Poove Unn Punnagayil - 6
அத்தியாயம்-6
ஏறிய போதையின் பக்கவிளைவாக கருணாகரனின் முகமே வீங்கிப்போய் பார்க்க சகிக்கவில்லை அவரை. இந்த அழகுடன் வீட்டிற்கு சென்றார் என்றால் நிச்சயம் தாமரையின் பதட்டம் அதிகரிக்கும். எனவே இப்பொழுது வீட்டிற்கு செல்வதென்பது உகந்ததில்லை.
இந்த விருந்தினர் இல்லத்துக்கு வரும்பொழுது அணிய ஏதுவாக லுங்கி டீ-ஷர்ட் போன்ற சில எளிய ஆடைகள் மட்டுமே அங்கே இருப்பில் இருந்தன. மற்றபடி முந்தைய தினம் அவர் அணிந்துவந்த உடையும் கூட மீண்டும் உடுத்தும் நிலையிலில்லை. எனவே அலுவலகத்திற்கும் போக இயலாது.
காலை உணவை ஆன்லைனில் தருவித்துச் சாப்பிட வைத்தவன், அவரை மதியம் வரை அங்கேயே ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டு, மாற்று உடை எடுத்துவர வீட்டுக்குக் கிளம்பினான் சத்யா.
உள்ளே நுழைந்ததுமே முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு 'உர்' என அவனை எதிர்கொண்டார் தாமரை.
எதையாவது பேசிவைத்தால் சும்மா இருக்கும் சிங்கத்தைச் சொறிந்துவிட்டதுபோல் ஆகிவிடும் என்பதால், ஒன்றுமே நடக்காதது போன்று தன் அறைக்குள் போய் புகுந்துகொண்டவன், சில நிமிடங்களில் குளித்து அலுவலகம் செல்ல தயாராகி வந்தான்.
உணவு மேசையின் மேல் சிற்றுண்டிகள் தயாராக இருக்க, அவனுக்காக அங்கே காத்திருந்தார் தாமரை.
'பசங்க மாமா அத்தை எல்லாரும் சாப்டாங்களாக்கா, நீ சாப்பிட்டியா" எனக் கேட்டுக்கொண்டே அவன் வந்து உட்கார, "மணி பத்தாச்சு இன்னுமா சாப்பிடாம இருப்பாங்க?" எனக் குதர்க்கமாகத் தொடங்கியவர், "ஏண்டா, என்ன பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி இருக்கு" என உச்சஸ்தாயியில் தொடர, "டிபிக்கலா... கணவனே கண் கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் படத்துலயெல்லாம் வருவாங்க இல்ல அந்த ஹீரோயின் மாதிரி இருக்க..க்கா" என அலட்டிக்கொள்ளாமல் பதில் கொடுத்தான் அவன்.
அவன் சொன்ன பாவனையில் கோபம் கொஞ்சம் பின்னுக்குப் போனதால் எட்டிப்பார்த்த லேசான சிரிப்புடன், "டாய்" என அவர் போலியாகப் பற்களைக் கடிக்க,
"பின்ன, பழைய படத்துல வர மாதிரி, 'என் அத்தானுக்கு என்ன ஆனதோ'ன்னு ஓவரா டயலாக் விட்டன்னா வேற எப்படி தோணும்?" என அவன் அதே பாணியில் தொடரவும்,
"ப்ச்... சத்யா" என இலகுவானவர், "நேத்து அத்தான் கிட்ட பேசறேன்னு சொல்லிட்டு போனவன், இப்பதான வீட்டுக்கு வர. என்னை பத்தி யாராவது கவலை படறீங்களா?" என விடாமல் படபடக்கவே,
"ப்ச்... அக்கா, சைட்ல முக்கியனமான ஒர்க் போயிட்டு இருக்கு, நைட் அங்க தங்க வேண்டிய சூழ்நிலைன்னு போன் பண்ணேன் இல்ல, அப்பறம் என்ன" எனக் கொஞ்சம் குரலை உயர்த்தினான் சத்யா, அவரிடம் எதையும் உடைத்துச் சொல்லமுடியாமல் பொய் சாக்கு சொல்வதால் உண்டான இயலாமையில்.
அதற்கும் அவர் முகம் சுணங்கவும், 'ப்ச்... அத்தானுக்கு ஒர்க் டென்ஷன்தான் வேற ஒண்ணுமில்ல. அந்த வேலயும் இப்ப முடிஞ்சுபோச்சு. ஸோ, இனிமேல் நார்மலாயிடுவாருன்னு நினைக்கறேன்" என்றவன், "உன் ஊட்டுக்கார ஈவினிங் சீக்கிரமே ரிலீஸ் பண்ணி அனுப்பிவிடறேன், நீயே அவர்கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா" என்று சொல்லிவிட்டு வேகமாக உண்டு முடித்து, அவருக்கான உடைகளை எடுத்துக்கொண்டு கிளம்பி வெளியில் வந்தான் சத்யா.
அதே நேரம் எங்கோ வெளியில் செல்ல முழு ஒப்பனையுடன் தயாராகி, அருகிலிருப்பவரை மயக்கம் போடவைக்கும் அளவுக்கு வாசனை திரவியத்தின் நெடி தூக்கியடிக்க தன் இருசக்கர வாகனத்தில் கிளம்பிக்கொண்டிருந்தாள் ஹாசினி.
அவளைப் பார்த்ததும் சற்று எரிச்சலாகிப்போனது சத்யாவுக்கு. ஆனாலும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுடன் பேசியே ஆகவேண்டும் என்பது நினைவுக்கு வர அவளை நிற்குமாறு அவசரமாகக் கைகாட்டி தடுத்தான்.
"என்ன ஆச்சு மாம்ஸ்?" எனக் கேட்டுக்கொண்டே காலை ஊன்றி அவள் நிற்கவும், "இந்த நேரத்துல எங்க கிளம்பிட்டு இருக்க?" என்றவாறு வேகமாக அவளை நெருங்கிவந்தான் அவன்.
"ப்ச்... என்ன மாமா இது, இப்பதான் உங்க பாசமலர் கிட்ட மொத்தத்தையும் எக்ஸ்ப்ளைன் பண்ணி முடிச்சேன். இப்ப நீங்களா" என அவள் தன் எரிச்சலை மறைத்துக்கொண்டு கேட்க, "என்ன அம்மாங்கற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம ஓவரா பேசிட்டே போற? பல்லை தட்டிடுவேன் ராஸ்கல்" என அவன் உக்கிரமாகவும் உண்மையிலேயே அரண்டு போனவள், "சாரி மாம்ஸ்... சும்மா விளையட்டுக்கு" என முணுமுணுக்க, "சீரியஸ்ஸா கேள்வி கேட்கும்போது என்ன விளையாட்டு வேண்டிக்கிடக்கு?" என அதே கடுமையுடன் அவன் தொடரவும், அவள் அப்பாவிடம் செய்வது போல் இரண்டு சொட்டு கண்ணீரில் அவனைக் கரைக்க முடியாது என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருப்பதால் என்ன சொல்வது என புரியாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள்.
அதே போல் அவள் மிஞ்சினால் கெஞ்சும் ரகம் என்பதை நன்றாகவே அறிந்துவைத்திருப்பதால்தான் அவனும் குரலை உயர்த்தியதே.
"என்ன, கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலை காணும்" என அவன் அதிலேயே நிற்கவே, "நெக்ஸ்ட் வீக் என் ஃப்ரெண்ட் வர்ஷாக்கு வெட்டிங். அதுக்காக ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண போறேன்" என அவள் வேண்டா வெறுப்பாகப் பதில் கொடுக்க, "உன் ஃப்ரெண்டுக்குதான கல்யாணம்? என்னவோ நீதான் கல்யாண பொண்ணுங்கற ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுக்கற?" என நக்கலாக மொழிந்தவன், "எங்க பர்ச்சேஸ் பண்ண போற" என்று கேட்க, அவனிடம் தென்பட்ட கடுமையில் பயந்து வேறு வழி இல்லாமல், "&&& மால்" என அந்த இடத்தை சொன்னாள் ஹாசினி.