வணக்கம் அன்புத் தோழமைகளே!
கதை முடிய இன்னும் சில பதிவுகளே உள்ளன!
முதலில் ராஜம் vs ஸ்வரா, அடுத்து ராஜம் vs மல்லிகா, அடுத்து மல்லிகா vs ஸ்வரா, இப்பொழுது ஸ்வரா vs ஸ்வரா என செல்கிறது கதைக்களம்.
இறுதியாக, ராஜம், மல்லிகா & ஸ்வரா vs வல்லரசு என்பதாக முற்றுபெறும்.
இதுவரை கதை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். எந்த இடத்திலாவது Dragging ஆகவோ அல்லது கதை SKIP ஆகி செல்வது போலவோ தோன்றினால் தெரியப் படுத்துங்கள். புத்தகமாக அச்சிடும் பொது இன்னும் மேம்படுத்த உதவும்.
(பி.கு வாழ்கைல பிரச்சனை வரலாம் ஆனா பிரச்சனையே வழக்கை ஆனா? இதுதான் இப்போதைக்கு என் சொந்தக் கதை சோகக் கதை. ஒரு வாரமாகவே உடல் நிலை சரி இல்லை. டாக்டர், மருந்து மாத்திரை என சென்று கொண்டிருகிறது. வாசகர்களை காக்க வைக்க மனமில்லாமல் ஒரே மூச்சில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது இதை கண்டுகொள்ளாமல் உறங்கும் என் ஆன்ட்டி ஹீரோ, நாளை என்னை நன்றாக வைத்து செய்யபோகிறார். நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்ள போகிறேன்.
நிறைய பேர் நிலமங்கையை வேறு அடிக்கடி விசாரிக்கிறார்கள். நலமாக இருக்கிறாள். சீக்கிரமே உங்களை சந்திக்க வருவாள் என்று சொல்லிக்கொள்கிறேன்.)
நட்புடன்,
KPN.
மடல் - 24
ராசியின் தலைமை அலுவலகம் மும்பையில் இருந்தது.
மாதத்தில் பாதி நாட்களாவது அங்கே போய் நேரடியாக நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய சூழல். சென்னை அலுவலகத்தில் வேறு இருவரின் பங்களிப்பும் அவசியமாக இருந்ததால், இங்கேயும் அங்கேயுமாக ஒரு வாரம் இவளும் ஒரு வாரம் பகலவனும் மாறி மாறி வேலைகளைப் பிரித்து செய்து வந்தார்கள்.
மும்பை சென்றால், இவர்களுக்குச் சொந்தமாக இருக்கும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட ஒரு பிளாட்டில் தங்குவதுதான் வழக்கம்.
இவளும், பகலவனும் ஆளுக்கொரு படுக்கையறையைப் பயன்படுத்திக் கொள்ள, மற்றொன்றில் இவர்களுடைய பாதுகாவலர்கள் தங்கிக் கொள்வார்கள்.
எப்படி இருந்தாலும் பகலவனும் இவளும் சேர்ந்து ஒன்றாக அங்கே தங்குவது என்பது, எப்பொழுதாவது அறிதாகவே இருக்கும்.
இருவரில் யார் அங்கே தங்கினாலும் தினமும் காலையோ அல்லது மாலையோ அங்கே வந்து சிறிது நேரம் அவர்களுடன் நேரம் செலவழித்து விட்டுச் செல்வான் சக்தி.
விடுமுறை தினங்களில் ஜுகு கடற்கரைக்குச் சென்று காலாற நடந்து, அலைகளில் கால் நனைத்து, சாட் உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டவாறே நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்புவார்கள்.
ஒவ்வொருமுறை வரும் பொழுதும் வெவ்வேறு வாகனத்தை உபயோகிப்பது, எங்கு சென்றாலும் பின்னாலேயே துரத்தி வரும் ஊடகத்தினர் யாரும் அடையாளம் காண முடியாத படி ஒரு பெரிய கூலிங் கிளாஸையும் முகக்கவசத்தையும் அணிந்து முகத்தை மறைத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
உண்மையைச் சொல்லப்போனால் இது போன்ற சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் இவர்களுடைய வாழ்க்கையை வண்ணமயமாக வைத்துக் கொண்டிருந்தது.
அதேபோன்ற ஒரு விடுமுறை தினம் அது. வழக்கம் போல அன்றும் அந்தக் கடற்கரைக்கு வந்து ஸ்வராவும் சக்தியும் கடல் அலைகளில் கால் நனைத்தபடி பேசிக் கொண்டே சற்றுத் தூரம் நடக்க, குளிர்ந்த அந்த நீரின் இனிமையுடன் சேர்ந்து மாலை நேர சூரியன் மயக்கிக் கொண்டிருந்தான்.
"வாவ், இந்த கடல் நீலமும் வானத்தோட சிவப்பும் சேர்ந்து பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு இல்ல சக்தி" எனக் கேட்டாள் ஸ்வரா ரசனையுடன்.
ஒரு நொடி அப்படியே தேங்கி நின்றவன் அவளது விழிகளில் கலந்த படி, "ஆமா ரொம்ப அழகா இருக்கு இந்த ப்ளூ அண்ட் ரெட் காம்பினேஷன்" என்றான் அவளை இரசித்தபடி.
ஏற்கனவே அந்த இளம் வெயிலின் தாக்கத்தில் சிவந்து போயிருந்தவளின் முகமெல்லாம் சூடாகி மேலும் சிவந்து போக, "சக்தி…" எனச் சிணுங்க,
"ரியலி ராஜ், உன்னோட அழகான நீலக் கண்களும் சிவந்த முகமும், ரியலி ஸோ ப்ரிட்டி. நீ கடலையும் வானத்தையும் இரசிக்கலாம், நான் உன்ன இரசிச்சா தப்பா?" என்று அவன் பிதற்ற, அதை அப்பட்டமாக இரசித்தாள்.
இந்தப் பேச்சை அப்படியே வளர்க்கும் உந்துதலில், "நான் டஸ்கி கலர் அப்படின்னு எனக்கே தெரியும்! உங்க ஊர் பொண்ணுங்க அளவுக்கு நான் ஒண்ணும் சிவப்பு கிடையாது… சும்மா கதை விடாத" என்று கிண்டலாகச் சொல்ல,
"இங்க இருக்கிற எல்லா பெண்களையும் விட தன்னைத்தானே டஸ்கின்னு சொல்லிக்கற இந்தப் பேரழகியத்தான எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்று சொல்ல,
"ஓஹ் ரியலி?" எனக் கேட்டாள் வியந்த பாவத்தில். இது எங்கே போய் முடியும் என்று தெரியாமல் இல்லை. ஆனாலும் ஏதோ ஒன்று அவளை மேலும் மேலும் பேசத் தூண்டியது.
"எஸ், அஃப் கோர்ஸ், இதே மாதிரி கடற்கரை ஓரமா என்னோட லைஃப் டைம் பூரா இந்தப் பொண்ணோட கைய புடிச்சிட்டு இதே போல ரொம்ப தூரம் நடந்துட்டே இருந்தா போதும், அந்த அளவுக்கு எனக்கு அவளைப் பிடிக்கும்" என்று அவளது கண்களைப் பார்த்து அவன் கிறங்கிச் சொல்ல,
"ஒய் நாட்… உன் கைப் பிடிச்சு நடந்து வர நான் ரெடிதான்" என்ற வார்த்தைகள் தொண்டை வரை வந்தாலும் வெளியில் சொல்ல அஞ்சி, சிக்கிக் கொண்டது.
வேறு எப்படி இவனுக்குப் பதில் சொல்வது என்பது புரியாமல் அவளது முகத்தில் குழப்ப ரேகை படர,
"என்ன ராஜ், சைலன்ட் ஆயிட்ட. நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு உண்மையாவே புரியலையா?" என்று அவளது விழிகளைப் பார்த்தபடி கேட்க,
நிதானமாக இடம் வலமாக அவள் தலையசைக்கவும், "ஐ மீன் டு ஸே, ஐ அம் இன் லவ் வித் யூ. என்னோட வாழ்நாள் முழுக்க உன் கூட டிராவல் பண்ண ஆசைப்படுறேன். எனக்கு தேவ, உன்னோட 'எஸ்' மட்டும்தான். நோ சொல்லி என்ன நோகடிச்சுடாத" என்று தெள்ளத் தெளிவாக தன் மனதைத் திறந்து அவளிடம் சொல்லிவிட, எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியாத படிக்கு அவளுடைய வாய் பூட்டுப் போட்டுக் கொண்டது.
இது குறித்து பகலவனிடம் பேசியே தீர வேண்டும். தானாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு அவனிடம் போய் சொல்லித் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கக் கூடாது என இதுவரை பல்லை கடித்துக் கொண்டு பொருத்திருந்தவளுக்கு இதற்கு மேல் இப்படி இருப்பது சரி இல்லை என்று தோன்றியது. இவர்கள் இருவருக்கும் உள்ள நட்பு எந்தக் காலத்திலும் தன்னால் உடைந்து போகக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவே இந்த நொடி அவனுக்கு எந்தப் பதிலும் கூற அவள் தயாராக இல்லை. மற்றபடி அவளுக்கும் சம்மதமே!
அவளிடம் அதிர்ச்சி இல்லை, ஆழமான யோசனை மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டவனுக்கு அவள் இதை எதிர்பார்த்தே காத்திருக்கிறாள் என்பது புரிய, "இட்ஸ் ஓகே, உடனே நீ எனக்கு எந்தப் பதிலும் சொல்ல வேணாம்! ஒன் ஆர் டூ டேஸ் எடுத்துக்கோ. அதுக்கு மேல என்னால காத்திருக்க முடியாது" என்று சொல்லிவிட்டு அப்படியே திரும்பி நடக்கத் தொடங்கினான். சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றவள் ஈர மணலில் பதிந்திருந்த அவனது பாதச்சுவட்டின் மேலே தன் பாதங்களைப் பதித்து அவனை நோக்கிச் சென்றாள்.
***
அதற்கு மேல் இருப்பே கொள்ளவில்லை, முதல் வேலையாக, 'முக்கியமாகப் பேச வேண்டும்' என ஒரு குறுந்தகவலை பகலவனுக்கு அனுப்பிவிட்டு அடுத்த விமானத்திலேயே கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாள் ஸ்வரா.
அவளை அழைத்துப் போக விமான நிலையத்திற்கே வந்திருந்தான் அவன். அவளுடைய மெய்க்காப்பாளர்கள் நாலு பேரும் பின்னாலே வேறு வாகனத்தில் வர, தானே வாகனத்தைச் செலுத்தி வந்தான் பகலவன்.
தானாகவே அவள் வாய் திறப்பாள் என அவன் சில நிமிடங்கள் பொறுமை காக்க, அது நடக்காமல் போகவும், "அப்படி என்ன அவ்வளவு முக்கியமான தல போற விஷயம் ராஜ், இவ்வளவு அர்ஜெண்டா கெளம்பி வந்துருக்க" என்று கேட்டு விட,
"கண்டிப்பா பேசணும் பகலவா, அதுக்காகத்தான கிளம்பி ஓடி வந்திருக்கேன். பட் இத உன்கிட்ட எப்படி சொல்றதுதான் புரியல?" என்று அவள் திக்கித் திணற,
'இது அவளுடைய சுபாவத்திலேயே இல்லையே' என்பதாக வியப்புடன் புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான்.
"ஏய் இப்படி எல்லாம் நீ என்னைப் பார்த்து வைக்காத, ஏற்கனவே எனக்குப் பேச வரல, அப்புறம் தொண்டைல இருந்து வெறும் காத்துதான் வரும்" என்று தன்னைச் சமன்படுத்திக்கொள்ள அவள் பகடி பேசினாலும் அவனிடம் உடைத்துப் பேசச் சற்றுத் தடுமாற்றமாகவே இருந்தது.
"பெட்டர் ஒண்ணு பண்ணு, இப்படியே வண்டியை யூட்டர்ன் அடிச்சு டிரைடன்ட்ல நிறுத்து. எதையாவது சாப்பிட்டுட்டே பேசுவோம்" என்று சொல்ல சில நிமிடங்களில் அங்கே உள்ள உணவகத்தில் அமர்ந்திருந்தனர் சான்விட்ச்சும் காஃபியும் ஆர்டர் செய்துவிட்டு.
தன்னுடைய கைப்பேசியைக் குடைந்த படி தலைகுனிந்தபடியே அமர்ந்திருக்க, "ராஜ், நீ என் பொறுமைய ரொம்ப சோதிக்கற" என்றான் கடுப்புடன்.
அப்பொழுதும் கூட தலை நிமிராமலையே, "உன் ஃபிரண்டு எனக்கு ப்ரொபோஸ் பண்ணான் தெரியுமா?" என்று நிதானமாகச் சொல்ல,
"நெனச்சேன், திரும்பத் திரும்ப அந்தப் பக்கி என்கிட்ட வந்து, 'நீ ராஜ்ஜ லவ் பண்றியா? இல்ல உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்ற மாதிரி வீட்ல ஏதாவது பேசி வெச்சிருக்காங்களா?'ன்னு துருவித் துருவிக் கேட்டுச்சு. அப்பவே என் மண்டைக்குள்ள மணி அடிச்சுது. அவனா வாய்திறந்து சொல்றதுக்கு முன்ன உன் கிட்ட எதையும் சொல்லிக் குழப்ப வேண்டாமேன்னு கம்முனு இருந்தேன்" என்று சிரித்தபடியே சொல்ல,
"ஓ" என வியந்தவள், "எனக்குமே கொஞ்ச நாளா டவுட்டுதான் பகலவா? எங்க இத அவசரப்பட்டு நாம சொல்லி, நீ அவன் கிட்ட போய் கேட்டு, அவன் இல்லன்னு சொல்லிட்டா ரொம்ப அசிங்கமா போயிடுமேன்னு நீ நெனச்ச மாதிரியேதான் நானும் நெனச்சேன்" என்றாள் தன் நிலையை விளக்குவது போல.
"நத்திங் ராங் ராஜ்… எல்லாத்தையுமே நீ என்கிட்ட வந்து ஒப்பிக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே. எப்படி இருந்தாலும் சொல்ல வேண்டிய நேரம் வந்தா நீ சொல்லாம இருக்கமாட்டதான" என்றான் புரிதலுடன்.
"யூ ஆர் சோ ஸ்வீட் பகலவா…" என்று அவனை மெச்ச,
"இந்த ஸ்வீட்டு, காரம், கசப்பு இதெல்லாம் இருக்கட்டும், அவனுக்கு நீ என்ன பதில் சொன்ன?" என்று கேட்டான் ஆர்வம் தாங்காமல்.
"உன்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம அப்படி என்ன நான் சொல்லிட போறேன்? பிகாஸ், யூ ஆர் மை எனி டைம் சப்போர்ட் சிஸ்டம். என்ன இருந்தாலும் அவன் எல்லாம் நேத்தைக்கு வந்தவன்தான?" என்றாள் எந்த மேல் பூச்சும் இல்லாமல்.
இந்த வார்த்தைகள் அவனை மிகவும் நெகிழச் செய்துவிட்டன. அவளை எண்ணி மனதிற்குள்ளேயே பெருமைபட்டுக்கொண்டவன், "சரி பதில் சொல்லல ஓகே, ஆனா என்ன டிசைட் பண்ணி இருக்க?" என்று கேட்டான்.
"எனக்கு அவன பிடிச்சிருக்கு, ஓகே சொல்லிடலாம்னுதான் இருக்கேன்" என்றாள் தன் மனதை மறைக்காமல்.
"நாட் எ பேட் டெசிஷன், ஆனா ஓகே சொல்லிட்டா அவன்கிட்ட நீ வகையா சிக்கிப்ப. பிகாஸ் ஹிஸ் சோ அரகன்ட் அண்ட் எக்ஸ்ட்ரீம்லி எ பொசசிவ் கேரக்டர். ஈவன், நான் வேற யார் கூடயாவது க்ளோசா மூவ் பண்ணாலே அவனால தாங்கிக்க முடியாது. அப்படியே பாய்ஞ்சிட்டுச் சண்டைக்கு வருவான். இதையெல்லாம் உன்னால ஹாண்டில் பண்ண முடியுமான்னு பாரு.”
”அதுக்கு அப்பறமா அவங்க ஃபேமிலிய பத்தி யோசிக்கணும்? நம்மள மாதிரி திடீர் பணக்காரங்க கிடையாது. ஒரு நூறு வருஷத்துக்கு மேலான தொழில் பாரம்பரியம் கொண்ட குடும்பம் அவங்களோடது. சாதாரணமாவே அவங்க பாட்டி, ஜமீன் பரம்பர, சமஸ்தானம் அது இதுன்னு ஓவரா பேசுவாங்க" என்று சொல்ல,
"இப்ப நீ என்ன சொல்ல வர, ஓகே சொல்லவா வேண்டாமா?" என்றாள் கடுகடுப்பாக.
"ஓகே சொல்லலாம்னு நீ முடிவு பண்ணிட்டன்னு தெரியுது! இதுக்கு மேல நான் உன்கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன். எது வந்தாலும் ஃபேஸ் பண்ற தைரியம் இருந்தா, கோ அஹெட்" என்றான் தெளிவாக.
அப்பொழுதும் கூட "தாராளமா ஓகே சொல்லு, ஒரு பிரச்சனையும் இல்ல' என்பதான நம்பிக்கை தரும் வார்த்தைகள் எதுவும் அவன் வாயில் இருந்து வரவில்லை.
மனதின் ஓரத்தில் துளிர் விட்டிருந்த ஆசைப் பிரதானமான இடத்தைப் பிடித்துக் கொள்ள, வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டாள்.
சாப்பிட்டுக் கொண்டே பேசி முடித்துவிட்டு இருவரும் வீடு வந்து சேர அன்றைய பொழுது அம்மாவுடனும் அம்மம்மாவுடனும் இனிதே நிறைவடைந்தது. ஓரிரு நாட்கள் இங்கே இருந்து கவனிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு மும்பை செல்லலாம் என்று அவள் எண்ணியிருக்க, அதுவரை கூட பொறுக்க மாட்டாமல் அவளைத் தேடி சென்னைக்கே வந்து விட்டான் சக்தி.
அவனுடைய எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் மனம் சிறகடித்துப் பறக்க ரிங்டோன் கேட்பதற்குள்ளாகவே அழைப்பை ஏற்று, "சொல்லு சக்தி" என்றாள்.
"வாவ், அப்ப மேடம் என்னோட காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தீங்க அப்படித்தான" என்று அவன் உல்லாசமாகக் கேட்க,
"ரொம்ப ஓவர் இமேஜினேஷன். முதல்ல உங்க கற்பனை குதிரைக்குக் கடிவாளம் போடுங்க சார்" என்றாள் கிண்டல் இழையோட.
"நம்பிட்டேன்" என்றவன், "இதுக்கு மேல இதே போல பேசிட்டு இருந்தோம்னா வேலைக்காகாது, நீ எந்த வேலை செஞ்சிட்டு இருந்தாலும் அப்படியே போட்டது போட்டபடி போய் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு, அப்படியே கிளம்பி வா. கீழ பார்க்கிங்லதான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்றான் மறுத்துப் பேச அவளுக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல்.
"ரியலி, சென்னை வந்திருக்கியா?" எனக் குதூகளித்தவள் ஐந்தே நிமிடத்தில் அவனைப் பார்க்க கீழே இறங்கி வந்தாள்.
வாகனத்தின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் கண்ணாடியைக் கீழே இறக்க, இறக்குமதி செய்யப்பட்டிருந்த, அவனது புத்தம் புதிய வெளிநாட்டுக் காரைப் பார்த்ததும், "வாவ், லவ்லி, இதே மாடல்ல நான் கூட இம்போர்ட் பண்ணணும்னு நெனச்சிட்டு இருக்கேன்" என்றாள் எதார்த்தமாக.
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கீழே இறங்கியவன், இருக்கையை நோக்கி தன் இரு கைகளையும் காண்பித்தவாறு, "சும்மா ஒரு டெஸ்ட் டிரைவ் பண்ணி பாரேன்" என்றான் பெரிதாகப் புன்னகைத்தபடி.
"வாவ், தட்ஸ் மை பிளஷர்" என்றவள் அந்த ஓட்டுநர் இருக்கையில் அமர, சுற்றி வந்து அவளுக்கு அருகில் அமர்ந்தவன், "வண்டியை இப்படியே ஏதாவது ஒரு பிரைவேட் பீச்சுக்கு விடுவியாம். அன்னைக்கு மாதிரி சன் செட் பாத்துட்டு நாம கொஞ்ச நேரம் பேசுவோமாம்" என்றான் அன்புக் கட்டளையாக.
ஏதும் மறுத்து பேசாமல், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஒரு தனியார் கடற்கரை விடுதிக்கு அவனை அழைத்து வந்திருந்தாள்.
அந்தி நேர சூரியன் தன்னைக் கடலுக்குள் புதைத்துக் கொள்ளும் மும்முரத்தில் இருக்க, தன் உஷ்ணத்தைக் குறைத்திருந்தான்.
அலைகளையும் அந்த அந்தி மாலையையும் இரசித்தபடி தோளோடு தோள் உரச இருவரும் நடக்கத் தொடங்க அவளுடைய விரல்களை தன் விரல்களோடு கோர்த்தவன், சட்டென அவளைப் பார்த்தபடி திரும்ப, தடுமாறி அவன் மீது சரிந்து, "சக்தி" என சிணுங்கியபடி நிமிர்ந்தாள்.
"பகலவன் கூட டிஸ்கஸ் பண்ணதான இங்க வந்த? எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு முடிவு பண்ணிட்டியா இல்லையா?" என்றான், நக்கலாகச் சொல்கிறானா அல்லது இயல்பாகத்தான் சொல்கிறானா எனப் பிரித்தறிய முடியாத ஒரு குரலில்.
"ஏன் பகலவன் கூட நான் டிஸ்கஸ் பண்ணா ஏதாவது தப்பா? நீ மட்டும் அவன்கிட்ட இத பத்தி இன்டைரக்ட்டா பேசலையா?" என அதே தொனியில் அவள் திருப்பிக் கொடுக்க,
சட்டெனச் சுதாரித்தவன், "சச்ச்ச, நான் எதுவும் தப்பான இன்டென்ஷன்ல கேட்கல ராஜ்! பகலவன் உனக்கு எவ்வளவு இம்பார்டன்ட்னு எனக்கு நல்லாவே தெரியும். இன்னும் சொல்லப்போனா நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டா கூட உங்க ரிலேஷன்ஷிப்ல பிரச்சனை வர சான்ஸஸ் இருக்கு. ஆனா என்னால என்னைக்குமே அந்தப் பிரச்சனை வராது" என்றான் தேன் தடவிய குரலில்.
இதுவும் கூட அவளைத் தன் வசப்படுத்த அவன் எடுக்கும் ஆயுதமோ என்ற எண்ணம் தோன்ற உள்ளுக்குள்ளே குறுகுறுத்தது. ஆழ்ந்து அவனது முகத்தைப் பார்க்க, எக்காரணம் கொண்டும் இவளைத் தொலைத்து விடக்கூடாது என்கிற பதற்றம் மட்டுமே தெரிய, எல்லாவற்றையுமே சந்தேகக் கண் கொண்டு பார்த்தால் வாழ்க்கை நரகமாகிப் போகும் என்ற எண்ணம் தோன்றியது.
இந்த அழகான நொடிகளைப் பாழ் செய்ய விரும்பாமல், "ஓகே இது எல்லாத்தையும் விட்டுத் தள்ளு, உனக்கு என்னோட பதில் இப்ப தேவையா இல்லையா?" என்று கெத்தாகவே அவள் கேட்க, "ஏன் உனக்கு நோ சொல்ற ஐடியா ஏதாவது இருக்கா?" என்றான் புன்னகைத்தபடி.
"நோ, எஸ் சொல்ற ஐடியாதான் இருக்கு, அது உனக்கு ஓகே இல்லையா" என்று கிண்டலாகவே அவள் பதில் கொடுக்க, அது அவனுக்கு அப்படி ஒரு உவகையைக் கொடுக்க அவளுடைய விரல்களை அப்படியே உதட்டுக்குக் கொண்டு சென்று அழுத்தமாக முத்தமிட்டான். அவனது அந்த இதழின் ஸ்பரிசம் அவளது உடல் முழுவதும் ஒரு மின் காந்த அலையை உருவாக்கியது.
இவர்களுடையதும் காதல்தான், ஆனால் கண்மூடித்தனமான காதல் எல்லாம் நிச்சயமாகக் கிடையாது.
***
அவளுடைய அம்மாவின் கனவான விவசாய விளைப் பொருட்களை முறையாக பதப்படுத்திச் சேமித்து வைக்கும் கிடங்குகளை நிறுவிய பிறகு திருமணம் செய்து கொள்ளலாம், அதற்குள் இவர்களுடைய இணைய வர்த்தகமும் அடுத்த நிலைக்குச் சென்றிருக்கும் என இருவருமே முடிவு செய்திருந்தனர். அதனால் இது பற்றி இரண்டு குடும்பங்களுக்குள்ளமே அவசர அவசியமாக எதுவும் பேசும் எண்ணம் இருவருக்குமே இல்லை.
ஆனால் நாளுக்கு நாள் அவள் மீதான தன் உரிமையை நிலை நாட்டுவதில் சக்தி பெரும் முனைப்பாக இருப்பது புரிந்தது.
என்னதான் பகலவனிடம், பார்த்துப் பார்த்து எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலும் கூட சமயத்தில் அவனையும் மீறி அவனது புத்தி வெளிப்படாமல் இருப்பதில்லை. இதனால் சமயத்தில் ஸ்வராவுக்கும் அவனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் கெஞ்சிக் கொஞ்சி அதை சரி செய்து விடுவான்.
இந்த விஷயத்தில் பகலவனும் சும்மா இருப்பதில்லை. ஒரு விதத்தில் அவனது பயம் நியாயம் என்றாலும், அது சக்திக்கும் ஸ்வராவுக்கும் இடையில் வேண்டுமென்றே அவன் தலையிடுவதைப் போன்ற பிம்பத்தை உருவாக்காமல் இல்லை.
இவர்களுடைய காதல் உறுதியான பிறகு, மும்பைக்கு அவளை அதிகம் போக விடுவதில்லை பகலவன். கூடுமானவரை தானே சென்று வருகிறான். சக்தி சென்னைக்கு வந்தாலும் கூட அவளுடன் வெளியில் சுற்ற சிறிதே நேரம் கிடைக்குமே தவிர, அதிக நேரம் அவளுடன் சேர்ந்து செலவிட இயலாது. அவர்களுடைய சீண்டல், தீண்டல், கொஞ்சல் குலாவல் அனைத்துக்கும் கிடைக்கும் அந்த சொற்ப நேரம் போதாமல் தவித்துத்தான் போனார்கள்.
கைபேசியிலும் வீடியோ காலிலும் மட்டுமே அவர்களுடைய காதல் செழித்து வளர, ஒரு விதத்தில் அது சக்தியை எரிச்சல் படுத்திக் கொண்டேதான் இருந்தது.
ஸ்வராவுக்குமே, 'நாம என்ன சின்ன குழந்தையா, இல்ல வெளி உலக அனுபவமே இல்லாத இன்னசன்ட்டா. இவன் ஏன் இவ்வளவு பதட்டப்படறான்' என்கிற எண்ணம்தான். ஆனாலும், தன் மீது உள்ள அக்கறையினால்தானே இவ்வாறு செய்கிறான் என்கிற புரிதலில் அவனிடம் இது போல் எதுவும் கேட்டு வைக்கவில்லை.
நாட்கள் இப்படியே சென்று கொண்டிருக்க, ஒரு முக்கிய வர்த்தக மாநாட்டிற்காக மல்லிகாவுடன் பகலவன் துபாய் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகி இருந்தது.
குடோன்கள் கட்ட இடம் பார்க்கிறேன் பேர்வழியே என்று ஸ்வரா இங்கேயும் அங்கேயும் சுற்றிக் கொண்டிருக்க, அவளால் அம்மாவுடன் போக முடியாத சூழ்நிலை.
அந்தச் சந்தர்ப்பத்தில் மும்பை அலுவலகத்தில் ஒரு முக்கியமான கோப்பில் கையெழுத்திட இவளோ அல்லது பகலவனோ போயே ஆக வேண்டிய கட்டாயம் உருவாகி விட, பகலவனால் அவள் அங்கே செல்வதைத் தடுக்க இயலாமல் போனது.
தேனி பக்கம் ஏதோ ஒரு கிராமத்தில் தங்கி இருந்தவள், மதுரை விமான நிலையம் போய் அங்கிருந்து மும்பை சென்றாள். அவளுடைய பாதுகாவலர்கள் நான்கு பேருக்குமே விமான டிக்கட் கிடைக்காமல் போக, அடுத்த நாள்தான் வர இயலும் என்கிற சூழல். இதைத் தெரியப் படுத்தினால் பகலவன் பதற்றம் அடைவான் என்பதை உணர்ந்து, அவனுக்குத் தெரியாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.
மும்பை வந்திறங்கியவளை சக்தியே நேரில் வந்து அலுவலகத்திற்கு அழைத்துப் போனான். அங்கே வேலை முடிந்ததும், தானே அவளை அவளுடைய ஃபிளாட்டுக்கும் அழைத்துப் போக, மறுக்க வேண்டிய அவசியம் எதுவும் அவளுக்கு ஏற்படவில்லை.
இரவு உணவை ஒரு பிரபல உணவகத்தில் ஆர்டர் செய்து வரவழைத்துப் பேசிக்கொண்டே இருவரும் சாப்பிட்டு முடிக்க, “கதவ லாக் பண்ணிடாத, ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் கீழே செல்ல, ‘வழக்கம் போல கிளம்பிப் போயிடுவான்னு நினைச்சோம், இப்படி சொல்லிட்டுப் போறானே” என்று எண்ணியவளின் இதயம் தடதடத்தது.
சொன்னது போலவே திரும்ப வந்தவனின் கையில் வைத்திருந்த சிறிய அன்பளிப்புப் பெட்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவளது மனதிற்குள் மத்தளம் கொட்டியது.
சினிமாத் தனமான சேஷ்டைகள் எதையும் செய்யாமல், “மை ஃபர்ஸ்ட் கிஃப்ட் பார் மை பெட்டர் ஹால்ஃப்” என்றபடி நேராக அதை அவளிடம் கொடுத்தான்.
“லவ் யூ சக்தி” என நெகிழ்ந்தபடி அதை கையில் வாங்கி மகிழ்ச்சியில் பூரிக்க நின்றவனைப் பார்த்தபடி அவள் பிரிக்க, வைரக் கல் பதித்த ஒரு ஜோடி மோதிரமும், ஒரு கார் சாவியும் இருக்க, “வாவ்” எனத் துள்ளிக் குதித்தாள்.
“கார் கீழ பார்க்கிங்ல நிக்குது. வா பார்க்கலாம்” என்று அவளை அழைத்துச் செல்ல, ஆளில்லாத மின்தூக்கி அவனுக்கு ஆதாயம் செய்ய, இடையுடன் சேர்த்து அவளைத் தன்னுடன் நெருக்கிக் கொண்டான். இந்தத் தீண்டல்களெல்லாம் ஒன்றுமே இல்லை என்கிற நிலைக்கு அவர்கள் எப்போதோ வந்திருக்க அவனது கையுடன் தன் கையை அவள் கோர்த்துக்கொள்ள, அண்டர் கிரவுண்ட் கார் பார்க்கின் பகுதியும் வந்துவிட்டது அவர்களைப் பிரிக்க.
நேராக அந்தப் புதிய காரிடம் அவளை அழைத்து வர, ரிப்பன் கட்டிப் போன தலைமுறை புது மணப் பெண்போல அடக்க ஒடுக்கமாக நின்றிருந்தது அந்த வாகனம்.
அவளுக்குப் பிடித்த நிறம், அவளுடைய பிறந்த தேதியைப் பிரதிபலிக்கும் வாகன எண் எல்லாமுமாக அவளைப் பரவசப் படுத்தி அவன் பால் பித்தம் கொள்ளச் செய்தது.
காரைத் திறந்து, “கம் ஆன், உள்ள வந்து உட்கார்ந்து பார்” என்று அவளை ஊக்கப் படுத்த, ஆர்வமாக வந்தமர்ந்து வாகனத்தை இயக்கிப் பார்த்தாள்.
“ஸோ, க்யூட், மை பேவரைட் கலர். ரியலி யூ ஆர் அமேசிங் சக்தி” என அவள் அவன் புகழ் பாட, தன் கையைத் திருப்பி அவள் பக்கமாக நீட்டினான்.
அவனது செய்கையைப் புரிந்துகொண்டவளாக அவன் தனக்காக வாங்கிவந்திருந்த மோதிரத்தை அவனது விரலில் அணிவித்து அவன் விரல்களில் அழுந்த முத்தமிட்டவள், மற்றொரு மோதிரத்தை அவனது கையில் கொடுத்துவிட்டு தன் கரத்தை நீட்டினாள்.
அதை அவள் விரலில் அணிவித்தவன், அவளது ஒவ்வொரு விரலுக்கும் ஒரு முத்தத்தை வைத்து அவளை மிஞ்சி, மிதப்பாகப் பார்த்த பார்வையில் அவள் இதழ் சுழிக்கவும், அவனது சித்தம் சூடேற, அவளுடைய அந்த இதழ்களைப் பழிக்குப் பழி வாங்கினான், தனது இதகளின் வன்மையால்.
நிமிடங்களாகத் தொடர்ந்த அந்த முதல் முத்தம் மங்கையவளையும் மதிமயக்கி வைக்க, அருகில் ஏதோ வாகனம் வரும் ஓசையில் பதறி விலகினாள்.
உண்டான ஏமாற்றத்துடன் இறங்கி வாகனத்தைப் பூட்டிவிட்டு, அவளைத் தன் கைகளால் சிறையெடுத்தபடி மறுபடியும் வீட்டிற்குத் திரும்பினான்.
வீட்டிற்குள்ளேயும், யாருமற்ற தனிமை ஒரு துணிவைக் கொடுக்க விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கியவன், கொஞ்சம் கொஞ்சமாக தன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே செல்ல, முதலில் கூச்சத்தில், உதடுகள் துடிக்க ‘நோ சக்தி’ ‘நோ’ ‘நோ’ எனச் சிணுங்கியவள், அதையெல்லாம் அலட்சியம் செய்து அவன் எல்லைத் தாண்டிய தன் ஆக்கிரமிப்பை நிலைநாட்டும் முனைப்பில் தீவிரமாய் இருக்க, அவளுடைய உள்ளுணர்வு விழித்துக் கொள்ள, அன்னை சொன்ன வார்த்தைகள் காதுக்குள் எதிரொலிக்க, “நோ சக்தி, திஸ் இஸ் அன் ஃபேர்” என்றபடி வன்மையாக அவனை தன்னிடமிருந்து பிரித்து விலகினாள்.
“நோ ராஜ், ஐ லவ் யூ, ஐ பேட்லி நீட் யூ, ப்ளீஸ் டோன்ட் சே நோ” என்ற கெஞ்சலுடன் அவளை அணைக்க முற்பட, “நோ வே, திஸ் இஸ் நாட் த ரைட் டைம். ஐம் நாட் ரெடி ஃபார் திஸ்… இப்ப நான் எது பேசினாலும் உன்னால சரியான படி புரிஞ்சிக்க முடியாது. ப்ளீஸ், முதல்ல இங்க இருந்து கிளம்பு, இல்லனா நானே உன்ன” என்று ஆவேசமாகக் கத்தி அவள் நிறுத்த, பொங்கி வரும் பாலில் நீர் தெளித்தார் போல் அவனது உணர்சிகள் மொத்தமும் வடிந்து போக, அவள் சொல்ல வருவது புரிந்து அங்கிருத்து அகன்றான் சக்தி மேற்கொண்டு எந்த ஒரு நாடகத்தையும் அரங்கேற்றாமல். ஆனால், அவனது உள்ளம் என்னவோ ஏமாற்றத்தில் எரிமலையாக கனன்று கொண்டுதான் இருந்தது.
அவன் வெளியேறிய நொடி கதவை அடைத்துத் தாளிட்டவளின் நெஞ்சமும் வேதனையில் உழன்றது, இந்த உறவு இத்துடன் முடிந்துவிடுமோ?! என.