top of page

Anbenum Idhazhgal Malarattume 26

Updated: Apr 9, 2023

அணிமா-26


அன்றே சுபாவைப் பெங்களூருக்கு அழைத்து வந்து விட்டான் அசோக்.


சில தினங்களுக்குள்ளாகவே, அவளுடைய கைப்பேசி எண், வங்கிக் கணக்கு அனைத்தையும் புதிதாக மாற்றினான்.


சமூக வலைத் தளங்கள் எதையும் உபயோகிக்க விடாமல், அவளைத் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தான்.


எந்த ஒரு நிலையிலும் அவள் பிறந்த வீட்டினரைத் தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக அவன் இருப்பது நன்றாகவே புரிந்தது அவளுக்கு.


அவளை மிரட்டி திருமணம் செய்து, இந்த நிலையில் கொண்டுவந்திருந்தாலும் தொடர்ந்த நாட்களில் அவளிடம் கனிவாகவே நடந்துகொண்டான்.


வீட்டின் நினைவில் அவள் வாடுவதை மட்டும் கண்டும் காணாமல் இருந்துவிடுவான். மற்றபடி அவளது தேவைகள் அனைத்தையும் கவனித்துதான் செய்தான். அதேபோல், அவளிடமான அவனது எல்லா தேவைகளையும் நன்றாகவே நிறைவேற்றிக்கொண்டான் கெஞ்சலும் மிஞ்சலும் பலவந்தமாக!


அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பேசி அவள் வேலையில் தொடர வழி செய்தவன், ஒரே மாதத்தில் இருவரும் ஒன்றாக அமெரிக்கா செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தான். அனைத்தும் முன்பே திட்டமிட்டு அவன் செய்திருப்பது நன்றாகவே விளங்கியது.


மொத்தத்தில் அசோக்குடைய விரல் நுனியில், நூலில் ஆட்டி வைக்கும் பொம்மையாய் அவள் மாறிப்போயிருந்தாள் சிந்திக்காமல் அவள் செய்த தவறுகளால்!


***


அமெரிக்கா வந்த பிறகு இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை கணிசமான வருமானம் அந்த நாட்டிற்குத் தகுந்தாற்போன்ற ஒரு வாழ்க்கை முறை என நாட்கள் சென்றுகொண்டிருந்தன.


அசோக்கைப் பொறுத்த மட்டும் அவன் அந்த வாழ்க்கை முறையை இரசித்து அனுபவித்து வாழ்ந்து கொண்டிருந்தான் என்றுதான் சொல்லவேண்டும்.


ஆனால் சுபாவிற்கோ மகிழ்ச்சி துக்கம் என எந்த ஒரு உணர்வும் இன்றி இயந்திர கதியில் வாழ்க்கை அவளை இழுத்துச் சென்றது.


ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அசோக்கிற்குத் தெரியாமல் அலுவலகத்திலிருந்து சுஜாதாவைத் தொடர்பு கொண்டு, அவளுடைய குடும்பத்தினர் பற்றிய விவரங்களை அறிந்து சொல்லும்படி சுபா கேட்டுக்கொள்ள சில தினங்களில் அவளை மீண்டும் தொடர்பு கொண்டாள் சுஜாதா.


அவர்களுடைய குடும்பம் கிராமத்தை விட்டு சென்னைக்கே சென்றுவிட்டதையும் மூன்று மாதங்களுக்கு முன் அவளுடைய அப்பா பரந்தாமன் இறந்து போன தகவலையும் சொன்னவள், அசோக்கின் மிரட்டலுக்குப் பணிந்து அவளுடைய திருமணம் நடந்த தினம் அவளிடம் அப்படிப் பேசியதாகவும் சொன்னாள்.


அதற்கு பிராயச்சித்தமாகவே இந்தத் தகவல்களை அறிந்து சொன்னதாகக் கூறியவள் அவளுக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதால் மேற்கொண்டு தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவள் சுபாவிற்கு உதவியது தெரிந்தால் அவன் ஏதாவது பிரச்சனை செய்வான் என்பதினால் இந்த விஷயங்கள் அசோக்கிற்குத் தெரிய வேண்டாம் என்றும் சொல்லி முடித்துக் கொண்டாள் சுஜாதா.


பட்ட துயரங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்ற தந்தையின் மரணம் பற்றிய செய்தியில் மனம் உடைந்து போனாள் சுபா.


தேற்றுவதற்கு ஆள் இன்றி அவள் தனிமைபட்டுபோய் கிடக்க அந்த நிலையிலிருந்து அவளை மீட்பதற்காகவே அவள் கருவில் வந்து உரு கொண்டான் ஜீவன்.


குழந்தை பிறந்ததும் ஜீவிதாவின் பெயரையும் ஜெகதீஸ்வரனின் பெயரையும் இணைத்து ஜீவனேஸ்வரன் என்று குழந்தைக்குப் பெயர் வைத்தாள் சுபா.


சுபா கருவுற்றதற்கோ அல்லது குழந்தை பிறந்ததற்கோ எதற்குமே பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை அசோக். அலுவலக நண்பர்களின் கேள்விகளுக்குப் பயந்தே, அவளைச் சற்று எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டான். அதை எதிர்பார்த்தே இருந்ததால் அது அவளை பெரிதும் பாதிக்கவில்லை.


ஜீவன் பிறந்த பிறகு, குழந்தையை கவனிக்க வேண்டிய அவசியத்தில் சுபா வேலையை விட்டுவிட அவளுடைய வங்கிக் கணக்கில் இருந்த பணமும் சிறுகச் சிறுக செலவாகிப்போக, அனைத்து செலவுகளுக்கும் அசோக்கை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.


அதன் பிறகு அசோக்குடைய நடவடிக்கைகள் மேலும் மோசமாக மாறிப்போக, அது அவளை விரக்தியின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்தியது.


ஜீவனுக்கு மூன்று வயதிருக்கும் சமயம் அவன் வேலை செய்த இந்திய நிறுவனத்திலிருந்து மாறி அதிக சம்பளத்தில் வேறு ஒரு அமெரிக்க நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் அசோக்.


முதலில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி வார இறுதி நாட்களில் வெளியிலேயே தங்க ஆரம்பித்தவன் நாட்கள் செல்லச்செல்ல வீட்டிற்கு வருவதையே தவிர்த்தான்.


வீட்டு வாடகை மற்ற செலவுகளுக்கு மட்டும் அவளது வங்கிக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்துவதுடன் சரி, மற்றபடி சுபாவையோ அல்லது குழந்தையையோ பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்தான்.


ஒரு முறை அவனது வேலை சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதையோ எடுக்க அசோக் வீட்டிற்கு வந்த சமயம் சிறு பிள்ளையுடன் தனிமையில் போராடிப்போய் அதிக மன உளைச்சலிலிருந்த சுபா, அவனது சட்டையைப் பிடித்து, "இந்த நிலைமைல என்னை வெச்சு கொடுமை படுத்த எதுக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கணும்? அப்படியே விட்டிருந்தா நான் சந்தோஷமா இருந்திருப்பேனே!" என்று ஆவேசமாகக் கேட்கவும்,


அவளது கைகளைத் தட்டிவிட்டவன், "நான் இப்படி சந்தோஷமா நிம்மதியா எனக்கு பிடிச்ச மாதிரி லைஃப்ப என்ஜாய் பண்ணத்தான்!" என்றான் நிதானமாக.


தனது படிப்பு மற்றும் தோற்றத்தில் அளவுகடந்த கர்வம் உண்டு அசோக்கிற்கு. அதுவும் வேலை கிடைத்து, பெங்களூரு சென்ற பிறகு அவனது வாழ்க்கை முறையே மாறிப்போனது.


இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே, அவனுடைய திறமையாலும், கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் புத்தி சாதுரியத்தாலும் பதவி உயர்வும் கிடைத்துவிட அவனது கர்வம் வளர்ந்துகொண்டே போனது.


அதிகப்படியான பெண்கள் சகவாசம், குடி, போதை எனக் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைக்குப் பழகியவன் திருமணம் என்ற சொல்லையே வெறுத்தான்.


பண வசதியில் எந்தவித குறைவும் இல்லை என்றாலும் நாகரிக வளர்ச்சியில் சற்று பின் தங்கியே இருந்தனர் அசோக்கின் குடும்பத்தினர். அவர்கள் குடும்பத்திலேயே அசோக்தான் முதல் பட்டதாரி.


அவன் எம்.ஈ. படித்து முடித்ததும் மிகப் பெரிய நிறுவனத்தில் அவனுக்கு நல்ல வேலையும் கிடைத்துவிட பெருமையின் உச்சியிலிருந்தார் அவனுடைய அப்பா.


எக்கச்சக்க சீர்வரிசைகளும் கிலோ அளவில் தங்கமும், லட்சக்கணக்கில் ரொக்கமும் கொடுத்து அவர்கள் சொந்தத்திலேயே அவனுக்குப் பெண் கொடுக்க முன் வரவும் அதற்கு அவனுடைய சம்மதத்தைக் கேட்காமலேயே வாக்குக் கொடுத்துவிட்டார். மொத்த குடும்பமும் அவருக்குத் துணை போக, அவனை வற்புறுத்தி, நிச்சயதார்த்தமும் செய்து முடித்தனர்.


படிப்பு அழகு எதிலும் அவனுக்குப் பொருத்தமில்லாமல் இருந்த அந்தப் பெண்ணை அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. அத்துடன் அவளை மணந்துகொண்டால் அவனுடைய வாழ்க்கை முறையே மாறிப்போகும்.


அந்தப் பெண்ணை மீறி அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடும். ஏனெனில் அவளுடைய குடும்ப பின்னணி அத்தகையது.


அதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு வெளி நாடு செல்ல வேண்டும் என்று சொல்லி தற்காலிகமாக அந்தத் திருமணத்தை ஒரு வருடம் தள்ளிப்போட்டான் அசோக்.


அந்த காலகட்டத்தில்தான் அவன் சுபாவை சந்தித்தது. முதலில் அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை. பழகும் வரை பழகிவிட்டு, சுலபமாக அவளைக் கழற்றி விட்டுவிடலாம் என்றே நினைத்தான்.


ஆனால் அவளே, ஒரு கட்டத்தில் அவனைப்பற்றி அறிந்து நாசூக்காக விலகிச்சென்று விட, அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. திருமணம் செய்யாமல் அவளை நெருங்க இயலாது என்பதையும் அவன் நன்றாகவே புரிந்துகொண்டான்.


அவனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த திருமணத்திலிருந்து எளிதாகத் தப்பிக்க சுபாவைத் திருமணம் செய்துகொள்வதுதான் சுலபமான வழி என்று தோன்றியது அவனுக்கு.


இல்லையென்றால் அவனை எப்படியாவது வற்புறுத்தி, அந்தத் திருமணத்தை நடத்தி முடித்துவிடுவார் அவனுடைய அப்பா. அதனாலேயே அவளிடம் கோபமாகவோ அல்லது வேறு விதமாகவோ அவன் நடந்து கொள்ளவில்லை.


அதுவும், அவளுடைய திருமண அறிவிப்பைப் பார்த்த பிறகு அவளை அப்படியே விட்டுவிட இயலவில்லை. அவளை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி அவன் மனதில் தீயாய் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.


பல சூழ்ச்சிகளைச் செய்து தனக்கு சாதகமாக சூழ்நிலைகளை உருவாக்கி அவளை மணந்து கொண்டான்.


நாளடைவில் அவளிடம் ஏற்பட்டிருந்த ஈர்ப்பு மறைந்து போக அவளிடம் எந்தவித நாட்டமும் இல்லாமல் போனது அசோக்கிற்கு. அவனுடைய வாழ்க்கை முறை எதையும் மாற்றிக்கொள்ளாமல் அவன் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறான்.


திமிராக அனைத்தையும் சொல்லி முடித்தவன், "நீ விருப்பப்பட்டா இப்பவே கூட உங்க ஊருக்கு போகலாம்! எனக்கு எந்த அப்ஜக்ஷனும் கிடையாது. என்ன, உன்னை உங்க வீட்டில் சேர்த்துப்பாங்களான்னு முடிவு பண்ணிக்கோ!" என்று நக்கலாகச் சொன்னான் அசோக்.


"கண்டிப்பா நான் போனா என்னைச் சேர்த்துப்பாங்கதான். ஆனா, நான் ஏன் போகணும்? சட்டப்படி நான் உன்னோட பொண்டாட்டி. என்னையும் உன் பிள்ளையையும் காப்பாத்த வேண்டிய கடமை உனக்குதான் இருக்கு. என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டுப் போகவே மாட்டேன்!" என்றாள் சுபா திண்ணமாக.


அதன் பிறகு வந்த நாட்களில், அவளுக்கு மேலும் தொல்லை கொடுக்க தொடங்கினான் அசோக். மற்ற பெண்களை வீட்டிற்கே அழைத்து வருவது. அவர்களை வைத்துக்கொண்டே, ஜீவனின் எதிரிலேயே, சுபாவிடம் வன்முறையைக் கையாள்வது என மோசமாக நடந்துகொண்டான்.


அங்கே ஆறு வயதில்தான் குழந்தைகளை அரசாங்கமே நடத்தும் பள்ளியில் குறைந்த செலவில் சேர்க்க முடியும். ஆனால் அதற்கு முன்பு ப்ரீஸ்கூல்/டே கேரில் சேர்க்க வேண்டுமென்றால் செலவு அதிகம்.


நான்கு வயது கடந்ததும், மகனை ப்ரீஸ்கூல்லில் சேர்க்க வேண்டும் என்று சுபா கேட்ட பொழுதிலும் அவன் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.


குழந்தை வளர வளர அவனது தேவைகளும் ஏக்கங்களும் அதிகரித்துக்கொண்டே போனது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க இண்டியன் ஸ்டோருக்கு சென்றால் அவன் வயதிற்கே உரிய துறுதுறுப்போடு அவன் ஆசையாகக் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுக்க முடியாமல் அவனது பிடிவாதத்தை வளர்க்க விரும்பாமல்தான் அவனைத் தனியே பூங்காவில் விளையாட விட்டுவிட்டு, அவள் கடைகளுக்குச் செல்வதே.


"நான் பொறுப்பில்லாம அவனைத் தனியா விட்டுட்டுப் போனதாலதான் அவனுக்கு இப்படி பிராக்ச்சர் ஆச்சு. நான் பண்ணப் பாவத்துக்கு இவன்தான் தண்டனை அனுபவிக்கிறான்! இவனைப் பத்தி ஈஸ்வருக்கு தெரிஞ்சா, அப்படியே இவனைத் தங்கத் தட்டுல வெச்சு தாங்குவான்! உறவுகள் மேல அவனுக்கு அந்த அளவுக்குப் பாசமும் அக்கறையும் அதிகம். நான் இப்பவே அவன் எதிர்ல போய் நின்னாலும் எந்தக் கேள்வியும் கேட்காம எங்களை அரவணைப்பான்.


அந்த நிலைமைல அப்படியே விட்டுட்டு நான் இந்தப் பாவி கூட வந்ததும், எங்க வீட்டுல எல்லாரும் எந்த அளவுக்கு நொந்துபோயிருப்பாங்கன்னு வார்த்தையால சொல்ல முடியாது அணிமா. அப்பா செத்துப்போனதுக்கே நான்தான் காரணம்.


அப்படி இருக்க அதுவும் இப்படி தோத்துப்போய் நான் மறுபடியும் அவங்க முன்னாடி நின்னா அம்மாவும் பாட்டியும் அதை நிச்சயமா தாங்க மாட்டாங்க. மறுபடியும் என்னால அவங்களுக்கு எதுவும் ஆகக்கூடாது.


ஜீவிக்குட்டி! அவ ஒரு குழந்தை மாதிரி. என்னைப் பொறுத்தவரை ஜீவன் எப்படியோ அப்படிதான் எனக்கு அவளும். என்னால அவளோட வாழ்க்கை பாதிக்கக் கூடாது!


அதனாலதான், இப்படி பட்ட உறவுகள் இருக்கறத கூட ஜீவனுக்கு நான் சொல்லவே இல்ல! இனிமேலும் சொல்ல மாட்டேன்! எப்படியோ… என் வாழ்க்கை இப்படியே போகட்டும்!" என்று கண்ணீருடன் சொல்லி முடித்தாள் சுபா. அருகில் உறங்கிக்கொண்டிருந்த மகனின் தலையை, மென்மையாய் கோதியவாறே!


***


சுபா மூலமாக அவள் அறிந்துகொண்ட உண்மைகளை, ஈஸ்வரிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே மலருக்குத் தொண்டையை அடைத்துக்கொண்டு வர, கணவனுடைய மனநிலையை எண்ணி நிமிர்ந்து அவனது முகத்தைப் பார்க்கவும் அவள் நினைத்தது போலவே வேதனையில் அவன் முகம் கசங்கிப்போயிருந்து.


அவனது நிலை மனதை உறுத்த, அவனுக்கு அருகில் போய் உட்கார்ந்துகொண்டு, "ஹீரோ! இதெல்லாம் சுபா அண்ணியோட பர்சனல். இந்த விஷயங்களை நியாயமா நான் யார் கிட்டயும் சொல்லக்கூடாது! ஆனா… நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.


சுபா அண்ணி முழுமையா குணமானதும் இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு, அதுக்குப் பிறகுதான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைச்சேன்! ஆனா எல்லாமே மாறிப்போச்சு! அதுக்கு அப்பறமா இதைச் சொல்ல நேரமே அமையல! இதெல்லாம் கேட்டா நீங்க வருத்தப்படுவீங்கன்னு தெரிஞ்சேதான் சொல்ல ஆரம்பிச்சேன்! ஆனா இப்படி உங்களைப் பார்க்கும்போது என்னால தொடர்ந்து சொல்லமுடியும்னு தோணல!" என்றாள் மலர்.


சரிந்து மலருடைய தோளில் முகம் புதைத்து சற்று நேரம் மௌனமாய் இருந்தவன், "ப்ச்! ஏற்கனவே தாங்கவே முடியாத அளவுக்கு வேதனை வலி எல்லாமே பட்டாச்சு மலர்! அதல இருந்து ஓரளவுக்கு மீண்டு வந்துட்டோம்.


ஆனா சுபாவோட ஆங்கிள்ல இருந்து பார்க்கும்போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல! ஃபீலிங் கில்ட்டி!


அவ லவ் பண்ணி மனசுக்குப் பிடிச்சவன கல்யாணம் செஞ்சுட்டு நல்லா இருப்பான்னுதான் நினைச்சேன்! ஆனா பல விஷயங்கள கேட்கவே குலை நடுங்குது மலர்!


அந்தப் பொண்ணு ஒரே ஒரு வார்த்தை எங்கிட்ட சொல்லியிருந்தா எல்லாத்தையும் சரிபண்ணியிருப்பேன்! தப்பு மேலே தப்பு பண்ணி எல்லாத்தையும் மறைச்சு, ச்ச! நாங்கதான் எல்லாத்தையும் இழந்து நின்னோம்னா அவளும் கூட சந்தோஷமா வாழலையே!" என்று சொல்லிவிட்டு சுபா அஷோக்குடன் வீட்டை விட்டுச் சென்ற பிறகு நடந்தவற்றை ஆதங்கத்துடன் சொல்லத்தொடங்கினான் ஈஸ்வர்.


***


சுபா, கைப்பேசியுடன் வெளியே சென்ற பிறகு, அதிக நேரமாகியும் அவள் திரும்ப வராமல் போகவே, அவளைத் தேடிக்கொண்டு வெளியில் போனார் சாருமதி. அன்னையை பின் தொடர்ந்து தானும் வெளியில் வந்தான் ஈஸ்வர்.


அப்பொழுது அங்கே வந்த கைலாஷ், சுபா யாரோ புதியவனுடன் தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்ததையும் அதன்பின் அவனுடன் காரில் ஏறிச் சென்றதையும் தான் பார்த்ததாகச் சொல்லவும் அதிர்ந்தனர் இருவரும்.


அவர்கள் வீட்டிலிருந்த பழனிச்சாமியை அழைத்துச் செல்லவே அவன் அங்கே வந்தது. அதன் பின் அவர்களைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்றவன், பரந்தாமனுடன் பேசிக்கொண்டிருந்த அவனது தந்தையிடம், "இனிமேல் இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது. ஏன்னா சுபானு எவனோடவோ ஊரைவிட்டே ஓடிட்டா!" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு,


பரந்தாமனை நோக்கி, "ஊருக்கு உபதேசம் செய்யறவன் வீட்டுல எல்லாம் இப்படிதான் நடக்கும்" என்று அடுக்கிக்கொண்டே போக, அதில் கோபம் வரப்பெற்ற பழனிச்சாமி மகனுடைய சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்.


அங்கே நடப்பது எதுவும் விளங்காமல் பரந்தாமன் மகனைத் தேடினார்.


இதற்கிடையில் கைலாஷ் சொன்னது எதையும் பொருட்படுத்தாமல் ஈஸ்வர் சுபாவைத் தேடிக்கொண்டு சென்றிருக்க அழுதுகொண்டே வீட்டிற்குள் நுழைந்தார் சாருமதி.


மனைவியின் அழுகையில் நிலைமையை ஓரளவுக்கு ஊகித்த பரந்தாமன், உச்சபட்ச அதிர்ச்சியில், நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வேரறுந்த மரமாய் கீழே சரிந்தார்.


அருகில் நின்றிருந்த பழனிச்சாமி, நண்பனைத் தேற்ற முயல சத்தம் கேட்டு, பாட்டி ஜீவிதா மற்றும் வீட்டில் தங்கியிருந்த உறவினர் சிலரும் அங்கே ஓடி வந்தனர். சில நிமிடங்களில் சுபாவைக் கண்டு பிடிக்க இயலாமல் ஈஸ்வரும் அங்கே வந்து சேர்ந்தான்.


மகனைக் கண்டதும், தழுதழுப்பாக, "போயும் போயும் அவகிட்ட நம்பிக்கை வெச்ச பார்த்தியா அவள் செஞ்ச துரோகத்த. உன் பேச்சைக் கேட்டுப் புத்திக் கெட்டு அவளை வெளியூர்ல தங்கி வேலை பார்க்க அனுப்பினேன் பாரு, என்னைச் சொல்லணும்!" என்று துயரத்துடன் சொல்லிக்கொண்டே மயங்கினார் பரந்தாமன். அவரது வார்த்தைகளில் உயிர் வரை அடிவாங்கினான் ஈஸ்வர்.


ஆனாலும் நிலைமையின் தீவிரம் உணர்ந்து பரந்தாமனை மருத்துவமனையில் அனுமதித்த ஈஸ்வர் கையிருப்பில் வைத்திருந்த பணத்தையெல்லாம் திரட்டி, அவருடைய மருத்துவச் செலவுகளைச் செய்தான்.


அந்த நிலைமையிலும் கருணாகரனின் நட்பை முற்றுமாக இழக்கப்போகிறோம் என்பது புரிந்து, மனம் வலித்தது ஈஸ்வருக்கு.



அவன் எண்ணியதை விட மோசமாக, கருணாகரனின் நட்பை மட்டுமல்ல வாழ்க்கையில் இனி அவன் இழப்பதற்கு ஏதுமில்லை என்ற நிலையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்தியிருந்தாள் சுபா.

© KPN NOVELS COPY PROTECT
bottom of page