1. அம்மு எங்கே?
மனம் விரும்பிச்செய்யும் எந்தச் செயலும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கும்.
அப்படித்தான் தன் விருப்பப்படி, பி.எஸ்.ஸி டெக்ஸ்டைல் அன்ட் ஃபேஷன் டிசைனிங் முடித்து உலக அளவில் கொடிகட்டிப் பறக்கும் ஆதி டெக்ஸ்டைல் நிறுவனத்தின் டிசைனிங் பிரிவில் வேலைக் கிடைத்து சம்பளத்துடன் கூடிய ஆறு மாத பயிற்சியில் இருக்கிறாள் நமது நாயகி மல்லி என்கிற மரகதவல்லி.
இருபத்திரண்டு வயதில், அழகிய கொடிபோன்ற தோற்றத்தில், மா நிறத்தில், துறுதுறு விழிகளுடன் ஒருமுறை பார்த்தால் மறுமுறை பார்க்கத்தூண்டும் அழகி அவள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பூவரசந்தாங்கல் எனும் சிறிய கிராமம் அவர்களுடையது.
அம்மா பரிமளா, அப்பா ஜகன்நாதன், செல்லத் தம்பி தீபன். ஜகன் ஒரு கைத்தறி பட்டு நெசவாளி. சிறிய அளவில் விவசாயமும் செய்து வந்தார்.
பெரிய அளவில் வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தேவைக்கு வருமானமும், நிறைவான எளியக் கிராமத்து வாழ்க்கையுமாகச் சென்றது அவர்களுடைய நாட்கள்.


