கொஞ்சமும் அசராமல் தன உறக்கத்தைத் தொடர, அவளை வம்பிழுக்கும் நோக்கத்துடன் தன் கைப்பேசியை இயக்கினான் அவன்.
"பாப்பா, எழுந்திரு... நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. கல்யாணம் ஆனவ, கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க வேணாம்?" என அவளுடைய அன்னையின் குரல் ஒலித்தது அதில்.
திருமணம் முடிந்து மறுவீட்டுக்கு அங்கே சென்றிருந்த சமயம் இப்படி ஒரு காட்சியைக் காணொலியாகப் பதிவு செய்து சாத்விகா அவனுக்கு அனுப்பியிருந்தாள். அதை உபயோகப் படுத்தினான் அவன் அவ்வளவே.
அம்மாவின் குரலில் பதறி எழுந்தவள் அரள மிரள சுற்றும் முற்றும் பார்க்க, வாய் விட்டுச் சிரித்தவன், 'அப்பா... இப்பவாவது எழுந்தியே” என்றவாறு தன் கைப்பேசியை அவளுக்கு முன் ஆட்டி, "உங்க அம்மாவோட குரல் செய்த மாயமோ" எனக் கவியரங்க பாணியில் பேச, அவனை முறைத்தவள், "இன்னும் நீங்க அந்த வீடியோவை டெலீட் பண்ணலியா?" என்று கடுப்புடன் கேட்டுக்கொண்டே அந்தக் கைப்பேசியைப் பிடுங்க முயலவும், சட்டென அதை மற்றொரு கைக்கு மாற்றியவன், இங்கேயும் அங்கேயுமாக அவளுக்குப் போக்குக் காண்பிக்க, அதில் மேலும் கடுப்பாகி அவள் தன் முயற்சியை அதிகரிக்க, தொடங்கிய நோக்கம் மறந்து, அது சின்ன சின்ன அணைப்பிலும் குட்டிக் குட்டி முத்தங்களிலும் போய் முடிய, அந்தக் காலை மிக மிக இனிமையாகத் தொடங்கியது இருவருக்கும்.
நேரம் காலம் உணர்ந்து மனதே இல்லாமல் அவளை விடுவித்தவன், "சீக்கிரம் கிளம்பு அஜூபா. மந்த்லி சேல்ஸ் ப்ரோமோஷன் மீட்டிங் இருக்கு" என்றான் தன்னை சமன் செய்துகொண்டு.
கடுப்புடன் அவனைப் பார்த்து, "யோவ்... போய்யா" என்றவள், "எனக்கு தூக்கம் வருது. சோறு தண்ணிய விட எனக்கு தூக்கம்தான் முக்கியம். நான் இன்னைக்கு லீவுன்னு என்னோட கம்பெனிக்கு நீங்களே மெயில் போட்டுடுங்க" என்றவள் படுக்கையில் சரிந்து தன் உறக்கத்தைத் தொடர, அவனுக்கும் அவளை எழுப்ப மனமில்லைதான்.
ஆனால் முக்கிய வேலை இருக்க, அதைவிட அவளிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் வேறு தீவிரமாய் இருக்க, "அடியேய் அஜூபா. உனக்கு லீவ் சேங்ஷன் பண்றவங்க யார் இருகாங்க அங்க. பாஸே நீதாண்டி” என்றவன், "நீ உடனே எழுந்து ரெடியாகல, இப்ப நிஜமாவே உங்க அம்மாவுக்கு ஃபோன் பண்ணுவேன்" என அவளைத் தீவிரமாக மிரட்டியவாறே அவளுடைய கையைப் பற்றி அவளைத் தூக்கியவன் அவளைக் குளியலறையில் தள்ளி கதவைச் சாற்றிவிட்டு, தலையைச் சிலுப்பி, "நிஜமாவே நீ ஜகன்மோகினிதான்டீ" எனக் கத்திச் சொல்லியவாறே அங்கிருந்து சென்றான் மித்ரன்.
அவன் சொன்ன விதத்தில் அப்படி ஒரு சிரிப்பு பீறிட்டு கிளம்பியது மாளவிகாவுக்கு. "டீ.டீ" என்றாள் அவள் கொஞ்சலாக. அந்த 'டீ.டீ' என்பது இப்பொழுது 'தித்திக்கும் தீ' என்று மாறியிருந்தது அவளுடைய அகராதியில்.
***
ஒருவாறாகக் கிளம்பி அலுவலகம் நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள் இருவரும்.
அவனே வாகனத்தை நிதானமாகதான் செலுத்திக்கொண்டிருந்தான். மேலும் போக்குவரத்து வேறு அதிகமாகிக் கொண்டிருக்க, வாகனம் ஊர்ந்து செல்லத் தொடங்கியது.
இப்படி இருந்தால், வழக்கமாக பொறுமை காற்றில் பறக்க எரிச்சல்தான் உண்டாகும் அவனுக்கு. ஆனால் மாளவிகாவுடனான பயணங்களில் அந்தக் காத்திருத்தலும் தாமதமும் கூட பிடித்துதான் போனது. அதுவும் இன்று அது அவனுக்கு அனுகூலமாகவே இருந்தது.
ஆனால் எப்படி பேச்சைத் தொடங்குவது என அவன் யோசனையுடன் இருக்க, அவன் முகத்தைப் பார்த்தவள், "லேட் ஆகுதேன்னு டென்ஷனா? மீட்டிங்கை வேணா கவி அண்ணா கிட்ட சொல்லி ஒரு ஒன் ஹார் போஸ்ட்பாண் பண்ண சொல்லலாமா?" என அவள் கரிசனையாய் கேட்க, உடனே கவியை அழைத்து அவள் சொன்னபடி ஒரு மணி நேரம் அந்த சந்திப்பைத் தள்ளி வைத்துவிட்டு பின் , "ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நீ ஸ்ட்ரெஸ் ஆக மாட்ட இல்ல?" எனக் கேட்டான் அவன் சிறு தயக்கத்துடனேயே.
அப்படி என்ன சொல்லப் போகிறான் என்ற ஆவல் உண்டாக, "சொல்லுங்க. ஸ்ட்ரெஸ்லாம் ஆக மாட்டேன்" என்றாள் அவளும் வெகு இயல்பாக.
அவனை எச்சரிக்கும் விதமாக மருத்துவர் அகிலா அன்று அவனிடம் சொன்ன அனைத்தையும் அப்படியே சொன்னவன், "இதெல்லாம் தெரிஞ்சேதான் நம்ம கல்யாணம் நடந்தது. இருந்தும்... அது... இப்படி" என அவளுடைய முகத்தைக் கூட பார்க்க முடியாமல் அவன் வெகுவாகத் தயங்க, அவனுடைய அந்தத் தயக்கம் அவளுக்கு சிரிப்பை வரவழைக்க, "எனக்கு அந்த மாதிரி பிரச்சனையெல்லாம் ஒண்ணும் இல்ல" என்றாள் அவள் பளிச்சென்று.
ஒரு வியப்புடன் அவளுடைய முகத்தை அவன் பார்க்கவும், அவளுடைய முகத்தில் படர்ந்திருந்த சிவப்பு அவள் சொன்னது உண்மைதான் என அவனுக்குச் சொல்லாமல் சொல்ல, "அப்படின்னா அவங்க ஏன் அந்த மாதிரி சொன்னாங்க?" என்று கேட்டான் அவன் குழப்பமான மனநிலையில்.
பேச்சைத் தொடர இயலாமல் சில நொடிகள் சாலையை வெறித்தவள், "உண்மையிலயே, டெல்லில இருந்து திரும்ப வரும்போது, நீங்க பிரபோஸ் பண்ணது எனக்கு ரொம்பவே பிடிச்சுது. ஹாப்பியா இருந்துது. அப்ப நீங்க சொன்னதையெல்லாம் முழுமையா நம்பினேன். உங்கப் பேச்சை நிச்சயம் நீங்க காப்பாத்துவீங்கன்னுதான் எனக்கு தோணிச்சு. அதனாலதான் நீங்க வாங்கி கொடுத்த ட்ரெஸ்ஸை கூட நான் போட்டேன்" என்றவள் அவனை ஒரு பார்வை பார்க்க, "ம்... சொல்லு" என்றான் அவன்.
"ஆனா சரவணனை கூப்பிட்டு வெச்சு நீங்க மிரட்டின விஷயம் எனக்கு தெரிஞ்ச பிறகு, அந்த நம்பிக்கை மொத்தமும் தூள்தூளா உடைஞ்சு போச்சு. உங்க இன்டென்ஷன் வெறும் செக்ஸ் மட்டும்தான்னு தோணிச்சு. நீங்க சொன்ன மாதிரி என்னை கல்யாணம் செஞ்சுட்டாலும் அது செக்ஸுக்காக மட்டுமே இருக்கும்னுதான் என்னால நினைக்க முடிஞ்சுது. ரொம்ப ஆக்வர்டா ஃபீல் பண்ணேன்.
அதனாலதான் எந்த ஒரு சூழ்நிலையிலயும் என் ஸ்டாண்ட்ல இருந்து என்னால கொஞ்சம் கூட இறங்கிவர முடியல. அதுக்கு என்னோட தன்மானம் இடம் கொடுக்கல. மனசுக்குள்ளேயே ஒருவித போராட்டம்" சொல்லும் பொழுதே தொண்டை கமறியது அவளுக்கு.
"ஆரம்பத்துல என் மனநிலை அப்படிதான் இருந்தது. ஆனா அது கொஞ்சம் கொஞ்சமா மாறிப்போச்சு. நாம சாமிக்கண்ணு அய்யா வீட்டுக்குப் போனோமே அன்னைக்குதான் என்னால நீ இல்லாம வாழவே முடியாதுன்னு தோணிச்சு" என்றான் அவன் மனதை மறைக்காமல்.
சொல்லிக்கொண்டே அவன் தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்ட, அதை வாங்கி ஒரு மிடறு பருகிவிட்டு, "ம்... இப்ப... எனக்காக எப்படி உங்களால இந்த அளவுக்கு மாற முடிஞ்சதுன்னு ஆச்சரியமாதான் இருக்கு" என்றவள், "ஸ்கூல் டேஸ்லேயே எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்... நான் உங்களோட டை ஹார்ட் ஃபேன் தெரியுமா?!" என்று அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லி அவனை வியப்பில் ஆழ்த்தி, "நம்ம கம்பெனில இருந்து வேலையை விட்டுட்டு வந்த பிறகு எப்படியோ ஒரு மாசத்தை ஓட்டிட்டேன். ஆனா எல்லா இடத்துலயும் உங்க ஃபோட்டோஸ். டீவிலயும் உங்கள காமிச்சிட்டே இருந்தாங்களா? ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் அதிகமாயிடுச்சு. ஒரே நாளுக்குள்ள அசிடிட்டி அதிகமாகி கஷ்டமா போச்சு. ஆஃபிஸ்ல உட்கார கூட முடியல" என்றாள் அவள் பரிதாபமாக.
'எல்லாம் தன்னால் வந்த வினை' என்பது புரிய அவளுடைய கையை அழுந்தப் பற்றிக்கொண்ட மித்ரன் "சாரி... என்னாலதான?" என்றான் உள்ளே போன குரலில். 'இல்லை' என்று பொய் சொல்லாமல், 'ஆமாம்' என்றும் ஆமோதிக்கவும் செய்யாமல் தொடர்ந்தாள் மாளவிகா.
"அதனால ஆஃபிஸ்ல இருந்து நேராவே போய் அகிலா மேம்மை பார்த்தேன். அவங்கதான் முதல்ல இருந்தே எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கறாங்க. அதனால இன் அண்ட் அவுட் அவங்களுக்கு என்னைப் பத்தி எல்லாமே தெரியும்.
கொஞ்சம் மெடிசின்ஸ் எழுதிக் கொடுத்துட்டு அடுத்த நாள் கவுன்சிலிங்காக வரச் சொன்னாங்க.
அப்ப பேசும்போது உங்களைப் பத்தி எல்லாத்தையும் சொல்லிட்டேன். எல்லாம் தெரிஞ்சும் உங்களை ரொம்ப பிடிக்குதுன்னு சொன்னேன். மறக்கவே முடியலன்னு சொன்னேன்.
அப்ப கூட உங்களை மறக்கறதுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னுதான் கேட்டேன். அதுக்கான காரணத்தையும் பேசிப் பேசியே என் கிட்ட இருந்து வாங்கிட்டாங்க.
அதுக்கு அடுத்த நாள்தான் ஷோ ஸ்டார்ட் ஆச்சு. டிவில உங்களை பார்த்தேன். அஜுபான்னு வேற சொன்னீங்களா. அன்னைக்கு தீம்ல நம்ம ஃபோட்டோ வேறயா. பயங்கர டென்ஷன் ஆயிடுச்சு. அதுக்கு தகுந்த மாதிரி அந்த வீடியோ வேற லீக் ஆயிடுச்சு.
இந்த ஷார்ட் பீரியட்குள்ளயே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும், எந்த ஒரு சூழ்நிலையிலயும் அம்மாவோ அப்பாவே எனக்கு விருப்பம் இல்லாத எதையும் என் மேல திணிக்க மாட்டாங்கன்னு. ஏன்னா அவங்களுக்கு என் ஹெல்த் பத்தின பயம் ரொம்ப அதிகம்.
அன்புக்கரசி சம்பவம் நடந்த பிறகு, அந்த ரெண்டு வருஷத்துள்ளேயே, என்னால அம்மா, அப்பா, அக்கா சாத்விகா எல்லாருமே ரொம்ப கஷ்ட பட்டுட்டாங்க. என்னையே கவனிச்சிட்டு இருக்க, அக்காவையும் சாவியையும் சரியா பார்த்துக்க கூட முடியல அம்மாவால.
அதுக்கு பிறகும் அந்த க்ளாஸ் இந்த கிளாஸ் கவுன்சிலிங்ன்னு என்னை சரி பண்ண எக்கச்சக்க செலவு அவங்களுக்கு. எது எப்படியோ இனிமேல் என்னால எந்த ஒரு பிரச்சனையும் அவங்களுக்கு வரக்கூடாதுங்கற ஒரு ரெஸ்பான்சிபிலிட்டி எனக்குள்ள இருத்துட்டே இருக்கும்.
அதனாலதான் ஆசை இருந்தாலும் பெரிய கோர்ஸ் எதுவும் எடுக்காம, பீ.பீ.ஏல போய் சேர்ந்தேன். என்னையும் மீறி சரவணனை முன் வெச்சு என்னால எங்க ரெண்டு குடும்பத்துக்குள்ளயும் கொஞ்சம் பிரச்சனை வேற ஓடிட்டு இருந்துது. அதுல அக்கா ரொம்ப சங்கடப்பட்டுட்டா. அப்ப அவ கன்ஸீவா வேற இருந்தா இல்ல?
இப்ப இப்படி ஆனதால என்னை வெச்சு சாத்விகாவோட பியூச்சரும் பாதிக்குமோங்கற டென்ஷன் வேற அவங்களுக்கு கூட சேர்ந்துடும். இதையெல்லாம் யோசிக்கும்போது உங்களை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற முடிவைதான் நான் எடுக்க வேண்டியதா போகுமோன்னு ஒரு பயம்.
காதல் கல்யாணம் இதெல்லாம் ஒரு பார்ட் ஆஃப் தி லைப் அவ்வளவுதானே. என்னைப் பொறுத்தவரைக்கும் நீ இல்லாம நான் இல்ல. நீயும் நானும் ஈருடல் ஓருயிர். இதெல்லாம் சுத்தப் பேத்தல்னுதான் தோணும்.
ஆணோ பெண்ணோ அவங்க அவங்களுக்கு சுயம்னு ஒண்ணு இருக்கும் இல்ல? அந்த விஷயத்துல தனித்தனியாதான இருக்க முடியும்?
என்னோட சுயத்தைக் கொன்னுட்டு என்னால நிம்மதியா உங்களோட வாழ முடியுமா சொல்லுங்க? என்னோட சுயம் அப்படிங்கறது வேற நான் வேறயா?
அது மொத்தமா உடைஞ்சிடுமோங்கற பயத்துலதான் நான் அன்னைக்கு மொத்தமா கொலாப்ஸ் ஆகிட்டேன்” என்று அவள் சொல்ல, அவன் ஒரு நொடி தன கட்டுப்பாட்டை இழக்க, அந்த கார் ஒரு குலுங்கு குலுங்கியது.
அவளுடைய மனநிலை புரியவும் குற்ற உணர்ச்சியில் அவன் முகம் இறுகிப்போயிருக்க, அதைப் பார்த்தவள், "மித்து... கூல். அதான் எல்லாம் சரி ஆயிடுச்சு இல்ல" என்று சொல்ல, "ஏதாவது ஆகியிருந்தா உன்னை மொத்தமா இழந்திருப்பேன் மாளவிகா" எனத் தழுதழுத்தான் அவன் .
அவளுடைய பெயரை முழுவதுமாக அவன் சொன்ன விதத்திலேயே அவன் பதட்டம் தெரிய, "ப்ச்..” என அவள் அலுத்துக்கொள்ளவும், "சரி சொல்லு" என்றான் அவன் அனைத்தையும் பேசி முடிக்கும் தீவிரத்துடன்.
"மயக்கமா இருந்தாலும் நான் என் கான்ஷியஸை லூஸ் பண்ணல. அது ஒருவித மெண்டல் ஸ்டெபிலிட்டின்னுதான் சொல்லணும்” எனப் பெருமையாக சொன்னவள், "என்னை நீங்க தூக்கினதையெல்லாம் நல்லா ஃபீல் பண்ணேன். ஆனா என்னால ரெசிப்ரோகேட் பண்ணதான் முடியல" என்றவள், மருத்துவ மனையில் அவன் பேசிய அனைத்தையும் அவள் உள்வாங்கிக் கொண்டதாகச் சொன்னாள்.
"உங்க கண்ணீரை என்னால ஃபீல் பண்ண முடிஞ்சுது மித்து” என அவள் சொல்ல நெகிழ்ச்சியுடன் ஒரு கைக் கொண்டு அவளைத் தோளுடன் அணைத்துக்கொண்டான் மித்ரன்.
போக்குவரத்துக்கு நடுவில் கொஞ்சம் தயக்கம் வரவும் தன்னை விடுவித்துக் கொண்டவள், "அதை விட நீங்க துடிச்ச துடிப்பைப் பார்த்துட்டு அகிலா மேம்க்கு உங்க மேல ஏதோ ஒரு நம்பிக்கை. என் கண்டிஷனும் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அதனால நான் உங்க மனநிலையை தெரிஞ்சிக்கணும்னுதான் கேள்வி கேட்டு உங்களை நிறையப் பேச வெச்சாங்க.
அந்த வார்த்தைகள் எனக்கு உங்ககிட்ட ஒரு ஸ்ட்ராங்கான நம்பிக்கையைக் கொடுக்க, என்னோட பயம் மொத்தமும் போயே போச்சு மித்ரன். உங்க வார்த்தைகள் என்னை முழுசா காப்பாத்திக் கொடுத்துடுச்சுன்னுதான் சொல்லணும். ஐ மீன் என்னோட சுயத்தை" என்றாள் அவள் தெளிவாக.
அவள் சொன்ன அந்த வார்த்தையில் அப்படி ஒரு நிம்மதி பரவியது அக்னிமித்ரனுடைய மனதில்.
"தேங்க் காட். நீ கொஞ்சம் கூட டைம் எடுத்துக்காம உடனே ஓகே சொன்னதும், அந்த வீடியோ எக்ஸ்போஸ் ஆனதாலதான் நீ நம்ம மேரேஜ்க்கு சம்மதிச்சன்னு ஒரு உறுத்தல் என் மனசுல இருத்திட்டே இருந்துது. இப்ப நான் ரொம்ப நிம்மதியா ஃபீல் பண்றேன். லவ் யூ அஜூபா” என்றான் அவன் ஒரு பெருமூச்சுடன்.