top of page

காவல்தானே பாவையர்க்கு அழகு! (சிறுகதை)

Writer's picture: Krishnapriya NarayanKrishnapriya Narayan



காவல்தானே பாவையர்க்கு அழகு!


வழக்கத்துக்கு மாறாக மிகவும் சமர்த்துப் பிள்ளை போல் புத்தகத்தைப் பிரித்துவைத்துக்கொண்டு படிப்பதாகப் பாவனை செய்துகொண்டிருந்த மகனைப் பார்த்து, 'இது இவனோட டிசையன்லயே இல்லையே... வெளியில எதாவது பெரிய சம்பவத்தை நடத்தி வெச்சிட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரி சீன் போடறானோ' என்று வர்ஷினி மனக்குரலில் பேசிக்கொண்டிருக்க, அவளது சந்தேகத்தை நிவர்த்திசெய்யவென, "வர்ஷினி... வர்ஷினி..." என அவளை அழைத்தவாறு அங்கே வந்தாள் பக்கத்து பிளாட்டில் குடியிருக்கும் காயு.


"வா காயு" என வர்ஷினி அவளை வரவேற்க, "எங்க உன் பையன் கோகுல்" என அதிகார குரலில் கேட்டாள் அவள்.


'ஓஹோ... இன்னைக்கு கோட்டாவுக்கு பையன் எதையோ இழுத்துவிட்டுட்டு வந்திருக்கான் போலிருக்கே' என்ற எண்ணத்தில் கொஞ்சம் உஷாரானவள், "நாளைக்கு ஏதோ டெஸ்ட் இருக்குன்னு இங்கதான் படிச்சிட்டு இருக்கான். ஏன்பா என்ன விஷயம்" என அவளது வேகத்தைத் தணிக்குமாறு நிதானமாகக் கேட்டாள் வர்ஷினி.


"என்ன விஷயம்னு இவ்வளவு பொருமையா கேக்கற நீ. அவன் நித்யாவை அடிச்சு வெச்சிருக்கான் தெரியுமா.


அவ வீட்டுக்கு வந்து ஓன்னு ஒரே அழுகை" எனப் படபடத்தாள் காயு.


"ப்ச்... காயு! அவன் கேள்ஸையெல்லாம் அடிக்க மாட்டான். அது தெரியாதா உனக்கு" என காயுவுக்கு பதில் சொன்னவள், "கோகுல்... ஒரு நிமிஷம் இங்க வா" என மகனை அழைக்க, அன்னையின் குரலில் கொஞ்சமாக எட்டிப்பார்த்த கடுமையை உணர்ந்தவன், 'கோகுலு... எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இரு. இல்லன்னா ஒன் வீக் டெரஸ்ல இருக்கற செடிக்கெல்லாம் தண்ணி போடா வெச்சிடுவாங்க அம்மா' என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அப்பாவியாக முகத்தை மாற்றிக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தான் கோகுல்.


"என்னடா... காயு ஆன்டி என்னவோ சொல்றாங்க; நீ நித்யாவை அடிச்சியா என்ன?" என அவள் கேட்க, மௌனமாகத் தலை குனிந்தான் அவன்.


மகனின் அந்த செயலில் கொஞ்சம் கோபம் எட்டிப்பார்க்க, "அப்படினா அவளை அடிச்சிருக்க ரைட்!" அவள் கண்டனமாகக் கேட்க, "நான் ஒண்ணும் அவளை அடிக்கல; கொஞ்சம் பிடிச்சு இழுத்தேன்; கால் ஸ்லிப் ஆகி அவ கீழ விழுந்துட்டா" என முணுமுணுத்தான் கோகுல்.


"நீ எதுக்குடா அவளை பிடிச்சு இழுத்த" என எரிச்சலுடன் காயு கேட்கவும், "எதிர் ஃப்ளாட்ல அந்த குரு அண்ணா இருகாங்க இல்ல... அவங்க வீட்டுக்கு அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க.


அவங்க எல்லரும் சேர்ந்து படம் பார்த்துட்டு இருகாங்க.


அப்ப நித்யா அவங்க வீட்டுக்குள்ள நுழையப் பார்த்தாள்.


அவளை போகாதேன்னு நான் தடுத்தேன்.


ஆனா அதை கேக்காம என்னை தள்ளிவிட்டுட்டு அவ உள்ள போகப் பார்த்தாள்.


அதனால்தான் நான் அவளை பிடிச்சு இழுத்தேன் ஆன்ட்டி. அப்பதான் கீழ விழுந்துட்டா" என விளக்கம் அளித்தான் அவன்.


அந்த குரு அவர்கள் எதிர் ஃப்ளாட்டில் குடியிருக்கும் ஒரு பேச்சிலர். அவர்களுக்கு நன்கு பழக்கமானவன்தான். அதனால், "அவ அங்க போனா உனக்கென்னடா வந்தது. நீ என் அவளைத் தடுத்த" எனப் பொங்கினாள் காயு.


ஆனால் அவள் கேட்ட அந்த கேள்விக்கு தன் அன்னையை நோக்கி, "அம்மா... யார் வீட்டுக்குள்ளேயும் அனாவசியமா போகக்கூடாது அப்படின்னு நீங்கதனம்மா நம்ம சாரா கிட்ட சொல்லுவீங்க.


கேள்ஸ்லாம் எப்பவுமே எச்சரிக்கையா இருக்கணும்னு நீங்கதானம்மா சொல்லுவீங்க.


நம்ம சுத்தி இருக்கறவங்க எல்லாரும் நல்லவங்கதான். ஆனா கூட நாம ஜாக்கிரதை உணர்வோடு இருக்கனும் தான.


மத்தவங்க மனசு புண்படற மாதிரி நடந்துக்க கூடாது. அதே சமயம் தள்ளியும் இருக்கணும்னு நீங்கதானம்மா சொல்லுவீங்க.


அவங்க எல்லாரும் அங்க இருக்கும் போது பெரியவங்க துணை இல்லாம இந்த நித்யா அங்க போனது தப்புதானே?" என மூச்சுவிடாமல் அவன் உணர்ந்த நியாயங்களை அடுக்கடுக்காக அந்த பத்து வயது சிறுவன் கேட்க வெட்கி தலை குனிந்தாள் காயு.


மகனின் செயலில் தலை நிமிர்ந்து காயுவை பார்த்தவள், மகனிடம், "இருந்தாலும் நித்யாவை நீ ஹர்ட் பண்ணதும் தப்புதானே கண்ணா?


முதல்ல போய் அவ கிட்ட சாரி கேளு" என்று வர்ஷினி மகனிடம் சொல்ல மறுவார்த்தை பேசாமல் நித்யாவை தேடி ஓடினான் கோகுல்.


பின், "தப்பா நினைக்காதே காயு. நான் இதையெல்லாம் அவனோட தங்கக்கைக்கு சொல்லும்போது இவனும் கேட்கறான் இல்லையா. அதனால உன் பொண்ணுக்கும் அதை அப்ளை பண்ணியிருக்கான் போல இருக்கு. இன்னைக்கு இருக்கற காலகட்டத்துல பெண் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுக்கறதைவிட டோன்ட் டச்ன்னு சொல்லிகொடுக்கறது பெட்டெர் இல்ல.


ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்கறது ஒவ்வொரு அம்மாவின் கடமையும்தானே?" என வர்ஷினி கேட்க அவளது வார்த்தைகளில் புதைந்திருக்கும் நிஜம் மனதிற்குப் புரியவே, "நீ சொல்றதும் சரிதான் வர்ஷினி; இனிமேல் இதையெல்லாம் நிதாவுக்கும் சொல்லிக்கொடுக்கணும்" எனத் தேய்ந்த குரலில் சொல்லவிட்டு அங்கிருந்து கிளம்பிச்சென்றாள் காயு.


¬முற்றும்¬

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page