top of page

என் பெயர் வசந்தி!



என் பெயர் வசந்தி!


(இந்த பேய் ஆவி இதுபோன்ற விஷயங்களில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை!


உண்மையோ பொய்யோ தெரியாது, நான் சிறு வயதில் மேற்கு மாம்பலத்திலிருந்த பொழுது பலர் பரவலாகப் பேசி நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு புனைந்ததே இந்த சிறுகதை.


கதையைக் கதையாக மட்டும் படிக்கவும்.)


1988... மேற்கு மாம்பலம்...


ஒரு தனியார்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் ஸ்வேதா பள்ளி நேரம் முடித்து வீட்டுக்கு வர, "பால் வாங்கிட்டு வந்துடுடி; தடுப்புச் சுவரின் மேல காசு வெச்சுருக்கேன். பக்கத்துலேயே பாத்திரம் வெச்சுருக்கேன்!


அரை லிட்டர் எருமைப் பால்; இருநூறு பசும்பால்.


சீக்கிரம் போ; பால் தீர்ந்து போயிட போகுது"


அந்த தடுப்புச் சுவருக்கு அந்த பக்கத்திலிருந்து அம்மா குரல் கொடுக்க, "ப்ச்... இப்பதானே வந்தோம்! முடியல" என முணுமுணுத்தவாறே சொம்புகளையும் காசையும் எடுத்துக்கொண்டு பால் டெப்போவை நோக்கிச் சென்றாள் ஸ்வேதா.


பால் வாங்க நின்ற அந்த நேரத்தில் அங்கே இருந்த பெண்மணிகளுக்கிடையில் நடந்த உரையாடல் அவளது கவனத்தைக் கவர, அந்த தகவல் அந்த ஒரு வாரத்தையே ஓட்ட போதுமானதாக இருந்தது அவளுக்கு.


ஓட்டமாகப் போய் பாலையும் மீதம் இருந்த சில்லறையையும் வீட்டில் வைத்துவிட்டு அவள் நேரே சென்றது அவளது உயிர்த் தோழி சித்ராவின் வீட்டுக்குத்தான்.


இருவரும் எல்.கே.ஜி முதலே ஒன்றாகப் படிக்கும் தோழிகள்.