2. மயக்கம்
தூக்கம் தடைப்பட்டதின் எரிச்சல் அவனது குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. மல்லியோ அதை உணரும் நிலையிலெல்லாம் இல்லாமல், “அம்முகிட்ட பேசணும்!” என்று சொல்ல, “என்ன, அம்முவா!?” என்றவனின் தூக்கமெல்லாம் பறந்திருந்தது.
“ப்ளீஸ்! போனை அம்முகிட்ட குடுங்க!” மறுபடியும் அவள் இதையே சொல்ல,
எதிர் முனையில் பேசியவனோ அடக்கப்பட்ட கோபத்துடன், “ஏய்ய்ய்ய் யார் நீ? இப்பப்போய் அம்முவை கேக்கற?” என்று உறுமினான்.
மறுபடியும் அவள், “அம்மு எங்க இருக்கா?” என்று கேட்கவும், கோபத்தின் எல்லைக்கே சென்றவன், “ஏய் நீ எங்கிருந்து பேசற?” என்று அடிக்குரலில் சீறினான்.
அதில், அழுகின்ற நிலைக்கே போனவள், “அம்மு எங்கடி இருக்க?” என்றவாறே போனை கட் செய்துவிட்டு, அப்படியே தூங்கியும் போனாள்.
அடுத்த நாள் காலை, தான் செய்துவைத்திருந்த குளறுபடிகள் எதுவுமே நினைவில் இன்றி, வழக்கம் போல் எழுந்தவள் குளித்து, தயாராகி, தனக்கும் தம்பிக்குமான உணவையும் தயாரித்தாள்.


