top of page

TIK - 36

இதயம்-36

விபத்திற்குப் பிறகு ஆதி மல்லியை கேர் ஃபார் லைஃப் பிற்குத்தான் கொண்டு வருவான் என்று வினோத் நினைத்திருக்க, தற்செயலாக அவள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அது அவளது நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும். ஆதியின் பாதுகாப்பு வட்டத்துக்குள் அவள் இருக்கவே அங்கே மல்லியைக் கொலை செய்யும் நோக்கத்தில் அடியெடுத்து வைக்கும் துணிவு வினோத்திற்கு கொஞ்சமும் இல்லை. அவள் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு மருத்துவ பரிசோதனைக்குத் தவிர வேறெதற்கும் வீட்டை விட்டு வெளியில் வரவேயில்லை. அவளே அறியாமல் அவளைச் சுற்றி ஆதியின் ஆட்கள் எல்லா நேரமும் காவலுக்கு இருக்கவே அவளை நெருங்குவதே நடக்காதக் காரியம் ஆகிப்போனது வினோத்திற்கு. குணாவின் மரணம் விபத்து என்றே கோபால் நினைத்துக்கொண்டிருக்க, அது கொலை என்பதே மல்லியின் மீது நடந்த கொலை முயற்சிக்குப் பிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது. சில நாட்களாகவே குணா பணத்திற்காக வினோத்தை அதிகம் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான். இதற்கிடையில் அவன் மல்லியை அவனது மகள் படிக்கும் பள்ளியில் சந்திக்கவும், குறிப்பாக அன்று அவள் அம்முவின் செயினைப் பற்றி விசாரிக்கவும், அதில் பதறி அன்று மல்லியை அவன் மிரட்டிவிட்டு வந்ததையும் அதைத் தொடர்ந்து மணியின் ஆட்கள் மூலம் அம்முவின் நகைகளை ஆதி அவனிடமிருந்து பறித்துச் சென்றதையும் வினோத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குணா. அதுவே அவனது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. தனக்கும் இதே நிலை வரலாம் என உண்மையிலேயே பயந்துதான் போனான் கோபால். தங்கவேலுவின் அடியாட்களின் படையையே இறக்கியும் மல்லியை நெருங்ககூட முடியல்லை வினோத்தால். அமைச்சர் தங்கவேலு முன்னாள் அமைச்சராக மாறிப்போயிருக்க, பதவி அதிகாரம் ஏதும் இன்றி பல் பிடுங்கிய பாம்பாய் இருந்தார் அவர். தனது காரியத்தை சாதிக்க எந்த எல்லை வரையிலும் சென்றவர் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் தயக்கம் காண்பிக்கத் தொடங்கியிருந்தார். அது வேறு வினோத்தை எரிச்சல் படுத்திக்கொண்டு இருந்தது. இதற்கிடையில் அம்முவின் சிறுநீரகம் பொருத்தப்பட்டு உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் என்ற செய்தி வினோத்திற்கு வரவும், முதலில் அவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் அடுத்தடுத்து அவளது உறுப்புகளின் மூலம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் மற்ற மூவருக்கும் இதே போல் மார்பகப் புற்றுநோய் கண்டறியப்பட, நொந்தே போனான் வினோத். முழு ஆரோக்கியத்துடன் இருந்த அம்முவின் உடல் உறுப்புகள் எப்படி புற்றுநோயை தோற்றுவித்திருக்கும் என்று அவனுக்குக் கொஞ்சமும் புரியவில்லை. பணம் கொடுத்து உடலின் உதிரிப் பாகங்களை வாங்கியவர்களுக்கு அம்மு தண்டனைக் கொடுத்து தனது பழியை தீர்த்துக்கொண்டாள் போலும். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மருத்துவ செலவுகள் மிகவும் குறைவு. அதுவும் உடல் உறுப்புகளும் சுலபமாக இங்கே கிடைக்கவும் வெளிநாட்டவர் அதிக அளவில் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். அதை வினோத் போன்றவர்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அவர்கள் சட்டரீதியாக வினோத் மீது வழக்கு தொடர்ந்தால் அவன் அதிக பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும். அதைத் தடுக்கும்பொருட்டு வினோத் அமேரிக்கா செல்ல வேண்டியிருக்கவும், மல்லியை அவர்களது வீட்டிலேயே வைத்து கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்துவிட்டுத்தான் வினோத் கிளம்பிச் சென்றான். ஆனால் அந்த முறை சிறு காயமும் கூட ஏற்படாமல் மல்லியைக் காப்பாற்றிவிட்டான் ஆதி. தனக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் சொல்லி முடித்தான் கோபால். கோபத்தில் கண்கள் சிவந்திருக்க இரண்டு கைகளாலும் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு, அப்படியே விரல்களால் நெற்றியை அழுத்திக்கொண்டு தலை குனிந்து உட்கார்ந்திருந்தான் ஆதி. நித்தமும் வெட்டு குத்து என இவற்றையே பிழைப்பாகக் கொண்டிருக்கும் கன்டைனர் மணிக்கே அவனது முகத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது. கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் விஜித் கோபாலை அடித்து நொறுக்க, போதும் என்பதுபோல் கை காட்டி அவனைத் தடுத்த ஆதி, கண்டைனர் மணியை நோக்கி கறகறக்கும் குரலில், “ரெண்டு நாள் இந்த நாயை சோறு தண்ணி இல்லாம இப்படியே வச்சிரு. என்ன செய்யணும்ன்னு நான் பிறகு சொல்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். மாலை இருள் சூழத் தொடங்கும் நேரம் ஆதி வீட்டிற்குள் நுழைய கைப்பேசியை குடைந்தவாறு வரவேற்பறையில் அமர்ந்திருந்த சுமாயா அவனைக் கண்டதும் எழுந்து நின்றாள். விளக்கேற்றிவிட்டு பூஜை அறையிலிருந்து வந்துகொண்டிருந்தாள் மல்லி. அதுவரை அடக்கிவைத்திருந்த அழுகையெல்லாம் அவனைக் கண்ட நொடி விம்மலுடன் வெடித்துக் கிளம்ப, “மாம்ஸ்!” என்றவாறு அவனை அணைத்துக்கொண்டு அழத் தொடங்கினாள் மல்லி. அவளை சமாதானாப் படுத்த அவன் முயன்றுகொண்டிருக்க, அங்கே வந்த விஜித் ஏதும் பேசாமல், சுமாயாவை அழைத்துக்கொண்டு தலை அசைவில் ஆதியிடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினான். “மல்லி! அம்மா வராங்க பாரு பயப்பட போறாங்க!” என ஆதி சொல்லவும் பட்டென அவனை விட்டு விலகியவள் முகத்தைத் துடைத்துக்கொள்ள, லட்சுமி அவருடைய பிறந்த வீட்டிற்குச் சென்றிருப்பது பிறகுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது. “ப்சு ஒரு நிமிஷத்துல என்னை டென்க்ஷன் பண்ணிட்டீங்களே!” என்றவள், “அத்தையும் மாமாவும் உங்க மாமா வீட்டுக்கு போயிருக்காங்க” எனக்கூற. “எனக்குத் தெரியுமே! இருந்தாலும் நான் அப்படி சொல்லலைன்னா நீ இப்போதைக்கு அழுகையை நிறுத்தியிருக்க மாட்டியே!” என்றான் அவன். மறுபடியும் அவளுடைய கண்களில் நீர் அணைக் கட்டி நின்றது. “ப்சு ரொம்ப பசிக்குது மல்லி ரூம்ல இருக்கேன் எனக்குச் சாப்பிட எதாவது கொண்டு வா!” எனச் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட, அவசரமாக உள்ளே சென்று அவனுக்குச் சிற்றுண்டியும் காஃபியும் எடுத்துக்கொண்டு அவர்களது அறைக்கு வந்தாள் மல்லி. அதற்குள் தன்னை சுத்தப் படுத்திக்கொண்டு ஓய்வாகக் கால்களை நீட்டி பால்கனி சோபாவில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தான் ஆதி. அவள் எடுத்துவந்த சிற்றுண்டியை சாப்பிட்டுக்கொண்டே, “என்ன கனவு கண்ட மல்லி!” என அவன் நிதானமாகக் கேட்கவும், ஒரு நொடி திகைத்தவள், “என்ன மாம்ஸ்! நீங்க இதை எதிர்பார்த்துக் காத்திருக்கிற மாதிரி கேக்கறீங்க?” என்று கூற, “ம் எதிர் பார்த்துட்டேதான் இருந்தேன் மல்லி” என்றவன், “சொல்லு மல்லி இன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமா உணர்ச்சிவசப்பட்டு அழுதியே ஏன்? அந்தக் கனவு உனக்கு ஞாபகத்தில் இருக்கா?” என்று ஆதி கேட்கவும், கோபம், துக்கம், அழுகை... என்ற கலவையான உணர்ச்சிகளுடன் அவளது கனவில் கண்டவற்றை ஒன்று விடாமல் கோர்வையாகச் சொல்லி முடித்தாள் மல்லி. அனைத்துத் துயரங்களையும் கடந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வந்திருந்த ஆதி, சூடான காஃபியை பருகியவாறே தான் நேரடியாக அனுபவித்தவை, கோபால் சொன்னவை, மற்றும் அம்முவைப் பற்றி மல்லி கனவில் கண்டவை என அனைத்தையும் மனதிற்குள் வரிசைப்படுத்திப் பார்க்கவும் எல்லாமே புரிந்துபோனது அவனுக்கு. இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தவனாக மல்லியுடன் கீழே வர அதற்குள் அண்ணன் வீட்டிலிருந்து திரும்பியிருந்த லட்சுமியைக் கண்டு, “எப்ப வந்தீங்கம்மா?” என்று ஆதி கேட்க, அதற்கு லட்சுமி, “ஏன் பா நான் கேட்க வேண்டிய கேள்வியெல்லாம் நீ கேக்குற. முன்னெல்லாம் பாதி நாள் நீ வீட்டுக்கு வரதும் தெரியாது! போவதும் தெரியாது! கண்ணால பாக்கறதே பெரிய விஷயமா இருக்கும்! இப்பல்லாம் நேரத்துல வீட்டுக்கு வந்துடுற!” என மகனைக் கிண்டல் செய்ய, “அம்மா! இன்னும் ஒரே ஒரு வாரம்தான் மறுபடியும் பழைய படி மாறிடும். மறுபடியும் புலம்ப போறீங்க!” என அவன் பதில் கொடுக்க, “என்னை விடுப்பா. பாவம் மல்லி நீ கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ ராஜா” என தீவிரமாகச் சொன்னார் லட்சுமி. ‘ஐயோ! அப்படினா இனிமேல் இவருடன் அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாதா?’ என்ற எண்ணத்தில் மல்லி முகம் வாட அடுத்த நொடியே, முன்பு ஒருநாள், ‘அவங்க வீட்டுல இருக்கறவங்களாவது அவரை தினமும் பார்க்க முடியுமா இல்ல அதுவும் முடியாதா?’ என்று தான் கேட்டதும் அதற்கு, ‘அது அவங்க வீட்டுல இருக்கறவங்க கவலை’ என்று மணிகண்டன் பதில் கொடுத்ததும் அவளது நினைவிற்கு வர, இறுதியில் அந்தக் கவலையை தானே அனுபவிக்கவேண்டி வந்துவிட்டதே என எண்ணிய மல்லியின் உதட்டில் ஒரு புன்முறுவல் பூத்தது. அதைச் சரியாக கவனித்தவாறே அங்கிருந்து சென்றான் ஆதி. *** அடுத்த நாள் தங்கவேலு இறந்த துக்கம் விசாரிக்கவென அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தான் ஆதி. உடன் மல்லியும். மல்லி தாமரைக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள். ஆதி ரத்தினத்திடம் சம்பிரதாயத்திற்கென சில வார்த்தைகள் பேசிவிட்டு, மாமனாரின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளவென அவசரமாகச் சென்னை திரும்பியிருந்த வினோத்திடம் செல்லவும், நட்பு ரீதியில் அவன் ஆதியை அணைக்க, அவனது எலும்புகள் முறிவதுபோல் ஆதியின் அணைப்பு இறுகவும் உள்ளுக்குள்ளே குளிரெடுத்தது வினோத்திற்கு. ஆதிக்கு உண்மையெல்லாம் தெரிந்திருக்கும் என்ற எண்ணம் கொஞ்சம் கூட அவனுக்கு இல்லை. என்றாலும், ஆதியைப் பார்க்கும்போதெல்லாம் அவனையும் அறியாமல் ஒரு பயம் உள்ளுக்குள்ளே எழத்தான் செய்தது. அதுவும் மல்லியுடன் அவன் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் பலமாக மின்சாரம் தாக்கியதைப்போல் உணர்ந்தான் வினோத். ஆதியின் கண்களை அவனால் நேராகச் சந்திக்க முடியாமல் தவித்தவன் தங்கவேலுவின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் மல்லியுடன் சேர்த்து ஆதிக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அதற்குள் அவனை விடுவித்த ஆதி, “யாருக்கு முடிவு எப்ப எப்படி வரும்னு யாராலயும் சொல்ல முடியாது இல்ல வினோத்?” என்று கேட்க, தான் மனதிற்குள் எண்ணியதற்கு பதில் சொல்வதுபோல் ஆதி கேட்கவும், “ம் ம் என்ன சொன்ன ஆதி?” என அவன் திணற, “ஒண்ணுமில்ல உன் மாமனாரைப் பத்திதான் சொன்னேன். நல்லா இருந்த மனுஷன் இப்படி பொட்டுனு போயிட்டாரே” என ஆதி சொல்லவும் மௌனமாகத் தலை அசைத்தான் வினோத். மேற்கொண்டு எதுவும் சொல்லிக்கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தனர் ஆதி மல்லி இருவரும். முன்னாள் அமைச்சர் தங்கவேலு சட்ட நடவடிக்கைகளுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்டார் என்றும், மகனே தந்தையை கொன்றுவிட்டான் என்றும் பலவிதமான சர்ச்சைகளுக்கு இடையில் அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்திருந்தது. தங்கவேலுவின் கல்வி நிறுவங்கள் இருந்த பகுதி இடுகாட்டை ஒட்டி இருந்ததால்தான் அங்கே எலும்புக்கூடுகள் கிடைத்தன என்ற ரீதியில் அந்த வழக்கு திசை திருப்பப்பட்டிருந்தது. கேர் ஃபார் லைஃப் மருத்துவமனையிலும், அனைத்து உடல் உறுப்பு தானங்களும் சட்டத்திற்குப் புறம்பாக நடந்திருப்பதாக நிரூபிக்க வழியில்லாமல் அனைத்துமே முறைப்படி நடந்திருப்பதுபோல் அனைத்துக் கோப்புகளும் பக்காவாக இருந்த்து. அவர்கள்மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வழியில்லாமல் போனது ஆதிக்கு. தொடர்ந்த இரண்டு நாட்கள் யோசனையிலேயே அமைதியுடன் கழிந்தன. அடுத்த நாள் அதிகாலையிலேயே மல்லியை அழைத்துக்கொண்டு மூன்றாவது மறுவீடு முறைக்கென கிளப்பியிருந்தான் அதி. வழக்கமாக அவர்கள் செல்லும் பாதையில் இல்லாமல் வேறு பாதையில் ஆதி காரை செலுத்திக்கொண்டிருக்க, குழம்பிய மல்லி, “மாம்ஸ்! நாம எங்க போறோம். எங்க அம்மா வீட்டுக்குப் போகும் வழி இது இல்லையே?” எனக் கேட்க, “நான் உன்னை கடத்திட்டு போறேன் மல்லி!” எனச் சொல்லி அவன் விஷமமாகச் சிரிக்கவும் அவள் மனது நழுவிக்கொண்டு அவனிடம் சென்றது. வெட்கம் பூக்க, “போங்க மாம்ஸ்! இப்ப சொல்ல போறிங்களா இல்லையா!” என அவள் கெஞ்சலாக கேட்கவும், “லூசு! மறுவீடு போறதுன்னா உங்க அம்மா வீட்டுக்குத்தானே போகணும். அங்கதான் போறோம்!” என்றவன் மேலே பேசாமல் காரைச் செலுத்த அப்பொழுதுதான் கவனித்தாள் மல்லி அவர்களது வாகனம் பூவரசந்தாங்கலை நெருங்கிக் கொண்டிருந்தது. மகிழ்ச்சியுடன் காரின் கண்ணாடியை இறக்கியவள் காலை நேரம் வீசும் சில்லென்ற காற்றை தனது நுரையீரல் முழுதும் நிரப்பிக்கொள்ள, மனம் முழுதும் தேங்கிப்போயிருந்த வெம்மை வெளியேறுவதுபோல் தோன்றியது அவளுக்கு. வாத்தியங்களின் ஒலியுடன். அய்யய்யோ மாமா. அலையவிட்டாயே என்னை. எனத் துரியோதனன் வேடமிட்டவர் பாடுவதும். தொடர்ந்து அவர் கால்களில் கட்டியிருக்கும் சலங்கைகள் ஒலியும் செவியில் வந்து மோத, “மாம்ஸ்! பதினெட்டாம் போர், துரியோதனன் படுகளம் நடக்குது. சான்சே இல்ல வாரீங்களா ஒரு பத்து நிமிஷம் பார்த்துட்டு போகலாம்!” ஆவலுடன் மல்லி கேட்க மறுக்க முடியாமல் காரை ஓரமாக நிறுத்திவிட்டு ஆதி இறங்க, ஒரே ஓட்டமாக ஓடி தெருக்கூத்து நடக்கும் இடத்தை அடைந்திருந்தாள் மல்லி. மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தவண்ணம் இருக்க உள்ளே நுழைய முனைத்தவளின் கையைக் கோபத்துடன் இறுகப் பிடித்தவன், “கொஞ்சம் கூட பொறுமையே இல்ல! நான் வரதுக்குள்ள என்ன அவசரம்? முட்டாளா நீ?” கோபத்தில் கண்கள் சிவக்க ஆதி அவளைத் திட்டத் தொடங்க அவளது முகம் சிறுத்துப் போனது. அதைக்கண்டு கொஞ்சம் நிதானித்தவன், “இல்ல மல்லி! உனக்குத் தெரியாது உன்னைச் சுத்தி எவ்வளவு ஆபத்து இருக்குனு புரிஞ்சிக்கோ!” எனக்கூற, “சாரி! எதோ ஆர்வத்துல வந்துட்டேன்” என்றாள் மல்லி. பிறகு அவளை அழைத்துச்சென்று கூட்டம் இல்லாத இடமாகப் பார்த்து ஆதி நின்றுகொள்ள. கூடை கட்டிய குறவராகிய, குந்தி மக்களுக்கு. மாட மாளிகை. கூட கோபுரத்தை. எப்படித் தருவேன். ஆவேசமாக துரத்தும் பீமன் வேடமிட்டவரிடமிருந்து பாடிக்கொண்டே துரியோதனன் வேடமிட்டவர் தப்பி ஓட, அவர்களை அடக்கும்படி மைக்கில் அறிவிப்பு வந்தவண்ணம் இருக்க, அங்கே கூடியிருக்கும் இளைஞர் கூட்டம் அவர்களை அடக்கிப் பிடித்தனர். *** அதே நேரம் கன்டைனரில் மயக்கம் கலைந்து கண் விழித்த கோபால் கட்டுகள் அவிழ்ந்த நிலையில் இருக்கவும், சுற்றும் முற்றும் பார்க்க அருகில் வேறு யாரும் இல்லாமல் இருக்கவும் தைரியம் வரப்பெற்றவனாக அதிலிருந்து இறங்கி தட்டுத்தடுமாறி ஓடத்தொடங்கவும், சிறிது தூரத்தில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை நெருங்கவும்தான் உணர்ந்தான் அது கால் டக்ஸியாக அவன் ஓட்டிக்கொண்டிருக்கும் கார்தான் என்பதை. அது சாவியுடனேயே நிறுத்திவைக்கப்பட்டிருக்கவும் கொஞ்சமும் யோசிக்காமல் அதில் ஏறி உட்கார்ந்துகொண்டான். மூச்சு வாங்க கால்கள் தள்ளாட உடல் சோர்ந்து காரை செலுத்த முடியுமா என்றே புரியவில்லை அவனுக்கு. தன்னை நிலைப் படுத்திக்கொள்ள அவனுக்கு மதுவின் துணை தேவைப்படவும், காருக்குள் அவன் எப்போதுமே தயாராக வைத்திருக்கும் மது பாட்டிலை எடுத்து, இருந்த படபடப்பில் மொத்தமாகக் குடித்துவிட்டு வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்ல, சிறிது தூரம் சென்ற பின்புதான் கவனித்தான் கோபால், பின் இருக்கையில் முழு மயக்கத்தில் ரத்தினம் வினோத் இருவரும் இருப்பதை. கோபால் அதில் மேலும் பதட்டமடைய, கார் அவனது கைகளில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்துகொண்டிருந்த லாரியில் மோதி உரு தெரியாமல் போனது. *** பூவரசந்தாங்கலின் ஊர் எல்லையில் மல்லி ஆதி இருவரும் தெருக்கூத்தை ரசித்துக்கொண்டிருந்தனர். கண்ணன் வேடமிட்டவர் தொடை தட்டி பீமனிடம் சைகை செய்ய, தரையில் களிமண்ணால் வடிக்கப்பட்டிருக்கும் துரியோதனன் உருவத்தில் தொடைப் பகுதியில் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. எலுமிச்சையும் கற்பூரமும் அடையாளமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் பீமன் வேடம் இட்டவர் அடித்து உடைத்தார். அதிலிருந்து தெளிக்கும் செந்நிற திரவத்தை கண்ணன் வேடமிட்டவர் அங்கே தலைவிரி கோலமாய் எழுந்தருளி இருக்கும் திரௌபதி அம்மனின் சிலையின் கூந்தலில் தடவி முடிந்து விட, பின்பு திரௌபதி வேடம் பூண்டவரும் கூந்தலை முடிகிறார். அடுத்ததாக காந்தாரியின் ஒப்பாரி தொடரவும், அதைக் காண சகிக்காமல், “போலாம் மாம்ஸ்!” என மல்லி அவனது கையை பிடித்துக்கொள்ள, அங்கிருந்து கிளம்பவும், தெரிந்தவர்கள் பலரும் மல்லியை விசாரித்தவண்ணம் இருக்க அவர்கள் கார் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தை அடையவே அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. “ப்சு பண வெறி, பதவி வெறி இதெல்லாம் சேர்ந்து இந்த வினோத் மாதிரி ஆளுங்க என்னலாம் செய்யறாங்க இல்ல மாம்ஸ்! அவங்க பெத்தவங்க அவங்களை நம்பி இருக்கும் பொண்டாட்டி பிள்ளைங்க யாரைப் பற்றியும் கவலை படறதே இல்லையே! இரக்கமே இல்லாமல் சுய லாபத்துக்காக அம்முவைத் துடிக்கவைத்து சாகடித்த அந்த வினோத்தையும் அதுக்கு துணை போனவங்களையும் துடிக்க வைக்கணும் மாம்ஸ்! அது எதோ சொன்னாங்களே ம்…” என யோசித்தவள் கைப்பேசியின் உதவியுடன் கூகுளில் குடைந்து, “ஆங் 'குவாட்ரிப்லேஜிக்' அந்த நிலையில் அந்த வினோத்தை வைக்கணும் மாம்ஸ்! அதுக்கும் மேலே எதாவது தண்டனை இருந்தால் அவனுக்கு கொடுக்கணும் மாம்ஸ்! மல்லி புலம்பிக் கொண்டிருக்க ஆதியின் கைப்பேசியில் மணியின் அழைப்பு வர அவன் அதை ஏற்கவும், “அண்ணா! கோபால் ரத்தினம் ரெண்டு பேரும் ஸ்பாட்லயே அவுட். வினோத் கொஞ்சம் உஷாரா கதவைத் திறந்துட்டு குதிச்சிட்டான்ணா. உடம்பிலும் முகத்திலும் சின்ன சின்ன காயம்தான். ஆனா மயக்கமா இருக்கான். என்ன செய்யலாம்?” எனக் கேட்டான் மணி. “ஸ்பாட்டுக்கு போலீஸ் வந்துட்டாங்களா?” என்று ஆதி கேட்க, “இன்னும் இல்ல ணா” என மணி சொல்லவும், “இப்ப இருக்கற நிலைமையில அவனுங்கள யாருன்னு ஐடென்டிபை பண்ண முடியாதுன்னுதான் நினைக்கறேன். அதனால அப்படியே விட்டுட்டு நீ அங்கிருந்து கிளம்பு. எப்படியும் போலீஸ் கவர்ன்மெண்ட் ஜிஹெச்சுக்குத்தான் கொண்டு போவாங்க. அங்க வச்சி பாத்துக்கலாம்!” என்று முடித்தான் தேவாதிராஜன். அதிர்ச்சியில் பேச்சற்று விழிகளே தெறித்துவிடுவதுபோல் அவனுடைய முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள் மரகதவல்லி. தேரோடும் வீதியிலே என் ராசா என் ராசா தென்னை மரமா தோப்பு உண்டு அந்தத் தென்னை மரத்தைப் படைச்ச கிளி இந்தத் தேவி குறை தீரலடி. துயரத்துடன் காந்தாரி வேடமிட்டவர் பாடும் ஒப்பாரிப் பாடல் மரகதவல்லியின் காதுகளில் தெளிவாக ஒலித்தது.


0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page