36. அறுவடை நாள்
விபத்துக்குப் பிறகு ஆதி மல்லியை கேர் ஃபார் லைஃபிற்குத்தான் கொண்டு வருவான் என்று வினோத் நினைத்திருக்க, தற்செயலாக அவள் வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அது அவளது நல்ல நேரம் என்றுதான் சொல்லவேண்டும்.
ஆதியின் பாதுகாப்பு வட்டத்துக்குள் அவள் இருக்கவே அங்கே மல்லியைக் கொலை செய்யும் நோக்கத்தில் அடியெடுத்து வைக்கும் துணிவு வினோத்திற்கு கொஞ்சமும் இல்லை. அவள் அங்கிருந்து வீட்டிற்குச் சென்ற பிறகு மருத்துவ பரிசோதனைக்குத் தவிர வேறெதற்கும் வீட்டை விட்டு வெளியில் வரவேயில்லை.
அவளே அறியாமல் அவளைச் சுற்றி ஆதியின் ஆட்கள் எல்லா நேரமும் காவலுக்கு இருக்கவே அவளை நெருங்குவதே நடக்காதக் காரியமாகிப்போனது வினோத்திற்கு.
குணாவின் மரணம் விபத்து என்றே கோபால் நினைத்துக்கொண்டிருக்க, அது கொலை என்பதே மல்லியின் மீது நடந்த கொலை முயற்சிக்குப் பிறகுதான் அவனுக்குத் தெரியவந்தது. சில நாட்களாகவே குணா பணத்துக்காக வினோத்தை அதிகம் நச்சரிக்கத் தொடங்கியிருந்தான்.
இதற்கிடையில் அவன் மல்லியை அவனது மகள் படிக்கும் பள்ளியில் சந்திக்கவும், குறிப்பாக அன்று அவள் அம்முவின் செயினைப் பற்றி விசாரிக்கவும், அதில் பதறி அன்று மல்லியை அவன் மிரட்டிவிட்டு வந்ததையும் அதைத் தொடர்ந்து மணியின் ஆட்கள் மூலம் அம்முவின் நகைகளை ஆதி அவனிடமிருந்து பறித்துச் சென்றதையும் வினோத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குணா. அதுவே அவனது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. தனக்கும் இதே நிலை வரலாம் என உண்மையிலேயே பயந்துதான் போனான் கோபால்.
தங்கவேலுவின் அடியாட்களின் படையையே இறக்கியும் மல்லியை நெருங்ககூட முடியல்லை வினோத்தால்.…


