ஆடையா? அறியாமையா? எது சிக்கல்?
//நாகரிகம் மாறுவதற்கு முன்பு பள்ளிக்கோ கல்லூரிக்கோ இப்படிப் போன போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை… இது வரலாறு//
எந்த மகான் சொன்னது இது?
என்னிடமும் ஒரு வரலாறு இருக்கிறது. 1990களில் தொடர்ந்து நடந்துகொண்டிருந்த ஒரு அவலம் அது!
நடந்தது எதோ ஒரு அத்துவான காட்டிலெல்லாம் இல்லை! நான் வசித்த, சென்னை மாநகரின் மிக முக்கியப் பகுதியான மாம்பலத்தில்தான். கோதண்டராமர் கோயில் தெரு… அங்கேதான் நான் படித்த பள்ளி இருக்கிறது (இன்று வரை அங்கே பெண்களுக்கு பாவாடை தாவணிதான் பள்ளிச் சீருடை). நான் படித்த பள்ளிக்கு மட்டுமில்லை, அங்கே இருக்கும் பல பள்ளிகளில் படித்த மாணவிகளும் அந்த வீதியைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். அன்றைய காலகட்டத்தில்,பெரும்பாலும் எல்லா பள்ளிகளிலுமே பாவாடை தாவணிதான் சீருடையாக இருந்தது.
அங்கே, எல்லை அம்மன் கோவில் தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு போன்ற பகுதிகளில் வசிப்பவர்களெல்லாம் அரங்கப்ப ரெட்டித் தெருவில் இருக்கும் ‘ட’ வடிவ குறுக்கு சந்தை உபயோகிப்பது வழக்கம் (பிரபல சித்தி தொடர் அந்த வீதியில்தான் படமாக்கப்பட்டது). எல்லோருமே கும்பலாக பேசிக்கொண்டே அந்த சந்தைப் பயன்படுத்தி வந்து செல்வதுதான் வழக்கம். அவர்கள் மட்டுமல்ல, மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், தி.நகர் பஸ் ஸ்டான்டில் வந்து இறங்குபவர்களும் இந்த வழியாகத்தான் நடந்து வருவார்கள்.



