top of page

Anbenum Idhazhgal Malarattume! 6

Updated: Mar 30, 2023

அணிமா-6


மலர் 'மாமீ' என்று அழைத்த தோரணையிலேயே நிலைமை புரிந்துவிட, அவசரமாக தாம்பூலத்தை வாங்கிக்கொண்டு மாமாவுடன் கிளம்பி அங்கிருந்து ஓடியே போனார் மாமி.


‘எப்படியும் அங்க வருவேன் இல்ல அப்ப இருக்கு மாமி உங்களுக்கு!’ என்று மாமிக்கு வாட்ஸாப்பில் குறுந்தகவல் அனுப்பிய மலர் சிறிது நேரத்தில், திருமணத்திற்காக உடுத்தியிருந்தப் பட்டுப்புடவையிலிருந்து சுடிதாருக்கு மாறியிருந்தாள்.


அங்கே செங்கமலம் பாட்டி சரோஜா பாட்டி இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்களை நோக்கி வந்தவள், "ரோசாம்மா அம்மா என்னை வீட்டுக்குப் போய் அண்ணா அண்ணி ரெண்டு பேரையும் அழைக்க ஆரத்திதட்டு, பால், பழம் எல்லாம் ரெடி பண்ண சொன்னாங்க. நான் ஜெய்யோட கிளம்பறேன். அவன் என்னை வீட்டுல விட்டுட்டு அப்படியே ட்யூட்டிக்குப் போறானாம். உங்க கிட்ட சொல்லச் சொன்னான், பை" என்று கூறி விட்டு, "பை பாட்டி!" என்று ஈஸ்வரின் பாட்டியிடமும் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.


"பரவாயில்ல உன் பேத்தி கொஞ்சம் பொறுப்பாத்தான் இருக்கா!" என்று ஈஸ்வரின் பாட்டி மெச்சவும், "அக்கா, என்ன நினைச்ச மலரைப் பத்தி, ரொம்...பவே பொறுப்பான பொண்ணு. அவ நம்ம பக்க சமையலெல்லாம் ரொம்ப நல்லா செய்வா தெரியுமா? ரொம்ப அழகா கோலம் போடுவா. அருமையா பாடுவா! யாராவது அவகிட்ட உதவின்னு கேட்டுடா போதும் உயிரையும் கொடுப்பா. வேலைக்குப் போய் மாசம் ஐம்பதியிரம் சம்பளம் வேற வாங்கறா" என்று சரோஜா பாட்டி அடுக்கிக்கொண்டே போக, ஜீவிதாவை நினைத்து கவலை பிடித்துக்கொண்டது செங்கமலம் பாட்டிக்கு. அவள் பெரிதும் வெளி உலகம் அறியாதவள். பி.எஸ்ஸி நியூட்ரிஷன் படித்திருந்தாலும் அவள் வேலைக்குச் செல்லவெல்லாம் முற்படவில்லை. அதற்கான அவசியமும் அவளுக்கு ஏற்படவில்லை. அவளை வேலைக்கு அனுப்ப அவர்களும் விரும்பவில்லை.


கிட்டத்தட்ட கிணற்றுத் தவளை போல் இருக்கும் ஜீவிதாவிற்கும் அணையிட முடியாத காட்டாற்று வெள்ளம் போன்ற மலருக்குமான உறவு சுமுகமாக இருக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது அவருக்கு.


***


மண்டபத்தை விட்டு வெளியே வந்த மலர் அங்கே தன்னுடைய புல்லட்டுடன் தாயாராக இருந்த ஜெய்யை நெருங்கி, "ஜெய்! எனக்கு எப்பவாவதுதான் இந்த மாதிரி சான்ஸ் கிடைக்கும். நீ நகரு நான் வண்டிய ஓட்றேன்" எனக் கூற,


"யோவ்! உன் பின்னாடி உட்கார்ந்துட்டு வந்தா என் இமேஜ் டேமேஜ் ஆயிடும், ஆள விடு!" என்று அவன் அலட்டவும், "யோவ்! என்ன ஒரு ஆணாதிக்க புத்தியா உனக்கு. என் பின்னாடி உக்காந்துட்டு வந்தா உன் பதவி ஒன்னும் கீழ இறங்கிடாது! சும்மா ஓவர் சீன் போடாத! அதோட நீதான் ஹெல்மேட் போட்டிருக்க இல்ல! உன் மூஞ்சியை யார் இப்ப பார்க்கப்போறாங்க" என்று கூறிவிட்டு,


"அம்மா என்னைப் பார்க்கறதுக்குள்ள கிளம்பனும் ப்ளீஸ்! ப்ளீஸ்! இன்னைக்கு ஒரே ஒருநாள் மட்டும்!" என அவள் கெஞ்சவும் மறுக்க மனம் இல்லாமல் தான் பின்னால் நகர்ந்துகொண்டு அவளுக்கு வழிவிட்டான் ஜெய். அடுத்த நொடி அந்த ராயல் என்ஃபீல்ட் சீறிக்கொண்டு பறந்தது.


‘மாம்பழ நிறத்தில் அரக்கு நிற கரை போட்ட பட்டுப்புடவை அவளுக்கு அழகாகதானே இருந்தது? ஏன் இப்படி சுடிதாருக்கு மாறினா?!’ என்று எண்ணியவாறு கண்களில் கனவுடன் அவளைப் பின்தொடர்ந்து வந்த ஈஸ்வர், அவள் ஜெய்யுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கேள்வியாய் நோக்கவும், அங்கே அவனைக் கவனித்துக்கொண்டே வந்த தமிழ், "அண்ணா! இந்தப் பொண்ணுங்கல்லாம் இப்ப எங்க சிங்கிளா இருக்காங்க ம்.. அன்னைக்கு நம்ம தேட்டர்ல வச்சுப் பார்த்தோமே அந்தப் பொண்ணுதானே இது!" என்றவன் அன்று ஜெய்யுடன் மலரைப் பார்த்ததை அப்படியே விவரித்தான்.


மேலும் "இந்த போலீஸ்காரன் இவங்களோட மாமா பையன்தான?" என்று வேறு கேட்க, ஏதோ யோசனையுடன் "ம் அவன் எனக்குத் தம்பி முறையாம்!" என்று சொல்லி "ஆமாம்! இதைப் பத்தியெல்லாம் இப்ப என்ன ஆராய்ச்சி. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாரும் சாப்பிட்டாச்சான்னு போய் பாரு போ!" என்று அவனிடம் அதட்டலாகச் சொல்லி அவனை அங்கிருந்து அனுப்பிய ஈஸ்வர் மனதில் ஏதோ பாரம் ஏறிய உணர்வுடன் அங்கிருந்து சென்றான்.


***


முறைப்படி மகன் மற்றும் மருமகளை வீட்டிற்கு வரவேற்று ஜீவிதாவைப் பூஜை அறையில் விளக்கேற்ற வைத்து மணமக்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து குறையின்றி அனைத்தையும் செய்து முடித்தார் சூடாமணி.


மிகவும் அழகாக இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர் பிரபாகர் மற்றும் ஜீவிதா.


***


திருமணம் முடிந்த இரு தினங்களிலேயே ஈஸ்வர் படப்பிடிப்புக்கென வெளிநாடு சென்றுவிட, பிரபா, ஜீவிதா மறுவீடு முடிந்து தேனிலவுக்கென சில தினங்கள் சுவிட்சர்லாந்து சென்று வந்தனர்.


சென்னையின் புறநகர் பகுதியில் காரில் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தப் பெண்ணைப் பற்றிய துப்புக் கிடைக்காமல் அந்த வழக்குடன் சேர்ந்து இரண்டு குழந்தைகள் காணாமல் போன வழக்கிலும் ஜெய் மிகவும் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.


காலை ஐந்தரை மணிக்கு யோகாவில் தொடங்கி இரவு தாமதமாக வந்து சூடாமணியிடம் சூடாக அர்ச்சனைகள் வாங்குவது வரை நாள் முழுவதும் தனது தினசரி வேலைகளில் மூழ்கியிருந்தாள் மலர்.


தேனிலவு முடிந்து திரும்பியவுடன் பிரபாகர் தொழில் சார்ந்த வேலைகளில் மும்முரமாகிவிட, அமைதியான மாமனார் சுறுசுறுப்பான மாமியார் பாட்டி தாத்தா என எல்லோருடனும் ஜீவிதா கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் குடும்பத்தில் இயல்பாகவே ஒன்றத் தொடங்கியிருந்தாள்.


அணிமா மலரின் வேலைக் காரணமாக அவளிடம் மட்டும் நெருங்கிப் பழகும் வாய்ப்பே இல்லாமல் போனது ஜீவிதாவிற்கு.


அண்ணி மற்றும் நாத்தனார் இருவருக்குமான உறவுமுறை மட்டும் ‘ஒரு ஹை! ஒரு பை!’யுடன் தாமரை இலைத் தண்ணீராக ஒட்டும் ஒட்டாமல் இருந்தது.


***


அன்று ஞாயிற்றுக் கிழமை மலரின் அப்பா அண்ணன் என அனைவருமே விடுமுறையில் வீட்டில் இருக்க, காலைச் சீக்கிரமே எங்கோ செல்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் மலர்.


"என்ன மலரு! இன்னைக்கு கூட அதுவும் இவ்வளவு சீக்கிரமா வெளிய கிளம்பிட்டு இருக்க? நீ வீட்டுல எல்லாரோடவும் சேர்ந்து இருந்து எத்தனை நாளாச்சு தெரியுமா? சனி, ஞாயிறுன்னா கூட வீடு தங்குறது இல்ல? என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?" என சூடாமணி கேள்விகளால் துளைக்கவும்,


"அம்மா ப்ளீஸ்! எனக்கு இன்னைக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க!" எனறாள் மலர் மறுப்பாக.


"நீயும் கொஞ்சம் புரிஞ்சிக்கோ மலரு! காவேரி அத்தை யூ.எஸ்ல இருந்து நேத்துதான் வந்தாங்களாம். கல்யாணம் விசாரிக்க இன்னைக்கு சாயங்காலம் வரதா சொல்லியிருக்காங்க. நீ இங்க இல்லைனா நல்லா இருக்காது" என்று சூடாமணி முடிக்கவும்,


"அவ்ளோதானே நான் நாலு மணிக்கே வந்துடறேன் ஓகேவா. நோ சூடு ஒன்லி சில் சூடாம்மா!" என்று கூறிவிட்டு பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பிய மலரை, "மலர்! அத்தை இவ்ளோ சொல்றாங்க இல்ல இன்னைக்கு ஒரு நாள் வீட்டில் இருக்க முடியாதா?" என்று ஜீவிதா இடைப்புக, 'இப்பதான் ஒரு வழியா அம்மாவைச் சமாளித்தோம்! இப்ப இவ வேற புரிஞ்சிக்காம!' என்ற எண்ணம் தோன்ற, அங்கே உட்கார்ந்திருந்த பிரபாவை ‘அண்ணா சமாளி!’ என்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு மலர், அங்கிருந்து சென்றுவிட,


"இதோ பாரு ஜீவி! மலர் ஏதாவது செஞ்சா அது சரியாதான் இருக்கும். அது அம்மாவுக்கும் தெரியும்! அதனால அம்மா பொண்ணு ரெண்டு பேருக்கும் நடுவுல நீ போகாத!" என்று இலகுவாகவே பிரபா சொல்லிவிட, என்ன பேசுவது என்று புரியாமல் அவர்களது அறைக்குள் சென்று புகுந்து கொண்டாள் ஜீவிதா.


***


சொன்னது போலவே சரியாக நான்கு மணிக்கு மிகவும் களைத்துப்போய் வீட்டிற்குள் நுழைந்தாள் மலர். அவளது ஒன்றுவிட்ட அத்தை காவேரியின் அலட்டலான குரல் வீதி வரையிலுமே கேட்டது.


வீட்டிற்குள் வந்த மலர் அங்கே அந்த அத்தை மற்றும் அவரது மகன் இருவரும் உட்கார்ந்து அனைவருடனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து மரியாதை நிமித்தம் "எப்ப வந்தீங்க அத்தை நல்லா இருக்கீங்களா?" என்று கேட்கவும், அவளது காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு அமெரிக்காவின் புகழ், அங்கே இருக்கும் தனது மகள்-மருமகன் புகழ், புதிதாகப் பிறந்திருக்கும் பேரன் புகழ், அங்கிருந்து விடுமுறையில் வந்து குதித்திருக்கும் அவரது மகனின் புகழோ புகழ் என்று பாடித் தள்ளிவிட்டார் அந்த அத்தை.


ஒருவழியாகத் தப்பித்து மலர் அடுக்களைக்குள் நுழைய, "என்னடி உன் மேல ஹாஸ்பிட்டல் ஸ்மெல் வருது! பிளட் டொனேட் பண்ணிட்டு வந்திருக்கியா?" என்று கேட்டுக்கொண்டே அவளது அம்மா கொடுத்த சூடான காஃபியைப் பருகியவாறு மலர் "பயங்கரம்..மா நீங்க. கரக்டா கண்டுபிடிச்சிட்டீங்க!" என்று உதடு சுழித்துப் பெருமையாகக் கூறிவிட்டு, "சத்தியமா முடியல எப்படிம்மா இந்த அத்தையை வெச்சு சமாளிக்கறாங்க" என்று நக்கலுடன் கேட்டு வைத்தாள்.


"பார்த்து பேசு மலரு, கேட்டுட்டே உள்ள வந்தாலும் வந்துருவாங்க” என்று மெல்லிய குரலில் மகளை எச்சரித்துவிட்டு, “அவங்கப் பிள்ளைக்கு வேற உன்னைப் பொண்ணு கேட்டு வந்திருக்காங்க! உனக்காகதான் காத்துட்டு இருந்தோம்" என்று சூடாமணி சொல்லவும், "சும்மா காமடி பண்ணாத சூடாம்மா" என்று மலர் அலட்சியமாகச் சொல்ல, "இல்லடி அந்தப் பையன் உங்கிட்ட தனியாகப் பேசணுமாம்!" என்றார் சூடாமணி.


முதலில் அதிர்ந்தவள் பின்பு தோளைக் குலுக்கிக்கொண்டு, "நான் ரெஃப்ரஷ் பண்ணிட்டு ஒரு பத்து நிமிஷத்துல வந்து அப்பறம் அவன்ட பேசறேன்!" என்று கூறிவிட்டு தனது அறைக்குச் சென்று குளித்து எளிமையான பலாஸோ மற்றும் லாங் டாப் அணிந்து திரும்ப வந்தாள் மலர்.


சுற்றி வளைத்து சம்பந்தா சம்பந்தம் இன்றி ஏதேதோ கேள்வி கேட்டு அவளை உண்டு இல்லை என்று செய்த காவேரி அத்தைப் பிறகு மலரை அவரது மகனுடன் தனியாகப் பேசுமாறு சொல்லவும், "எது பேசணும்னாலும் பெரியவங்க முன்னாடியே பேசலாம் அத்தை. தனியாப் பேசப் பெருசா எதுவும் இல்ல" என்று அவள் கொஞ்சமும் தயங்காமல் கூறிவிட, அத்தையின் முகம் சிறுத்துப் போனது.


பின்பு பேசத்தொடங்கிய அத்தை மகன் தனது படிப்பு, வேலை என அனைத்தையும் விளக்கமாகச் சொன்னவன், அவளது படிப்பும் வேலையும் அவனுக்கு தகுந்ததாக இருப்பதாகவும் அதனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டால் மேற்கொண்டு அமெரிக்காவிலேயே குடியேற வசதியாக இருக்கும் என்றும் தான் சொல்ல வந்ததை விடாப்பிடியாகச் சொல்லி முடிக்க,


அதற்குச் சிரித்துக்கொண்டே, "ஐயோ! நீங்க இப்படி கேட்பிங்கன்னு தெரியா நான் அல்ரெடி எங்க கம்பெனில பேப்பர் போட்டுட்டேனே. ஏன்னா நான் கல்யாணத்துக்குப் பிறகு வீட்டுலதான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். அது உங்களுக்கு ஓகேவா? இல்லைனா நீங்க வேறப் பெண்ணைதான் பார்க்கணும்" என்று நீளமாக மலர் சொல்லி முடிக்க அவனுடைய முகமே மாறிப்போனது.


"ஏன்மா நீ வேலையை அங்கேயே மேற்கொண்டு தொடர முடியுமா பாரேன். நாங்க வேற, பையன் லீவு முடிஞ்சு திரும்ப அமெரிக்கா போறதுக்குள்ள கல்யாணத்தை முடிக்கணும்னு பாக்கறோம்" என்று காவேரி அத்தை சொல்ல,


"அத்தை கல்யாணத்துக்குப் பிறகு என்னால் வேலைக்கெல்லாம் போக முடியாது. அதுவும் என்னோட அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணா, அண்ணின்னு எல்லாரையும் விட்டுட்டு என்னால வெளிநாட்டுக்கெல்லாம் போகவே முடியாது. நீங்க தப்பா நினைக்காதீங்க" என்று மலர் திட்டவட்டமாகச் சொல்லி முடிக்கவும்,


வெங்கடேசனின் முகத்தைப் பார்த்தவர், "தம்பி நீயாவது உன் பொண்ணுகிட்ட சொல்லிப் புரிய வைக்கக் கூடாதா?" என்று காவேரி கேட்க, "அக்கா எதுகும் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் மலர்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்" என்று தள்ளிப்போடும் விதத்தில் அவர் பதில் சொல்ல,


"நீ என்னத்த பேசப்போறயோ போ... பெரியவங்க இருக்கும்போதே உன் பொண்ணு இவ்ளோ தெனாவெட்டா பேசறா” மலரின் தாத்தா பாட்டி இருவரையும் சுட்டிக்காட்டி, "நீங்க எல்லாரும் சேர்ந்து நல்லா இடம் கொடுத்து வஞ்சிருக்கீங்க இல்ல, அந்த திமிறுதான். இல்லனா இப்படி வேலையை விடுவாளா? நல்லா ஆம்பள மாதிரி பெண்ணை வளர்த்து வச்சிருக்கீங்க. இவளைப் பத்தி தெரிஞ்ச எவனாவது இவளைக் காட்டுவானா?" என்று கண்டபடி பேசவும்,


"அத்தை, எங்க வீட்டுக்கே வந்து எங்கப் பெண்ணையே கண்டபடி பேசறது ரொம்பவும் தப்பு. நீங்க இதைப்பத்தி முன்னாடியே முறையா சொல்லியிருந்தா அவ இப்படி முகத்துக்கு நேறா பேச வேண்டிய நிலையே வந்திருக்காது. தாராளமா நீங்க வேற பெண்ண பார்த்துக்கோங்க" என்ற பிரபா,


அடக்கப்பட கோபத்துடன் அன்னையை நோக்கி, "பாவம்மா அத்தை, அவங்க இங்க வந்து ரொம்ப நேரமாச்சில்ல. அவசரமா எங்கயோ போகணும்னு வேற சொல்லிட்டு இருந்தாங்க. தாம்பூலம் கொடுங்க, கிளம்பட்டும்" என்று கூறவும் கொதிப்புடன் அவர் வெங்கடேசனை ஏறிடவும், மகனின் பேச்சிற்கு ஆமோதிப்பாக அவர் மௌனம் சாதிக்கவே, மேற்கொண்டு எதுவும் பேச இயலாமல் தாம்பூலத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து சென்றனர் அத்தையும் அவரது மகனும்.


அவர்கள் அங்கிருந்து அகன்ற அடுத்த நொடி, "என்ன மலரு நீ அவங்களுக்காக சும்மாதானே பேப்பர் போட்டுட்டதா சொன்ன" என்று கேட்டார் சூடாமணி பதைபதைப்புடன்.


"இல்லம்மா நிஜமாகதான் சொன்னேன்" என்று மலர் உணர்வற்ற குரலில் சொல்லவும், அதில் ஆத்திரம் அதிகமாகி சூடாமணிக்கு அழுகை வந்துவிட,


"ஏன்டி அந்தக் காவேரி சொன்ன மாதிரி உன்னை நாங்க சரியா வளக்கலயா? ரொம்பவே செல்லம் கொடுத்துக் கெடுத்துட்டோமா? அதனாலதான் இப்படி சொல்லாம கொள்ளாம வேலையை விட்டுட்டு வந்துட்டியா?" என்று அவர் வெடிக்கவும்,


"அம்மா மறுபடியும் ஆன் சைட் போகச் சொல்லி கம்பெனில ரொம்பவே ப்ரெஷர் போட ஆரம்பிச்சிட்டாங்க. போன தடவ மாதிரி இல்லை இப்ப போனா குறைஞ்சது ரெண்டு மூணு வருஷத்துக்கு இங்க வர முடியாது. அதனால நேத்து எனக்கு என்னோட டீம் லீட் கூட ரொம்பவே சண்டை ஆயிடுச்சு. ஏற்கனவே எனக்கு இந்த வேலையே பிடிக்கல. அதனாலதான் கொஞ்சம் கூட யோசிக்காம பேப்பர் போட்டுட்டேன். நேத்து வீட்டுக்கு வந்தவுடனே அண்ணாட்டயும் அப்பாகிட்டயும் சொல்லிட்டேன். உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னுதான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்று தனது நிலையை விளக்கிய மலர்,


"நம்மால இனி எதுவுமே முடியாது வாழ்க்கையே முடிஞ்சு போச்சுங்கற எண்ணம் வந்தா மட்டும்தான் அழுகை வரணும். நீங்க இப்படி ஒப்பாரி வைக்கறது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அவர்கள் வீட்டு மாடித் தோட்டத்திற்குச் சென்றவள் படிகளுக்குப் பக்கவாட்டில் இருக்கும் சுவரில் சாய்ந்துகொண்டு கால்களை நீட்டியவாறு உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டாள். லேசாக இருள் கவிழத் தொடங்கியிருந்து.


சில நிமிடங்களில் அவளது பக்கத்தில் அவளை இடித்தவாறு வந்து உட்கார்ந்த ஜெய் அவளது கரத்தைப் பிடித்து காஃபி கோப்பையைத் திணித்துவிட்டு, "இப்ப சொல்லு என்ன மூட் அவுட்" என்று கேட்க,


"ஏன் உன் அருமை அத்தையம்மா எதுவும் சொல்லலியா?" என்ற மலரின் பதில் கேள்விக்கு, "சொன்னாங்களே, என் பொண்ணு ரொம்ப டயர்டா இருக்கா. இந்த காஃபியை அவகிட்ட கொடுத்துடுன்னு சொன்னாங்களே. இந்த ஐ.பி.எஸ் ஆஃபிசரை உங்கம்மா ஒரு ‘ஆர்டர்லி’மாதிரி வேலை வாங்கறாங்க. இது கொஞ்சமும் சரியில்லை... சொல்லி வை" என்று அவன் கிண்டலாகச் சொல்ல, அதை இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லாததால் பேசாமல் இருந்தாள்.


பின்பு தீவிரமாக அவன் அவளிடம் பிரச்சனையைப் பற்றி கேட்கவும் அன்று நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள், "அம்மாவை அழவெச்சுட்டேன் ஜெய். என்னால அதைத்தான் தாங்கிக்க முடியல. ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால நாம ஃபைனான்ஷியலி கஷ்டப்பட்டுட்டு இருந்த சமயத்துல இவங்களெல்லாம் எங்க இருந்தாங்கன்னே எனக்குத் தெரியாது. இப்ப திடீர்னு வந்து பொண்ணு கேக்கறாங்க. அதுவும் அவனை மாதிரி ஒருத்தனை என்னால கொஞ்சம் கூட சகிச்சுக்க முடியாது ஜெய். அதனாலதான் நான் அப்படி நாசூக்கா சொன்னது.


கல்யாணம்ங்கறது எவ்வளவு பெரிய கமிட்மென்ட்? யோசிக்காம கல்யாணம் பண்ணிட்டு, ஒத்து வரலைனா கோர்ட் வாசல்ல போய் நிக்க நான் தயாரா இல்லை ஜெய்! அவங்க சொன்ன மாதிரி என்னைப் பத்தி தெரிஞ்ச யாருக்கும் என்னைப் பிடிக்காது. அதனால நான் இப்படியே இருந்துடறேன்" என்று மலர் தீவிரமாய் சொல்லிக்கொண்டிருக்க,


"நீ ரொம்ப ஃபீல் பண்ணாத மலரு, எனக்கு என்ன சேதாரம் ஆனாலும் பரவாயில்ல. நான் வேணா உனக்கு வாழ்க்கை கொடுக்கறேன்" என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு ஜெய் சொல்லவும், அவன் முதுகில் இரண்டு அடிகளைப் போட்டவள், "மங்கீ! டாங்கீ! சீச்சீ! வாயைக் கழுவு கருமம் உவேக்!" என்று சொல்லி அவள் சிரிக்க,


"அடிப்பாவி என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு?" என்ற ஜெய்யின் கேள்விக்கு, "ம்... உன்னை பார்த்தா வண்டலூர் உயிரியல் பூங்கால இருந்து தப்பிச்சு வந்த மங்கீ மாதிரியே இருக்கு" என்று பதில் கொடுக்கும் அளவிற்கு மலர் தன் வருத்தத்திலிருந்து மீண்டிருந்தாள்.


"ஜோக்ஸ் அபார்ட் மலர்! நீ விரும்பற மாதிரி உன்னைச் சரியா புரிஞ்சு, பிடிச்சு உன்னை உள்ளங்கையில் வெச்சு தாங்குற ஒருத்தன் உன்னைத் தேடிக் கண்டிப்பா வருவான், அதையெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். நான் இங்க வந்ததே உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசத்தான்" என்றவன் அடுத்த நொடியே போலீஸ்காரனாக மாறியிருந்தான்.


தனது கைப்பேசியில் பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தின் படத்தை மலரிடம் காண்பித்த ஜெய், "இவளை உனக்கு அடையாளம் தெரியுதா?" என்று கேட்க, உதடுகளைப் பிதுக்கியவள் "ப்ச் இல்லையே" என்று கூறிவிட்டு, "கொஞ்ச நாளைக்கு முன்னாடி டிவில பார்த்திருக்கேன்" என்றாள் மலர்.


"இல்லைம்மா! இன்னைக்குக் காலையில் இந்தப் பொண்ணோட பிணம் கிடைச்ச இடத்துல சோதனை செய்யும்போது, பக்கத்துல இருந்த புதர்ல ஒரு ஹாண்ட் பேக் கிடைச்சுது. அதுல ஒரு ஸ்லிப்ல, உன்னோட பேர், மொபைல் நம்பர், மாம்பலம் பிளாட் அட்ரஸ் எல்லாம் எழுதியிருந்துது. அதனாலதான் கேட்டேன்" என்று ஜெய் சொல்ல அதிர்ந்தாள் மலர்.


"என்ன சொல்ற ஜெய் எனக்கு ஒண்ணுமே புரியலையே" என்று அதிர்ச்சி விலகாமல் அவள் சொல்லவும், "நோ ஒரீஸ். உனக்கு ஏதாவது ஞாபகம் வந்தா எங்கிட்ட சொல்லு போதும். கீழ எல்லாரும் கவலையா இருக்காங்க. நீ வந்து நார்மலா பேசினாதான் எல்லாருக்கும் நிம்மதி. வா போகலாம்" என்றவாறு எழுந்து நின்று அவளது கையைப் பிடித்து அணிமா மலரைத் தூக்கி நிறுத்தினான் ஜெய்.


அதே நேரம் கைப்பேசியில் பேசிக்கொண்டே படிகளில் ஏறி அங்கே வந்துகொண்டிருந்தான் ஜெகதீஸ்வரன்.



0 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page