top of page

நான் அவளில்லை - 63 & 64 (Final Episodes)

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan

63


தூய்மையான காதல்


வள்ளி பரபரப்பாய் மகிழ் வேலைக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை எல்லாம் மேற்கொண்டிருந்தார். அந்தச் சமயம் மகிழோ படாதபாடுபட்டு அழுது கொண்டிருக்கும் தன் ஒன்றரை வயது மகள் சாக்ஷியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.


மகிழ் அவனுக்குப் பெண் குழந்தை பிறந்த உடனேயே முடிவெடுத்துவிட்டான். அவளுக்குச் சாக்ஷி என்று பெயரிட வேண்டுமென்று. மாயாவும் அதே எண்ணத்தைதான் கொண்டிருந்தாள். ஆனால் ஜென்னி அதற்குப் பிடிவாதமாய் மறப்பு தெரிவித்தாள்.


தான் சாக்ஷியாய் பட்ட துன்பங்களை வேறெந்த பெண்ணும் இம்மியளவும் பெறக் கூடாதே என்ற எண்ணம்தான். ஆனால் மாயா மகிழ் இருவரும் தங்கள் மகளுக்குப் பிடிவாதமாய் சாக்ஷி என்ற பெயரையே சூட்டிவிட்டனர். மகிழ் தன் மகளைக் கரத்தில் ஏந்திக் கொண்டு,


"ஏன் அழறீங்க... இதோ பாட்டி... பால் கலக்கி எடுத்துட்டு வந்திருவாங்க... அழக்கூடாது" என்றவன் அவளை அமைதியடையச் செய்ய முயன்று முடியாமல் அவதியுற்றிருந்தான். யார் எத்தனை பொறுப்பாக பார்த்துக் கொண்டாலும் குழந்தைகளுக்கு அம்மாதானே முதல் முக்கியத் தேவை. ஆனால் என்ன செய்வது?  மாயா ஓரிசாவில் உள்ள சில பார்வையற்ற குழந்தைகளுக்கு தன் நிறுவனம் மூலமாக பார்வை கிடைப்பதற்கு வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்ய சென்றிருக்கிறாள்.


அவள் ஏற்படுத்திய சாக்ஷி சைட் சேவர் ஆர்கனைசேஷன் இந்தியா முழுக்க தம் புகழைப் பரப்பியதில்லாமல் பலரின் பாராட்டுதல்களையும் உதவித் தொகைகளையும் அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. அவள் ஆசைப்பட்டதும் அதானே.


அவளின் உதவி பலருக்கும் தேவைப்படும் போது குழந்தையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை மகிழ் ஏற்றுக் கொண்டான். இன்று தாயின் அருகாமையை அவன் மகள் தொலைத்திருந்தாலும் ஒரு நாள் தன் தாயைக் கண்டு பெருமிதம் கொள்வாள் அல்லவா. தன் தாயைப் போல அவளும் பலருக்கும் உதவிகள் புரிவாள். அதற்காக இந்த சிற்சில பிரிவுகள் ஒன்றும் பெரிய விஷயமல்ல.


மகிழ் அலுவலகத்திற்குப் புறப்பட தயாராகி நின்றவன் தன் மகளிடம்,


"சாக்ஷி செல்லம்... அப்பா ஆபிஸ் போயிட்டு வர வரைக்கும் நீங்க பாட்டியை தொந்தரவு செய்யாம பார்த்துக்கணும்" என்றான்.


அதன் பிறகு மகளை தன் தாயிடம் விட்டுப் புறப்பட்டவன், "அவார்ட் பங்ஷன் வொர்க்லாம் போயிட்டிருக்கு... ஸோ நைட் வர மாட்டேன் மா... கொஞ்சம் நீங்களும் அப்பாவும் சமாளிச்சுக்கங்க" என்றதும்


அவரும், "சரி ப்பா... நீ பார்த்து போ" என்று வழியனுப்பினர்.


அவன் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கைப்பேசியில் தன் மனைவியின் அழைப்பைப் பார்த்து ஆனந்தம் பொங்க அழைப்பை ஏற்றவன்,


"எப்படி இருக்கீங்க மகிழ்? பாப்பா எப்படி இருக்கா?" என்றவள் வினவ,


"நீ இல்லாம நாங்க இரண்டு பேரும் ரொம்ப கஷ்டபடுறோம் டி.. எப்போதான்  வருவ?!" என்றவன் தவிப்போடு கேட்க,


"வேலை முடிஞ்சாலும் முடியல்லன்னாலும் நான் நாளைக்கு ஈவனிங் சென்னையில இருப்பேன்... சாக்ஷி மேடையில ஏறி அவார்ட் வாங்கறதைப் பார்க்கணும்" என்க, அவன் கோபமாக,


"அப்ப கூட உன் ஃப்ரெண்ட் அவார்ட் வாங்கறது பார்க்கத்தான் வருவ...  எங்களைப் பார்க்க இல்ல" என்று ஏக்கமாய் கேட்டான்.


"உங்களைப் பார்க்காம எப்படி? அதையும் பார்க்கதானே வர்றேன்...  அந்த கோ காம்பயர் பிரியா கிட்ட நீங்க எப்படி பேசப் போறீங்கன்னு" எனறாள்.


"அம்மா தாயே... நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல... நாங்க ஜஸ்ட் ப்ரொக்ரம்காகதான் அப்படிப் பேசிக்கிறோம் ?"


"அப்படி ஒண்ணும் தெரியலயே"


"பேசாம இந்த வேலையை விட்டுர்றேன்... அப்பையாச்சும் நீ நிம்மதியா இருப்ப"


"ஆமாம் எங்க போனாலும் உங்க பின்னாடி சுத்தவே ஒரு கூட்டம் இருக்கே" என்று பொருமியவளுக்கு அவன் என்ன சமாதானம் உரைப்பான்.


அவன் எங்கே சென்றாலும் அவனை ஒரு பத்து பெண்கள் ரசிகை என்ற பெயரில் சூழ்ந்து கொள்ள, அதைப் பார்ப்பவளுக்கு கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.


எங்கு இருந்தாலும் அவன் தன்னவனாக மட்டுமே இருக்க வேண்டுமே என்ற உரிமை. அதை அவனாலும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆதலாலேயே அவன் திறமையைக் கண்டு நடிக்கப் படவாய்ப்புகள் வரும் போது கூட அவற்றைத் தவிர்த்துவிட்டான்.


நடிப்பாகவே இருந்தாலும் காதல் காட்சிகளில் வேறு பொண்ணோடு அவன் இருப்பதைக் கூட மாயாவால் தாங்கிக் கொள்ள முடியாது. இருவரும் சில நொடிகள் மௌனம் காத்திட


மாயா அவனிடம், "ஸாரி மகிழ்... ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்டேனா? ஐ லவ் யூ ஸோ மச்... அதான்" என்க,


அவனும் அவள் குரலில் இழைந்த காதலை உணர்ந்தவனாய், "ஐ லவ் யூ டி... அன்ட் ஐம் மிஸ்ஸிங் யூ டெரிப்ளி" என்றதும் அவள் முகம் பளீரென்று அத்தனை பிரகாசமாய் மாறியது. அதை அவன் பார்த்திராவிட்டாலும் அவள் மௌனத்தின் மூலமாகவே அதனை உணர்ந்து கொண்டான்.


****


சையத் வீட்டில் ஓரே ஆர்ப்பாட்டமாய் இருந்தது. விருது வழங்கும் விழாவிற்குப் போக, அஃப்சானா ஆஷிக் இருவருமே எந்த உடையை அணிந்து கொள்வதென்று குழப்பத்தில் இருந்தனர்.அங்கே இத்தனை ரணகளம் நடந்து கொண்டிருந்தாலும் சையத்தின் குழந்தைகள் உறங்கிக் கொண்டிருந்தன. அவன் குடும்ப வம்சாவெளி இரட்டைப் பிள்ளைகளாக பிறந்திருந்தது. இரண்டுமே ஆண் குழந்தைகள்.


ஒருவனுக்கு கரீம் என்று தன் தந்தை பெயரை சூட்டியவன் இன்னொருவனுக்குச் சிவா என்று மதுவின் தந்தை பெயரைச் சூட்டியிருந்தான். தன் குழந்தைகளை ஏக்கமாய் பார்த்திருந்தவனுக்கு பூரிப்போடு சேர்த்து வருத்தமும் கூட.


அவன் ஜென்னியை வைத்து எடுத்த ‘ரௌத்திரம் பழகு’ என்ற படம் அமோக வெற்றி. யாருமே எதிர்பாராத அளவுக்கு வசூலை அள்ளியது. பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்க, அவனை வாய்ப்புகள் விரும்பித் தேடிவந்தன.


அவன் இயக்கத்தில் நடிக்கப் பல நாயகர்கள் முன்னே வந்து நிற்க, மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கென்ற தனித்துவமான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுவிட்டான் சையத். அதே நேரம் தன் குழந்தைகளோடு இருந்து விளையாடி நேரம் கழிக்க முடியவில்லையே என்ற லேசான நெருடல். அதுவும் இரட்டைக் குழந்தைகள் எனும் போது அவனுக்கு வார்த்தைகளால் விவரித்திட முடியாத சந்தோஷம்.


சையத் ஆவலாக, "எப்போ மது இவங்க இரண்டு பேரும் எழுந்திருப்பாங்க?" என்று கேட்க,


"அய்யோ... எழுப்பி விட்டுறாதீங்க... இரண்டு பேரும் ஒண்ணா தூங்குறதே பெரிய விஷயம்" என்றவள் உரைக்க ஏக்கமாய் பெருமூச்செறிந்தவன்


தன் மனைவியின் புறம் திரும்பி அவள் கன்னங்களை ஆசையாய் தழுவி, "பசங்க உனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்குறாங்களா மத?" என்று கவலை தோய்ந்த முகத்தோடு கேட்டான்.


"இந்த மாதிரி கஷ்டங்கள் கூட சந்தோஷம்தான்" என்றவள் சொல்ல நெகிழ்ந்தபடி அவளை அணைத்துக் கொண்டவன்,


"நீயும் அவார்ட் ஃபஃங்ஷனுக்கு வந்தா நல்லா இருந்திருக்கும்" என்றதுமே,


அவள் புன்முறுவலோடு, "பரவாயில்லைங்க நான் டீவில பார்த்துப்பேன்... அதுவும் இல்லாம இதோடவா முடிஞ்சிட போகுது... உங்க திறமைக்கு இன்னும் நிறைய நிறைய அவார்ட் கிடைக்கும்... அந்த ஃபங்க்ஷனுக்கெல்லாம் நான் மிஸ் பண்ணாம வந்து பார்ப்பேன்" என்றவள் நம்பிக்கையாக உரைக்க அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டு கண்ணீர் பெருக்கினான்.


வாழ்க்கையில் வரும் இன்பம் துன்பங்களை ஒன்றாய் கை கோர்த்தபடி கடப்பதுதான் உண்மையான கணவன் மனைவி உறவு. அத்தகைய தம்பதிகளாக சையத்துக் மதுவும் இருந்தனர்.


**


ஜென்னி வீட்டிலும் விருதும் வழுங்கும் விழாவைப் பற்றிய கவலைதான். ஜென்னியின் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அந்த விழாவிற்கு செல்வதற்கான மூன்று ரக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு வந்துவிட்டன. அவளுக்கு எதை அணிந்து கொள்வதென்ற குழப்பம்தான். மூன்றுமே வெவ்வேறு விதத்தில் அழகுதான்.


குழப்பமுற்றவள், "இது மூணுத்தில எது நல்லா இருக்கு ரூப்ஸ்" என்று ரூபாவிடம் வினவ,


"நீங்க எது போட்டாலும் ரொம்ப அழகா இருக்கும் மேடம்" என்றாள்.


"அழகுங்கிறது வேற... யாரை மாதிரியும் இல்லாம நாம யூனிக்கா இருக்கிறதுதான் முக்கியம்" என்றவள் சொல்ல ரூபாவிற்கு விளங்கவில்லை, மூன்றில் எதைத் தேர்ந்தெடுப்பதன்று.


இந்தக் குழப்பம் நீடித்திருக்க, டேவிடிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும் என்று அவன் வருகைக்காகக் காத்திருந்தாள்.டேவிட் வீட்டிற்கு வந்தடைந்தான்.


அவன் உடையெல்லாம் மாற்றிக் கொண்டு தன் அலுவலக வேலைகளைப் பார்க்க எத்தனிக்க ஜென்னி அவனை நிறுத்தி,


"வேலையெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் இங்க வாங்க" என்றழைக்க, அவனும் அவளோடு சென்றான்.


அங்கே வைத்திருந்த ஆடைகளைக் காண்பித்தவள், "மூணுத்தில எதை நான் அவார்ட் ஃபங்க்ஷனுக்கு  போட்டுக்கட்டும் டேவிட்" என்று வினவினாள். அவளை ஒரு முறை பார்த்தவன் மூன்று ஆடைகளையும் ஆழ்ந்து பார்த்துவிட்டு, சில நொடிகள் யோசித்தான்.


பின்னர் ஒரு ஊதா நிற லாங் கவுனை கையில் எடுத்து, "இந்த வைலட் டிரஸ்" என்றான் பளிச்சென்று.


"என்ன நீங்க? பட்டுன்னு செலக்ட் பண்ணிட்டீங்க... நான் ரொம்ப குழம்பிகிட்டிருந்தேன்" என்றாள்.


அவன் அவள் தோள்மீது தன் கரங்களை மாலையாய் கோர்த்தவன், "என் வொய்ஃப்க்கு எது பெஸ்ட்டா இருக்கும்னு எனக்கு தெரியாதா?! அன்ட் மோரோவர் அந்த டிரஸ் ரொம்ப யூனிக்கா இருக்கு" என்றான்.


அவள் அவனை அதிசயத்துப் பார்த்தாள். தான் மனதில் எண்ணுவதைச் சொல்வதற்கு முன்னாடியே அதைச் செய்து முடிப்பதில் அவனுக்கு நிகர் அவன்தான். வியப்பாய் அவனை அவள் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மெல்ல அவளை நெருங்கி வந்திருந்தான்.


"விடுங்க டேவிட்" என்று அவன் கரத்தை அவள் தட்டிவிட,


அவன் மீண்டும் அவளை நெருங்கியபடி, "அவார்ட் ஃபங்க்ஷன் வொர்கெல்லாம்... மண்டையை பிளக்குது... என்னோட ஒரே ரிலாக்சேஷனே நீதானே ஜென்னி" என்றவன் சொல்ல,


"ஆஹான்" என்றவள் குறும்பாய் புன்னகைத்து விலகிப் போனவள்,


அந்த ஆடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அதோடு கப்போர்ட் கதவைத் திறந்து அவள் அணிந்து கொள்ளும் உடைக்குப் பொருத்தமாய் அவனுக்கான உடையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்க,


அவன் பின்னோடு வந்து அவளை அணைத்துக்  கொண்டவன், "இப்ப என்ன பண்ணிட்டிருக்க... அதான் டிரெஸ் சூஸ் பண்ணியாச்சு இல்ல" என்றான்.


"என் டிரெஸ்ஸுக்கு  மேட்சிங்கா... உங்களுக்கு ஒண்ணு சூஸ் பண்றேன்" என்று ஆர்வமாய் அவன் ஆடைகளை அலசி ஆராய்ந்து கொண்டிருக்க,


"நான் என்ன முன்னாடியே நிற்க போறேன்... பேக் ஸ்டேஜ்ல இருப்பேன்" என்று அவன் சொல்ல,


"அதெல்லாம் எனக்குத் தெரியாது... எனக்கு மேட்சா நீங்க போடணும்" என்றவள் உரைத்துக் கொண்டிருக்கும் போதே அவளின் கழுத்து புறத்தில் சீண்டல்களை அவன் ஆர்வமாய் மேற்கொண்டிருந்தான்.


"என்னை விட்டுட்டு அந்தாண்ட போறீங்களா?" என்று அலுத்துக் கொண்டவள் அவன் ஷர்ட்களின் கீழ் இருந்து ஊதா நிற ஷர்ட்டை கையில் எடுத்து, "இது நல்லா இருக்கு இல்ல" என்று அவனிடம் காண்பிக்க அவன் அதனைப் பாராமல்,


"ஹ்ம்ம்... நீ செல்க்ட் பண்ணா ஒகே" என்றவன் அவளின் முதுகு புறத்தில் தன் சரசங்களை புரிவதில் மும்முரமாயிருந்தான்.


"அய்யோ டேவிட்" என்று அவனைத் தள்ளி நிறுத்தியவள்,


"டிரெஸை பார்த்துட்டு ஒகே சொல்லுங்க" என்றாள்.


அவனும் மேம்போக்காய் அதனை நிமிர்ந்து பார்த்துவிட்டு, "ஒகே ஒகே" என்றவன் அவளைத் தன்னருகில் இழுத்த போதுதான் அவள் கரத்திலிருந்த ஷர்ட்டை உற்று கவனித்தான்.


சட்டென்று அந்த ஷர்ட்டை அவள் கையில் இருந்து பறித்துக் கொண்டு, "எதுக்கு இந்த ஷர்ட்டை எடுத்த?" என்று கேட்டவனின் முகம் இறுகியிருக்க, அவளோ புரியாமல் பார்த்தாள்.


அவசரமாய் அந்த ஷர்ட் இருந்த இடத்திலேயே அவன் மீண்டும் நுழைக்க, "ஏன் அந்த ஷர்ட்டுக்கு என்ன?  நல்லாதானே இருக்கு" என்று யோசனைகுறியோடு கேட்டாள் ஜென்னி.


"அந்த ஷர்ட் வேண்டாம்... நீ வேறெதாவது சூஸ் பண்ணு" என்றவன் சொல்ல, அவள் சிந்தித்துவிட்டு அவனை இறுக்கமான பார்வையோடு நோக்கினாள்.


"அந்த ஷர்ட் உங்களோடதுதானே... அதை போட்டா என்ன?" என்று கேட்க கோபமானவன், "வேண்டாம்னு சொல்றேன் இல்ல" என்று அழுத்தமாய் உரைத்தான்.


"ஏன்?"


"ப்ச் அதைப் பத்தி விடு" என்று அவன் அந்தப் பேச்சை நிறுத்த முற்பட்டான். ஆனால் அவள் மனம் அதைக் குறித்தே சிந்தித்தது. அவன் அத்தனை அழுத்தமாய் வேண்டாமென சொல்கிறான் எனில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டிருந்தவள் மௌனமாய் நின்றிருக்க,


டேவிட் அவள் அருகாமையில் வந்து அவள் கன்னத்தை வருடியவன், "சரி வா... டின்னர் சாப்பிட போலாம்" என்றழைக்க, அவள் அவனை யோசனையோடு பார்த்து,


"ஏன் டேவிட்? ஒரு தடவை நீங்க லண்டன் கிளம்பின போது இந்த ஷர்ட்டை கையில வைச்சு ஃபீல் பண்ணிட்டிருந்தீங்க... நானும் பார்த்தேனே... அப்படின்னா இந்த ஷர்ட் ஏதாச்சும் ரொம்ப ஸ்பெஷல?"  என்றவள் கேட்க அவனுக்கு டென்ஷனானது.


அவளை நிராகரித்தபடி திரும்பியவன், "அந்த ஷர்ட் பத்தி நீ பேசறதை இத்தோடு நிறுத்துறியா?" என்றவன் கோபமாக சற்றுக் குரலை உயர்த்திச் சொல்ல ஆச்சரியப்பட்டு போனாள். அவன் இப்படியெல்லாம் கோபப்படவே மாட்டானே என்று எண்ணியவளுக்கு இன்னும் அந்த சட்டையைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடியது.


அவனை ஏறிட்டவள், "எனக்கு தெரியக் கூடாதளவுக்கு அவ்வளவு பெர்ஸன்லா?" என்றவள் கேட்கவும்,


"என்ன பேசுற ஜென்னி? உனக்கு தெரியாத பெர்ஸ்னல்னு எனக்கு என்ன இருக்கு" என்றான்.


"அப்போ சொல்லுங்க ... நான் தெரிஞ்சுக்கணும்"


"இட்ஸ் நத்திங் இம்பார்டன்ட்" என்றவன் சொல்லி சமாளிக்க,


"இது பொய்" என்றாள் தீர்க்கமாக!


அவன் சில நொடிகள் தவிப்புற்று பின்னர் அவளை நிமிர்ந்து நோக்கியவன், "கண்டிப்பா அந்த ஷர்ட்டை பத்தி நீ தெரிஞ்சிக்கிட்டே ஆகணுமா?" என்றவன் கேட்க,


"ஆமாம் தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்... எனக்குத் தெரியாம என் டேவிடுக்கு அப்படியென்ன பெர்ஸ்னல்னு நான் தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்" என்று சொல்லி அவனைக் கூர்ந்து பார்த்தாள்.


மூச்சைப் பலமாய் இழுத்துவிட்டவன், யோசனையோடு தன் படுக்கை மீது அமர்ந்து கொண்டு சமிஞ்சையால் அவளையும் அருகில் அழைத்து அமர்த்தினான். புரியாமல் அவனின் தவிப்பான முகத்தை அவள் பார்த்தபடி,


"சொல்லுங்க டேவிட்" என்க, அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன், "சொல்றேன்... ஆனா நீ அப்செட் ஆக கூடாது" என்றான்.


"நான் ஏன் அப்செட் ஆக போறேன்" என்றவள் புன்னகைக்க,


அவன் தன் முகத்தைத் துடைத்தபடி, "அது" என்றவன் தடுமாறியபடி அவள் கரத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டான். அப்படியென்ன அவன் சொல்லப் போகிறான் என்று ஆவல் ததும்பிய பார்வையோடு அவனை அவள் நோக்க,


"அது வந்து ஜென்னி... நான் உன்னை ஆக்சிடென்ட் பண்ணேன் இல்ல" என்று ஆரம்பிக்க, "அதுக்கும் இதுக்கும்" என்று ஏதோ கேட்க வந்தவளை கையமர்த்தினான்.


"கொஞ்சம் பொறுமையா கேளு" என்றவன் மேலே தொடர அவள் முகம் குழப்பமாய் மாறியது.


"நீ என் கார்ல இடிச்சு கீழே விழுந்த போது" அவன் நிறுத்தி அவள் முகத்தைப் பார்த்து, "உன் டிரெஸ்ஸெல்லாம் கலைஞ்சு" என்றவன் சொல்ல முடியாமல் நிறுத்த, அவள் விழிகள் பெரிதாக விரிந்தன.


அவன் அவஸ்தையோடு விழிகள் கலங்க, "உன்னை நான் அன்னைக்குப் பார்த்த கோலத்தை நான் எப்படி சொல்வேன்" என்க, அவள் தன் தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.


அவன் தன் விழிகளைத் துடைத்தபடி, "அப்போதான் அந்த ஷர்ட்டை உனக்கு போட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனேன்" என்றவன் ஒருவாறு சொல்லி முடித்துவிட்டு பெருமூச்செறிய, அவர்களுக்கு இடையில் ஓர் நீண்ட மௌனம் சஞ்சரித்தது.


டேவிட் பொறுமையிழந்து ஜென்னியின் தலையை நிமிர்த்த அவள் விழிகளில் கண்ணீர் பிரவாகமாய் பெருக்கெடுத்திருந்தது. அந்த நொடியே அவன் மார்பின் மீது முகம் புதைத்துக் கொண்டவள் தன் மௌனத்தைக் கலைத்து,


"என்னை அந்த நிலைமையில பார்த்த பிறகும்... எப்படி டேவிட் உங்களால?" என்றவள் சொல்லி வார்த்தைகளை கோர்க்க முடியாமல் விசும்பவும் அவன் அதிர்ந்தான்.


உடனடியாக அவள் முகத்தை நிமிர்த்திப்  பிடித்தவன், "என்ன சொல்லிட்ட ஜென்னி நீ... வர்ஜின்ட்டிங்கிறது... உடல் சம்பந்தபட்டதில்ல... உணர்வுகள் சம்பந்தபட்டது... மனசு சம்பந்தபட்டது...  என் காதல்  உன் மனசு பார்த்து கேரக்டரைப் பார்த்து வந்தது... மோரோவர் நீ என் வாழ்க்கையை மாத்தினவ ஜென்னி... தனிச்சு கிடந்தவனுக்கு புது உலகத்தை காட்டினவ... உன்னைத் தவிர என் வாழ்க்கையை யாரும் முழுமையடைய செய்ய முடியாது...யூ ஆர் தி பெஸ்ட்... யூ ஆர் மை ஒன் அல் ஒன்லி லவ்" என்றவன் உணர்ச்சி பூர்வமாய் தன் காதலை சொல்லிக் கொண்டிருக்க,


அவள் கண்ணீர் உறைந்து போயிருந்தது. அவனின் தூய்மையான காதலிற்கும் அன்பிற்கும்  பதிலுரை சொல்ல எந்த மொழியில் தேடினாலும் அவளுக்கு நிச்சயம் வார்த்தைகள் கிடைக்க பெறாது.


ஆனால் சொல்லியாக வேண்டுமே.. அந்தக் கணத்தில் ஜென்னி தன்னவனின்  இதழ்களுக்கு அருகில் சென்று தன் இதழ்களைக் கொடுத்தவள், உணர்வுப்பூர்வமாய் அவள் சொல்ல எண்ணியவற்றை எல்லாம்  பரிமாறிக் கொண்டுவிட்டாள்.


ஒரு பெண்ணின் அங்கங்களைத் தீண்டி உறவு கொள்வதல்ல தாம்பத்தியம். அது உடலைக் கடந்த உணர்வு ரீதியான பரிமாற்றமாக நிகழ வேண்டும். அத்தகைய பரிமாற்றம் அப்போது அவர்களுக்கு இடையில்


சத்தமில்லாமல் நிகழ, இரு உயிரும் ஓர் உயிராய் கலந்துவிட்டிருந்தது.


**************************

64


நிமிர்வு


ஜே சேனலின் விருது வழங்கும் விழா எப்போதும் போல் பிரமிப்புடனும் பரபரப்புடனும் தொடங்கியது. நட்சத்திரங்களின் படையெடுப்புகள். இம்முறை அவர்களுடன் ஜெனித்தா...


ஊதா நிற கவுனில் பார்த்துப் பார்த்து வடித்த சிற்பமாய் நுழைந்தாள். வானில் முளைத்த  விடிவெள்ளி போல… அவள் மட்டும் தனித்துவமாய் மின்னியபடி!


மாயா அவளுடன் உள்நுழைய, ஜென்னியின் பார்வை அனிச்சையாய் தன்னவனைத் தேடியது.  அவளுக்குத் தெரியும். அவன் வெளியே அரங்கத்தில் இருக்க மாட்டான் என்று. இருப்பினும் எங்கேயாவது அவன் தென்பட்டு விடமாட்டானா?! அவனைப் பார்த்துவிட மாட்டோமா என்ற தாபத்தோடு தேடினாள். அவன் தேர்ந்தெடுத்த உடையல்லவா?!


அவன் தன்னை அந்த ஆடையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு. சரியாய் அந்தச் சமயம் அவளின் கைப்பேசியில் அவன் அழைப்பு..


தன் மனதின் எண்ணத்தை எங்கிருந்தாலும் அவனால் மட்டுமே படித்துவிட முடியும் என்ற அதிசயித்தபடி அவள் அதனை ஏற்க, எடுத்த மறுநொடியே டேவிட் அவளைப் பேசவிடாமல்,


"யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் டுடே" அவள் நெகிழ்ச்சியில் மௌனமாய் நிற்க,


அவன் மேலும், "எக்ஸேக்ட்டா சொல்லனும்னா அழகு தேவதை நீ" என்றவன் ஆழ்ந்து வர்ணித்துக் கொண்டிருக்க,


அவளுக்குத் தேகமெல்லாம் சிலிர்த்துக் கொண்டது. அவள் விழிகள் அவனை ஆவலோடு தேடியபடி, "எங்கே இருக்கீங்க டேவிட்?" என்று வினவ,


"நான் எங்கே இருந்தாலும் உன்னை பார்த்துக்கிட்டே இருப்பேன்... மை டியர் பெட்டர் ஹாஃவ்" என்றான்.


அவன் சொன்னதைக் கேட்ட நொடி அவள் முகம் மலர்ந்து இதழ்கள் விரிய அவன் மீண்டும்,


"உன் ஸ்மைல் கூட அத்தனை அழகு... இட்ஸ் மெஸ்மரைஸிங் மீ"  என்று அவன் கிசுகிசுத்தக் குரலில் சொல்ல அவள் உணர்வுகள் பொங்கித் திளைக்க,


"டேவிட் இன்னாஃப்... ஃபோனை முதல்ல கட் பண்ணுங்க" என்றாள் தவிப்போடு!


"ஐ கான்ட்... யூ டூ இட்" என்றான் அழுத்தமாக!


அவள் பெருமூச்செறிந்து அழைப்பைத் துண்டித்தவள், அரங்கத்திற்குள் நுழைய டேவிடும் அதே போல் பெருமூச்சுவிட்டு தன்னறையில் இருந்த பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒன்றில் அவளின் வருகையைக் கண்டுகளித்தபடி இருந்தான்.


மாயாவும் ஜென்னியும் இருக்கையில் அமர, இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் போதே மாயாவின் குரல் சுருதி இறங்கியது.


"என்னாச்சு மாயா?!" என்றவள் கேட்டபடியே அவள் பார்த்த திசையில் பார்வையை திருப்ப, அங்கே மகிழும் அவனுடன் ஒரு பெண்  தொகுப்பாளரும் அளவளாவிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள்.


மாயா கோபம் பொங்க, "நான் இத்தனை நாள் கழிச்சு வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்... என்னை வந்து பார்த்து பேசணும்னு தோணுச்சா பார்த்தியாடி அவருக்கு?" என்றாள்.


"எப்படி மாயா முடியும்?  இந்த டென்ஷன்ல" என்று ஜென்னி அவன் நிலையை உரைக்க, "மனசிருந்தா முடியும்" என்றவள் கூர்மையாய் மேடையையே பார்த்திருந்தாள்.


மேடையில் மகிழ் அருகில் நின்றிருந்த ப்ரியா அவனை பார்த்து,


"இன்னைக்கு பார்க்கவே ரொம்ப ஸ்பெஷலா  ஸ்மார்ட்டா தெரியிறீங்களே மகிழ்?!"  என்று மைக்கில் ஒரு போடு போட்டாள்.


மாயாவிற்கு உள்ளூர தீ கொழூந்து விட்டு எரிய, "திஸ் இஸ் டூ மச்" என்றவள் பொறும,


ஜென்னி அவளிடம் ,"ஏ லூசு மாயா... நீ ஒரு வீஜே வோட வொய்ஃப்...  இப்படியெல்லாம் ஸில்லியா திங்க் பண்ணக் கூடாது" என்றவள் சொல்லவும்,


அதற்குள் மேடையில் மகிழ், "நீங்களும்தான் ப்ரியா இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க" என்று சொல்லித் தொலைத்தான்.


மாயாவின் முகம் சிவப்பேற ஜென்னி புன்னகையோடு, 'மகிழ்  நிலைமை கஷ்டம்தான்' என்று எண்ணிக் கொண்டாள். விளையாட்டாய் பேச்சை ஆரம்பித்து இருவரும் வெகுபிரமாதமாய் அந்த விருது வழங்கும் விழாவை தொகுத்துக் கொண்டிருக்க, மாயாவுக்குதான் உள்ளூர புகைந்து கொண்டிருந்தது.


 வரிசையாகப் பலரும் விருதுகளைப் பெற்று கொண்டிருக்க, சையத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. அவன் ஜென்னியை வைத்து எழுதி இயக்கிய ரௌத்திரம் பழகு என்ற படத்திற்கு. அந்தப் படம் அவன் வீழ்ச்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்குத் திருப்பியிருந்தது.


மகிழ் விருது வாங்கி நின்ற சையத்திடம், "என்ன சையத் சார்?... இந்த அவார்ட் இல்லாம...  உங்களுக்கு டபுள் அவார்ட் கிடைச்சிருக்காமே" என்று கிண்டலடித்து சிரிக்க,


அவன் பதில் சொல்லாமல் நெகிழ்ச்சியுற நிற்க, "அதென்ன இரண்டு அவார்ட் மகிழ்" ப்ரியா கேட்டாள்.


"சையத் சாருக்கு ட்வின்ஸ் பிறந்திருக்கு... அதோட இந்த படத்தோட வெற்றி... அதோட வரிசையாய் நிறைய படங்கள் வேற"


"வாவ்... கமான் சையத் சார்... உங்க சந்தோஷத்தை எங்ககிட்டயும் ஷேர் பண்ணிக்கலாமே" என்றாள் ப்ரியா.


சையத் புன்முறுவலோடு,  "எல்லாமே அல்லாவோட அருளாலும் எங்க அம்மா அப்பாவோடு ஆசிகளாலும் என் அன்பான மனைவியாலும்தான்" என்று சொல்லவும் அரங்கம் அதிர கைதட்டல்கள் கேட்டது.


"சொல்ல வேண்டியதை நச்சுன்னு சொல்லிட்டாரு"


"அதுதானே சையத் சாரோட ஸ்டைல்" என்று முடித்தான் மகிழ். இறுதியாய் பெஸ்ட் ஹீரோயின் என்ற கேட்டகிரி வரவும், எல்லோருக்குமே சந்தேகமின்றி தெரியும் அது ஜெனித்தாதான் என்று.


அவள் பெயரை சொல்லப் போகும் தருணத்திற்காக ஆவலாகப் பலரும் எதிர்பார்த்திருக்க, "தி வின்னர் இஸ் கார்ஜியஸ் அன் ப்யூட்டிப்புஃல் லுக்கிங் ஜெனித்தா" என்று அறிவிக்கப்பட்டது.


கைதட்டல் ஒலிகளும் ஆரவாரங்களும் கேட்க ஜென்னி மேடையேறினாள். உள்ளூர பயமும் தயக்கமும் அவளைப் பின்னுக்கு இழுத்தது. அவள் வாழ்க்கையில் கடந்து வந்த சிரமங்கள் தாண்டி இப்போது அவள் கடக்கப் போவதுதான் அத்தனை சிரமத்திற்குரிய விஷயமாய் இருக்கப் போகிறது.


பல பெண்களும் அவளைப் போல் பல சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது மறுக்கப்பட முடியாத நிதர்சனம். ஆனால் அவள் இப்போது செய்யத் துணியும் காரியத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள்.


டேவிடும் அவளின் மனநிலையை அவள் முகத்தை வைத்தே ஆராய்ந்து தெரிந்து கொண்டான். அவள் அருகில் இப்போது துணையாய் நிற்க வேண்டும் என்று அவன் மனமெல்லாம் துடிக்க, ஜென்னி மேடையேறி அவளுக்கான விருதைப் பெற்றாள்.


ப்ரியா புன்னகையோடு, "நீங்க உண்மையிலயே அந்த படத்தில நடிச்சீங்கன்னு சொல்ல முடியாது...ஜென்னி... யூ ஜஸ்ட் லிவ்ட் இட்" என்றாள்.


ஜெனித்தா புன்னகை ததும்ப,"தேங்க் யூ ப்ரியா... ஆனா இந்த புகழுக்கும் பாராட்டுக்கும் உரியவர் இந்த படத்தோட டைரக்டர் ஆஸ் வெல் ஆஸ் மை ஃப்ரெண்ட் சையத்... அவருக்குதான் நான் தேங்க் பண்ணனும்" என்றவள் நிறுத்தி,


"தேங்க்யூ சையத்... இப்படி ஒரு கேரக்டர்ல என்னை நடிக்க வைச்சதுக்கு" என்றாள்.


ஜென்னி தயங்கிய பார்வையோடு, "இங்க இன்னும் நான் சில முக்கியமான விஷயங்களை ஷேர் பண்ணிக்கணும்... பண்ணிக்கலாமா?" என்று கேட்க, "ப்ளீஸ்" என்று ப்ரியா அவளைப் பேசச் சொன்னாள்.


இதயம் படபடக்க ஜென்னி பேச ஆரம்பித்தாள்.


"நான் இன்னைக்கு இங்க இருக்கேன்... ஆனா இதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு எல்லோருமே தெரிஞ்சிக்கணும்னு ஆசைபடறேன்" என்றவள் சொல்ல மகிழும் மாயாவும் அதிர்ச்சியாய் அவளைப் பார்த்தனர்.


ஆனால் டேவிடுக்கு அத்தகைய அதிர்ச்சி இல்லை. அவனிடம் சொன்ன பின்னரே அவள் அந்த காரியத்தை செய்கிறாள். அவனுடைய பயமே அவள் அழுதுவிடாமல் திடமாய் பேச  வேண்டுமென்பதே. ஜென்னி அவள் பார்வையிழந்தவளாய் எதிர்கொண்ட சொல்லவொண்ணாத துயரங்களையும்  விரிவாய் அத்தனை பேர் முன்னிலையிலும் விவரிக்க, அந்த அரங்கமே கனத்த மௌனத்தைச் சுமந்து கொண்டிருந்தது.


அவள் கதையை கேட்ட எல்லோரின் விழிகளிலும்  நீர் துளிர்த்து விழ, அவள் மட்டும் கலங்கவில்லை. மகிழின் முகம் வேதனையில் சிவப்பேறி இருக்க, மாயா தன் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தாள்.


ஜென்னி திடமாக நின்று அவள் தன் வாழ்வில் கடந்து வந்த சோதனைகளை சொல்லி முடித்து விட்டு, "ஏன் நான் இதையெல்லாம் இங்க சொல்றேன்னு எல்லோருக்கும் தோணும்... என்னை மாதிரி பாதிக்கப்பட்ட பெண்கள் முடங்கிப் போயிடக் கூடாது... இனி நமக்கு வாழ்க்கையே இல்லைன்னு தவறான முடிவை நோக்கிப் போயிடவே கூடாது... மனோதிடமா எல்லா பிரச்சனைகளும் கடந்து வந்து அவங்க கஷ்டத்தை ஜெயிச்சு நிற்கணும்”


“அதே போல உடலில் குறை இருக்கிறவங்க அவங்க குறைகளை சுட்டிகாட்டி பேசுறதும் அவங்க பலவீனத்தை நமக்கு சாதகமா பயண்படுத்திக்க நினைக்கிறது... ரொம்ப ரொம்ப தவறான விஷயம்.. இதை நான் வலியோட சொல்றேன்”


“நான் இன்னைக்கு இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன்னா பலரும் எனக்கு உதவியிருந்திருக்காங்க... என் நண்பர்கள் மகிழ் மாயா தியா எனக்கு புது அடையாளத்தைக் கொடுத்த என்னோட பேரண்ட்ஸ் விக்டர் ஜெனிபஃர் அதோட என் மாமனார் தாமஸ்...


லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்...


எனக்கு உயிர் கொடுத்த


எனக்கு விழி கொடுத்த


நண்பனா தோள் கொடுத்த


கணவனா காதல் கொடுத்த


என் வெற்றிக்காக இன்னைக்கு


இந்த மேடையும் கொடுத்திருக்காரு...


மை பெட்டர் ஹாஃவ்... என் லைஃப்ல வந்த ரியல் ஹீரோ... டேவிட்


அவர் இல்லன்னா நான் இல்லை. ஒரு பெண்ணுக்கு அவரை போல ஒரு துணை கிடைச்சுட்டா இந்த வெற்றி எல்லாம் சர்வ சாதாரணம்... என்னோட இந்த அவார்ட்... இந்த வெற்றி இரண்டையும் என்னுடைய ஆருயிர் கணவர் டேவிடுக்காக நான் டெடிக்கேட் பண்றேன்... ஐ லவ் யூ டேவிட்" என்று சொல்லி முடிக்கும் போது அவள் கன்னங்கள் கண்ணீரால் முழுமையாக நனைத்திருந்தன.


மகிழும் அவள் சொன்னவற்றைக் கேட்டு நெகிழ்ச்சியானவன் தன்னிலை பெற்று, "டேவிட் சார்... ப்ளீஸ் கம் ஆன் டூ தி ஸ்டேஜ்" என்றான்.


டேவிடுக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் உண்மையைச் சொல்ல போகிறேன் என்று மட்டும்தானே சொன்னாள். ஆனால் அவள் இப்படியெல்லாம் பேசுவாள் என்று அவன் துளியளவும் எதிர்பார்க்கவில்லை.


அவன் இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்தபடி நிற்க, மகிழ் மேடைக்கு அழைத்ததை உணர்ந்து தன் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொண்டவன்,


அந்தப் பிரமாண்டமான மேடையின் பின்புற கதவிலிருந்து மேடைக்குள் நுழைந்தான். அவன் வருகையைப் பார்த்ததும் எல்லோருமே எழுந்து நிற்க, அந்த அரங்கமே கைதட்டல் ஒலியில் மிதந்து மூழ்கிக் கொண்டிருந்தது.


 நெகிழ்ச்சியாய் தன் மனைவியைப் பார்த்து சமிஞ்சையால் ஏன் இப்படி எல்லாம் என்று அவன் கேட்க அவள் அரங்கத்தினர்கள் அவனுக்குச் செலுத்தும் மரியாதையைக் காண்பித்து,


'யூ மஸ்ட் டிஸர்வ் திஸ் டேவிட்' என்று அழுகை தொனியில் உரைக்க, அவன் தன்னவளை பார்த்து பேச்சற்று நின்றான்.


அன்று தாமஸ் தன் மகனைக் கண்டு அத்தனை பெருமிதம் கொண்டவர் ஜென்னி போன்ற பெண் அவனுக்குத் துணைவியாக வந்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்திருந்தார்.


ஒரு தீயவனை அடையாளம் கண்டு தண்டிக்கப்படுவது எத்தனை முக்கியமோ அந்தளவுக்கு ஒரு நல்லவன் அங்கீகரிக்கப்படவும் வேண்டும். டேவிட் போன்றவர்கள் அங்கீகரித்துப் பாராட்ட பட வேண்டியவர்கள்.


நல்லவனாய் வாழ்வது இந்த உலகத்திலேயே சிரமமான காரியம் என்ற நிதர்சனத்தை டேவிட் உணர்ந்தாலும் அவன் நிலையில் இருந்து கிஞ்சிற்றும் பிறழவில்லை.அதனாலேயே இன்று எல்லோர் முன்னிலையிலும் அவன் உயர்வாகவும் நிமிர்வாகவும் நின்றான்.


*********சுபம்*********


0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page