top of page

Azhage Sugamaa?! 3

Updated: Mar 27, 2023

முகில்நிலவு 3


முகிலனுடைய குரலில் தூக்கம் நன்றாகக் கலைய, அவனுடைய முகத்தைக் கூர்ந்து பார்த்தவள், "ஆஆஆஆ!" என்று சத்தமாகக் கத்தியவாறு எழுந்து உட்காரவும், "ஷு! எதுக்கு இப்படிக் கத்தி எனர்ஜிய வேஸ்ட் பண்ற! வாய மூடு!" என்றான் அவன் அதட்டலாக.


"பூட்டி இருக்கற வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? ஏன் வந்தீங்க? ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது இப்படிச் செய்ய உங்களுக்கு எவ்ளோ தெனாவெட்டு இருக்கணும்? இதுல என்னை வேற மிரட்டறீங்களா நீங்க?" என எகிறத் தொடங்கினாள் நிலா.


"இதே மாதிரி கத்தி, கலாட்டா பண்ணிட்டு இருந்த வை, இங்கயே ஒரு சிறப்பான, தரமான சம்பவத்தை நீ பார்க்க வேண்டியதா இருக்கும்! அப்பறம் உன் இஷ்டம்!" என அவன் விஷமமாகச் சொல்ல, அதில் அதிர்ந்தாள் நிலா.


மேலும் அந்தத் தனிமை வேறு அவளை மிரட்டவும், "என்ன… என்ன... என்ன செய்வீங்க?" என உள்ளே போன குரலில் அவள் கேட்க,


'உன்னை வெச்சிட்டு, இப்ப ரொமான்ஸா பண்ண முடியும்?!' எனக் கடுப்புடன் மனதிற்குள் நினைத்தவன், "ஒரே அறை! அவ்வளவுதான்" என்றவன், "தெரியுமா? ரெண்டு மாசத்துக்கு முன்னால, ஏழு அடில ஒருத்தன், பக்கா ட்ரைன்ட் ஆர்மி ஆளூ, என் வேலைய முடிக்க விடாம டிஸ்டர்ப் பண்ணான், இந்தக் கையால ஒரே ஒரு அடிதான்!” எனத் தன் கையைத் தூக்கிக் காண்பித்தவன், “அப்படியே சுருண்டு விழுந்தவன், அதோட நான் சென்னை வர வரைக்கும் கூட எழுந்திருக்கலன்னு கேள்வி பட்டேன். எப்படி வசதி? நான் சொல்றத எதிர்த்து பேசாம கேட்ப இல்ல?” என மிரட்டலாகவே சொல்லிவிட்டு,


“டென் மினிட்ஸ் டைம் தரேன், அதுக்குள்ள ரெஃப்ரஷ் ஆகிட்டு வா! நோ மோர் ஆர்க்யூமென்ட்!" என முடிக்க, அவள் முகத்தில் பீதியின் சாயல் நன்றாகவே தெரிந்தது.


அவனுக்கே அவளைப் பார்க்கப் பாவமாகத்தான் இருத்தது. ‘ஆனாலும் உன்னை கரக்ட் பண்ண இந்த மாதிரி சர்ஜிகல் அட்டாக்ஸ் எல்லாம் தேவைதான் போடி!’ என எண்ணிக்கொண்டான் முகிலன்.


அவனுடைய மிரட்டல் கொஞ்சம் வேலை செய்ய, ஏதோ முணுமுணுத்துக்கொண்டே அவளது அறைக்குள் நுழைந்து, கதவைத் தாழிட்டுக்கொண்டாள் நிலா.


அவன் சொன்னது போல் சரியாக பத்து நிமிடத்தில், குளித்து, ஒரு ஷார்ட் டாப், லாங் ஸ்கர்ட், அணிந்து, மொத்த கூந்தலையும் தூக்கிக் கொண்டையாகப் போட்டவாறு, நெற்றியில் சிறிய பொட்டு வைத்து, முத்து முத்தாகத் தண்ணீர் முகத்தில் சொட்ட, அங்கே வந்த நிலா, தோரணையாகக் கால் மேல் கால் போட்டு, கைப்பேசியைக் குடைந்தவாறு, வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த முகிலனை, கண்களாலேயே எரித்தவாறு, சமையல் அறை நோக்கிப் போனாள்.


எளிமையான அவளுடைய அழகில் சில நொடிகள் தன்னை மறந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், பின்பு அவளை பின் தொடர்ந்து போனான் முகிலன்.


அங்கே தயாராக இருந்த காலை உணவைப் பார்த்து விழி விரித்தவள், "நீங்களா செஞ்சீங்க!" என வியப்புடன் முகிலனைப் பார்த்துக் கேட்கவும், "பின்ன! உன்னை மாதிரி தூங்கு மூஞ்சியை கட்டிக்கப்போறவனுக்கு இது கூடச் செய்ய தெரியலன்னா அவனோட கதி என்ன ஆகும்!" என அவன் கேட்க, அதில் முகம் கசங்கியவள், "மரியாதையா வெளியில போயிடுங்க! இப்படியெல்லாம் பேசினா எனக்குப் பிடிக்காது!" என்றாள் காட்டமாக.


"ஓகே! சும்மாதான் சொன்னேன்! வா சாப்பிடலாம்!" என அவன் சொல்ல, காஃபீ மேக்கரில், பொடியைப் போட்டு, தண்ணீர் ஊற்றியவள், "எனக்கு டிஃபன் சாப்பிட்டா உடனே காஃபீ வேணும்!" என்று சொல்லிக்கொண்டே, இட்லியைத் தட்டிலிருந்து பிரித்தெடுக்க,


காஃபி மேக்கரின் ஸ்விட்சைப் போட்டவன், "பவுடர் போட்டுத் தண்ணி ஊத்தினா மட்டும் போறாது, ஸ்விட்ச்சையும் போடணும்!" என்றான் நக்கலாக.


அதை கவனிக்காதவள் போல, அனைத்தையும் உணவு மேசை மேசை மேல் எடுத்து வைத்தவள், அவனுக்கும் சேர்த்து ஒரு தட்டை மேசை மீது வைத்து விட்டு, அவனைப் பார்த்து, "சாப்பிலாமா! எனக்கு ரொம்ப பசிக்குது!" என்று சொல்ல, புன்னகையுடன் அவளுக்கு எதிரில் வந்து உட்கார்ந்தான்.


அவள் சாப்பிடத் தொடங்கியதும், "சிம்பிளா அழகா இருக்க! வேலைக்கு போனாலும் கூட வீட்டை நீட்டா மெயின்டைன் பண்ற, தனியாதான் இருக்கோம்னு, ஏனோ தானோன்னு எல்லாம் இல்லாம, இரசனையா குக் பண்ற? பின்ன ஏன் இந்த திடீர் தற்கொலை முடிவு? ம்?" என்று தீவிரமாகக் கேட்டவன்,


அந்த உரையாடலை இலகுவாகத் தொடங்கும் பொருட்டு, "சாகப்போறவ எதுக்கு இட்லி மாவெல்லாம் அரைச்சு வெச்சிருக்க? எனச் சிரித்துக்கொண்டே கேட்டான்.


முகத்தில் குழப்ப ரேகைகள் தெரிய, "தெரியல! ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு இது வரைக்கும் புரியல! கொஞ்ச நாளா, நான் நானாகவே இல்ல! சமயத்துல என் பேரே எனக்குக் குழம்பி போகுது!" என்றவள், "உங்களுக்குப் பிரபாவைத் தெரியுமா?" என்று கேட்டாள் நிலா.


"அது யாரு பிரபா, உன்னோட ஃப்ரெண்டா?" என்று கேட்டான் முகிலன் புரியாமல். ஏனோ ஒரு கட்டுப்பாட்டில் இல்லாமல் அவனது இதயம் தடதடவென அடித்துக்கொண்டது.


"நிலாவோட ஹஸ்பெண்ட்!" என்றாள் நிலா தெளிவாக.


"உன்னோட ஹஸ்பெண்டா?" என முகிலன் அதிர்ச்சி அடைய,


"நான் நிலாதான! அப்ப என்னோட ஹஸ்பெண்ட்தான?" எனக் கேட்டு அவனைத் தெளிவாகக் குழம்பினாள் நிலா.


அவள் சொன்னதைக் கேட்டு, 'ஆர்ட்டெரி, வென்ட்ரிகிள், எண்டோகார்டியம், மயோகார்டியம், எபி கார்டியம்' என அவனுடைய இதயத்தின் ஒவ்வொரு பகுதியாக, பட்பட்டென வெடித்து இரத்தம் கசிவது போல், நெஞ்சைப் பிடித்துக்கொண்டான் முகிலன்.


பின்பு அவன் நிதானமாக யோசிக்க, அவன் அவளுடைய வீட்டை பார்த்த வரையில், அங்கே ஒரு ஆண் வசிப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. நிலா அங்கே தனியாகத்தான் தங்கி இருக்கிறாள் என்பதும் திண்ணம்.


அந்த வீட்டின் வரவேற்பறையில் அவள், அவளுடைய அம்மா, அப்பா மற்றும் தம்பி எனச் சேர்ந்து எடுத்துக்கொண்ட பெரிய அளவிலான புகைப்படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது. மற்றபடி அவளுடைய கணவன் என்பவனுடனானது என ஒன்று கூட இல்லை.


அவளைப் பார்க்கும்பொழுதும் கூட, திருமணம் ஆனவள் என்றே அவனால் நினைக்க இயலவில்லை. ஒரு முடிவுக்கு வர இயலாமல் குழம்பினான் முகிலன். அவன் குழம்பிய நிலையில் இருக்க, அவளே தொடர்ந்து பேசத் தொடங்கினாள். அதாவது அவனை மேலும் மேலும் குழப்பத்தொடங்கினாள்.


"எங்க ஊர் மதுரை. அப்பா பேங்க் எம்பிளாயீ. அம்மா ஹோம் மேக்கர். ஒரு சிஸ்டர் இருக்கா. நான் ஐ.ஐ.டீ புவனேஸ்வர்ல ஃபைனல் இயர் படிக்கும்போது, அங்கதான் பிரபாவை மீட் பண்ணேன்.


அவர் சிவில் சர்வீஸ் எக்ஸாம்ஸ்ல டாப்பர். ஒரு கெஸ்ட் லெக்ச்சர் கொடுக்க எங்க காலேஜுக்கு வந்திருந்தார். அவரும் தமிழ்தான். அதனால அறிமுகமாகி, அப்படியே ஃபிரெண்டாகிட்டோம்.


அது எப்படியோ லவ்வா டெவலப் ஆயிடுச்சு. அவருக்கு அம்மா அப்பா கிடையாது. என்னோட அப்பா, அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்காததால, அவங்களை எதிர்த்துகிட்டு ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிட்டோம்.


எனக்கும் சென்னையிலேயே நல்ல வேலை கிடைச்சுது. ரெண்டு பேருக்குமே நல்ல சம்பளம். லைஃப் ரொம்ப ஹாப்பியா போச்சு. அம்மா, அப்பா, சிஸ்டர் இவங்க எல்லாரையும் விட்டு வந்த கவலையைத் தவிர, எனக்கு வேற எந்தக் குறையும் இல்லாம என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாரு.


அவருக்கு எந்த டிபார்ட்மெண்ட்ல வேலைனெல்லாம் எனக்கு சரியா தெரியல. அடிக்கடி டூர்ல இருப்பார். ஒன்ஸ் போனால் டூ, த்ரீ மந்த்ஸ் ஆகும் அவர் திரும்ப வர.


ஆறு மாசத்துக்கு முன்னாடி, கடைசியா டூர் போன சமயம், முதல்ல கொஞ்ச நாள் வரைக்கும், தினம் ஒரு தடவ ஃபோன்ல பேசிடுவார்! பட் சில நாட்கள்ல அதுவும் நின்னு போச்சு. அதுக்கு பிறகு, அவர் கிட்ட இருந்து எனக்கு ஃபோனே வரல.


அவரோட டிபாட்மெண்ட்ல விசாரிச்சா, அவரைப் பத்தி எந்தத் தகவலும் கிடைக்கல. அவர் எங்க இருக்காருன்னே தெரியல. எங்க ஃபர்ஸ்ட் ஆனிவெர்சரிக்கு அவருக்கு கிஃப்ட் கொடுக்க, ஒரு லக்ஸுரி ஃபிளாட் வாங்கினேன். நாங்க அந்த வீட்டுக்குக் குடி போகவே இல்ல.


அவளது பார்வை எல்லை இல்லாமல் எங்கோ வெறித்தபடி இருக்க, அவன் இதை எல்லாம் கேட்கிறானா என்பதைக் கூட கவனிக்காமல், சொல்லிக்கொண்டே போனாள் நிலா!


அவள் சொல்வது எதையுமே நம்பமுடியாமல் தவித்தவன், "மாமா உன்னைப் பத்தி வேற மாதிரி சொன்னாங்களே! உன்னோட அம்மா அப்பா ரெண்டு பேரும் டெல்லில இருகாங்க இல்ல?" என அவன் கேட்க,


"அப்படியா சொன்னாரு? இல்லையே" என்று சொல்லிவிட்டு, இடது கையால் தலையைப் பிடித்துகொண்டாள் நிலா! அவளது கண்கள் கலங்கி இருந்தன.


"பிரபா காணாம போன பிறகு, தனிமையில் ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகி, த்ரீ மந்த்ஸ் முன்னால அம்மா அப்பாவைப் பார்க்க, கேப் புக் பண்ணிட்டு, மதுரை போனேன். அவங்க என்னை வீட்டுக்குள்ளேயே விடல. ஓரளவுக்கு மேல அவங்க கிட்ட கெஞ்ச முடியாம, திரும்பிட்டேன்.


திரும்ப வரும்போது, அந்த கார் ஒரு ட்ராக் மேல மோதி, அந்த ஆக்சிடெண்ட்ல எனக்கு தலையில மேஜர் இஞ்சூரி ஆகிடுச்சு. அங்கேயே கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல என்னை அட்மிட் பண்ணாங்க.


ஸ்கல் ஓபன் பண்ணி ஒரு சர்ஜரி கூட நடந்தது. அதுக்குப் பிறகு நடந்த எதுவும் எனக்கு சரியா ஞாபகத்துல இல்ல. நான் இங்க வந்ததுக்குப் பிறகு வேலைக்குக் கூட போகல. என் அக்கௌண்ட்ல நிறைய பணம் இருக்கு. ஸோ பிரச்சனை இல்ல. இந்த வீட்டுக்கு எப்படி குடி வந்தேன்னு கூட ஞாபகம் இல்ல. நேத்து ஏனோ திடீர்னு சாகணும்னு தோனுச்சு! எனக்குச் சரியா தூக்கம் கூட வர மாட்டேங்குது அதனால கூட இருக்கலாம்” என்றவள்,


ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லிவிட்டு, "இந்த மாத்திரையைப் போட்டாத்தான், என்னை மறந்து தூங்குவேன்! நேத்து மாமி வீட்டுல தூக்கமே வரல, அதனாலதான் இங்க வந்து மாத்திரை போட்டுத் தூங்கினேன்!" என்றாள் நிலா.


அவள் சுயநினைவை இழந்து, அப்படி தூங்கியதன் காரணம் புரிந்தது முகிலனுக்கு. அந்தத் தூக்க மாத்திரையின் வேகம் இன்னும் கூட குறையவில்லை என்பதும் புரிந்தது. அவளது நிலை கண்டு மனம் நொந்துபோனான்.


தொடர்ந்து, "எனக்கு பிரபாவைக் கண்டுபிடிச்சு தரீங்களா? ப்ளீஸ்!" என்று முகிலனிடம் கெஞ்சலாக, 'காணாமல் போன என் பொம்மையைக் கண்டு பிடித்துக்கொடு' என ஒரு குழந்தை கேட்பது போல் கேட்டாள் நிலா.


ஒரு நிமிடம் அவளை கூர்ந்து பார்த்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக, "பிரபாவோட ஃபுல் நேம் என்ன?” என்று கேட்க, "சரியா ஞாபகம் இல்ல!" என்றாள்.


"சிஸ்டர்ன்னு சொன்னியே அக்காவா இல்ல தங்கையா?" என அவன் கேட்க, நெற்றியைத் தேய்த்துக்கொண்டே, விழிகளை விரித்து அவனைப் பார்த்தவள், "அக்கான்னுதான் நினைக்கறேன்! தங்கையான்னும் சரியாத் தெரியலையே" என்றாள் குழப்பமாக,


அதில் பொறுமை இழந்து மேசையை ஓங்கித் தட்டியவன், "உண்மையிலேயே பிரபான்னு ஒருத்தன் இருந்திருந்தான்னா, அதுவும் உன்னைக் கல்யாணம் மட்டும் பண்ணியிருந்தான்னா, சத்தியமா செத்தே போயிருப்பான்!" என்றான் முகிலன் கோபத்துடன்.


அதற்கும் அவள் கண் கலங்கவே, தலையைக் கோதிக்கொண்டு, தனது கோபத்தை அடக்கியவன், "நீ எந்த கம்பெனில வேலை செஞ்ச?" என்று கேட்க,


அதற்கும், "ஞாபகம் இல்ல!" என்றவளை ஊடுருவிய பார்வை பார்த்தவன், "இவ்ளோ லாங்கா ஹேர் வெச்சிருக்கியே, எப்படி மெயின்டைன் பண்ற? சின்னதா கட் பண்ணிட்டா ஈசியா இருக்கும் இல்ல?" என இடக்காகக் கேட்க, "இப்ப இது தேவையா?" என்றாள் நிலா நக்கலாக.


"இல்ல இதுக்காவது உருப்படியா பதில் சொல்றியான்னு பாக்கலாமேன்னுதான்!" என்றான் அவன் அதை விட நக்கலாக.


"ம்! எங்க அம்மா என்னைக் கொன்னுடுவாங்க! சான்ஸே இல்ல! இந்த பதில் போதுமா?" என்றாள் சலிப்புடன்.


"அம்மா அப்பாவை எதிர்த்து கல்யாணமே பண்ணிட்டேன்னு சொல்ற... ஒரு ஹேர் கட் பண்ண இவ்வளவு பில்ட் அப் கொடுக்கற" என அவன் மேலும் குதற்கமாகக் கேட்க, ஒரு குழப்பமான பார்வையைத் தவிர வேறு பதில் இல்லை அவளிடம்.


"ஓகே! சில்!" என்றவன், "மதுரை அட்ரஸ் ஞாபகம் இருக்கா?" என அவன் கேட்டான்.


"ம்ம்! ஞாபகம் இருக்கு. சொல்லவா?" என்றவளை,


"வேண்டாம்! வாட்சப் பண்ணு!" என்று சொல்ல,


“இல்ல என் கிட்ட மொபைல் இல்ல. அன்னைக்கு நடந்த ஆக்சிடெண்ட்ல தூள் தூளா உடைஞ்சு போச்சு. அதுக்குப் பிறகு வேற வாங்கல” என்று அவள் சொன்ன விதமே அவள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறாள் என்பதைச் சொல்லாமல் சொன்னது.


மேலும் தோண்டித் துருவ சலிப்பாக இருக்கவே, அவளது முகக் குறிப்பைப் படித்தபடியே, "பரவாயில்ல, அப்பறமா ஒரு பேப்பர்ல எழுதிக் குடு போதும்" என்பதோடு முடித்துக்கொண்டான்.


அதன் பின்பு காஃபியைக் கலந்து இருவருமாக அருந்திவிட்டு, "நீ இப்படி தற்கொலை முயற்சியெல்லாம் செய்யக்கூடாது ரைட்! இனிமேல் உனக்கு சப்போர்ட்டா நான் இருப்பேன் ஓகே!" என்று சொல்லிவிட்டு,


"என் பேர் கார்முகிலன், ஷார்ட்டா முகிலன்! ஃப்ரண்ட்ஸ் முகில்னு கூட கூப்பிடுவாங்க! இப்போதைக்கு நான் ஒரு வெட்டி ஆஃபீசர்! லெட் அஸ் பி ஃப்ரண்ட்ஸ்!" என்றவாறு நட்புடன் அவன் கை நீட்டவும், தலையை ஆட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவாறு, அவனது கையைப் பற்றிக் குலுக்கினாள் நிலா!


"இப்படி சோஃபால உக்காந்துட்டு தூங்காம, பெட்ல போய் படுத்துட்டு கம்ஃபர்டபிளா தூங்கு ஓகே!" எனக் குழந்தைக்குச் சொல்வது போல் சொல்லிவிட்டு, வீட்டைப் பூட்டிக்கொள்ளுமாறு அவளைப் பணித்துவிட்டு அங்கிருந்து சென்றான் முகிலன்.


***


அவனது அலுவலகம் வரை சென்று, மாலை ஐந்து மணி வாக்கில் வீடு திரும்பியவன் மாமாவை அழைத்துக்கொண்டு அவர்கள் குடியிருப்பின் பூங்காவிற்கு வந்தான்.


மாலை வேளையானதால் சிறுவர்கள் நிறையப் பேர் அங்கே விளையாடிக் கொண்டிருக்கவும் அந்தப் பூங்காவே பரபரப்பாக இருந்தது.


அங்கே இருந்த கல் மேடையில் இருவரும் உட்கார, நிலாவைப் பற்றிய அனைத்தையும் மெல்லிய குரலில் மாமாவிடம் சொல்லி முடித்தான் முகிலன்.


அவன் சொன்னவற்றை பொறுமையுடன் கேட்டு முடித்தவர், “இந்த சீனியர் சிட்டிசனோட பாவம் உன்னை விடுமா? என்னை உளவு பார்த்துக் கிழவி கிட்டப் போட்டு குடுக்கற இல்ல? அதான் உனக்கு எல்லாமே இப்படி ஏடாகூடமாவே நடக்கறது” எனச் சொல்லி மாமா சிரிக்க, “மாமா! ப்ளீஸ் பீ சீரியஸ்!” என்றான் முகிலன் தீவிரமாக.


“ஓகே சீரியஸ்!” என்றவர், “அந்த வீடு யார் பேர்ல இருக்குன்னு வேணா விசாரிச்சுப் பார்க்கலாமா. இந்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி கிட்ட கேட்டா கிடைக்கும்!” என்றார் மாமா.


“அதெல்லாம் பார்த்துட்டேன். பிரபஞ்சன்ங்கற பேர்ல இருக்கு. இவளோட ஆதார் டீடெய்ல்ஸ்லாமும் எடுத்துட்டேன். அதுல பேர் நிலான்னு இருக்கு. ஃபோட்டோல இப்ப இருக்கறத விட கொஞ்சம் குண்டா இருக்கற மாதிரி இருக்கா! அதுவும் முகம் தெளிவா இல்ல. கைரேகை மட்டும் இன்னும் மேட்ச் பண்ணி பாக்கல!” என்றவன்,


“அவ பேசறதுலயே ஒண்ணோட ஒண்ணு சம்பந்தம் இல்லாம இருக்கு மாம்ஸ். ஸ்கல் ஓபன் பண்ணி சர்ஜரி செஞ்சிருந்தா, அவளோட ஹேர் எப்படி இவ்வளவு லாங்கா இருக்கும்? சம்திங் பிஷ்ஷி! எதுக்கும் நாளைக்கு அவளை மதுரைக்கு அழைச்சிட்டுப் போகலாமான்னு யோசிக்கறேன்!” என்றான் முகிலன் தீவிரமாக.


அவனை மேலிருந்து கீழ்வரை ஒரு பார்வை பார்த்த ஜீகே மாமா, “இப்பவே ஒரு தடவை உன்னை நன்னா பார்த்துக்கறேன்டா. திரும்ப வரும்போது இப்படியே வரியோ இல்ல சட்டையைக் கிழிச்சிண்டு முழு பைத்தியமா வரியோ!” என்று சொல்லிவிட்டு,


“எப்படியோ அந்தப் பொண்ணுக்கு நல்லது நடந்தால் சரி!” என்று முடித்தார்.


“என்னைப் பார்த்தாக்க உங்களுக்கு அவ்வளவு நக்கலா இருக்கு இல்ல? எல்லாம் பொறாமை!” என்றான் முகிலன் சிரித்தவாறே.


அதே நேரம் கையில் ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட்டுடன் அங்கே வந்த நிலா, அவர்களைப் பார்த்ததும், மாமாவின் அருகினில் வந்து உட்கார்ந்தாள்.


"வாம்மா மின்னல்" என்றார் மாமா கிண்டலாக.


"நான் ஒண்ணும் மின்னல் இல்ல, நிலா!" எனப் பதில் கொடுத்தாள் தெளிவாக.


"கரெக்ட்டுதான் நிலா வெளிச்சத்துல தொடர்ந்து சில நாள் படுத்துத் தூங்கினா பைத்தியம் பிடிக்குமாம்! அவங்க அப்பா சரியாதான் பேரு வெச்சிருக்காரு!" என்றான் முகிலன் ஆற்றாமையுடன்.


அவள் சூடாக ஏதோ பதில் கொடுக்க எத்தனிக்கவும், அதற்குள் அவளை நோக்கி ஓடி வந்தது கறுப்பு நிற நாய் ஒன்று. அது வாலை ஆட்டிக்கொண்டு அவளுடைய காலில் வந்து உரசவும், கையில் வைத்திருந்த பிஸ்கெட்டில் சிலதை அதற்குப் போட்டாள்.


அதன் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக, குட்டியும் பெரிதுமாக நாய்கள் அவளைச் சூழ்ந்து கொள்ளவும், கையில் வைத்திருந்த பிஸ்கட் அனைத்தையும் அவற்றிற்குப் போடத்தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கே வேடிக்கையாய் இருந்தது இருவருக்கும்.


காலை அணிந்திருந்த அதே உடையில்தான் இருந்தாள். கூந்தலை அழகாகப் பின்னலிட்டிருந்தாள். காதில் பெரிய வளையம் அணிந்திருந்தாள். நெற்றியில் சிறிய பொட்டு. அழகிய தேவதை போல இருந்தவளை, இரசிக்க மனம் ஒப்பவில்லை முகிலனுக்கு. 'பிறன் மனை நோக்கா!' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.


அவனது முகத்தை உற்றுப்பார்த்தார் மாமா. அன்று காலை அவன் கண்களில் நிறைந்திருந்த குதூகலம் முற்றிலுமாக வடிந்து, மொத்தமாக அங்கே வலி நிறைந்திருந்தது.


அவனை அப்படிக் கண்டதில் வருந்தியவராக, மாமா அவனைப் பார்த்து, "ஆர் யூ ஓகே பேபி!" என கேட்கவும், "ஏன் மாமா, இந்த வளையலை பொண்ணுங்க கைலதான போட்டுப்பாங்க, இவ ஏன் காதுல தொங்க விட்டிருக்கா?" என்ற அதி முக்கியமான கேள்வியை முகிலன் மாமாவை நோக்கி கேட்கவும், “அடங்கவே மாட்டடா நீ!” என்று சிரித்துக்கொண்டே சொல்லி அவனுடைய முதுகில் தட்டினார் மாமா.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page