11. கேள்விக் கணைகள்
‘ஆதியின் எண்ணிற்கா அழைத்திருந்தாள்? இது எப்படி சாத்தியம்? சரியாக அவனுடைய எண்ணை எப்படி அழைத்திருக்க முடியும்? அதுவும் அவனுடைய தனிப்பட்ட எண் வேறு!’
குழப்பத்தின் உச்சத்திற்கேச் சென்றாள் மல்லி. பிறகு நிகழ்காலம் அவளுக்கு உறைக்க, இந்தத் திருமணத்தை நிறுத்துமாறு ஆதியிடமே கேட்டுப் பார்க்கலாமா என யோசித்தவள், அதை நிறைவேற்றும் பொருட்டு வாட்ஸாப்பிலிருந்து அவனது எண்ணைத் தேட, அதிலிருந்த முகப்புப் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள். அது அவளுடைய படம். அன்றைய பார்ட்டியில் நீச்சல் குளத்தின் அருகில் அவள் உட்கார்ந்திருந்த பொழுது அத்தனை அழகாய் ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்து.
இத்தனை தொடர் அதிர்ச்சிகளை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
தன்னை சமாளித்துக் கொண்டு அவனுக்கு வாய்ஸ் கால் ஒன்றை செய்தாள்.
எதிரில் ஹலோ என்ற அவனது குரல் மிகவும் பரிச்சயமானதாகத்தான் தெரிந்தது மல்லிக்கு. ஆனால் இருந்த குழப்பத்தில், அவள் அதை ஆராய முற்படவில்லை.
“ஹலோ! நீங்க ஆதி சார் தானே?”


