top of page

Anbenum Idhazhgal Malarattume 37 & 38

Updated: Apr 13, 2023

அணிமா-37


"என் பேரு சங்கரய்யா!" என்று சொல்லிவிட்டு மடிக்கணினியில் இருவருடைய புகைப்படத்தைச் சுட்டிக்காட்டியவன், "இவங்கதான் 'அஞ்சு மேத்தா' அண்ட் 'கனகா ராவ்!' இன்டர்நேஷனல் லெவெல்ல குழந்தைகளைக் கடத்தற மாஃபியா கேங்ல முக்கியமானவங்க. இவங்க ரெண்டுபேருக்கும்தான் நான் வேலை செஞ்சிட்டு இருந்தேன்.


அந்த மகாபலிபுரம் ரெசார்ட்ல இறந்துபோன ரெண்டு பேருல ஒருத்தங்கத்தான் இந்த கனகா ராவ். அஞ்சு மேத்தா இப்ப எங்க இருக்காங்கன்னே தெரியல. ஸோ, யாருக்கு ரிப்போர்ட் பண்றதுன்னு தெரியாம, லோக்கல் ஆபரேஷன்ஸ் இப்ப கொஞ்சம் குழப்பத்துல இருக்கு.


ஃப்யூ மந்த்ஸ் பேக்... அமெரிக்கால ஒரு கப்புள், தத்தெடுக்க ஆண் குழந்தை ஒண்ணு வேணும்னு கேட்டிருந்தாங்க. அவங்க கேட்ட மாதிரி பையனை கனகம்மா தேடிட்டு இருந்த சமயம்தான் ஜீவனைப் பற்றி சலீம்னு ஒரு இன்பார்மர் எனக்கு தகவல் கொடுத்தான்.


அவன் ஜெகதீஸ்வரன் சாரோட தங்கை மகன்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ஆதரவில்லாத ஒரு சிங்கள் பேரெண்டோட பையன்னு மட்டும்தான் தெரியும். ஒரு சமயம் அவனை ஃபாலோ பண்ணி சலீம் ஃபோட்டோ எடுத்தப்ப, அணிமாமலர் மேடமும் அதில் இருந்தாங்க.


மேலிடத்தில் அதைப் பார்த்துட்டு, ஜீவனோட சேர்த்து அவங்களையும் கடத்திக் கொடுக்கிற ஏஜெண்ட்டுக்குப் பெரிய அமௌன்ட் ஆஃபர் பண்ண தயாரா இருக்கறதா கனகம்மா சொன்னாங்க!" சொல்லிக்கொண்டிருக்கும் போதே அச்சம் மேலோங்க, எச்சிலை விழுங்கி ஒரு நொடி தன்னை சமன் செய்துகொண்டு தொடர்ந்தான் சங்கரய்யா.


“இதை எப்படியோ தெரிஞ்சிட்ட அஞ்சு மேத்தா, இந்த அசைன்மென்டை தனக்கு முடிச்சிக் கொடுக்கச் சொல்லி எல்லா ஏஜென்ட்ஸையும் கேட்டாங்க. அவங்க காண்ட்ராக்ட் படி சௌத் இண்டியா கனகம்மாவோட ஏரியா. அஞ்சு மேத்தா இங்க நடக்கற வேலைல தலையிடக் கூடாது.


அதனால கனகம்மவுக்கு பயந்துட்டு ஏஜென்ட்ஸ் யாரும் அவங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கல. இந்த ஏரியாவையும் தன் கன்ட்ரோல்ல எடுக்கற பேராசைல கொஞ்ச நாளாவே, அஞ்சு மேத்தா கனகம்மாவை ஒழிச்சு கட்ட பிளான் பண்ணிட்டு இருந்திருக்காங்க.


இது தெரியாம கனகம்மா அவங்களுக்கு விசுவாசமான ஏஜென்ட் மூலமா அணிமாமலர் மேடத்தைக் கடத்த முயற்சி செஞ்சாங்க. அதில் ஈடுபடற ஒவ்வொருத்தரா இறந்துபோகவும் ஸ்ரீ துர்காங்கற ஏஜென்ட் கூட சேர்ந்து மலர் மேடத்தைக் கடத்த தானே நேரடியா இறங்கினாங்க. மலர் மேடத்தைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணி அவங்களைப் பத்தின தகவலை நான்தான் கனகம்மாவுக்குக் கொடுத்தேன்.


ஒரு நாள், பாண்டிபஜார்ல இருக்கற ஸ்டார் ஹோட்டல்ல அவங்க ஈஸ்வர் சாரோட இருக்கறத பார்த்து பயந்துபோய் அவங்கள கடத்த வேண்டாம்னு நான் எவ்வளவு அலெர்ட் பண்ணியும் கேக்கல, அந்த அசைன்மென்ட் அவங்களுக்கு ஒரு சவால்னு சொல்லிட்டாங்க கனகம்மா. அதுல இறந்தும் போனாங்க.


இதுல நடக்கற எந்தப் பிரச்சினையும் தெரியாம அஞ்சு மேத்தாவோட இன்ஸ்ட்ரக்ஷன் படி நான் ஜீவனைக் கடத்தி வேதா கிட்ட ஒப்படைச்சிட்டேன். ஜீவனோட சேர்த்து கடத்தி வெச்சிருந்த குழந்தைகளெல்லாம் போலீஸ் கிட்ட மாட்டிக்கவும் வேதாவை உயிருடன் விட்டா ஆபத்துன்னு அடுத்த நாளே அவனையும் கொன்னுட்டாங்க!


என்ன பிரச்சனைனு புரியாம, எனக்கும் ஏதாவது ஆபத்து வரலாம்னு பயந்து போய் ஒளிஞ்சு மறைஞ்சு இருந்துட்டு இருந்தேன். இந்தக் கொலை எல்லாமே தொழில் போட்டில இந்த அஞ்சு மேத்தாதான் அவங்களோட கூலிப்படையை வைத்து செய்தாங்கன்னு நேத்துதான் எனக்குத் தெரிய வந்தது.


ஏன்னா நேத்து நைட் என்னையும் கொலை செய்ய அவங்க ட்ரை பண்ணாங்க! அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்துதான் இந்த வீடியோவை ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கேன்.


எந்த நிமிஷம் வேணாலும் என்னைக் கண்டுபிடிச்சி அவங்க கொலை செஞ்சிடுவாங்க. ப்ளீஸ்! எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க! என்னைக் காப்பாத்தினீங்கன்னா நான் அப்ரூவரா மாறவும் தயாரா இருக்கேன்!"


காவல் துறை தலைமை அலுவலகத்தில் இருக்கும் 'மீட்டிங் ஹால்'லில், மிகப் பெரிய திரையில் ஓடிக்கொண்டிருந்த அந்தக் காணொலி முடியவும், அது வரை இருளில் மூழ்கி இருந்த அந்த அறை மின்விளக்குகளால் ஒளிர்ந்தது.


அவனுடைய உயர் அதிகாரிகள் மற்றும் அவனுக்குக் கீழே வேலை செய்யும் காவலர்கள் என அங்கே அமைதியுடன் குழுமி இருக்க கம்பீரமாக எழுந்து வந்து நடுநாயகமாக நின்ற ஜெய் தெளிவாக விளக்கத் தொடங்கினான்.


"இன்னைக்கு மார்னிங் என்னோட அஃபிஷியல் மெயில் ஐடிக்கு இந்த வீடியோவை அனுப்பியிருந்தான் அந்த சங்கரய்யா! செல் ஃபோன் சிக்னல் அண்ட் ஐ.பி அட்ரஸ் வெச்சு ட்ராக் பண்ணும்போது, மகாபலிபுரம் தாண்டி பாண்டிச்சேரி ரூட்ல ஒரு இடத்துல இந்த டிவைஸ் இருக்கறது தெரிஞ்சுது.


இம்மீடியட்லி அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனை காண்டாக்ட் பண்ணி அந்த இடத்தை ட்ரேஸ் பண்ணோம்! ஒரு ஒதுக்குபுறமான இடத்துல அவனோட கார் அன்ட் ஹிஸ் காட்ஜெட்ஸ் எல்லாத்தையும் கைப்பற்றினாங்க.


பட் அன்பார்ச்யுனேட்லி நம்ம காப்ஸ் அங்க ரீச் ஆவதற்குள்ளேயே சங்கரய்யாவை அவங்க கொன்னுட்டாங்க!" என்னதான் முயன்றாலும் எழுந்த முறுவலை மறைப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது அவனுக்கு.


மல்லிகார்ஜுனையும் காட்டிக்கொடுக்காமல் அதே நேரம் தன்னையும் விட்டுக்கொடுக்காமல் புத்தி சாதுரியத்துடன் ஈஸ்வர் நடந்துகொண்ட விதம் அவனை நெகிழச் செய்திருந்தது.


'அந்த மலர் கேடிக்கு ஏத்த ஜோடிதான் ஈஸ்வர் அண்ணா நீங்க' என்ற எண்ணம் மனதில் எழ, அதைக் கடக்க எடுத்துக்கொண்ட சில நொடி இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்தான் ஜெய்.


"அவனோட லேப்டாப்ல இருந்து கிடைச்ச தகவலை வெச்சு பார்க்கும் போது, இந்த வீடியோல அவன் குறிப்பிட்டிருந்த அந்த அஞ்சு மேத்தா, கனகா ராவ் இவங்க ரெண்டுபேரும்தான் அந்த சைல்ட் ட்ராபிக்கிங் ராக்கெட்ல டாப் ல இருந்து இவங்களை இயக்குறாங்க.


இதுல இவன் குறிப்பிட்டது ரெண்டே ரெண்டு பேரை மட்டும்தான். பட் இதுபோல இன்னும் நிறைய பேர் இப்படி இருக்க வாய்ப்பு இருக்கு. இந்த கமாண்டிங் பொசிஷன்ல இருக்கறவங்க சங்கரய்யா மாதிரி ஏஜென்ட்ஸ் கிட்ட அவங்களோட டிமாண்ட்ஸை வைப்பாங்க.


அவங்க தேவைக்கு ஏற்ப, அதாவது அடாப்ஷன்காக, பாண்டட் லேபர், செக்ஸ் லேபர், ஆர்கன் ட்ரேட், பெக்கிங் இதை எல்லாம் விட மிகக் கொடுமையா பத்து முதல் பதினைந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ‘பீடோ ஃபைலிக்’ சைக்கோக்களுக்குப் பலியிடும் மிக ஆபத்தான முறையில் நம்ம நாடு முழுதும் பரவி இருக்கும் சைல்ட் செக்ஸ் டூரிசம் எட்செட்ரா... எட்செட்ரா...


இதுக்கெல்லாம் ஏற்ற மாதிரி என்ன குழந்தை வேணும், அவங்க ஏஜ்... ஈவன் அவங்க கலர்... லாங்குவேஜ்... ஹைட்... வெய்ட்... மெடிக்கல் ஹிஸ்டரி எல்லாமே சொல்லுவாங்க.


இந்த ஏஜென்ட்ஸ்... அவங்களுக்குக் கீழ இருக்கும் இன்ஃபார்மர்ஸ் கிட்ட அவங்களோட டிமாண்ட்ஸை சொன்னா, அதுக்கு தகுந்த மாதிரி இருக்கும் குழந்தைகளைக் கண்டுபிடிச்சு, அவங்க டீடைல்ஸை பக்கவா ஃபோட்டோவோட அவங்க கொடுத்துடுவாங்க.


இந்த ஏஜென்ட்ஸ் பத்து பேர் இருந்தால், ஆள்காட்டிங்க நூறு பேர் இருப்பாங்க. அதாவது ஒவ்வொரு ஏஜென்ட் கிட்டேயும் பத்து இன்பார்மர்சாவது இருப்பாங்க. அதேபோல ஒரு இன்பார்மர் பல ஏஜென்ட்ஸ்க்கு வேலை செய்வாங்க.


இந்த ஆளுங்க எல்லாருமே, ஜஸ்ட் லைக் தட் பொதுமக்களோட மக்களா கலந்தே இருப்பாங்க, லைக் கால் டாக்ஸி ட்ரைவரஸ், கூலிஸ், சேல்ஸ் ஆளுங்க, ஈவன் இந்த வீடியோல இந்த சங்கர் சொன்ன சலீம் கூட ஒரு ஜூஸ் கடை வெச்சிருக்கான்.


இன்னும் கூட நம்ம நாட்டில் வளர்ச்சி அடையாத பல கிராமங்கள் இருக்கு. ஈவன் பேசிக் ஃபோன் கூட இல்லாத மக்கள் பல பேர் இருகாங்க. இந்த ஆளுங்க அவங்களை ஈசியா பிரைன் வாஷ் பண்ணி, குழந்தைகளைப் பணம் கொடுத்து வாங்குவாங்க.


தட் இஸ் ஒரு மினிமம் அமௌன்ட்க்கு பெத்தவங்களே பிள்ளைகளை வித்துடுவாங்க. ஜஸ்ட் ஆறாயிரம் ரூபாய் பணத்துக்காகப் பிள்ளையை விக்கற கதையெல்லாம் இங்க நடக்குது.


வேதனை என்னனா, நாம நம்ம பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கற ஒரு வீடியோ கேம் விலையை விட இந்தப் பிள்ளைகளின் விலை ரொம்ப குறைவு!" கொதிப்புடன் வந்தன அவனது வார்த்தைகள்.


தென் இந்த ஏஜென்ட் அந்தக் குழந்தைகளைத் தனியாவோ இல்ல ஆட்களைக் கொண்டோ கடத்துவான். செத்துப்போன வேதா மாதிரி கேங்ஸ்டர்ஸ் இதுக்குப் பக்கவா ஃபீல்டு ஒர்க் பண்ணுவாங்க.


இங்க இவங்க கண்ட்ரோல்ல பதிவு செய்யப்பட்ட, ஆர்... பதிவு செய்யப்படாத அனாதை இல்லங்கள் நிறைய இருக்கு. அதுல இந்தக் குழந்தைகளைக் கொண்டுபோய் தங்க வைப்பாங்க. மோஸ்ட் ஆஃப் த டைம் மயக்கத்துல.


இவங்க குழந்தைகளை ஃபாரினுக்கு கடத்தப் பெரும்பாலும் ஒரு சில குறிப்பிட்ட பாஸ்போர்ட்டை மட்டும்தான் பயன்படுத்துவங்க. இவங்க கேங்ல கைத்தேர்ந்த மேக்கப் எக்ஸ்பர்ட்ஸ் இருகாங்க. அவங்க குழந்தைகளை அந்த பாஸ்போர்ட்ல இருக்கும் ஃபோட்டோல இருக்கற மாதிரியே பக்கவா மாத்திருவாங்க.


ஆனா, அந்த பாஸ்போர்ட்ல ஏதாவது ஒரு கண்ட்ரில போய் இறங்கினத்துக்கான என்ட்ரி மட்டும்தான் இருக்கும். திரும்ப வந்ததுக்கான என்ட்ரி இருக்காது. அதுக்கு உடந்தையா இங்க பல ட்ரேவல் ஏஜென்ட்ஸ் இருக்காங்க. இன்னும் கேவலமான விஷயம் என்னனா நம்ம ஏர்போர்ட் அத்தாரிடிஸ் சில பேர் உடந்தையா இருக்காங்க.


இந்த கேங்கோட கிங்பின் அதாவது தலைவன் யாருன்னு இன்னும் கண்டு பிடிக்க முடியல. ஆனா இந்த அஞ்சு மேத்தாவை கண்டுபிடிச்சா, அவனையும் சீக்கிரமா கண்டுபிடிச்சிடலாம்” என்று ஒவ்வொன்றையும் விளக்கமாகச் சொன்னவன், பிறகு தொடர் கொலைகளில் இறந்தவர்கள் ஒவ்வொருவருடைய உண்மையான பெயர் முதலிய அனைத்தையும் விளக்கினான்.


தொடர்ந்து, "நமக்கு கிடைச்ச அந்த ஆடியோ கூட பிளான் பண்ணிதான் அவங்க நமக்கு கிடைக்குற மாதிரி செஞ்சிருக்காங்க.


அதாவது மிஸஸ். அணிமாமலர் போலீஸ் கஸ்டடில வந்துட்டா அவங்கள கடத்த முடியாதுங்கற காரணத்தாலதான் அவங்களை இந்த கேஸ்ல இருந்து தப்ப வெச்சிருக்காங்க" என முடித்தான்.


இறுதியாக, "சீயர் மை டியர் ஆஃபிஸர்ஸ்! இனிமேல் இந்த பேசிக் டீடைல்ஸை வெச்சுட்டு, நாம இந்த ஆளுங்கள களை எடுக்கற வேலையில் தீவிரமா இறங்கப்போறோம்!


அஸ் ஏர்லி அஸ் பாசிபிள், நாம அந்த கிங்க்பின் யாருனு கண்டுபிடிச்சு சிறையில் அடைகிறோம்! அதை விட முக்கியம், கடத்தப்பட்ட குழந்தைகள் எங்க இருந்தாலும் மீட்டுட்டு வந்து பெத்தவங்க கிட்ட சேர்க்கிறோம்!" என்று அவனுக்குக் கீழே இருக்கும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் விதமாகச் சொன்னவன்,


அவனுடைய மேலதிகாரிகளை நோக்கி மரியாதையுடன், "தாங் யூ ஆஃபீஸ்ர்ஸ்! வி ஹோப் வி வில் கெட் யுவர் ஃபுல் சப்போர்ட்!" என்று கம்பீரமாகச் சொல்லி முடித்தான்.


தொடர்ந்து அங்கே எழுந்த கர ஒலி அவன் சொன்னவற்றைச் சுலபமாகச் செய்து முடிக்க முடியும் என்ற முழு நம்பிக்கையை அவனுக்குள் விதைத்தது.


அன்றே அவனது வேட்டையை, சலீமிடமிருந்து தொடங்கினான் ஜெய்.


***


அடுத்து வந்த நாட்களில், ஈஸ்வர் அவனுடைய படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட, அவன் தொடங்கியிருந்த அறக்கட்டளையின் பணிகள் மலரைத் தனக்குள் இழுத்துக்கொண்டன.


காவல் துறையுடன் சேர்ந்து அவர்களுடைய அறக்கட்டளை மூலமாகப் பல பிள்ளைகளை மீட்டு அவர்களுடைய பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் சிறப்புடன் நடந்துகொண்டிருந்தன.


கடும் எதிர்ப்புகளைக் கடந்து கருணாகரன் ஏற்படுத்தியிருந்த தனிப்படை அதன் பணிகளை செவ்வனேத் தொடங்கி இருந்தது.


ஜெய் விசாரணைக்காக இந்தியா முழுதும் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தான்.


நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சோமய்யாவை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வருவாள் மலர்.


நாட்கள் செல்லச்செல்ல அவனிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.



அணிமா-38


சுபாவின் சிகிச்சைகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறி வந்தாள். இதற்கிடையில், அவர்களைப் பார்க்க ஒரு நாள் அங்கே வந்திருந்தனர் சுசீலா மாமியும் மாமாவும். அவருடைய கால் ஓரளவிற்கு சரியாகி இருந்தது.


அன்று விடுமுறையிலிருந்த ஜீவனைப் பார்த்த மாமி, "ஏண்டி சுபா, இவனுக்கு இன்னும் முடி இறக்கலையா?" என்று கேட்கவும், செங்கமலம் பாட்டியும், சாருமதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.


"என்ன யோசனை உங்களுக்கு?" என்று மாமி கேட்க,


"இல்ல அவங்க குல தெய்வம் கோவில் எங்க இருக்குன்னு தெரியாதே!" என்று பாட்டி சொல்ல,


"அதை பத்திலாம் யோசிக்காதீங்க! உங்க குல தெய்வம் கோவிலுக்குப் போய் ஈஸ்வர் மடியில் உட்கார வெச்சு மொட்டைப் போடுங்க! சுபா நல்லபடியா தேறி வரட்டும்னு, நான்தான் அவனுக்கு ஹேர் கட் பண்ண வேண்டாம்னு சொன்னேன்! ஆனா காடு மாதிரி வளந்துடுத்து பாருங்க!" என்றார் மாமி உரிமையுடன்.


"அதனாலதான் மாமி அவனுக்கு ஈஸியா உச்சி குடுமிப் போட்டு விட்டான் கடத்தல்காரன்!" என்று சிரித்தாள் மலர், "இப்ப மட்டும் பார்த்தான், பின்னலே போட்டுடுவான்!" என்றார் மாமி நீட்டி முழக்கி.


அதைக்கேட்டதும், "நோ! மாமி பாட்டி! நோ பின்னல்!" என்று அலறினான் ஜீவன். அவனது பாவனையைக் கண்டு அதிர்ந்து சிரித்தனர் அனைவரும்.


***


மாமி சொன்னதுபோல் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து குல தெய்வ கோவிலில் ஈஸ்வர் மடியில் அமர வைத்து ஜீவனுக்கு மொட்டை அடித்து பின்பு காது குத்தினர் அவனது ஆறாவது பிறந்தநாளில்.


குமார் குடும்பத்தினர் மலருடைய பிறந்த வீட்டினர் என அனைவருமே அங்கே வந்திருந்தனர்.


அவன் மொட்டை அடித்துக்கொள்ள அழுது புரளுவான் என அனைவரும் நினைக்க, அமைதியுடன் அவன் ஒத்துழைக்கவும் ஆச்சரியமாகிப்போனது அனைவருக்கும்.


மலர் அதை வாய் விட்டே சொல்லிவிட, "கேர்ல்ஸ் தான் லாங் ஹேர் வெச்சுப்பாங்க ஹனிமா, உன்னை மாதிரி!" என்று சொல்லிவிட்டு, தன் தலையைத் தடவிக் காண்பித்தவன், "ஆனா அம்மாவே இப்படி இருகாங்க இல்ல! அதனால எனக்கு பண்ணிட்டா ஓகேதான்!" என அவன் விளக்கவும், கண்ணீருடன் அவனை அப்படியே அணைத்துக்கொண்டான் ஈஸ்வர்.


அங்கே அனைவருடைய கண்களுமே கண்ணீரில் நிறைந்துபோனது அவனது விளக்கத்தால்.


அந்த நேரம் சரியாக கைலாஷ் அங்கே வரவும், அந்தச் சிறுவன் பேசிய அனைத்தையும் கேட்க நேர்ந்தது. அந்தச் சிறுவன் யார் என ஆராய்ச்சியுடன் பார்த்தவாறு நின்றான் அவன். எல்லோருடைய கவனமும் ஜீவனிடம் இருந்ததால், அவனைப் பார்க்கவில்லை ஒருவரும்.


பல வருடங்கள் கழித்து அங்கே ஈஸ்வரைக் கண்டதும், அவன் செய்த குற்றங்கள் நினைவில் வரவும் அவன் உடல் ஒரு நொடி பயத்தில் அதிர்ந்தது.


அவனது கண்கள் அங்கே சுபாவைத் தேட அவளை அடையாளம் காண முடியவில்லை. சில நிமிடங்கள் பிடித்தது அவனுக்கு அவளைப் புரிந்துகொள்ள.


அவளுடைய தேய்ந்துபோன தேகமும், கொஞ்சமே கொஞ்சம் தலையில் முளைக்கத் தொடங்கி இருந்த கேசமும், உள்ளே போன கண்களும், அவனுக்கு அவளுடைய நிலையைச் சொல்லாமல் சொல்ல, நிலை குலைந்து போனான் கைலாஷ்.


அந்தச் சூழ்நிலையைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவனாக, அப்படியே சுபாவின் கால்களில் வந்து விழுந்தவன், "என்னை மன்னிச்சுடு சுபா! நான் நினைச்சிருந்தா அன்னைக்கே உன்னைக் காப்பாத்தி இருக்க முடியும்! பழி உணர்ச்சில என்னென்னவோ செஞ்சுட்டேன்!


அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மனசாட்சியே இல்லாம உங்க வீட்டிலிருந்த நகை பணம் எல்லாத்தையும் திருடி வெச்சிட்டு, ஈஸ்வர் நிர்க்கதியாய் ஊரை விட்டே போனதைப் பார்த்துச் சந்தோசப்பட்டேன். அதுதான் கடவுள் எனக்குக் கொடுத்த கடைசி சந்தோஷம்.


அதுக்குப் பிறகு கல்யாண வாழ்க்கைக் கூட எனக்கு சந்தோஷமா அமையல. ஒரே வருஷத்துக்குள்ள டிவோர்ஸ்ல போய் முடிஞ்சது.


அந்தக் கல்யாணத்துல இருந்து வெளியில வர பெரிய அமௌன்ட் செட்டில் பண்ணேன். என்னால வேலைக்கும் போக முடியாம போச்சு. வேற கல்யாணமும் அமையல. அம்மா, அப்பா என்னை நினைச்சே பாதி உயிரா போயிட்டாங்க. எல்லாமே உனக்கும் உங்கக் குடும்பத்துக்கும் செய்த பாவம்தான்" என மனதிலிருந்து சுபாவிடமும் ஈஸ்வரிடமும் அங்கே இருந்த அனைவரிடமும் மன்னிப்பு வேண்டினான் கைலாஷ்.


எதிரே இருப்பவன் பலத்துடன் மோதினால் திரும்பச் சண்டைப் போடலாம் செத்தப் பாம்பை எப்படி அடிப்பது?


"பரவாயில்ல விடு கைலாஷ்! போனது போகட்டும்!" என முடித்துக்கொண்டான் ஈஸ்வர், அவ்வளவுதான்!


அவசரமாக அங்கிருந்து கிளம்பிப் போன கைலாஷ், சிறிது நேரத்தில் திரும்ப வந்தான் ஈஸ்வரின் வீடு மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பத்திரங்களுடன்.


"நியாயப்படி இதெல்லாம் உனக்குச் சேரவேண்டியதுதான்! இதை விடப் பல மடங்கு நீ சம்பாதிச்சு இருப்ப, இருந்தாலும் தயவு செய்து இதை மறுக்காமல் வாங்கிக்கோ!" என அனைத்தையும் அவனிடம் ஒப்படைத்தான்.


அவனுடைய பெற்றோரை நேரில் சென்று சந்தித்துவிட்டு அங்கிருந்து மனநிறைவுடன் கிளம்பினர் அனைவரும்.


வசதியான மிகப் பெரிய குளிரூட்டப்பட்ட பேருந்தில் அனைவரும் பயணிக்க இருவர் மட்டுமே அமரும் இருக்கையில் ஜன்னலோரமாக கணவனுக்கு அருகில் அவன் தோள் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மலர்.


அவர்கள் இருவருடைய மடியிலும் வசதியாகக் கால் நீட்டித் தூங்கிக்கொண்டிருந்தான் ஜீவன்.


கிசுகிசுப்பாக அவனுக்கு மட்டுமே கேட்கும் குரலில், "ஹீரோ! இன்னும் கொஞ்ச நாள்ல ஜீவிக்கு வளைகாப்பு செய்யணும். அப்பறம் டெலிவரி பார்க்கணும். சோ இப்பதான் சரியான டைம்! நாம ஒரு ஒன் வீக் சைலெண்டா எங்கேயாவது ஓடிப் போயிடலாமா? ஹனி மூனுக்கு!" என்று ஆவலுடன் அவள் கேட்கவும்,


தனது தாடையைத் தடவியபடி கொஞ்சம் யோசித்தவன், "ஓகே... போலாம்தான்... எதுக்கும்..." எனச் சொல்லத்தொடங்க, "தமிழ் கிட்ட கேட்டுட்டு டிசைட் பண்ணனும் இல்ல?" என்றாள் மலர் கிண்டலாக.


"ப்ச்! வேற என்னடீ செய்ய சொல்ற! நாளைக்கு மீண்டும் உயிர்த்தெழு படத்தோட முதல் டீசர் வெளியிட போறாங்க. படத்தோட ஷூட்டிங் அன்ட் ப்ரோமோன்னு ஏகப்பட்ட வேலை இருக்குடீ! ஒரு பெரிய ஃபிலிம் ப்ரொடக்ஷன்ல இருந்து வேற பர்சனலா என்னை மீட் பண்ணனும்னு கேட்டிருக்காங்க! நம்ம ப்ரோக்ராம் பத்தி நான் டூ டேஸ்ல சொல்றேன்!" என்றான் ஈஸ்வர்.


"வேற வழி!" என்றவாறு தோளைக் குலுக்கி அதை ஏற்றுக்கொண்டாள் மலர்.


***


அடுத்த நாள் ‘மீண்டும் உயிர்த்தெழு’ படத்தின் முதல் டீசெர் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.


ஈஸ்வர் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதுபோல், பிரான்ஸ் நகரில் படமாக்கப்பட்டிருந்தக் காட்சியும், "உங்க வாழ்க்கையையே நான் வேற லெவலில் மாத்தி காட்றேன் மிஸ்டர். அபிமன்யு!" எனக் கெத்தாக ஈஸ்வர் பேசும் வசனமும்,


தொடர்ந்து, நீச்சல் குளத்தின் பின்னணியில் "நாம ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சிருக்கிற காதல் சூர்யா! அது எல்லாத்தையும் சாத்தியப்படுத்தும்!" எனக் கதாநாயகியிடம் காதல் ததும்ப அவன் வசனம் பேசும் காட்சியும் இளைஞர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.


சமூக வலைத் தளங்களில் அந்தக் காணொலியை ஒரே நாளில் பல லட்சம் பேர் பார்த்திருந்தனர்.


மேலும் அவன் குறிப்பிட்ட மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுக்கவிருக்கும் திரைப்படத்தில், அவனைக் கதாநாயகனாக முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட அடுத்த தினம் அவனை அழைத்திருந்தனர்.


அந்த நிறைவுடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தான் ஈஸ்வர். உணவு இடைவேளையின் போது கேரவேனில் வந்து அமர்ந்தவன் கைப்பேசியைப் பார்க்க, பூக்கள் மற்றும் இனிப்புக்கள் என சில இமோஜிக்களுடன், 'கான்செல் தி ஹனிமூன் பிளான்! இனிமேல் ஒன்லி பேமிலி டூர்தான்!' எனக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் மலர்.


'என்ன பிரச்சினைனு தெரியலியே! ஏன் இப்படி மெசேஜ் அனுப்பியிருக்கா இந்தப் பூக்காரி? ஒரு வேளை டீசரைப் பாத்துட்டுதான் இந்த ரியாக்ஷனா?" என உள்ளுக்குள் குறுகுறுத்தவாறே படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தான் ஈஸ்வர். மணி இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது.


அங்கே வீட்டின் வரவேற்பறையில் அவனுடைய அம்மா, மலருடைய அம்மா, அப்பா, தாத்தா, இரண்டு பாட்டிகள், பிரபா, ஜீவி, சுபா என அனைவரும் குழுமி இருக்க ஜீவன் பிரபாவின் மடியில் தலை வைத்து உறங்கியிருந்தான்.


அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன், "கங்கிராட்ஸ் ஈஸ்வர்!" "வாழ்த்துகள் மாப்பிள்ளை!" "ஹாப்பிடா ஜகா!" "கங்கிராட்ஸ் அண்ணா!" என அனைவரும் மகிழ்வுடன் வாழ்த்த, அவனுடைய வரவிற்காக வீட்டில் அனைவருமே காத்துக்கொண்டிருப்பது புரிந்தது.


அவன் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் தகவல் அதற்குள் அனைவர்க்கும் எப்படித் தெரியவந்திருக்கும் என அவன் யோசித்தவாறு காரணம் புரியாமலேயே அனைவருக்கும் நன்றி தெரிவித்தான் ஈஸ்வர். அவனுடைய கண்கள் மலரைத் தேடிச் சுழன்றன.


அதற்குள் முகம் கொள்ளா பூரிப்புடன், அவனுக்காகச் செய்த பாதாம் அல்வாவைக் கொண்டுவந்து அவனுக்கு ஊட்டினார் சாருமதி.


"அம்மா உங்க எல்லாருக்கும் எப்படித் தெரியும்?" என அவன் அப்பாவியாய் கேள்வி கேட்க,


சிரித்த முகமாக, "இது என்னப்பா கேள்வி? மலர்தான் சொன்னா?" என்றார் மதி எதார்த்தமாக.


"என்ன மலர் சொன்னாளா? அவளுக்கு எப்படித் தெரியும்?" என்று அவன் கேட்கவும், 'லூசாப்பா நீ!' எனும் வகையில் அவனை ஒரு பார்வை பார்த்தவர்,


"அதைப் போய் அவ கிட்டேயே கேளு!" என்றார் அடக்கப்பட்ட சிரிப்புடன்.


"எங்கம்மா அவ? எல்லாரும் இங்க இருக்கும்போது தனியா போய் என்ன செய்யறா?" என்று மகன் அடுத்த கேள்விக்குத் தாவவும்,


"இவ்வளவு நேரம் இங்கதான் இருந்தா. இப்பதான் எதையோ எடுக்க ரூமுக்குப் போனா. இனிமே நீ எதைக் கேக்கணும்னாலும் அவ கிட்டயே போய் கேளு!" எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் மதி.


அவனுடைய அறைக்குள் நுழையவும் அவன் வந்ததை கூட உணராமல் தீவிரமாக ஏதோ ஒரு கோப்பைக் கையில் வைத்துக்கொண்டு அதில் மூழ்கி இருந்தாள் மலர்.


அவளுடைய அருகில் நெருங்கியவன் அவளது காதின் அருகில் சென்று 'மலரே மௌனமா! மௌனமே வேதமா' என மெல்லிய குரலில் பாடவும், அதில் திடுக்கிட்டுத் திரும்ப அவளுடைய முகம் வாட்டமாகக் களைப்புடன் இருப்பது புரிந்தது அவனுக்கு.


அவள் சுபாவின் மருத்துவ அறிக்கையைத்தான் படித்துக்கொண்டிருந்தாள் என்பதும் புரிந்தது.


எழுந்தப் பதட்டத்தை மறைத்தவாறு, "இன்னைக்கு சுபாவை செக்-அப்க்கு கூட்டிட்டுப் போனீங்க இல்ல. அவளுக்கு ஒண்ணும் இல்லையே?" என அவன் கேட்கவும்,


"ஹகூனா மட்டாட்டா ஹீரோ! அவங்க பர்ஃபெக்ட்லி நார்மல்!" என்று சொல்லிவிட்டு, "எனக்கு கொஞ்சம் டவுட்டா இருந்ததா, அவங்க கூட ஹாஸ்பிட்டல் போனப்ப அங்கயே எனக்கும் செக்அப் பண்ணிக்கிட்டேன் ஹீரோ! ரிசல்ட் பாசிட்டிவ்னு!" என்று திக்கித்திணறி நாணத்துடன் அவள் சொல்லிக்கொண்டிருக்க, அவளுடைய தவிப்பை உணராமல், அவளை முடிக்க விடாமல், "ஐயோ என்ன ஆச்சு!" எனப் பதறினான் ஈஸ்வர்.


அவனிடம் உடைத்துச் சொல்லத் திணறியவளாக, ஒரு காகிதத்தையும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த சிறிய கருவியையும் அவனுடைய கையில் திணித்தாள் மலர்.


‘ப்ரக்னன்சி டெஸ்ட் பாசிட்டிவ்!’ என அதில் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருக்க, அந்தக் கருவியில் இரண்டு கோடுகள் தெரிந்தது.


அவனுடைய வாழ்க்கை முழுமை அடைந்த மகிழ்ச்சியில் கண்களில் கண்ணீர் திரை இட, தன்னை மறந்து நின்றவனிடம், "என்ன ஹீரோ! இனிமேல நாம ஃபேமிலி டூர் போலாமா?!" எனக் குறும்பு கொப்பளிக்கக் கேட்டாள் மலர்.


அடுத்த நொடி மனைவியை இறுக அணைத்த ஈஸ்வர், ஆயிரம் நன்றிகளால் அவளை அர்ச்சித்துக் கொண்டிருந்தான் இதழ் பூத்த முத்த மலர்களால்!

© KPN NOVELS COPY PROTECT
bottom of page