Azhage Sugamaa?! 4
- Krishnapriya Narayan
- Sep 25, 2020
- 6 min read
Updated: Mar 27, 2023
முகில்நிலவு 4
முகிலன் என்னதான் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாலும், மனதிற்குள் வருந்துகிறானோ என்ற எண்ணம் தோன்றவும், "யாருக்கு யாருன்னு அந்த சர்வேஸ்வரன் எழுதி வெச்ச எழுத்தை யாராலயும் மாத்த முடியாது கண்ணப்பா! 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரான்னு போயிட்டே இருக்கணும்!" என மாமா இலகுவாகச் சொல்ல, அதற்குப் புன்னகையை மட்டுமே பதிலாகக் கொடுத்த முகிலன், நிலாவைக் காண்பித்து ஜாடை செய்யவும், அது புரிந்தவராக, "ம்மா அழகி! நாளைக்கு மதுரைக்குப் போய் உங்க அம்மா அப்பாவைப் பார்த்துட்டு வாரலாமான்னு கேட்கறான் இவன்?!" என்று கேட்டார் நிலாவிடம்.
அவரது அந்த கேள்வியில் முகம் இருண்டு போக, "வேண்டாம் யங் மேன்! அந்த அம்மாவாவது பரவாயில்ல, ஆனா அவரு ரொம்பவே அடமென்ட்! ஆக்சிடென்ட் ஆன அன்னைக்கு அங்கப் போயிருந்தேன் இல்ல, அப்ப நான் எவ்வளவு கெஞ்சினேன் தெரியுமா? கொஞ்சம் கூட கன்சிடர் பண்ணல! எனக்கு என்னவோ பிடிக்கல!" என்றால் நிலா கண்களில் வெறுமையுடன்.
"இல்ல! நாளைக்கு நாம மதுரைக்குப் போறோம் டாட்! மார்னிங் அஞ்சு மணிக்கு, ஒரு செட் ட்ரெஸ்ஸ பேக் பண்ணிட்டு நீ ரெடியா கீழ வந்திருக்கணும்! நைட்டு மாமா வீட்டிலேயே படுத்துக்கோ! நீ தூங்கினாலும் சரி! இல்லாம போனாலும் பரவாயில்ல! இட்ஸ் அன் ஆர்டர்!" என்றான் முகிலன் திட்டவட்டமாக.
அதில் சுறுசுறுவென கோபம் ஏற, "நீங்க யாரு மிஸ்டர் எனக்கு ஆர்டர் போட! என்னால வர முடியாது!" என அவள் பட்டென்று பதில் சொல்ல,
"உனக்கு பிரபாவைக் கண்டு பிடிக்கணும்னா நான் சொல்றத நீ கேட்டே ஆகணும்! அப்பறம் உன் இஷ்டம்!" என இலகுவாகச் சொல்லிவிட்டு, அவளது பதிலையும் கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான் முகிலன்.
சென்னையில் இருக்கும் நாட்களில், விளையாட்டுத்தனத்துடன் வெகு இயல்பாக சுற்றிக்கொண்டிருக்கும் முகிலனின் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் புதியதாக இருக்கவும், அப்படியே அதிர்ந்துபோய் நின்றார் ஜீ.கே மாமா.
***
இருள் மறையாத அதிகாலை, முகிலன் தன்னுடைய காரை வாகன நிறுத்தத்திலிருந்து கிளப்பி வந்து அந்தக் குடியிருப்பின் வாயிலில் நிறுத்தினான்.
குழப்பம், பயம் என அத்தனை உணர்ச்சிகளும் முகத்தில் அப்பியிருக்க, அங்கே நின்றுகொண்டிருந்தாள் நிலா.
மதுரைக்கு கிளம்பிக் கொண்டிருந்த அவர்களை வழி அனுப்பவென அங்கே அவளுடன் நின்றிருந்தனர் ஜீ.கே மாமாவும், மாமியும்.
கையில் வைத்திருந்த சிறிய பயணப்பையுடன் காரின் பின்புற இருக்கையை நோக்கி நிலா போகவும், முன்புற கதவைத் திறந்தவாறே, "ஹேய்! உனக்கு என்ன மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பா? என்னை உன்னோட ட்ரைவர்னு நினைச்சியா! ஒழுங்கா முன்னால வந்து உட்காரு!" என அவன் அதட்டலாகச் சொல்ல, "முகிலா! பாவம்டா அவ. இப்படி மிரட்றதா இருந்தா, நீ மட்டும் போய்ட்டு வா!" என்றார் மாமி கண்டனமாக.
அனைத்தையும் மாமா முந்தைய இரவிலேயே மாமியிடம் சொல்லியிருக்க அவருக்கும் ஓரளவிற்கு நிலாவின் நிலைமை புரிந்திருந்தது.
"வாங்க மேடம்! வந்து முன்னால உட்காருங்க மேடம்!" என மிகப் பணிவுடன் சொன்னவன், மாமியிடம், "இது போதுமா பியூட்டி!" என்றான் மேலும் பணிவான குரலில்.
"உன்னோட இந்த துஷ்ட தனத்துக்கு, என் கிட்ட அடிதான் வாங்க போற பாரு! ஒழுங்கா கிளம்பு! குழந்தையைப் பத்திரமா கூட்டிண்டு போ! அவ அப்பா அம்மா அவளை ஏத்துண்டான்னா, அங்கேயே விட்டுட்டு வா! இல்லனா நாம பார்த்துக்கலாம்" என்றார் மாமி மிகவும் கரிசனத்துடன்.
அதற்குள் நிலா முன் பக்க இருக்கையில் வந்து அமர்ந்திருக்க, 'பியூட்டி! அவங்க இந்தக் குழந்தையோட அம்மா அப்பாவா இருக்க வாய்ப்பே இல்ல! அங்கே போனா என்னென்ன காமெடியெல்லாம் நடக்க போகுதோ, ஓ மை கடவுளே!' என மனதுக்குள் புலம்பியவன், "நீங்க சொல்லிட்டீங்க இல்ல, அப்படியே செஞ்சிடலாம் பியூட்டி! பை!" என்று சொல்லிவிட்டு, அவர்களிடம் விடை பெற்று காரைக் கிளப்பினான்.
அதே நேரம், அங்கே வந்து நின்ற கால் டாக்ஸியிலிருந்து இறங்கி, "ஸ்டாப்! ஸ்டாப்!" என்றவாறே பயணப் பெட்டி ஒன்றை இழுத்துக்கொண்டு, முகிலனின் வாகனத்தை நோக்கி ஓடிவந்தான் ஒரு நெடியவன்.
அவனைப் பார்த்ததும் இன்ஜினை அணைத்துவிட்டு, "கட்டதொரைக்குக் கட்டம் சரியில்ல!" என முணுமுணுத்தவாறு தலையில் கையை வைத்துக்கொண்டான் முகிலன்.
அவர்கள் இருவரையும் மாற்றி மாற்றி ஒரு புரியாத பார்வை பார்த்தாள் நிலா!
"ஹேய்! கதிர்! வாடா வா! எப்படி இருக்க?" என மாமா மிகவும் குதூகலமாக அவனை வரவேற்க, அவர்கள் அறியாமல் வாயை மூடிக்கொண்டு நக்கலாகச் சிரித்தவாறே மாமி, முகிலனுக்கு அருகில் வர, கண்ணாடியை இறக்கினான் முகிலன்.
அவனிடம் குனிந்து, "உன்னை வெறுப்பேத்தறாராம் மாமா! நீ கண்டுக்காத, இவனை நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு! என்றார் மாமி.
அதற்குள் மாமாவால் கதிர் என அழைக்கப்பட்டவன், யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல், அவனுடைய பயணப் பெட்டியின் நீண்டிருந்த பிடியைச் சுருக்கி, டிக்கியைத் திறந்து அதில் திணித்து விட்டு, காரின் பின் கதவைத் திறந்து, "ஹை! பிரின்சஸ்! அது என்னை மாதிரி அடிமைகள் உட்கார்ர சீட், நீங்க இங்க வந்து உட்காருங்க!" என சொல்லிக்கொண்டே முன் புற கதவைத் திறக்க,
"டேஏஏஏய்! இப்ப மேனர்ஸ் இல்ல! அது இல்ல, இது இல்லன்னு குஷி ஜோ அக்கா மாதிரி ஆரம்பிச்சான்னா, மதுரை போய்ச்சேரும் வரைக்கும் அவ நிறுத்த மாட்டா...டா. இவன் வேற சும்மா இருக்கற சிங்கத்தைச் சீண்டிப் பாக்கறான்!" என முகிலன் அவனைக் கடிந்துகொள்ள, "அண்ணா! நாம மதுரை போறோமா!" எனக் கேட்டான் கதிர் குதூகலத்துடன்.
"நாங்க ரெண்டு பேர் மட்டும்தான் போறோம்! நீ ஏன் உன்னையும் கூட சேர்த்துக்கற?" என முகிலன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கதிர் முன் புற இருக்கையில் அமர்ந்திருந்தான். பின்புறமாக இடம் மாறியிருந்த நிலா, அவனை முறைத்துக்கொண்டு உர்ர்! என உட்கார்ந்திருந்தாள். நொந்தே போனவனாக, தலையில் அடித்துக்கொண்டான் முகிலன்.
அதைப் பார்த்து, “டேய் இது வெறும் டீசர்தான்! இனிமேலதான் இருக்கு ஃபுல் என்டர்டைன்மென்டே!” என்றார் மாமா கிண்டல் ததும்பி வழியும் குரலில்.
முழங்கையால் மாமாவின் விலாவில் இடித்தவாறே, "ஏன்னா நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா? பாவம்னா அவன்! ஏற்கனவே அவ அவனை ஒரு வழி பண்ணிண்டு இருக்கா! போறாக்குறைக்கு இவன் வேற சேந்துண்டான்னா அவ்ளோதான்" என்றார் மாமி காட்டமாக.
"கவலையே படாதடீ! அவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்! ஏன்னா உன் அபிமான புத்ரன் ரொம்போ நல்லவன்!" என மாமாவின் கிண்டல் தொடர,
"கர்மம்! கர்மம்! உங்க பேத்தி கூட சேர்ந்துண்டு, எப்ப பாரு டிக் பண்றேன் டொக் பன்றேன்னு, வடிவேலு டயலாக்கலாம் பேசிண்டு, ரொம்ப கெட்டுப் போய் இருக்கீங்கோ! ஆத்துக்கு வாங்கோ, உங்களுக்கு இருக்கு!" என்று நொடிந்துகொண்டு,
"கண்ணப்பா! ஜாகர்த்தையா போயிட்டு வாடா! பத்திரம்!" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றார் மாமி!
"ஜோக்ஸ் அபார்ட் முகிலா! பத்திரமா போயிட்டு வா!" என்றார் மாமாவும் முழு அக்கறையுடன்.
குழப்பமும் குதூகலமுமாகத் தொடங்கியது அவர்களுடைய அந்தப் பயணம்.
***
"என்னடா இந்த நேரத்துல இங்க வந்து குதிச்சிருக்க?" என முகிலன் கேட்க,
"நேத்து நைட், உங்களைப் பார்க்கணும்னு மனசுல ஒரு கிங்ஃபிஷர் வந்து கூவிச்சு! உடனே ஸ்பைஸ் ஜெட்ட பிடிடுச்சு இங்கே வந்துட்டேன்!" என்றான் கதிர் கொட்டாவியுடன்.
"எல்லாருக்கும் மனசுல குயில்தான் கூவும், உனக்கு மட்டும் எப்படிடா கிங்ஃபிஷர் கூவுது!" என நக்கலாக கேட்க,
"அது மனசுல ஃபிகர நினைச்சா குயில் கூவும், உங்கள மாதிரி முரட்டு சிங்கிள நினைச்சா கிங்ஃபிஷர்தான கூவும்" என்றான் கதிர் அடக்கப்பட்ட சிரிப்புடன்.
"நானே மிங்கிள் ஆகணும்னு நினைச்சாலும், அது நடக்கவே நடக்காது போல இருக்கே! எல்லாமே கால கொடுமைடா கதிரவா!" என்றவாறு ரியர் வ்யூ மிரர்ரைச் சரி செய்வது போல அவளுடைய முகத்தைப் பார்த்தான் முகிலன்.
எந்த ஒரு உணர்ச்சியையும் முகத்தில் வெளிக்காட்டாமல், மெழுகினால் செய்யப்பட்ட சிலை போல அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அவனுடைய செய்கையைக் கவனித்த கதிர் மட்டும், தொண்டையைச் செருமிக்கொண்டு, "நடக்கட்டும்! நடக்கட்டும்!" என்றான் விஷமமாக.
அதில் பொறுமை இழந்த முகிலன், "ஜிம்முக்குப் போய் பாடியை மட்டும் நல்லா வளர்த்து வெச்சிருக்க, மூளை கொஞ்சம் கூட வளரல. அதனாலதான் உன்னால இன்னும் யூபிஎஸ்சி கிளியர் பண்ண முடியல. எப்ப பாரு கேர்ள் ஃப்ரண்ட்ஸ், பப், டிஸ்கோதே..ன்னு ஊரைச் சுத்திட்டு, டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க. இதுல என்னையே ஓட்டுறயா நீ! வெளுத்துடுவேன் பாத்துக்கோ!" என எறிந்து விழ, ஒரு பெண்ணின் எதிரில் அவன் இப்படிப் பேசவும் தர்ம சங்கடமாகிப் போனது கதிருக்கு.
அந்த எண்ணத்தில் அனிச்சைச் செயலாக அவன் பின்புறம் திரும்ப, மிகவும் முயன்று நிலா சிரிப்பை அடக்குவது புரிந்தது. அதை உணர்ந்ததும் அவனுடைய முகம் தொங்கிப் போனது.
அவனைப் பார்க்க முகிலனுக்கே பாவமாகத்தான் இருந்தது. ஆனாலும் கதிரை சமாதானம் செய்யும் விதமாக அவன் ஏதாவது பேசினால், அவனுடைய அட்டகாசம் எல்லை மீறும் என்பதை நன்கு அறிந்திருக்கவும், "டேய் பாவி! நைட்லாம் ட்ரேவல் பண்ணி வந்திருக்க, என் பக்கத்துல உட்கார்ந்து தூங்கித் தொலைக்காத! அப்பறம் மதுரைக்குப் போகமாட்டோம் நேரா பரலோகம்தான்!" என்ற முகிலனைத் தொடர்ந்து கதிர் அவன் சொன்ன எதையும் மூளைக்குக் கொண்டு செல்லாமல், துடைத்தெறிந்துவிட்டு வளவளத்துக்கொண்டே வர, ஒரு வார்த்தை கூட பேசாமல் உட்கார்ந்திருந்தாள் நிலா.
வண்டி செங்கல்பட்டைக் கடக்கவும், அதன் வேகம் நூற்றிநாற்பதைத் தாண்டி பறந்தது. சற்று நேரம் அங்கே இறுக்கமான மௌனமே குடிகொண்டிருக்க, "பசிக்குது, ஏதாவது சாப்பிட்டுட்டு போகலாமா?" எனக் கேட்டு அந்த மௌனத்தைக் கலைத்தாள் நிலா.
சில நிமிடங்கள் பயணித்து, ஒரு உணவகத்தில் வாகனத்தை நிறுத்தினான் முகிலன். மணி காலை எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்ததும், வேண்டிய உணவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்க, "மூன் மேடம்! சங்கத்துக்குச் சோறுதான் முக்கியமா? உங்களுக்கு வேற எதுவும் பேசவே தெரியாதா? நானும் கார்ல ஏறினதுல இருந்து பார்த்துட்டே இருக்கேன், சைலன்ட் மோட்லேயே வந்துட்டு இருக்கீங்க! எங்க கிளவுட் அண்ணா வேற பயங்கர வைப்ரேஷன் மோட்ல இருக்காரு!" என்று கேட்டு அதுவரை கொஞ்சம் அடங்கி இருந்த கதிர், மறுபடியும் அவனுடைய சேட்டையை ஆரம்பித்தான்.
அவனைப் பார்த்து அவள் கொலைவெறியுடன் முறைக்க, முந்தி கொண்ட முகிலன் பார்வையாலேயே தன் கண்டனத்தைத் தெரிவித்தான்.
அதில் பம்மியவாறு, "அண்ணா முக்கியமா எதையாவது டார்கெட் பண்ணிட்டு இருக்கீங்களா? ஒய் திஸ் மச் சீரியஸ்” என்றவன்,
“அங்க அப்பா செம்ம திட்டு. உங்களையும் அண்ணாவையும் கம்பேர் பண்ணி கொல்றாரு. அவரு பெரிய ஆப்பீஸரா இருந்தாருன்னா அது அவரோட. என்னை ஏன் பரேட் எடுக்கணும். நான் என்ன வெச்சுட்டா வஞ்சனை பண்றேன்
அண்ணா... அவனோட படிப்பு, கேரியர், பொண்டட்டி, புள்ளகுட்டின்னு வெளிநாட்டுல போய் செட்டில் ஆகிட்டான். நீங்க பாட்டுக்குத் திடீர் திடீர்னு மாயமா மறைஞ்சுடுவீங்க.
நான் இங்க வந்ததே நீங்க இப்ப இங்க இருக்கறதாலதான். உங்க கூட இருந்தா, ஜூன் எக்ஸாம்க்கு ரிலாக்ஸ்டா பிரிப்பர் பண்ண முடியும்னுதான். அவர்தான் அப்படி பண்றாருன்னா, நீங்களுமா?" என கதிர் புலம்பலில் இறங்க,
"ரிலாக்ஸ் கதிர்! நீ இங்க வரப்போறத என் கிட்ட முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணி இருக்கலாம் இல்ல? நான் உனக்கு ஏதாவது அரேன்ஞ் பண்ணி இருப்பேனே. என் கூட சேர்ந்து இப்படி அலைய வேண்டாமே!" என்றான் முகிலன்.
"இல்லணா! ஐ என்ஜாய் திஸ் லாங் ட்ரைவ்!" எனக் கதிர் சொல்ல, "நாங்க என்ன ஜாலி டூரா போறோம் என்ஜாய் பண்ண! நானே கடுப்புல இருக்கேன்!" என்றான் முகிலன் நிலாவைப் பார்த்துக்கொண்டே.
அவள் அதைக் கண்டு கொள்ளாமல், உணவிலேயே கவனமாய் இருக்க, "இந்தப் பொண்ணுக்கு காது கேக்காதா?" என்று கதிர் முகிலனிடம் கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட,
"எனக்குக் காது நல்லாவே கேட்கும். உனக்குத்தான் வாய் கொஞ்ச நேரம் கூட சும்மாவே இருக்காது போலிருக்கு. நீ இதே மாதிரி லொட லொடன்னு பேசிட்டே வந்தேன்னு வை! லோக்கல் அனஸ்தீசியாவே கொடுக்காமல் வாய்ல அப்படியே ஸ்வீச்சர்ஸ் போட்டுடுவேன், ஜாக்கிரதை!" என அவள் மிரட்டலாகச் சொல்ல,
"மேடம்க்கு பெரிய என்ட்டு சார்ஜன்னு மனசுல நினைப்பா?" என அவன் பதிலுக்கு எகிற,
"என்ன என்ட்டா!" என அவள் கேட்கவும், "அமாம் காது மூக்கு டாக்டரைத்தான் சொன்னேன். நீ கமல் படமெல்லாம் பார்த்தது இல்லையா?" என அவளை விடாமல் வாரினான் கதிர்.
அதில் அவள் தாறுமாறாகக் கலவரமாகி, குடிப்பதற்காகக் குவளையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் கதிரின் முகத்தில் ஊற்ற எத்தனிக்க, துரிதமாகப் பாய்ந்து தடுத்த முகிலன் ஆற்றாமையுடன் தலையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான். அதைப் பார்த்ததும்தான் அடங்கினர் இருவரும்.
எப்படியோ ஒரு வழியாக உணவை உண்டு முடித்து அவர்கள் அங்கிருந்து கிளம்ப, அந்த பயணத்துடன் சேர்ந்து இருவரின் சண்டையும் தொடர்ந்தது.
மதியம் ஒன்றரை மணி வாக்கில், நிலா அவளுடைய பெற்றோருடைய முகவரி எனக் கொடுத்திருந்த மதுரை திருமங்கலத்தில் இருக்கும் அந்த வீட்டிற்கு சேதாரம் எதுவும் இல்லாமல் எப்படியோ வந்து சேர்ந்தனர் மூவரும். ஓரளவிற்கு அந்த இடத்தை அடைய அவளே சரியாக வழியும் காண்பித்தாள்.
ஆனாலும் அவர்கள் அந்த வீட்டை அடைந்ததும், வீட்டிற்குள் வர அவள் முற்றிலும் மறுத்துவிட, அவளை காரிலேயே விட்டுவிட்டு, முகிலனும் கதிரும் மட்டும் உள்ளே சென்றனர்.
சிறிய தோட்டத்தின் நடுவில் அழகான ஒரு குட்டி பங்களா போன்று அமைந்திருந்தது அந்தத் தனி வீடு.
வீட்டின் அழைப்பு மணியை அழுத்தவும், ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவைக் கொஞ்சமாகத் திறந்து எட்டிப் பார்த்தார்.
"இங்க நிலாவோட அம்மா?" என முகிலன் விசாரிக்க, அவனை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த அந்தப் பெண்மணி சற்றே தயக்கத்துடன், "நான்தான், நீங்க யாரு?" எனக் கேட்டார்.
“நாங்க சென்னைல இருந்து வரோம்மா! அங்க நிலா இருக்கற ஃபிளாட்லதான் நானும் குடி இருக்கேன்!" என்றான். அதே சமயம், ஓட்டி வந்த புல்லட்டை ஓரமாக நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி வந்தார் ஐம்பதைக் கடந்த வயதில் இருக்கும் ஒருவர்.
அவர் வந்த உடனேயே, கதவை நன்றாகத் திறந்து, அவருக்கு வழி விட்டு விலகி நின்றார் அந்தப் பெண்மணி. அவருடைய அந்த உடல் மொழியிலேயே தெரிந்து போனது அப்பா என நிலா குறிப்பிட்ட அந்த நபர் அவர்தான் என்று.
அந்தப் பெண்மணி முகிலன் கூறியவற்றை அவரிடம் சொல்ல, "செத்துப்போனவள பத்திக் கேட்டுகிட்டு எதுக்காக இங்குட்டு வந்திருக்கானுகளாம்!" என அவர் பதட்டமடையவும், முகிலனுக்கு கோபம் சுள்ளென்று ஏறினாலும், அதை அடக்கியவனாக,
"அவங்க உங்களுக்குப் பிடிக்காம கல்யாணம் பண்ணிட்டது தப்புதான். அதுக்காக நீங்க இப்படி பேசக்கூடாது. உங்கப் பொண்ணு மென்டலி ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காங்க. உங்க கூட இருந்தாதான் அவங்க நார்மல் ஆவாங்க!" என அவன் அடுக்கிக்கொண்டே போக, 'முகிலன் அண்ணாவா இவ்ளோ பொறுமையா பேசறாங்க?!’ எனக் கதிர் வாய் பிளந்து நின்றான்.
"டேய் என்னடா பெருசா பேச வந்துட்ட! ஏதாவது இப்படி செஞ்சு பணம் பார்க்கலாம்னு கிளப்பி இருக்கீங்களா! செத்தவளை எப்படிடா நாங்க கூட வெச்சுக்க முடியம்?" என அவர் மரியாதையைக் கைவிட்டவராக ஏக வசனத்தில் சாடத்தொடங்கினார்.
"யோவ் பெரிய மனுஷனா தெரியறியே! பேங்க்ல வேலை செய்யறையே கொஞ்சமாவது மரியாதை தெரிஞ்சிருக்கும்னு பார்த்தேன்! இவ்ளோ கேவலமா நடந்துக்கற! உயிரோட இருக்கற பெத்த பொண்ணையே செத்துட்டான்னு பேசற! அப்படி என்ன உனக்கு ஜாதி வெறி?" என முகிலன் பதிலுக்குக் கோபத்துடன் பாயவும்,
குறுக்கே வந்த அந்தப் பெண்மணி, "தம்பி எங்கப் பொண்ணப் பறிகொடுத்துட்டு, இன்னும் கூட அந்த துக்கம் எங்களுக்கு அடங்கலப்பா! எங்க விருப்பம் இல்லாம யாரையோ கட்டிக்கிட்டுப் போனதால அவளைத் தலை முழுகி விட்டுட்டோம், மத்தபடி சாதி வெறில அவளைக் கொல்லணும்னு எல்லாம் நாங்க நினைக்கல! ஏற்கனவே சாதி சனம் மத்தியில அசிங்கப்பட்டு நொந்து போயிருக்கோம் தம்பி. எங்களை தயவு செஞ்சு விட்ருங்க!" எனக் கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.
அவருடைய கண்ணீரைக் கண்டு கொஞ்சம் இளகியவன், "உங்க பெண்ணைப் பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா!" என்று கேட்க,
அவர் கணவரின் முகத்தைப் பார்க்கவும், "நான் ஒரு போலீஸ் ஆஃபிசர்! தயங்காம சொல்லுங்க!" என தைரியமளித்தான்.
"என் மக பேரு நிலமங்கை!" என தன் மகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார் அந்தப் பெண்மணி.
Comments