32. மல்லி உணர்ந்த உண்மை!
மல்லி பார்க்கவேண்டும் என்று கேட்ட அந்தக் காணொளி பதிவை ஆதி பத்திரப்படுத்தி வைத்திருக்கவில்லை. அன்று ஒரு முறை அதைப் பார்த்ததுடன் சரி.
அந்த கைப்பேசியை அதன்பின் அவன் தொடக்கூட இல்லை. சரவணனிடம் சொல்லி அந்த சிம்கார்டை மட்டும் வாங்கிக்கொண்டவன் அந்த கைப்பேசியை அழித்துவிடச் சொல்லிவிட்டான்.
“இல்ல மல்லி, அந்த வீடியோ இப்ப இல்ல. அப்பவே அத அந்த செல்போனோட சேர்த்து டிஸ்போஸ் பண்ணச் சொல்லி சரவணன் கிட்ட சொல்லிட்டேன்” என்றான் ஆதி.
ஏமாற்றமாய் இருந்தது மல்லிக்கு. “ப்சு… அம்மு நிச்சயமா எனக்காக ஏதாவது கிளுவ விட்டுட்டு போயிருப்பான்னு தோனுது. அத ஒரே ஒரு தடவ பார்த்தா கூட போதும். நான் கண்டுபிடிச்சிருப்பேன். இப்படி ஆயிடுச்சே” என்றவளின் முகம் பிரகாசமானது.
“சரவணன் ஒருவேளை அந்த வீடியோவ டெலீட் பண்ணாம பத்திரமா வெச்சிருந்தான்னா? அவங்கிட்ட எதுக்கும் கேட்டுப்பார்க்கலாமா? என்றாள் மல்லி, நம்பிக்கை துளிர்க்க.
“ஸ்டாப் இட் மல்லி, அத உன்னால முழுசா ஒரு தடவக் கூட பார்க்க முடியாது. தேவையில்லாத வேல. நான் தான் இப்ப உண்மையை உணர்ந்துட்டேனே! பார்த்துக்கலாம் விடு” என்றான் ஆதி கண்டிப்புடன்.


