10. புதிர் அவிழ்ந்தது
ஜாதகத்தைப் பார்த்ததும் உண்மையிலேயே மெய் சிலிர்த்தது ஜெகனுக்கு. ஆதியின் வயதைப் பார்த்தால் முப்பதைத் தாண்டியிருந்தது. ஆதிக்கும் மல்லிக்கும் இடையில் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம்.
அவர்கள் பக்கம் இது சகஜம்தான். அதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமில்லைதான். ஆனால் அவர்களது அந்தஸ்து! அதுதான் மிரட்டியது அவரை.
தி. நகர் கிளைத் தொடங்கி, சென்னையில் பல முக்கியப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் பல இடங்களிலும், கேரளா ஆந்திரா எனத் தென்னிந்தியா முழுதும், அவர்களது துணிக் கடைகள் இருக்கின்றன. அமிர்தம் உணவகங்களும்தான்!
மகளை நன்றாக வைத்துக் கொள்ளும் அளவிற்கு வருமானமும், நல்ல குடும்ப பின்னணியும் இருந்தால் போதும், அப்படிப்பட்ட இடமாகத்தான் அவளைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் இது அவர்கள் கனவிலும் எதிர்பார்க்காதது.
அவர்கள் நிலைமைக்கு இது கை மீறிய சம்பந்தம். அவர்கள் முறைப்படி திருமணம் மணமகன் வீட்டில்தான் செய்வார்கள். நன்றாகச் சீர் செய்து பெண்ணை அவர்கள் திருமணம் செய்து கொடுக்க வேண்டும்.
நில புலன்களை விற்ற பணத்தில் ஐந்து லட்சம் மீதம் இருக்கிறது. அதை வங்கியில் போட்டு வைத்திருக்கின்றனர்.


