top of page

Azhage Sugamaa?! 8

Updated: Mar 27, 2023

முகில்நிலவு 8


முகிலன் பாதியாக உடைத்துக் கொடுத்த மாத்திரையில் திருப்தி ஏற்படாமல் தவித்தவள், மீதத்தையும் அவனிடம் கேட்கவென அறையிலிருந்து வெளியில் வர, அவன் அவளுடைய அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க நேர்ந்தது நிலாவிற்கு.


அவன் நேரடியாகத் திருமணத்திற்கு அவளைப் பெண் கேட்கவும், அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே புரியவில்லை. மனம் கட்டுப்பாடின்றி எதையெதையோ சிந்திக்கத் தொடங்கியது.


கண்களை அகற்றாமல் அவளுடைய முகத்தையே முகிலன் பார்த்துக் கொண்டிருப்பது புரியவும், அந்த மாத்திரையைக் கூட மறந்தவளாக அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள் நிலா.


"நிலா! ரூமை லாக் பண்ணாத!" என அவன் கட்டளையாகச் சொல்லவும், அடுத்த நொடி, 'க்ளிக்' எனத் தாழ்பாள் திறக்கப்படும் ஒலி கேட்டது. புன்னகைத்துக்கொண்டான் முகிலன்.


அனைத்தையும் கவனித்தவராக, அதுவும் அவரது முன்னிலையிலேயே முகிலன் நிலாவை மிரட்டவும், அவளும் கூட அதற்குக் கீழ்ப்படியவும், கொஞ்சம் திடுக்கிட்டவராக, நிலா தெளிவான மனநிலையில் இருக்கும்போது அவளுடைய சம்மதத்தைக் கேட்க வேண்டும், மேலும் அவனைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணியவராக,


"வேண்டாம் தம்பி! அவரசரப்படாதிங்க. இப்ப இவ இருக்கற நிலைமையில் எதையும் முடிவு செய்ய முடியாது. முதல்ல அவளுக்கு ட்ரீட்மெண்ட் பார்த்துடலாம். பிறகு மத்ததை முடிவு பண்ணிக்கலாம்! எல்லாம் ஒத்து வந்தா உங்க எண்ணத்துக்கு குறுக்க நிக்க மாட்டோம்! புரிஞ்சிக்கோங்க!" என அவர் மென்மையாகவே திருமணத்திற்கு மறுக்கவும், அதற்கு ஒப்புக்கொண்டு கொஞ்சம் இறங்கிவந்தான் முகிலன். ஆனால் அவளுக்கான மருத்துவம் சென்னையிலேயே பார்க்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் தீர்மானமாய் இருந்தான்.


சிவராமன் அங்கே வந்திருப்பதை அறிந்து, கதிரும் ஜீ.கே மாமாவும் அங்கே வர, ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தான்.


சிவராமன், மாமாவிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருக்க, முகிலன் குடும்பம் பற்றி அவர் மூலம் தெரிந்து கொண்ட தகவல்களால், அவனைப் பற்றிய அவருடைய தயக்கம் கூட கொஞ்சம் விலகித்தான் போனது.


***


முந்தைய இரவில் யார் மீது சத்தியம் செய்தானோ அவருக்கு முன்பாக, அதாவது ஜெய்யின் மாமியாருக்கு முன்பாக உட்கார்ந்திருந்தான் முகிலன் தான் வருங்கால மாமனாருடனும் அவருடைய ஒரே மகளுடனும்.


ஜெய்யின் மாமியார் அகிலா ஸ்ரீதரன், ஒரு பிரபல மனநல மருத்துவர். சென்னையிலேயே புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்றின் மனநல மருத்துவ சிறப்புப் பிரிவில், தினமும் மாலை நேரங்களில் அவர் நோயாளிகளைச் சந்திப்பதால், முன் அனுமதி பெற்று, நிலாவை அங்கே அழைத்து வந்திருந்தான்.


ஐம்பது வயது மதிக்கத்தக்கத் தோற்றத்தில், பருத்திப் புடவை அணிந்து மிகவும் எளிமையாகவும், மென்மையுடனும், மருத்துவருக்கே உரியக் கம்பீரத்துடன் இருந்தார் அகிலா.


அவர்களைப் பார்த்ததும் சிநேகத்துடன் புன்னகைத்தவர், "ஹை! முகிலன் எப்படி இருக்கீங்க?" என சகஜமாக விசாரிக்கவும், "நல்லா இருக்கேன் ஆன்ட்டி! ஹவ் இஸ் அங்கிள்?" என்று அவனும் இயல்பாக கேட்க,


சிவராமனுக்கு முகிலன் அவ்வளவு வற்புறுத்தியதன் காரணம் புரிந்தது. மனதிற்கு நிறைவாகவும் இருந்தது.


அவரை சந்திப்பதற்கு முன்பே, அவருடைய உதவி மருத்துவர் நிலாவுடனும் மற்றவருடனும் பேசி, அவளைப் பற்றிய குறிப்புகளை எடுத்திருக்கவே. அந்த அறிக்கைகளைப் படித்தவர், மற்ற இருவரையும் வெளியில் அனுப்பிவிட்டு, பின்பு சிறிதுநேரம் நிலாவிடம் பேசினார்.


அதன் பிறகு நிலாவைச் செவிலியருடன் தனியே அனுப்பிவிட்டு, அவர்களைச் சந்தித்தவர், "கவலைப்படாதீங்க மிஸ்டர். சிவராமன். இவங்களுக்கு ஏற்பட்டிருக்கறது ஸ்ட்ரெஸ்... டிப்ரஷன்... அதாவது சாதாரண மன அழுத்தம் அவ்வளவுதான்.


இந்த மாதிரி நேரத்துல, மூட் ஸ்விங்ஸ் இருக்கத்தான் செய்யும். ஒரு சமயம் நல்லா உற்சாகமா இருப்பாங்க. ஒரு சமயம் ரொம்ப சிடுசிடுப்பா இருப்பாங்க. அடிக்கடி டயர்டா ஓய்ந்து போயிடுவாங்க.


தனிமையை அதிகம் நாடுவாங்க. கில்ட்டி கான்ஷியஸ்னால தன்னையே துன்புறுத்திப்பாங்க. தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்க நினைச்சு எக்குத்தப்பா எதையாவது செஞ்சுவைப்பாங்க!


ட்ரக் அடிக்ஷன் கூட இவங்களைப் பொறுத்தவரைக்கும் சகஜம்தான். தற்கொலை எண்ணமும் ஏற்படும்தான். அவ்வளவு சுலபமா சட்டுனு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது.


ஆனாக்கூட ரொம்ப பயப்படற அளவுக்கு இது ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்ல.


இவங்கள பொறுத்தவரைக்கும், மனசுல எதையோ வெச்சு குழப்பிக்கிட்டு இருக்காங்க. அதைக் கண்டுபிடிச்சு வெளியில கொண்டு வந்துட்டா போதும்.


நான் புரிஞ்சிட்ட வரைக்கும், ஒரு டென் டு ஃபிப்டீன் டேஸாதான் இவங்க டிப்ரஷன் பீக்ல இருந்திருக்கு. நாமதான் சரியான டைம்ல கவனிச்சிட்டோமே. சிம்ப்பிள் மெடிக்கேஷன் அன்ட் கௌன்சிலிங் போதும், மேக்ஸிமம் டென் டேஸ்ல நார்மலுக்குக் கொண்டு வந்துடலாம்.


அவங்கள எப்பவும் எங்கேஜ்டா வெச்சுக்கோங்க, தனியா விடாதீங்க; அவ்வளவுதான்" என இடையிடையே அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கெல்லாம் பொறுமையாக பதில் கொடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக விளக்கி முடித்து கௌன்சிலிங் கொடுக்கவென தினமும் நிலாவை அங்கே அழைத்து வரச்சொல்லி அனுப்பி வைத்தார் அந்த மனநல மருத்துவர்.


***


சிவராமனுக்கு அதிகம் விடுப்பு எடுக்க இயலாத காரணத்தால், மகளை முகிலனுடைய காவலில், மாமா மற்றும் மாமியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு அடுத்த நாளே டெல்லிக்குக் கிளம்பினார்.


நிலமங்கை அவளது கணவர் பிரபஞ்சனுக்குப் பரிசளிக்கவென வாங்கியிருந்த வீட்டில்தான் இப்பொழுது நிலா வசிக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது முகிலனுக்கு.


தொடர்ந்து அவள் அந்த வீட்டில் இருப்பது அவன் மனதிற்கு உவப்பாக இல்லாமல் போனதால், அதே தளத்திலேயே வேறு பிளாட்டில் நிலாவைத் தங்க வைத்தான்.


ஓரிரு நாட்களுக்குள்ளாகவே நிலாவின் அம்மா உமாவும், முகிலனின் அம்மா ஸ்ரீமணியும் அங்கே வரவழைக்கப்பட்டனர் அவளை கவனித்துக் கொள்ள.


நேரில் பார்ப்பதற்கு முன்பாகவே முகிலனின் மீது அபரிமிதமான நம்பிக்கையும் அன்பும் மரியாதையும் உண்டாகிப்போனது உமாவிற்கு. நேரில் பார்த்தபிறகோ அந்த எண்ணம் பன்மடங்காகப் பெருகித்தான் போனது.


கதிர் சென்னையில் கால் பாதித்தது முதல், நடந்த ஒவ்வொன்றையும் அவனது அபிமான ஸ்ரீமணி ஆண்ட்டிக்கு உடனுக்குடன் நேரடி ஒளிபரப்பாகச் சொல்லியிருக்க, திருமணமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்த மகன் காதல் கல்யாணம் என்று பொங்குவதைக் கேள்விப்படவும் நம்பவே முடியவில்லை.


நிலாவின் படிப்பைப் பற்றி முன்பே அறிந்திருக்கவும், அனைத்தையும் மீறிய ஒரு நல் அபிப்ராயம் அவளிடம் உண்டானாலும், அவளுடைய நிலவரம் அவரைக் கலவரம் செய்ததென்னவோ உண்மை.


ஏற்கனவே ஸ்ரீமணி அவளை நேரில் பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்க, மகன் வேறு அங்கே வருமாறு அழைக்கவும் உடனே பறந்து வந்துவிட்டார்.


நிலாவை நேரில் பார்த்ததும், அவளது படிப்புக்குத் தக்கபடி சாந்தம் ததும்பும் மென்மையான அவளது அழகு முகம் அவரைக் கரைத்துவிட, அவளை மகளாகவே எண்ணிவிட்டார்.


தினமும் மாலை நிலாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வான் முகிலன். உமாவும் ஸ்ரீமணியும் அவளுக்குத் துணையாகக் கூடவே கிளம்பவும், மறுக்காமல் அவர்களையும் உடன் இணைத்துக் கொள்வான்.


தேவை இல்லாத கேள்விகள் எதையும் கேட்டு அவளைக் குழப்ப வேண்டாம் என டாக்டர் அகிலா எச்சரிக்கை செய்திருக்க, யாருமே அவளிடம் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.


மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் போதை கலந்த மாத்திரையை உட்கொள்வதை, மிக முயன்று நிலா தானாகவே தவிர்க்க, அதுவே மிகப் பெரிய உதவியாய் இருந்தது மருத்துவருக்கு.


நேரத்தில் உறக்கம், சத்துள்ள உணவுகள் என இருவரின் அன்னையரும் நிலாவைப் போட்டிப் போட்டுக் கொண்டு கவனிக்க, கவுன்சிலிங்கும் சேர்ந்து கொள்ள, நான்கு ஐந்து தினங்களிலேயே கவனிக்கும்படியான மாற்றங்கள் தெரிந்தது நிலாவிடம்.


கலகலப்பாக இல்லாவிடிலும் எல்லோரிடமும் கொஞ்சம் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தாள்.


இடையில் ஒரு நாள் நிலாவை கவுன்சிலிங்கிற்காக அழைத்துச் சென்றிருந்த சமயம் முகிலனைத் தனியே அழைத்த அகிலா, "சத்தியமா முடியலப்பா முகிலா! நானும் எவ்வளவோ கேஸைப் பார்த்திருக்கேன். டாக்டர்ஸ், என்ஜினியர்ஸ், பலதரப்பட்டவங்களுக்கும் ட்ரீட் பண்ணி இருக்கேன். அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் பேஷண்ட்ஸ் கூட என்னை இவ்வளவு படுத்தினது இல்ல.


முதல் ரெண்டு நாள்தான் அமைதியா இருந்தா. அதுக்கு பிறகு மெடிக்கலா நிறைய கேள்வி கேட்க்கறா! எந்த மாத்திரை சஜஸ்ட் பண்ணாலும், அதோட காம்பினேஷனைப் பார்த்துட்டு, அதை யூஸ் பண்ணாம அவாய்ட் பண்ண, ஆயிரம் காரணம் சொல்றா.


அவ மைண்ட் ரீட் பண்ண கேள்வி கேட்டா, அதோட ரீசனைக் கண்டுபிடிச்சு கோ-ஆப்பரேட் பண்ண மாட்டேங்கறா. நீயே அவகிட்ட கொஞ்சம் சொல்லு" என நிலாவைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தார்.


மருத்துவரின் பரிந்துரையின் பேரில், அவளைத் தனியாக இருக்கவிடாமல் ஸ்ரீமணி, உமா, மாமா, மாமி, கதிர் என எப்பொழுதும் யாராவது ஒருவர் மாற்றி ஒருவர் நிலவுடன் இருத்து கொண்டே இருக்கவும் தள்ளி இருந்து அவளைப் பார்க்க மட்டுமே முடிந்தது முகிலனால்.


அதையும் தாண்டி சில நேரங்களில் முகிலனை நேருக்கு நேர் பார்க்க நேரும் போதெல்லாம் தலையைக் குனிந்து கொண்டு சென்றுவிடுவாள் அவ்வளவுதான்.


ஆனாலும் அந்தக் கணத்தில் சிவந்து மலரும் அவளுடைய முகம் அவளுடைய உள்ளத்தை அவனுக்குத் தெளிவாக எடுத்துச் சொல்ல, புன்னகைத்தவாறே சென்று விடுவான் முகிலனும். அதற்குமேல் அவளிடம் ஏதும் பேசும் சந்தர்ப்பம் அவனுக்கு அமையவேயில்லை.


அன்று மருத்துவர் இவ்வாறு சொல்லவும், வீட்டிற்குள் நுழைந்தவுடன் வேண்டுமென்றே வரவழைக்கப்பட்ட கோபத்துடன், "நீ ட்ரீட்மென்டுக்கு கோ ஆபரேட் பண்ணலேன்னா, எக்கேடோ கேட்டுப் போன்னு விட்டுட்டு, இப்பவே வேற ஏதாவது ஸ்டேட்ல ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு, வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்!


அது மட்டும் இல்ல! எங்க அம்மா பார்த்து ஒரு குப்பம்மா, முனியம்மா யாரைக் காமிச்சாலும், தாலி கட்டி, ஹனிமூனுக்கு முசூரி கூட்டிட்டுப் போயிடுவேன்! ஜாக்கிரதை! என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு!" எனக் கடுமையாக அவளை மிரட்டியவன்,


அன்னையை நோக்கி, "அம்மா! நீங்களே ஒரு பொண்ணைப் பார்த்து முடிவு பண்ணிடுங்க! ஓகே வா?" என்று அவன் கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல், எல்லா பக்கத்திலும் தலையை ஆட்டிவைத்தார் ஸ்ரீமணி.


அவரது செயலை பார்த்ததும் எழுந்த சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறு, "பார்த்த இல்ல! வசதி எப்படி! வேற பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?" என அவன் கேட்க, முகமெல்லாம் இறுகிப்போய், கண்களில் கலவரம் படர அவசரமாக வேண்டாம் என்று தலையை ஆட்டினாள் நிலா.


"அப்படினா அகிலாம்மா சொல்றத ஒழுங்கா கேக்கறியா?" என்று அதட்டலாக அவன் கேட்கவும், கண்களில் நீர் கோர்க்க, அதற்கும் அவள் தலை ஆட்டவும், "சரி போய் ரெப்பிரேஷ் பண்ணிட்டு சாப்பிடு!" என்று சற்றுத் தணிவாகச் சொல்லிவிட்டு அவனுடைய இருப்பிடத்திற்குச் செல்வதற்காக அவன் திரும்ப, கலவரத்துடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் உமா.


அவரை அப்படிப் பார்த்ததும் அவனுக்குப் பரிதாபமாகிப்போய்விட, "சும்மா!" என்று உதட்டசைவில் சொல்லிவிட்டு, கண் சிமிட்டியவாறு அவன் அவரைக் கடந்து சென்றுவிட, மேலும் கலவரமாகிப்போனார் அவர் வெட்கத்துடன்.


***


இதற்கிடையில் மகளுடைய விடுமுறையை முன்னிட்டு பிறந்த வீடு சென்றிருந்த சுசீலா மாமியின் மருமகள் ஜெயந்தி, ஊரிலிருந்து திரும்பியிருந்தாள். அது தெரிந்து அவர்கள் வீட்டிற்கு வந்தான் கதிர்.


அங்கே வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்திருந்த ஜெயந்தியின் எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவன், "எப்படி இருக்கீங்க அக்கா? எப்ப ஊருல இருந்து வந்தீங்க?" என நலம் விசாரிக்க,


"எனக்கு என்னடா, நான் நன்னா இருக்கேன்? நேத்து நைட் வந்தேண்டா! நீ எப்படி இருக்க? எக்ஸாம் எழுதினியே என்ன ஆச்சு?" என எதார்த்தமாகக் கேட்க,


பரிட்சையைப் பற்றிக் கேட்கவும் அதில் கடுப்பானவன், அதில் தோல்வி அடைந்ததைப் பற்றிச் சொல்லப் பிடிக்காமல், பேச்சை மாற்றும் பொருட்டு, "என்னைப் பத்தின விஷயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், உங்க ஃப்ரண்ட் நிலா இல்ல நிலா! அவங்க கிட்ட கொஞ்சம் பார்த்து ஜாக்கிரதையா நடந்துக்கோங்க!" என்றான் கதிர் எச்சரிக்கும் விதமாக.


"அட நிலாவைத் தெரியுமா உனக்கு?' எனக் கேட்டவள், "அவளுக்கு என்ன? அவ ரொம்ப நல்ல பொண்ணாச்சே!" என்றாள் ஜெயந்தி.


"நல்ல பொண்ணுதான். ஆனா அந்த நல்ல பொண்ணுக்குத்தான் பயங்கரமான பேய் பிடிச்சிருக்கு!" என்றான் கிசுகிசுப்பான குரலில்.


"லூசாடா நீ! இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னு உளரிண்டு!" என அவள் அலட்சியமாகப் பதில் கொடுக்க,


"ஏதோ உங்க கிட்ட சொல்லி அலர்ட் பண்ணனும்னு சொன்னேன்! அப்பறம் உங்க இஷ்டம்!" என அவன் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லவும்,


"கதிரவா! நிஜமாவாடா சொல்ற! இப்படிலாம் கூட நடக்குமா?" என அவள் அவனுடைய வலையில் வந்து வசமாகச் சிக்கினாள்.


அதில் உள்ளுக்குள்ளேயே சிரித்து குதூகலமானவன், "ஆமாம் ஜெயாக்கா! அதுவும் அவங்களைப் பிடிச்சிருக்கறது சாதாரண பேய் இல்ல! மோஓஓஓஓகினி பேய்! அது நம்ம முகில் அண்ணாவையே மயக்கிடுச்சுனா பார்த்துக்கோங்களேன்!" என்றான் உண்மைபோல.


"ஐயோ முகிலனையா! பாவம்டா அந்தப் பையன்!" எனப் பதறினாள் ஜெயந்தி.


"ஆமாம்..., முகில் அண்ணா அவ கிட்ட எப்படி உருகி கரையறாருன்னு நீங்களே பார்த்திருப்பீங்களே! ஒரு பொண்ணு கிட்ட போய் இப்படி வழியற ஆளா நம்ம முகில் அண்ணா, நீங்களே சொல்லுங்க?” எனவும் யோசித்தவள், “ஆமான்டா” என அதிர்ந்தாள்.


“நிலா அம்மாவும், ஸ்ரீமணி ஆண்ட்டியும் இப்ப இங்க வந்திருக்காங்களே ஏன்னு தெரியுமா?" என்று கதிர் தொடரவும்,


"ஏண்டா! தெரியலியே! அதையும் நீயே சொல்லிடு!" என அவள் பயத்துடன் கேட்க,


"சைதாபேட்டைல ஒரு குறி சொல்ற ஆன்ட்டி இருக்காங்களாம்! அவங்க பேரு கூட அகில லோக பெரிய நாயகி அம்மாவாம். அவங்க பேயெல்லாம் ஓட்டுவாங்களாம்! டெய்லி சாயங்காலம், சாயங்காலம் அங்க போய் ரெண்டு பேருக்கும் வேப்பிலை அடிச்சு கூட்டிட்டு வராங்க!


நிலா சாதாரணமா இருக்கற மாதிரித்தான் தெரிவாங்க. நீங்க அவங்க எதிர போனீங்கன்னா, திடீர்னு நிலவழகி டிராகுலா அழகியா மாறி, உங்க பிளட் மொத்தத்தையும் குடிச்சிடுவாங்க! ஜாக்கிரதை!" என்று சொல்லி அவளை மேலும் மேலும் கலவரப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றான் கதிர்.


அவன் சொன்னவற்றை நம்பலாமா வேண்டாமா எனக் குழம்பியவளாக, மாமியாரைத் தேடிப் போன ஜெயந்தி, "அம்மா! இந்த கதிர் பையன் நம்ம நிலாவைப் பத்தி என்னென்னமோ சொல்றானே! உண்மையா?" எனக் கேட்க,


"அம்மாம்மா ஜெயா! பாவம் அந்தப் பொண்ணு!" என்று சொன்ன சுசீலா மாமி, "நாமளும் ரெண்டு மூணு மாசமா அவளைப் பார்த்துண்டேதான இருக்கோம்! ஆனா எதுவுமே தெரியல பாரேன்! நீ ஊருக்குப் போனதுக்கு அப்பறம் என்னென்னமோ நடந்து போச்சு. பதினஞ்சு நாளா அவளுக்கு பிரச்சன ரொம்பவே ஜாஸ்தியாயிடுத்து! அவளோட சேர்ந்துண்டு இப்ப இந்த முகிலனும் படாத பாடு பட்டுண்டிருக்கான் பாவம்" என்று முடித்தார் அவளுடைய உண்மை நிலையைக் குறிப்பிட்டு.


பயத்தில் அரண்டே போன ஜெயந்தி நிலாவைத் தனிமையில் சந்திப்பதை முடிந்த வரையிலும் தவிர்க்க ஆரம்பித்தாள்.


நிலாவிற்கு ஏதும் வித்தியாசமாகத் தெரியாமல் இருக்குமாறு, எல்லோரும் இருக்கும்போது, பொதுவாக ஏதாவது பேசிவிட்டு, வீட்டிற்கு வந்துவிடுவாள்.


அதுபோன்ற சமயங்களில், முகிலன் அவளிடம் எடுத்துக்கொள்ளும் அக்கறையைப் பார்த்து, அவன் மோகினிப் பிசாசிடம் மயங்கிப்போய்த்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறான் என்றே எண்ணிக்கொண்டாள். இப்படியாக ஜெயந்தி, கதிர் சொன்ன அனைத்தையும் உண்மை எனத் திட்டவட்டமாக நம்பினாள்!


***


முகிலன் அங்கிருந்து சென்ற பிறகு, அவன் சொன்னது போலவே குளித்து, இரவு உடைக்கு மாறியவள், அவளுடைய அம்மாவும் வருங்கால மாமியாரும் பார்த்துப் பார்த்து பரிமாற, உணவை உண்டு முடித்தாள் நிலா.


பின்பு முகிலன் கோபத்துடன் சென்றதையே எண்ணியவாறு யோசனையுடன் அவள் வரவேற்பறை சோஃபாவில் உட்கார்ந்திருக்க, அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்த கதிர், "மூன் அண்ணி! ஒய் ஸோ அப்செட்!" என்று கேட்க, ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை மட்டும் ஆட்டினாள்.


"அப்படினா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா?" என அவன் கேட்க, யோசனையுடன், 'என்ன?' என்பதுபோல் அவள் அவனை ஏறிட, "என் ஃப்ரண்டோட குழந்தைக்கு ஒரு சின்ன சர்ஜரி! ஒரு யூனிட் ஓ நெகடிவ் பிளட் வேணும்" என அவன் சொல்ல, "ஐயோ என்னோடது பீ பாசிட்டிவ் ஆச்சே!" என்றாள் நிலா பரிதாபமாக.


அவனுக்கே அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருந்தது, ஆனாலும் எப்பொழுதுமே ஏதாவது ஒன்றை முகிலனிடம் போட்டுக்கொடுத்து, அவனிடம் திட்டு வாங்க வைக்கும் ஜெயந்தியின் முகம் நினைவுக்கு வரவும், தலையைக் குலுக்கி, அந்த எண்ணத்தை விரட்டியவன், "அது இல்ல அண்ணி! நம்ம ஜெயந்தி அக்கா இருக்காங்க இல்ல? அவங்களோட பிளட் க்ரூப் ஓ நெகடிவ்தான். நான் போய் அவங்க கிட்ட கேட்டா, பயந்துட்டு பிளட் குடுக்க ஒத்துக்க மாட்டாங்க!


நீங்கதான் டாக்டர் ஆச்சே! நீங்க அதைப் பத்தி விளக்கமா சொன்னா ஒத்துப்பாங்க! ப்ளீஸ் நாளைக்கு காலைல போய் கேட்டுப் பாக்கறீங்களா?" என அவன் கேட்க, அதற்கு ஒப்புக்கொண்டாள் நிலா, கதிரின் திருவிளையாடல் பற்றித் தெரியாமல்.


***


அடுத்த நாள் மாமா, மாமி இருவரும் கோவிலுக்குச் சென்றிருக்க, ஜெயந்தியின் மகள் பள்ளிக்கும், அவளுடைய கணவர் அலுவலகத்திற்கும் சென்றுவிட, அவள் தனிமையில் இருப்பதை அறிந்து நிலாவை அங்கே அழைத்து வந்தான் கதிர்.


அவளைப் பார்த்ததும், உடல் நடுங்கத் தொடங்கியது ஜெயந்திக்கு. அவள் பயத்துடன் நிலாவுக்குப் பின்பாக நின்றுகொண்டிருந்த கதிரின் முகத்தைப் பார்க்க, நாக்கை நீட்டி தலையைச் சாய்த்து, 'பத்திரம்' என்பது போல் ஜாடை செய்தான் அவன்.


அதில் கலவரமானவள், குரல் நடுங்க, "வா நிலா! ஏதாவது சாப்பிடறியா?" என ஜெயந்தி கேட்க, "சாப்பிட எதுவும் வேண்டாம்கா” என்றவள், “உங்க பிளட் ஓ நெகடிவாமே, அதைக் கொஞ்சம் கொடுத்து ஹெல்ப் பண்ணுங்கக்கா ப்ளீஸ்!" என்றாள் நிலா நேரடியாக.


அதைக் கேட்டதும் 'இவ நெஜமாவே நம்ம இரத்தத்தை குடிச்சிடுவாளோ!' என மனதிற்குள் பயந்துகொண்டே, புடவை தலைப்பை இழுத்து கழுத்தை நன்றாக மூடிக்கொண்டவள், "என் பிளட் எல்லாம் கெட்டுப்போச்சு! டேஸ்ட் நன்னா இருக்காது! அதனால என்னை நீ கேக்காத!" என அவள் படபடக்கவும், அடக்கப்பட்ட சிரிப்புடன் ஜெயந்தியைப் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.


ஜெயந்தி சொன்ன டேஸ்ட்டை டெஸ்ட் என புரிந்துகொண்டவள், "பிளட் கெட்டெல்லாம் போகாதுக்கா. டெஸ்ட் ரிசல்ட் சரியாதான் இருக்கும். தாராளமா நீங்க பிளட் குடுக்கலாம். பயப்படாதீங்க, கதிர் பார்த்துப்பான்!" என நிலா சொல்ல, பயத்தில் அழுகையே வந்துவிட்டது ஜெயந்திக்கு.


அவள் எதிரில் அழுதுவைத்தால், அவள் மேலும் வெறி கொள்வாளோ எனப் பயந்து, மிகவும் முயன்று அழுகையைக் கட்டுப்படுத்தினாள்.


அவள் இரத்தம் கொடுக்கப் பயப்படுகிறாள் என்ற புரிதலில், "நீங்க சம்மதிச்சா கூட, ரொம்ப எல்லாம் பிளட் எடுக்கமாட்டாங்க அக்கா! ஒரு ஃபோர் பிஃப்டி எம்.எல் அவ்ளோதான்!" என நிலா சொல்ல, "என்ன அவ்ளோ பிளட்டா!" என ஜெயந்தி அதிர, "அது அதிகமெல்லாம் இல்ல கா! அதுவும் எடுக்கும்போது வலிக்கவே வலிக்காது! சும்மா எறும்பு கடிக்கிற மாதிரி இருக்கும் அவ்ளோதான்" என நிலா விளக்கமாகச் சொல்ல, தன் கழுத்தைப் பிடித்துக்கொண்டு, எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் ஜெயந்தி.


சிரிப்பை அடக்க முடியாமல், கைப்பேசியில் பேசுவதுபோல் வெளியே சென்று குலுங்கக் குலுங்க த-வி-பு-சித்துவிட்டு, அதாவது தரையில் விழுந்து புரண்டு சிரித்துவிட்டு, மறுபடியும் அங்கே கதிர் வர, சத்தமாகக் கந்த சஷ்டி கவசம் சொல்லிக்கொண்டிருந்தாள் ஜெயந்தி. அவளைப் புரியாத ஒரு பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் நிலா.


அப்பொழுது அங்கே வந்த கதிர், "நீங்க போங்க மூன் அண்ணி! அந்தப் பாப்பாவுக்கு பிளட் கிடைச்சிடிச்சு!" என்று சொல்ல,


'உப்' என ஒரு நிம்மதி பெருமூச்சுடன் முகம் பிரகாசிக்க அங்கிருந்து அவள் சென்றுவிட, துணிவு வரப்பெற்றவளாக ஜெயந்தி ஓவென அழத் தொடங்கவும், அவனுடைய விளையாட்டு விபரீதமானதை உணர்ந்து நொந்தவாறு, "ஐயோ அக்கா! முதல்ல அழுகையை நிறுத்துங்க. நான் சும்மா நிலாவை வெச்சு பிராங்க் பண்ணேன் அவ்வளவுதான்! அவங்களுக்கு பேயும் பிடிக்கல,பிசாசும் பிடிக்கல” என்றான் கதிர் வெகு சாதாரணமாக.


நடந்த அனைத்தையும் சொன்னவன், நிலாவின் உண்மை நிலையையும் சொல்லி முடிதான் கதிர். அதன் பின் அழுகையை நிறுத்தியவள், "அடப்பாவி! நான் உனக்கு என்ன பாவம்டா செஞ்சேன்! என்னை இப்படி பயமுறுத்திட்டியே பாவி! பாவி!" என ஜெயந்தி அவனைக் கடிந்துகொள்ள,


"ஊர்ல எங்க அப்பா கெடுபிடி தாங்கமுடியலன்னுதான ரிலாக்ஸ்டா இருக்க இங்க வரேன்? அதை புரிஞ்சுக்காம, நீங்களும் எப்ப பார்த்தாலும் எக்ஸாம், மார்க்கு இதைப் பத்தியே பேசிட்டு இருந்தா, எனக்கு மட்டும் எரிச்சல் வராதா? ஏதாவது சொல்லி முகில் அண்ணாவையும் எனக்கு எதிரா திருப்பி விடறீங்க இல்ல அந்தக் கடுப்பும்தான்! இனிமேல் என் விஷயத்துல தலையிட மாட்டீங்க இல்ல?" மனதில் இருப்பதை மறைக்காமல் கதிர் கிண்டலுடன் கேட்க,


உக்கிரத்துடன் காளி அவதாரம் எடுத்தவளாக, ஜெயந்தி அனைத்தையும் முகிலனிடம் போட்டுக் கொடுக்க, ஜெயந்தியுடன் சேர்த்து நிலாவையும் வம்பில் மாட்டி விட்டதால் அவனைக் கதற வைத்துப் பின்புதான் ஓய்ந்தான் முகிலன்.


***


ஒருவாறு குழப்பமும் குதூகலமுமாக நாட்கள் ஓட, அவளுடைய கவுன்சிலிங் முடிவடையும் நாளும் வந்தது.


நிலாவுடன் சேர்த்து முகிலனையும் அழைத்த அகிலா, "ஷி இஸ் பர்ஃபெக்ட்லி ஓகே நவ், முகில்! என்னோட பார்ட்ட நான் முடிச்சிட்டேன். இதுக்கு மேல எல்லாமே அவ கைலயும், உன் கைலயும்தான் இருக்கு!" என்றார் தெளிவாக.


"இவ ஏன் இப்படி ஆனா, என்ன நடந்ததுன்னு எதுவுமே எனக்குத் தெரியாதே! ஆனாலும் என் பார்ட்ல இருந்து நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க ஆன்ட்டி! கண்டிப்பா செய்யறேன்" என முகிலன் சொல்ல,


"அவளோட இந்த நிலைமைக்கு, நீயும் ஒரு விதத்துல காரணம்தான் முகில். ஆனா நீ மட்டுமே காரணம் இல்ல!" என அவனைத் தெளிவாகக் குழம்பினார்.


"ஐயோ! நானா? நான் என்ன செஞ்சேன்?" என அவன் கேட்க, "இத நான் சொல்றத விட நிலாவே உன்கிட்ட சொன்னா பெட்டரா இருக்கும். ஃப்ரீயா அவ கிட்டேயே கேட்டு தெரிஞ்சிக்கோ!" என அவர் நிலாவைப் பார்க்க, உதட்டில் மலர்ந்த புன்னகையை அவனிடம் காண்பிக்க நாணி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் நிலா!


அவனுக்கு ஏதோ புரிவதுபோல் இருக்கவும், "ஆன்ட்டி! நான் காரணம்னா, அதைச் சரி செய்ய நான் என்ன பண்ணனும்?" என்று முகிலன் விஷம புன்னகையுடன் கேட்க,


"அவளை உடனே கல்யாணம் பண்ணிக்கோ!" என்றார் அகிலாவும் புன்னகையுடனே.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page