9. தவிப்பு
மல்லி கண் விழித்துப் பார்ப்பதற்குள் மூன்று நாட்கள் கடந்திருந்தன.
இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளது தலை தரையில் மோதியிருக்க, வெளிப்படையாகப் பெரிய காயம் இல்லையென்றாலும் உள்ளே ஏற்பட்ட அதிர்வினால் பாதிப்பு இருந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே கண்விழித்தாள் மல்லி.
அவளுக்கு விபத்து நடந்த, அந்த இடத்துக்கு மிக அருகிலிருந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைத்த மருத்துவ மனை ஒன்றில் அவளை முதல் கட்ட மருத்துவ உதவிக்காகச் சேர்த்திருந்தான் தேவா. சுமாயாவும் உடனிருந்தாள்.
அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பரிமளாவிற்கு தகவல் கொடுக்கப்பட, ஜெகனுடன் அவர் அங்கு வந்து சேர்த்திருந்தார்.
சுமா நடந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்க, கோபம் கொண்ட பரிமளா, அந்த நேரத்தில் அவளை அலுவலகத்திலிருந்து அங்கே அழைத்து வந்திருக்கத் தேவையில்லையே என சண்டைக்குக் கிளம்பினாள்.
அவரைச் சமாதானப்படுத்திய சுமா மல்லி இருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள்.


