top of page

நாயின் பின்னால் ஒரு நாள்.



நாயின் பின்னால் ஒரு நாள்.


அதிகாலை எழுந்து பால் காய்ச்ச அடுக்களைக்குள் நுழைந்த ஸ்வேதா அடுப்பைப் பற்ற வைப்பதற்கு முன் ஜன்னலைத் திறக்க, காற்றில் கலந்து அந்தத் துர்நாற்றம் அவளது முகத்தில் மோதி வயிற்றைப் புரட்டியது.


‘ஐயோ எலியோ எதோ கார் ஷெட்டில் செத்துப் போயிருக்கும் போல இருக்கே’ என்று எண்ணியவள் கார் ஷெட்டின் விளக்கைப் போட்டுவிட்டு அங்கே சென்று பார்க்க, அங்கே இருந்த தார் பாயில் அலங்கோலமாகப் படுத்திருந்தது ஒரு தெரு நாய். அதன் மேல்தான் அப்படி ஒரு நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.


முந்தைய தினம் மலையில் அந்த நாயை தெருவில் பார்த்தது அவளது நினைவில் வந்தது.


அதன் கழுத்து பகுதியில் எதோ காயம் பட்டு அதன் எலும்பு வெளியில் தெரியும் அளவிற்குப் புரையோடிப்போய் அதிலிருந்து ரத்தமும் சீழுமாக கசிந்துகொண்டிருந்து.


தெருவில் இருக்கும் மற்ற நாய்களெல்லாம் அதை விரட்ட அவர்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைய முற்பட்ட அந்த நாயை அவர்களுடைய வீட்டின் காவலாளி விரட்டிக்கொண்டிருந்தார்.


"மாணிக்கம் அது பாட்டுக்கு ஒரு மூலைல படுத்துக்கட்டும் விட்டுடுங்க" என்று ஸ்வேதா சொல்ல,


"இல்லமா சார் திட்டுவாரு!" என்று மாணிக்கம் தயங்கவும்,


"பரவாயில்ல நான்தான் சொன்னேன்னு உங்க சார்கிட்ட சொல்லிடுங்க" என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கியவள் அதைப்பற்றி மறந்தே போனாள்.


அதை நினைத்துக்கொண்டே வீட்டிற்குள் வந்தவள் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மாமனாரிடம் அதைப் பற்றி சொல்லிவிட்டு, "பாவமா இருக்குப்பா எதாவது பண்ணனும்" என்று சொல்ல, அவர் அந்த நாயைப் பார்க்கவென அங்கிருந்து சென்றார்.


அதன் பின் வீட்டு வேலைகளில் மூழ்கியவள் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றதும் தனது கைப்பேசியில் விலங்குகளைப் பராமரிக்கும் ஒரு தோண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தைச் சொல்ல, அவர்கள் இருப்பது சென்னையின் புறநகர் பகுதி என்பதால் அவர்களுடைய மீட்பு வாகனம் அங்கே வரத் தாமதம் ஆகும் எனவும் அதுவரை அந்த நாய் எங்கேயும் போகாமல் பார்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.


அதன் பிறகுதான் சோதனை ஆரம்பித்தது.


அவள் கிண்ணத்தில் வைத்த பாலைக்கூட அந்த நாயினால் சாப்பிட இயலவில்லை.


வலியில் துடித்துக் கொண்டிருந்த போதும் அந்த நாய் ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்துகொண்டே இருந்தது. அந்தத் தொண்டு நிறுவன வாகனமும் வந்த பாடில்லை.


கையில் குச்சியுடன்(மற்ற தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க) அன்று முழுதும் அதைக் கண்காணிப்பதே வேலையாகிப்போனது ஸ்வேதாவிற்கு.


அவளுக்கு வேலை இருப்பின் அவளது மாமனார் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


காத்திருந்து காத்திருந்து இரவு ஒன்பது மணி ஆனது.


பிள்ளைகளெல்லாம் உறங்கிவிட அவளைக் கிண்டல் செய்து ஓட்டி எடுத்தார் அவளுடைய கணவர்.


"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்று அதை எடுத்துக்கொண்டாள் ஸ்வேதா.


ஒன்பது மணிக்குப் பிறகு அந்தத் தொண்டு நிறுவன (ஆம்புலன்ஸ்) வாகன ஓட்டுநர் கைப்பேசியில் அழைத்து அங்கே வருவதாகவும் அவர்கள் ஏரியாவிற்கு வர வழியையும் கேட்டுக்கொண்டார்.