17. சுடும் நிஜம்
பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கையை நகர்த்திப் போட்டுக்கொண்டு கடலையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள் மல்லி.
இருளில், காட்சிகள் எதுவும் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் தெளிவாக இருந்த வானத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. கடல் காற்று, இதமாக வருடிக் கொண்டிருந்தது.
அவை எதையும் ரசிக்கும் மனநிலையில்தான் அவள் இல்லை.
தலை வேறு 'விண் விண்' என்று வெடித்து விடுவது போல் வலிக்கவே கையில் வைத்திருந்த வலி நிவாரணி தைலத்தை எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டாள்.
கையில் ஒரு கிண்ணத்துடன் வந்த ஆதி, “போதும் மல்லி! இப்பவே பாதி பாட்டில காலி பண்ணிட்ட. முகமெல்லாம் எரிச்சல்ல வெந்து போயிடும்! கத்தரி வெயில் வேற” என அதட்டுவது போல் சொன்னான். ஆனாலும் அதில் அவளிடம் அவன் கொண்ட அக்கறையே மேலோங்கி இருந்தது.
மாலையிலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்றைய பொழுதின் தொடர் அதிர்ச்சிகளால் துவண்டு போயிருந்தாள் மல்லி. இரவு உணவைக் கூட பெயருக்குக் கொறித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.


